Thursday, October 29, 2020

கடகம்: 2020 குருப்பெயர்ச்சி பலன்கள் – KADAGAM: 2020 GURUPEYARCHI PALANGAL

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888 

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு ஆறாமிடத்தில் இருந்து நல்ல இடம் என்று சொல்லப்படக்கூடிய ஏழாம் இடத்திற்கு குரு மாறுகிறார். எனவே கடக ராசிக்கு ஒரு மேன்மையைத் தரக்கூடிய காலம் ஆரம்பித்திருக்கிறது.

கடந்த காலங்களில் ஏழில் சனி, ஆறில் குரு எனும் அமைப்பால் கடக ராசிக்கு கோசார அமைப்புகளில் எந்த நல்ல பலன்களும் நடக்கவில்லை. குருபகவானும் நல்ல பலன்களை தர இயலாத நிலைமையில் இருந்தார். இந்த பெயர்ச்சியின் மூலம் குரு ஏழாமிடத்திற்கு வருவது நன்மைகளை தரக்கூடிய அமைப்பாகும்.

குருவின் நகர்வால் இதுவரை கடக ராசிக்காரர்களுக்கு எந்த விதமான பாக்கியங்கள் கிடைக்கவில்லையோ அந்த பாக்கியங்கள் அனைத்தும் தாராளமாக கிடைக்கும்.  மேலும் பிறந்த ஜாதகப்படி தசாபுக்தி அமைப்புகளும் நல்லவிதமாக கைகொடுக்கும் நிலையில் இருந்தால் இம்முறை கடக ராசிக்காரர்களுக்கு இது தொட்டது துலங்குகின்ற  ஒரு காலமாகவும் அமையும்.

இதுவரை எந்த விஷயத்தில் தடங்கல்கள் தடைகள் உங்களுக்கு இருந்து வந்ததோ அவை அனைத்தும் தீர்ந்து நல்லதொரு முன்னேற்றமான ஒரு காலத்தை கடக ராசியினர் இனி அடையப் போகிறீர்கள்.

குரு பகவான் தன்னுடைய பார்வையால் ராசியைப் பார்க்கும் காலம் அனைத்து மனிதர்களுக்கும் யோகம் தரக்கூடிய ஒரு அமைப்பாக வேத ஜோதிடத்தில் வலியுறுத்தப்படுகிறது.

அதிலும் அவரது 9-ஆம் பார்வை மிகவும் விசேஷமானது என்கின்ற ஒரு நிலைமையில், தன்னுடைய ஒன்பதாம் பார்வையாக உங்களின் முயற்சி ஸ்தானத்தை இன்னும் 13 மாத காலத்திற்கு குருபகவான் பார்க்கப் போவதால் கடக ராசிக்காரர்களின் முயற்சிகள் பலித்து அனைத்து விஷயங்களும் கிடைக்கும்.

ஏழாமிடத்தில் இருக்கும் குரு ராசியைப் பார்ப்பார் என்பதால் உங்களின் மனம் மிகுந்த புத்துணர்ச்சியுடன் இருக்கும். முகம் பொலிவு பெறும். அனைத்து விஷயங்களையும் ஆக்கபூர்வமாகச் சிந்தித்து நன்கு செயல்படுவீர்கள். சிந்தனை செயல்திறன் நன்றாக இருக்கும் என்பதால் இம்முறை கடக ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் தங்களின் பக்கத்தில் இருப்பதைப் போல உணர்வீர்கள். எல்லா விதங்களிலும் நன்மைகளை மட்டுமே தரக்கூடிய ஒரு பெயர்ச்சி இது.

இந்தக் குருப்பெயர்ச்சியால் பணவரவும் பொருளாதார நிலைமையும் நன்றாகவே இருக்கும். நிதி நிலைமையைப் பற்றி கவலைப்பட வேண்டியது இருக்காது. ஆனாலும் வீண் செலவு செய்வதை தவிருங்கள். என்னதான் பணவரவு நிறைவாக இருந்தாலும் பற்றாக்குறையை நீச்ச நிலையில் சனியுடன் இணைந்துள்ள  குரு ஏற்படுத்துவார் என்பதால் எல்லாவற்றிலும் சிக்கனமாக இருப்பது நல்லது.

நீச்சபங்க குரு ஜீவன அமைப்புகளான தொழில், வேலை, வியாபாரம் போன்றவைகளில் மாறுதலைக் கொடுப்பார் என்பதால் இதுவரை மேற்படி இனங்களில் இருந்து வந்த நிலைகள் மாறி புதுவிதமான அமைப்புகள் உருவாகும். அது நல்லதாக இருக்கும்.

அரசு, தனியார் துறை ஊழியர்களுக்கு துறைரீதியான இடமாறுதல்களோ அல்லது பதவி உயர்வுடன் கூடிய ஊர் மாற்றமோ இருக்கலாம். தற்போது இருக்கும் வசதியான ஊரை விட்டு வேறு எங்கோ மாற்றம் இருக்கும் என்பதால் பதவி உயர்வு என்றாலும் அதை அரைகுறையான மனதுடன் தான் நீங்கள் ஏற்றுக் கொள்ளும்படி இருக்கும்.

வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்களுடைய விருப்பத்திற்கும் படித்த படிப்பிற்கும் பொருத்தமான வேலைகள் அமையும். நீண்ட நாட்களாக மன வருத்தத்தை கொடுத்துக் கொண்டு இருந்த உயரதிகாரி மாறுதலாகி, அந்த இடத்திற்கு அனுசரணையானவர் வருவார்.

தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் தடைகள் விலகி நல்லபடியாக நடக்க ஆரம்பிக்கும். சுயதொழில் செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். மஞ்சள் நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு மேன்மையான பலன்கள் இருக்கும். தங்கநகை, நவதானியம், ஆன்மிகம் சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள், கோவில்கள், வழிபாட்டுத் தலங்களை சுற்றி கடை வைத்திருப்பவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும்.

கடன்கள் கட்டுக்குள் இருக்கும். சிலர் புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள். சிலருக்கு அலைச்சல்களும் மந்த நிலையும் ஒருபுறம் இருந்தாலும் இன்னொருபுறம் தொழில் முன்னேற்றமும் வருமானமும் கண்டிப்பாக இருக்கும்.

கோவில் அர்ச்சகர்கள், நமது பாரம்பரியம் பண்பாடு சம்பந்தப்பட்ட கலைகளை கற்றுத் தருபவர்கள் நீதித்துறையில் பணிபுரிபவர்கள், மேன்மை தங்கிய நீதியரசர்கள், சட்டவல்லுனர்கள், பணம் புரளும் துறைகளான வங்கி சிட்பண்ட் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இந்த குருப்பெயர்ச்சி நன்மைகளை மட்டுமே தரும்.

சுப கிரகமான குரு 7-ஆம் இடத்திற்கு மாறுகின்ற நிலையில், தன்னுடைய நன்மை தரும் பார்வையால் 11, 1, 3 ஆகிய இடங்களை பார்வையிடுவார். அவர் பார்வை பெறும் பதினொன்றாம் இடம் லாபஸ்தானம் என்பதால் பாலைவனத்தில் நடந்து செல்பவனுக்கு நடுவே ஒரு சோலை தெரிந்தார் போல கஷ்டங்களுக்கு மத்தியிலும் ஒரு சில பணவரவு மற்றும் பொருளாதார நன்மைகள் கிடைக்கும்.

இளைய பருவத்தினருக்கு குரு பலம் எனப்படும் திருமணத்தை நடத்தி வைக்க கூடிய ஏழாம் இடத்து குரு வந்திருப்பதால், தசா,புக்திகளின்படி தாம்பத்திய சுகம் கிடைக்க கூடிய அமைப்பில் இருப்பவர்களுக்கு தற்போது திருமணம் நடக்கும். அதேநேரத்தில் சனி, குரு இணைவால் திருமணத்தின் மூலமாக பலன்களை அனுபவிக்க முடியாதபடி சில சிக்கல்கள் இருக்கும்.

சிலர் திருமணமான உடனே வேலை நிமித்தமாக வெளிநாடு, வெளிமாநிலம் போன்ற இடங்களுக்கு கணவர், மனைவியை விட்டு பிரிந்து செல்ல வேண்டியிருக்கும். இதற்கு திருமணம் ஆகாமலேயே இருந்திருக்கலாமே என்ற நினைப்பு மனதுக்குள் ஓடும்.

சுப கிரகமான குரு ஏழாம் இடமான ஆட்சி வீட்டில் அமர்ந்து ராசியைப் பார்ப்பதால், தொல்லைகளை சமாளிக்கக்கூடிய புத்துணர்வும், செயல்திறனும் உண்டாகும் எதையும் ஒரு எதிர்கால நோக்கோடு செயல்படுத்த முயற்சிப்பீர்கள். எதையும் தனி ஒருவராக போராடிப் போராடித்தான் செய்வீர்கள். யாரும் உங்களை புரிந்து கொள்ள மாட்டார்கள். உங்களைத் தேடி வந்து உதவிகளைச் செய்யவும் ஆள் இருக்காது.

குரு தனது 7-ம் பார்வையால் ராசியை பார்ப்பது இந்த பெயர்ச்சியின் மூலம் கிடைக்க இருக்கும் ஒரு அற்புதமான நிலை. இதன் மூலம் இதுவரை உங்களுக்கு இருந்து வந்த மனக் குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். கடந்த காலங்களில் வாழ்க்கைத் துணையிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடு, சண்டை சச்சரவு, பிரிவு முடிவுக்கு வரும். உங்கள் மனம் விரும்பும் தீர்வு இப்போது உண்டு. இதுவரை தாழ்வு மனப்பான்மையால் எதையும் முயற்சிக்காமல் இருந்தவர்கள் தற்போது தைரியமாக முயற்சி செய்வீர்கள்.

வழக்கு, கோர்ட், காவல்துறை போன்றவற்றில் சிக்கித் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு அனைத்தும் நல்லபடியாக முடிவுக்கு வரும். அநியாய வட்டிக்கு கடன் வாங்கி, மீள முடியாமல் அவஸ்தைப்பட்டு விழி பிதுங்கி கொண்டிருந்தவர்களுக்கு கடனை அடைப்பதற்கு வழி பிறக்கும். உடல்நிலை சரியில்லாமல் இருந்தவர்கள் குணம் அடைவார்கள். தொந்தரவு செய்து வந்த கடன்கள் கட்டுக்குள் இருக்கும். உங்களை பிடிக்காமல் பின்னால் பேசும் மறைமுக எதிரிகள் காணமல் போவர்கள்.

பெண்களுக்கு இது சிறப்பான நன்மைகளைத் தரும் குருப் பெயர்ச்சியாக இருக்கும். உங்களின் மதிப்பு உயரும். நான்கு பேர் கூடும் இடத்தில் தனித்துத் தெரிவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் இதுவரை இருந்த வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும்.

அலுவலகத்தில் ஆண்கள் உங்களுக்கு அடங்கி இருப்பார்கள். இதுநாள் வரை இருந்து வந்த மேலதிகாரி தொந்தரவு இனி இருக்காது. புகுந்த வீட்டில் அந்தஸ்து, கௌரவம் கூடும். மாமியாரை நீங்கள் வேலை வாங்க முடியும். கணவரும், குழந்தைகளும் சமர்த்தாக உங்கள் பேச்சை கேட்பார்கள். பிள்ளைகளைப் பற்றிய கவலை இனி இருக்காது.

இதுவரை கருத்து வேற்றுமைகளாலும், குடும்பச் சிக்கல்களினாலும் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவீர்கள். சொத்துச் சேர்க்கை இருக்கும். பிள்ளைகளின் பெயர்களிலோ மனைவியின் பெயரிலோ ஏதேனும் சொத்து வாங்க முடியும்.

சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளின் திருமணத்திற்கு தங்க நகை சேமிக்க முடியும். முதல் திருமணம் முறிவடைந்து விவாகரத்து பெற்றவர்களுக்கு இப்போது இரண்டாவது திருமணம் நடக்கும். இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாகவும் அமையும்.

அலுவலகத்தில் தொந்தரவுகள் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை. உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். மேல் அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். ஏதேனும் ஒரு சிறு காரணத்திற்காக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த சம்பள உயர்வு பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும்.

பயணம் தொடர்பான விஷயங்களில் வருமானம் வரும். தொலைதூர பிரயாணங்களோ வெளிநாட்டு பயணங்களோ நடக்கும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வேலை கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு.

தனியார்துறை மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் போன்றவர்களுக்கு நிர்வாகத்திடம் கருத்து வேற்றுமைகள் ஏற்படலாம். திடீரென நிர்வாகம் கண்காணிப்பு வேலைகளில் ஈடுபடவோ, அது சம்பந்தப்பட்ட கருவிகளைப் பொருத்தவோ, ஆட்களை நியமிக்கவோ வாய்ப்பு உள்ளது.

பரிகாரங்கள்:

கடகத்தினர் ஸ்ரீதட்சிணாமூர்த்திப் பெருமானுக்கு வியாழக்கிழமை தோறும் விரதம் இருப்பதும், வியாழன்தோறும் அவரை பூஜித்து வழிபடுவதும், ஜன்ம நட்சத்திரம் அன்று ஆலங்குடி, சென்னை பாடி திருவலிதாயம், வட ஆலங்குடி என அழைக்கப்படும் போரூர் ஈஸ்வரன் கோவில், திருச்செந்தூர் போன்ற குரு ஸ்தலங்களுக்கு சென்று அவரை ஆராதிப்பதும் அதிர்ஷ்டங்களை அள்ளித் தரும்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment