Saturday, April 18, 2020

விருச்சிகம்: 2020 - சார்வரி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்


விருச்சிகம்:

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் தோ, நா, நீ, நே, நோ, ,யி, யு, நு, ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக  கொண்டவர்களுக்கும்.)

விருச்சிக ராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கும் தமிழ்ப் புத்தாண்டு பெரிய நன்மைகளைத் தரும் ஆண்டாக இருக்கும். வருடம் பிறந்த முதல் வாரத்தில் இருந்தே  கஷ்டங்கள் குறைய ஆரம்பிக்கும்.


கடந்த காலங்களில் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் விலகப் போகிறது. விருச்சிகத்தினர் அனைவரும் இனிமேல் நன்றாக இருக்கப் போகிறீர்கள். உங்கள் வாழ்க்கையில் வசந்தத்தையும், வழியையும் காட்டக் கூடிய தமிழ்ப் புத்தாண்டு இது. இனிமேல் நன்றாக இருக்கப் போகிறீர்கள்.

புது வருடமான சார்வரி ஆண்டின் ஆரம்பத்திலேயே உங்களுக்கு ஏழரைச்சனி முழுக்க விலகியிருப்பது நன்மைகளை செய்யக்கூடிய அமைப்பு. சனி விலகி விட்டதால் சொந்த வாழ்வில் பிரச்சினைகள், நெருங்கிய உறவினர் மரணம், பிரிவு, வேலையிழப்பு, ஆரோக்கியக் குறைவு, வேலை, தொழில், பிரச்சினைகள், வழக்குகள், கடன் தொல்லைகள் போன்றவைகளால் நிம்மதி இன்றி இருப்பவர்களுக்கு இனி சந்தோஷம் தரும் நிலைகள் உருவாகும்.

விருச்சிக ராசியின் அனைத்துப் பிரச்னைகளையும், தீர்த்து, மற்றவர்களைப் போல சகஜமான வாழ்க்கைக்கு உங்களை வர வைக்கின்ற புது வருடமாக இது இருக்கும். வருடம் பிறந்ததிலிருந்தே உங்களின் மனவலிமை நன்றாக இருக்கும். எதையும் சமாளிக்கலாம் என்ற தைரியம் பிறக்கும்.

ஏழரைச்சனியின் தாக்கத்தினால் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் சிக்கல்களை சந்தித்தவர்கள் இந்த வருடத்தில் இருந்து அவை நீங்கப் பெறுவீர்கள். புதிதாக தொழில், வியாபாரம் போன்றவைகளை ஆரம்பித்து லாபகரமாக நடத்த முடியாமல் திணறிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த வருடத்தில் இருந்து விடிவுகாலம் பிறந்து தொழில் நிலைமைகள் சீராகும்.

விருச்சிக ராசியைச் சேர்ந்த பெரியவர்களுக்கு இதுவரை பிள்ளைகள் வழியில் இருந்து வந்த மனக் கஷ்டங்களும், பிள்ளைகளுக்கு கல்யாணம் போன்ற சுப காரியங்களை நடத்தி பார்க்க முடியாமல் இருந்து வந்த மன வேதனைகளும் அடியோடு விலகி குழந்தைகள் மூலம் சந்தோஷமான விஷயங்கள் இந்த வருடத்தில் இருக்கும்.  கிரக நிலைகள் நல்ல விதமாக அமைவதால் வருடம் முழுவதும் நீங்கள் நிச்சயம் சந்தோஷங்களை அனுபவிப்பீர்கள்.

இளைய பருவத்தினருக்கு இதுவரை வேலை விஷயங்களில் இருந்து வந்த இடையூறுகள் இப்போது நீங்கும். இதுவரை மனதை போட்டு அழுத்திக் கொண்டிருந்த சில விஷயங்கள் தெளிவாக ஆரம்பிக்கும். எந்த பாதையில் செல்வது என தீர்மானிக்க முடியாமல் இருந்தவர்கள் இப்போது தெளிவாகி பாதையை தேர்ந்தெடுப்பீர்கள்.

உயிர் நண்பன் என்று சொல்லிக் கொண்டவர்களையும், உறவினர்களையும் ஏற்கனவே நடந்த சம்பவங்கள் புரிய வைத்துவிட்டபடியால் இனிமேல் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனமாகவே வைப்பீர்கள் என்பதால் இனிமேல் விருச்சிகத்திற்கு கலக்கங்கள்  இல்லை. நடுத்தரவயதில் உள்ளவர்களுக்கு இனிமேல் வேலை, தொழில், வியாபாரம் போன்ற விஷயங்களில் சிக்கல்கள் எதுவும் இருக்காது. இதுவரை இருந்து வந்த கஷ்டங்களும், நஷ்டங்களும் இனிமேல் தொடராது.

வருட பிற்பகுதியில் இருந்து உங்களுக்கு நல்ல வருமானங்களும், ரொம்ப நாட்கள் மனதில் நினைத்திருந்த லட்சியங்கள் நிறைவேறுதலும்,  வீடு வாங்குதல் போன்ற சுபநிகழ்ச்சிகளும்  நடைபெறும். வீடுமாற்றம் அல்லது தொழில் இடமாற்றம் போன்றவைகள்  நடக்கும் என்பதால் பொறுமை தேவை.

கடன் பிரச்னைகளிலும் வழக்கு விவகாரங்களிலும் சிக்கித் தவித்து தூக்கத்தை இழந்திருந்தவர்களுக்கு அவைகள் நல்லபடியாக ஒரு முடிவுக்கு வந்து நிம்மதியைத் தரும். வீடு கட்டுவது இடையிலேயே தடைப்பட்டவர்கள், வீட்டுக் கடன் கிடைக்காமல் இருந்தவர்கள் இனிமேல் அந்த குறை நீங்கப் பெறுவார்கள்.

செலவுகளை சுருக்க வேண்டியது அவசியம். வீண் செலவுகள் செய்யாதீர்கள். எவருக்கும் உதவி செய்வதாக வாக்கு கொடுத்தால் அதை நிறைவேற்ற முடியும். . போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ளலாம். அவைகளில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும் இல்லாமல் யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம். கூடுமானவரை எல்லோரையும் அனுசரித்து போவது நல்லது. என்னதான் பிரச்னைகள் இருந்தாலும் பணவரவிற்கு கண்டிப்பாக குறைவு இருக்காது. எனவே எதையும் நீங்கள் சமாளித்து விடுவீர்கள்.

குடும்பத்தில் சந்தோஷமும் மங்கள நிகழ்ச்சிகளும் இருக்கும். தனலாபமும் இந்த வருடம் உண்டாகும். அம்மா வழி உறவினர்களுடன் நல்ல சுமுகமான உறவு இருக்கும். அவர்களால் ஆதாயம் வரும். பூர்வீக தாயார்வழி சொத்துகள் தற்போது கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இருக்கும் பழைய வாகனத்தை மாற்றி புதியதாக வாங்குவீர்கள். வாகனம் இல்லாதவர்களுக்கு வாகனயோகம் இப்போது உண்டு. மாணவர்களுக்கு படிப்பு நன்கு வரும். உயர்கல்வி கற்பதற்கு இருந்து வந்த தடைகள் நீங்கி மேல்படிப்பு படிக்க முடியும்.

வளைகாப்பு, பூப்புனித நீராட்டு விழா போன்ற பெண்கள் சம்பந்தப்பட்ட மங்கள நிகழ்ச்சிகளால் நீங்கள் சகோதரிகளுக்கோ, மகள்களுக்கோ, பேத்திகளுக்கோ கடன் வாங்கி சுபச்செலவு செய்ய வேண்டி இருக்கும். ஏற்கனவே திருமணமாகி முதல் வாழ்க்கை கோணலாகி வாழ்க்கையை இழந்தவர்களுக்கு இரண்டாவது திருமணம் தற்போது நல்லபடியாக நடந்து அந்த வாழ்க்கை குறையின்றி நீடித்தும் இருக்கும்.

சகோதர சகோதரிகளின் விஷயங்களில் நல்ல சம்பவங்களும் ஒருவருக்கொருவர் ஆதரவான நிகழ்வுகளும் இருக்கும். மனைவிக்கு நகை வாங்கித் தருவீர்கள். வீட்டில் ஆபரணச் சேர்க்கையும் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குதலும் நடக்கும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். நீண்ட நாட்களாக போக முடியாமல் இருந்த குலதெய்வக் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று நேர்த்திக்கடன் செலுத்த முடியும்.

புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். புதிய அறிமுகங்கள் கிடைக்கும். ஒரு சிலர் தங்கள் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை சந்திப்பார்கள். உங்களைப் புரிந்து கொள்ளாமல் உங்களிடமிருந்து விலகி இருந்தவர்கள் உங்களைப் புரிந்து கொண்டு தற்போது பக்கத்தில் வருவார்கள்.

இனிமேல் வாழ்க்கை முன்னேற்றப் பாதையில் செல்லத் துவங்கும். இதுவரை முயற்சி செய்தும் நடைபெறாத பல விஷயங்கள் இனிமேல் தெய்வத்தின் அருளால் முயற்சி இல்லாமலேயே வெற்றி பெறும். பண வரவுகள் சரளமாகி குடும்பத்தில் பணப் பிரச்னைகள் எதுவும் இல்லாமல் நிம்மதி இருக்கும்.

இதுவரை உங்களுக்கு இருந்து வந்த தேவையற்ற பய உணர்வுகளும் கலக்கமான மனநிலையும் சிறிய விஷயங்களைக் கூட பெரிதாக்கி பார்த்து பயந்து கொண்டிருந்த சூழ்நிலையும் இனிமேல் விலகி மனத்தில் ஒரு புத்துணர்ச்சி பிறந்து புதுமனிதராக மாறப் போகிறீர்கள். இதுவரை விடை தெரியாமல் தத்தளித்து கொண்டிருந்த விஷயங்களுக்கான பதில்களும் தீர்வுகளும் உங்கள் மனத்தில் நல்லவிதமாகத் தோன்றி உங்களின் அனைத்துப் பிரச்னைகளும் உங்களுக்கு சாதகமாக முடிய போகிறது.

இதுவரை மனதில் இருந்துவந்த எதிர்மறைஎண்ணங்கள், தாழ்வு மனப்பான்மைகள் இனிமேல் இருக்காது. இனம்புரியாத கலக்கத்தில் இருந்து வந்தவர்கள் இனிமேல் புது உற்சாகம் அடைவீர்கள். இதுவரை இருந்து வந்த கெட்ட விளைவுகள் இனி  இருக்காது.

உங்களைப் பிடிக்காமல் உங்களை எதிர்த்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் உங்களைப் பார்த்து பயப்படும்படி நிலைமை மாறும். கடன் பிரச்னைகள் தலை தூக்காது. புதிய கடன்கள் வாங்கும்படி நேரிட்டாலும் பழைய கடன்களை சுத்தமாக அடைத்துவிட்டு நிம்மதியாக இருப்பீர்கள். வெளியிடங்களில் மதிப்பு, மரியாதை கௌரவம் நல்லபடியாக இருக்கும்.

மந்தமாக இருந்த வந்த கூட்டுத் தொழில் இனி சிறப்பாக நடைபெறும். பங்குதாரர்கள் உதவியாக இருப்பார்கள். சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இனிமேல் நிலையான ஒரு தொழில் அமைப்பு உருவாகி மாதாமாதம் நிரந்தர வருமானம் வரும். தொழில் அதிபர்களுக்கு அரசு உதவி கிடைக்கும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருந்து உற்பத்தியை மேலும் பெருக்கித் தருவார்கள்.

உங்களில் சிலருக்கு வெளிநாட்டுப் பயணம் அமையும். அதிகாரம் செய்யும் துறைகளில் இருப்போருக்கு மிகவும் நல்ல பலன்கள் உண்டு. யூனிபாரம் அணிந்து வேலை செய்யும் துறைகளில் இருப்போருக்கு கடும் வேலை நெருக்கடியிலும் சில நல்ல பலன்கள் நடக்கும்.  வாழ்க்கைத்துணை மூலம் இந்த வருடம் உங்களுக்கு மிகச்சிறப்பாக அமையும். கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து பேசி எதிர்கால வாழ்க்கையை திருப்திகரமாக அமைத்துக் கொள்வீர்கள். நல்ல திட்டங்களைத் தீட்டி அதை செயல் படுத்தவும் செய்வீர்கள்.

குறிப்பிட்ட சிலருக்கு கோவில் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். சிதிலமடைந்து ஊருக்கு வெளியே கவனிப்பாரின்றி கிடக்கும் சிவன் கோவிலை புனருத்தானம் செய்யும் பாக்கியமும் அதன் மூலம் புண்ணியமும் கிடைக்கும். சிவன் அருள் கிடைக்க பெறுவீர்கள்.

விவசாயிகள், கலைஞர்கள், பொதுவாழ்வில் இருப்பவர்கள், ஊடகம் மற்றும் பத்திரிகைத்துறையினர், தொழிலாளர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள் போன்ற விருச்சிக  ராசிக்காரர்கள் இந்த நல்லநேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு எதிர்காலத்தை வளப்படுத்திக் கொள்ள முடியும்.

எந்த ஒரு விஷயத்திலும் தனக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லை, தன்னுடைய திறமைக்கு ஏற்ற சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை என்ற மனக்குறையில் இருந்தவர்கள் அவை நீங்கப்பெற்று ஒரு அதிர்ஷ்டமான காலத்தில் நுழைவீர்கள். சிலருக்கு தன்னம்பிக்கை கூடுதலாகும். எந்தக்காரியமும்  அதிக முயற்சி இல்லாமலேயே வெற்றி பெறும். வரும் தேர்தலில் பெரிய வெற்றி கிடைக்கும்.

விருச்சிகத்தினர் மனமார வரவேற்கும் ஆண்டாக சார்வரி இருக்கும்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.


No comments :

Post a Comment