Friday, June 29, 2018

அதி யோகம் எனும் சூட்சும யோகம்..! D-013 Adhy Yogam



ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

ஜோதிடமே மாபெரும் நுட்பங்கள் அடங்கிய ஒரு சூட்சுமக் கலைதான் எனும் நிலையில், அதனுள் இருக்கின்ற ஏராளமான நுணுக்கங்களில் ஒன்று அதி யோகம் என்றும், “சந்திராதி யோகம்” என்றும் சொல்லப்படும் இந்த உன்னத யோகம். 

ஜோதிடத்தை ஒளியாகப் புரிந்து கொள்ளுங்கள் என்று அடிக்கடி எழுதியும், பேசியும் வருகிறேன். மனிதனுக்குத் தேவையான நல்ல (சுப) ஒளியைத் தருகின்ற குரு, சுக்கிரன், தனித்த புதன், வளர்பிறைச் சந்திரன் ஆகிய கிரகங்கள் முழு ஒளித்திறனுடன் இருக்கின்ற நிலையில் பிறந்த ஒருவர் உன்னதப் பிறவி ஆகிறார் என்பதே ஜோதிடத்தின் உள்ளே மறைந்திருக்கும் சூட்சுமம்.

பாப ஒளியைக் கொண்ட சனி, செவ்வாய், ராகு-கேது, தேய்பிறைச் சந்திரன், சூரியன் ஆகிய கிரகங்கள் மேற்சொன்ன சுபர்களுடன் இணையும் போது, மற்றும் அவைகளால் பார்க்கப்படும் போது அல்லது வேறு ஏதேனும் ஒரு வகையில் தொடர்பு கொள்ளும்போது சுபத்துவம் பெற்று நன்மைகளைத் தரும். இதைப் புரிந்து கொள்ளும்போதுதான் ஜோதிடத்தின் இன்னொரு பரிமாணம் தெரிய வரும். 

ஆரம்ப நிலையில் உள்ளவருக்கு ஜோதிடத்தின் மாபெரும் கட்டமைப்புகளான லக்னம், ராசி, ஆதிபத்தியம், காரகத்துவம், கேந்திரம், கோணம், மறைவு ஸ்தானங்கள், நல்ல, கெட்ட கிரகங்கள் மட்டுமே தெரிய வருகின்றன. அடிப்படை விஷயங்கள் அறிய வந்தவுடன் ஜோதிடம் முழுக்கத் தெரிந்து விட்டதாக நினைத்துக் கொண்டு, பலர் பலன் அறிவதில் தவறுகிறார்கள். 

லக்னம், கிரகம், கேந்திரம், கோணம் போன்றவை ஜோதிடத்தின் அஸ்திவாரமான விஷயங்கள் மட்டும்தான். ஜோதிடத்தின் இறுதிநிலையான “எதிர்காலத்தை அறிவது” என்பது இவைகளையும் தாண்டி சுபத்துவ, பாபத்துவ, சூட்சுமவலு  நிலைகளில் மட்டும்தான் அடங்கியிருக்கிறது. 

சுபத்துவ, பாபத்துவ நிலைகளையும், பாபக் கிரகங்களின் சூட்சும வலுவையும் புரிந்து கொள்ளாமல், ஒரு கிரகம் ஜாதகருக்கு என்ன பலன் தரும் என்பதை புரிந்து கொள்ளவோ, அந்த ஜாதகத்தின் தரத்தை அறிந்து கொள்ளவோ கண்டிப்பாக முடியாது. உதாரணமாக சென்ற அத்தியாயங்களில் நான் சொன்ன, “ஒரு ஜாதகம் குப்பை அள்ளுபவனுடையதா, கோடீஸ்வரனுடையதா” என்பதை நிர்ணயிக்க கிரகங்களின் சுப, பாபத்துவ, சூட்சும வலுக்களை கணக்கிட வேண்டும். 

ஒரு மனிதன் உயர்வினை அடைய அவன் ஜாதகத்தில் அனைத்துக் கிரகங்களும்  “சுபத்துவம்” அடைந்திருக்க வேண்டும், பாபர்கள் நேர்வலு அடையாமல் சூட்சும வலுவுடன் இருக்க வேண்டும் எனும் என்னுடைய நீண்ட அனுபவத்தால் கிடைத்த ஆய்வு முடிவினை ஒரு கோட்பாடாகவே சில வருடங்களுக்கு முன் வெளியிட்டிருக்கிறேன்.  

ஜோதிடம் என்பது வெறும் எண்களில் மட்டும் இல்லை. கிரகங்கள் அனைத்தும் கேந்திர, கோணங்களில் வலுவாக இருந்தாலும், அவை பாபத்துவம் இன்றி இருப்பது மட்டுமே நன்மை தரும். கூடுதலாக பாபக் கிரகங்கள் சூட்சும வலுவுடன் இருப்பது மட்டுமே யோகங்களைத் தரும் என்பதே பரம்பொருள் என் சிற்றறிவிற்கு தெரிய அனுமதித்த சூட்சுமம். 

நான் இப்போது சொல்லும் சுபத்துவ, பாபத்துவ விஷயங்கள் ஜோதிடத்தின் மிக உயர்நிலைப் புரிதலாக இருப்பவை. அடிப்படை கட்டமைப்புகளான லக்னம், ராசி இவற்றையும் தாண்டி இந்த சுப, சூட்சும வலு நிலைகள் ஒரு ஜாதகத்தை தூக்கி நிறுத்தும் தன்மை கொண்டவை. எளிமையாகச் சொல்ல வேண்டுமெனில் ஒரு ஜாதகத்தில் இருக்கின்ற குறைகள் அனைத்தையும் இந்த சுபத்துவ, சூட்சும வலு நீக்கி ஜாதகரை மிக உயரத்திற்கு கொண்டு செல்லும். 
 
லக்னம், லக்னாதிபதி வலுவாக இருந்து, ஐந்து, ஒன்பதுக்குடையவர்கள், 6, 8, 12 போன்ற  மறைவிடங்களில் அமராமல், நல்ல பாவகங்களில் அமைந்து அவர்களின் தசையும் நடக்குமானால், ஜாதகர்  யோகத்தை  அனுபவிப்பார் என்பது ஜோதிடத்தின் அடிப்படை விதி. 

விதி என்ற ஒன்று இருந்தால், விலக்கு எனும் ஒன்று ஜோதிடத்தில் இருந்தே தீரும். அடிப்படை விதிகளைக் கூட ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் சுபத்துவ, சூட்சும வலு நிலைகள் மாற்றும் என்பது விதிவிலக்கு.  மறைவு ஸ்தானங்களில் கிரகங்கள் இருந்தாலும், லக்னாதிபதி வலுவிழந்து இருந்தாலும், அவர் சுபத்துவ அமைப்பில் இருக்கும்போது யோகத்தைச் செய்வார்.  

இதுபோன்ற  ஒரு உன்னத நிலையினைத்  தருவதுதான்  சந்திர அதி யோகம்.  
எப்போதும் நான் யோகங்களை வலியுறுத்திச் சொல்வதில்லை. ஒரு ஜாதகத்தை கணிக்கும்போது அதில் உள்ள யோக அமைப்புகளை மட்டும் கணக்கிட்டு விட்டு, அதன் சுபத்துவ, பாபத்துவ, சூட்சும வலுக்களை கணிக்கத் தெரியாமல்தான், பலன் அறிவதில் பலர் திசை மாறிப் போகிறார்கள். யோகங்களை மேலோட்டமாக புரிந்து கொள்வதை விட அவை எந்த அடிப்படையில், ஏன் சொல்லப்பட்டிருக்கின்றன என்பதை புரிந்து கொண்டால் மட்டுமே பலன் அறிய முடியும்.   

உண்மையில் நம்முடைய விளக்க நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் பெரும்பாலான யோகங்கள் அதை எழுதிய ஜோதிடர்களின் காலத்தில் வாழ்ந்த உயர்நிலை மனிதர்களின் ஜாதகங்களில் மட்டும் இருந்த ஒரு அமைப்புத்தான். அந்த யோகங்கள் அதே நிலையில் பிற மனிதருக்கு அமையப் போவது இல்லை. அதைப்போலவே இந்த யோகங்கள் ஏன் சொல்லப்பட்டன என்ற அடிப்படை விஷயம், எனக்கு ஜோதிடம் ஒளி நிலையாக புரிந்த போது, அறிய வந்துவிட்ட படியால் இதன்மீது இருந்த சுவாரஸ்யம் போய்விட்டது, யோகங்களின் உண்மைத் தன்மையும் தெரிந்து விட்டது. 

அதேநேரத்தில் அதி யோகம் போன்றவை ஒரு ஜாதகத்தின் தரத்தை அளவிடும் மிக நுண்ணிய சூட்சும விஷயங்களை நமக்குச் சொல்லித் தருபவை. 

பரம்பொருளின் கருணையினால் வாழ்வில் உன்னத நிலையில் இருப்பவர்களின் ஜாதகங்களைப் பார்க்கும் நிலையில் இருக்கும் நான், கீழே இருபது வயதுகளில் இருக்கும் ஒரு மிகப் பெரும் செல்வந்தக் குடும்பத்துப் பெண்ணின் ஜாதகத்தைக் கொடுத்திருக்கிறேன். 

 
சந் 

 


 கேது

 

 

 


யோக ஜாதகம் 

 


சனி

 

 


ராகு

சூரி, புத,குரு, செவ்


சுக்.


பிறந்தது முதல் கேட்கும் அனைத்தும் கிடைத்த மிகப் பெரிய யோகக் குழந்தை இவர். அள்ள அள்ளக் குறையாத அளவிற்கு பதினான்கு தலைமுறைக்குத் தேவையான சொத்து இவரது குடும்பத்தில் கொட்டிக் கிடக்கிறது. இவரது தந்தையும், தாயும் மிகப் பெரிய அந்தஸ்தைக் கொண்டவர்கள். 

பீச்சில் விற்கும் பத்து ரூபாய் சுண்டல் வாங்குவதற்கு, கோடிக்கணக்கான  மதிப்புள்ள வகைவகையான கார்களில், எதை எடுத்துக்கொண்டு போகலாம் என்று யோசிக்கும் அளவிற்கு வீட்டில் நிறுத்த முடியாத அளவிற்கு கார்கள் நிற்கின்றன. தான் ஒரு மிகப்பெரிய பணக்காரி என்ற எண்ணம் கூட தெரியாத அளவிற்கு வாழ்வில் அனைத்தும் கிடைக்கின்ற இறையருள் பெற்ற பிறவி இவருடையது. 

இவருக்கு விருச்சிக லக்னம், மீன ராசியாகி, லக்னாதிபதி செவ்வாய் பனிரெண்டில் மறைந்திருக்கிறார். லக்ன நாயகனை அடுத்த சுபரான ஐந்துக்குடைய குருவும் அவருடன் பனிரெண்டில் இருக்கிறார். ஒன்பதிற்குடைய பாக்யாதிபதி சந்திரன் ஐந்தில் அமர, மிகப் பெரும் செல்வ நிலைகளை அனுபவிக்கத் தரும் சுக்கிரன் நீச்ச நிலையில், பரிவர்த்தனை அமைப்பில் இருக்கிறார். மேம்போக்காகப் பார்த்தால் மிக, மிகச் சாதரணமான ஜாதகம் இது.

ஒரு நல்ல ஜாதகத்தில் லக்னம், லக்னாதிபதி அல்லது ராசியை வலுப்பெற்ற குரு பார்க்க வேண்டும். அல்லது லக்னாதிபதி வலுவாக இருக்க வேண்டும். அதுவே அனைத்தையும் அனுபவிக்கத் தகுந்த அமைப்பு என்று அடிக்கடி எழுதுபவன் நான். அந்த அமைப்புகள் இல்லாத ஜாதகம் இது.

ஆனால், அதற்குப் பதிலாக சந்திரனால் பெறப்படும் உன்னத யோகமான சந்திர அதியோகம் இந்த ஜாதகத்தில் இருக்கிறது. பலவீனமான அத்தனை கிரகங்களும் சந்திரனின் சுப ஒளியால் சுபத்துவம் அடைந்து ஜாதகருக்கு நன்மை தரும் அமைப்பைப் பெறுகின்றன.

ஜோதிடத்தில் தாயாகவும், தந்தையாகவும் சந்திர, சூரியர்கள் உருவகப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். இந்த இருவரும் முழு ஒளித்திறனுடன் இருக்கும் நாளான பவுர்ணமி தினம், மிகப்பெரிய நேர்மறை சக்திகள் அடங்கிய நாளாக ஜோதிடத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. பவுர்ணமி அல்லது அதற்கு முன்பின் நாட்களில் பிறப்பவர்கள் ஏதேனும் ஒருவகையில் சிறப்பானவர்களாகவே இருப்பார்கள்.

சந்திராதி யோகம் என்பது “சந்திரனுக்கு ஆறு, ஏழு, எட்டில் சுபர்கள் இருப்பது” என்று மூலநூல்களில் சுருக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆயினும் இந்த யோகம் ஒருவருக்கு இருக்கும் நிலையில், யோகத்தின் மூல நாயகனான சந்திரன் நல்ல ஒளித்திறனுடன் வளர்பிறையிலோ, பவுர்ணமியிலோ அல்லது தேய்பிறையாக இருந்தாலும் பவுர்ணமியை நெருங்கிய அமைப்பிலோ இருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 

தான் ஒளியுடன் இருக்கும்போது, தனக்கு நேர் எதிர் ஏழாமிடத்தில் இருக்கும் கிரகத்தை சந்திரன் வலுவாக்குவதை உணர்ந்து சொல்லப்பட்ட யோகம் இது. சந்திரன் முழு ஒளித்திறனுடன் இருக்கும்போது தனக்கு நேர் எதிர் பாவகமான ஏழில் இருக்கும் கிரகத்தையும், அதன் முன் பின் பாவகங்களான ஆறு, எட்டில் இருக்கும் கிரகங்களையும் தன் சுப ஒளி வெள்ளத்தில் மூழ்கடித்து புனிதப் படுத்துகிறார் என்பதை நமது தெய்வாம்சம் பொருந்திய ஞானிகள் உணர்ந்துதான் இந்த யோகத்தை நமக்கு எடுத்துச் சொன்னார்கள்.

எந்த ஒரு நிலையிலும், ஒரு உயிர் பிறக்கும் போது சந்திரனின் ஒளி அதற்கு கிடைக்காமல் இருக்கக் கூடாது, அப்படி சந்திர ஒளி கிடைக்காத நிலையில் பிறக்கும் ஒரு உயிர் இந்த உலகில் அதிர்ஷ்ட வாழ்வை அடையாது என்பதைக் குறிக்கவே “வட்டவான் மதிக்கு ஈராறெட்டில் அரவு இருப்பின்” போன்ற பாடல்கள் நமக்குச் சொல்லப்பட்டன.

அதாவது வட்ட வான் மதி எனும் சந்திரனுக்கு எட்டு, பனிரெண்டில் அரவு எனப்படும் சர்ப்ப, இருள் கிரகங்களான ராகுவோ, கேதுவோ, சந்திரனுக்கு பனிரெண்டில் நெருங்கி இருப்பின் சந்திரன் ஒளியிழப்பார். அப்போது பிறப்பவருக்கு இந்த அமைப்பு நன்மை தராது என்ற அர்த்தத்தில் இது சொல்லப்பட்டது. 

ராகு, கேதுக்களில் ஒன்று சந்திரனுக்குப் பனிரெண்டில் இருந்தால் சந்திரன் ஒளியிழப்பார் என்பதைப் போலவே, சந்திரனுக்கு எட்டில் இவைகளில் ஒன்று இருந்தாலும், அதன் மறுமுனைக் கிரகமான இன்னொன்று நிலவுக்கு இரண்டில் நெருங்கி இருந்து அதன் ஒளியைப் பாதிக்கும் என்பதும் மறைமுகமாக இந்தப் பாடலில் நமக்கு உணர்த்தப் படுகிறது.    

பூமிக்கு மிக அருகில் இருக்கும் சுபக்கோளாக சந்திரன் இருப்பதினால்தான் கிரகங்களின் சக்தியிழப்பை மாற்றி அமைக்கும் திறன் சந்திரனுக்கு இருப்பதாக ஜோதிடம் சொல்கிறது. சந்திரனுக்கு கேந்திரத்தில் இருக்கும் கிரகங்கள் நீச்சபங்கம் அடையும் என்று சொல்வதின் சூட்சுமமும் இதுதான். 

உண்மையில் உயிர்களின் தாயாகிய சந்திரன், பூமிக்கும், பூமியில் உள்ள உயிர்களுக்கும் கிடைக்கும் சூரியன் மற்றும் கிரகங்கள், மற்றைய நட்சத்திரங்கள் மூலம் கிடைக்கும் ஒளியை உயிர்களுக்குத் தேவையான அளவில் மாற்றித் தரும் ஒரு வடிகட்டியாகவே செயல்படுகிறது.

இந்த ஜாதகத்தின் நுணுக்கமான விளக்கங்களையும், சந்திராதி யோகம் மூலம் இந்த ஜாதகம் அடைந்திருக்கும் சிறப்புகளைப் பற்றியும், அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்...


(29-06-2018 மாலைமலரில் வெளிவந்தது).

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் - செல்:8681998888, 8870998888, 8428998888, 7092778888, 8754008888, 044-24358888, 044-48678888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment