Saturday, June 2, 2018

ஏழரைச் சனி எப்போது நன்மை செய்யும்..? D-009(A) Yezharai Sani Yeppothu Nanmai Seiyum..?


ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

சென்ற வார ஏழரைச்சனி பற்றிய கட்டுரைக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளும், மேல் விளக்கங்களும் தேவைப்படுகிறது என்பது உங்களுடைய கேள்விகளில் இருந்து தெரிகிறது. 

ஏழரை வருடங்கள் தொடரும் இந்த அமைப்பில் விரயச்சனி, ஜென்மச்சனி, பாதச் சனி என்பதைப் பற்றியும், ஒரு மனிதனின் வாழ்நாளில் முப்பது வருடங்களுக்கு ஒருமுறை வரும் இந்நிகழ்வில் முதல் சுற்று, இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்று எனப்படும் மங்குசனி, பொங்குசனி, மரணச்சனி என்ற மூன்று சுற்றுக்களைப் பற்றிய விளக்கங்களையும் அநேகர் கேட்டிருக்கிறீர்கள். 

ஏழரைச்சனி என்பது மூன்று பகுதியான இரண்டரை வருடங்களை கொண்ட ஒரு நிலை. ஒருவரின் ராசிக்குப் பின் ராசியான, பனிரெண்டாமிடத்திற்கு சனி வருவது விரையச் சனி எனப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் வருமானங்களை சனி தந்தாலும் அவற்றை சேமிக்க முடியாமல் செய்வார் என்று ஜோதிட நூல்கள் சொல்கின்றன. இது ஒரு பொதுப் பலன்தான். 

முதல் இரண்டரை ஆண்டு காலத்தில் ஒரு மனிதர் ஏழரைச் சனியின் தாக்கத்தை உணர்வது இல்லை. சிலருக்கு அதீதமான பொருள் வரவும் விரயச்சனி காலத்தில் கிடைக்கவே செய்கிறது. இக் காலத்தில் ஒருவருக்கு தாராளமாக பணம் வரும். 

சொந்த ராசியில் சனி இருக்கும் நிலையே, ஜென்மச் சனி எனப்படுகிறது. இந்த இரண்டரை ஆண்டு காலத்தில், ஒருவரின் பிறந்த நட்சத்திரத்தின் மேல் சனி செல்லும், சுமார் ஒரு ஆண்டு காலத்தின் போது கடுமையான கெடுபலன்களைத் தருவார். அதிலும் 40 வயதுக்குள் வரும் சனி கூடுதல் கஷ்டங்களைத் தருகிறது. 

பிறந்த நட்சத்திரத்தில் சனி செல்லும்போது பெரும்பாலானோருக்கு வாய்விட்டு அழும்படியான மன அழுத்தம் உள்ள நிகழ்ச்சிகள் நடக்கும். இந்த நேரத்தில் ஒருவருக்கு எது பிடிக்காதோ அது நடக்கும். அவனை எது பாதிக்குமோ அதில் சனி கெடுபலன்களைச் செய்வார், இது வயதிற்கு ஏற்றார் போல நடக்கும். 

ஜென்மச்சனியில் இருபது வயது வாலிபனை, வயதிற்கேற்றார் போல காதல் தோல்வியிலும், முப்பது வயதுகளில் இருப்பவனை தொழில் அமைப்புகளிலும், நாற்பதில் இருப்பவனை தொழில், குடும்ப அமைப்புகளிலும் சிக்கல்களை சனி தருவார். சிலருக்கு நெருங்கியவர் மரணத்தின் மூலமாக பதட்டத்தைத் தருவார்.

ஜென்மராசியில் இருளாகிய சனி அமரும்போது, ஒரு மனிதனின் மனதை ஆளுமை செய்து அவனை, தவறான வழியில் செல்லவோ, முடிவெடுக்கவோ வைக்கிறார். அப்போது தனது கெடுபலன் தரும் கொடிய பார்வை மூலம் அந்த மனிதனின் தைரியம், நற்பெயர் ஆகியவற்றிற்கு காரணமான மூன்றாமிடத்தைப் பார்த்து, அவனது பெயரைக் கெடுத்து, தைரியத்தைக் குலைத்து எதிர்காலம் பற்றிய பயத்தைக் கொடுப்பார்.

ராசியில் சனி இருக்கும்போது அவரது பத்தாம் பார்வையால் தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால்தான், ஜென்மச் சனி நடக்கும்போது வேலையிழப்பு, சஸ்பென்ட். தொழில் சரிவு போன்றவைகள் நடக்கின்றன. 

பாதச் சனி எனப்படும் ராசிக்கு இரண்டாமிடத்திற்கு சனி மாறியவுடன், இதுநாள் வரை நடந்த கெடுபலன்கள் குறைய ஆரம்பிக்கும். ஆனாலும் இந்த நிலையில் முழுமையான நன்மைகள் நடந்து விடுவது இல்லை. சனி முழுவதுமாக முடிந்ததும் அந்த மனிதர் செட்டிலாகும் வாழ்க்கை வாழ்வதற்கான ஆரம்பங்கள் இந்த பாதச் சனி அமைப்பில் நடக்கும்.

மங்கு, பொங்கு, மரணச்சனி விஷயத்தை எடுத்துக் கொண்டால், பிறந்த உடன் வருகின்ற சனி, மங்கு சனி எனவும், இது கெடுபலன்களைத் தரும் எனவும், அடுத்த முப்பது வருடங்களில் வருகின்ற சனி பொங்கு சனி, அது நல்ல பலன்களைத் தரும் எனவும், மூன்றாவதாக வரும் சனி மரணச் சனி எனவும், அது முதல் சுற்று சனியைப் போலவே கெடுபலன்களைக் கொடுத்து ஒரு மனிதனின் ஆயுள், ஆரோக்கியத்தைக் குலைக்கும் எனவும் ஜோதிடர்களால் விளக்கப்படுகிறது. 

இதில் சிலர் புரிந்து கொள்ளாதது என்னவெனில், குழந்தையாய்  இருக்கும் போது வருகின்ற ஏழரைச்சனியை மங்கு சனி எனவும், அடுத்து வரும் சனியை இரண்டாவது சுற்று பொங்கு சனி எனச் சொல்லி, முப்பது வயதுகளில் வரும் சனி நல்லது செய்யும் என தவறாக நினைத்துக் கொள்கிறார்கள் 

உண்மையில் ஏழரைச் சனி என்பது ஒரு மனிதன் எதிர்காலத்தில் நல்லவிதமாக வாழ்வதற்கான அனுபவங்களையும், பணம் என்றால் என்ன என்பதைப் பற்றிய நேரடி அனுபவத்தையும் தருகின்ற ஒரு அமைப்பு என்பதால் சனிக்கு எவரும் விதிவிலக்காக இருக்க முடியாது. எத்தனை பெரிய யோக ஜாதகமாக இருந்தாலும் ஜாதகத்திற்கு ஏற்ப சனியின் கெடுபலன்கள் இருக்கவே செய்யும். பூமியில் பிறக்கும் எவரும் ஏழரைச்சனிக்கு விதிவிலக்காக இருக்க முடியாது 

விபரம் தெரியாத குழந்தைப் பருவமான, ஏறத்தாழ 15 வயது வரை வருகின்ற ஏழரைச்சனியை ஒருபோதும் கணக்கில் எடுத்துக் கொள்ளவே கூடாது. இந்தப்  பருவத்தில் வரும் சனி அவருக்கு நல்ல, கெட்ட பலன்களைச் செய்யாது. இது அவரது பெற்றோருக்கும், குடும்பத்திற்கும் சாதகமற்ற பலன்களைச் செய்யும். அதன் மூலம் குழந்தையும் பாதிக்கப்படும்.

ஒருவருக்கு பத்து வயதில் ஏழரைச்சனி முடிந்திருக்குமாயின், முப்பத்து மூன்று  வயதில் இன்னொரு சுற்று சனி ஆரம்பமாகும். அதனை பொங்கு சனி என்று சொல்லி அந்த இரண்டாம் சுற்று நன்மைகளைச் செய்யும் என்று கணக்கிட கூடாது. உண்மையில் அவருக்கு விபரம் தெரிந்த வயதான இந்த 33 வயதில் வருகின்ற சனியே அவருக்கு முதல் சுற்று சனி போன்ற அனுபவங்களை கொடுத்து கெடுபலன்களை செய்யும்.

குறிப்பாக இந்த வயதில் வரும் சனி, வேலை, தொழில் விஷயங்களில் அவருக்கு சில நிர்ப்பந்தங்களைக் கொடுத்து, தேவையற்றவைகளில் அவரைத் தள்ளி, வயதிற்கேற்ற தொழில், சொந்த வாழ்க்கைகளில் சாதகமற்ற பலன்களை தந்து வாழ்க்கை அனுபவங்களைக் கற்றுக் கொடுக்கும். முப்பது வயதுகளில் இருக்கும் மனிதருக்கு பொங்கு சனி எனப்படும் இரண்டாம் சுற்று சனி நல்ல பலன் தராது.

சற்று விபரம் தெரிந்த இளம்பருவமான இருபது வயதுகளில் இருக்கும்போது நடக்கும் முதல் சுற்று ஏழரைச் சனியை, மங்கு சனி என்று சொல்லி, அடுத்த 50 வயதுகளில் நடக்கும் இரண்டாம் சுற்று சனியை பொங்கு சனி என்று சொல்லலாம். ஐம்பது வயதுகளில் வரும் சனி பெரிய கெடுதல்களை தருவதில்லை. மாறாக நன்மைகளைச் செய்யும்.

கவனிக்க வேண்டியது என்னவெனில், முதல் சுற்று ஏழரைச் சனி நடக்கும்போது சம்பந்தப்பட்ட மனிதருக்கு, வயதிற்கேற்ற மன அழுத்தங்களை, தோல்விகளை, வாழ்க்கையைப் பற்றிய புரிதல்களை சனி கொடுத்திருந்தால் மட்டுமே, இரண்டாவதாக வருவது மங்கு சனியாக இருக்கும். விபரம் தெரியாத குழந்தைப் பருவத்தில் வரும் ஏழரைச் சனியை கணக்கில் எடுத்துக் கொள்ளவே கூடாது.

பிரதமர் மோடிக்கு விருச்சிக ராசியா?

சென்ற வாரக் கட்டுரையைப் படித்து விட்டு பிரதமர் மோடிக்கு விருச்சிக ராசிதானே, அவர் ஏழரைச்சனியில் தானே ஆட்சியைப் பிடித்திருக்கிறார் என்ற கேள்விகள் வந்திருக்கின்றன. 

ஆதாரம் இல்லாமல் ஒருவருடைய பிறந்த ஜாதகத்தை நான் நம்புவதில்லை என்பதை முன்பே நான் எழுதியிருக்கிறேன். இணையத்தில் மோடி ஜாதகம் என்று 11 ஜாதகங்கள் இருக்கின்றன. இதில் எது உண்மை என்று யாருக்குத் தெரியும்?

பிரதமர் மோடி அவர்கள் விருச்சிக ராசியில்தான் பிறந்திருக்கிறார் என்பது நிச்சயமற்றது. 60 ஆண்டுகளுக்கு முன் ஒரு எளிமையான குடும்பத்தில் பிறந்த அவரது ஜனன நாள், நேர விபரங்களை அவரே  துல்லியமாக அறிவாரா என்பதும் சந்தேகத்திற்குரியது. பிறந்தநேரம் பற்றிய பெரிய விழிப்புணர்வும், தொழில் நுட்ப வசதிகளும் இல்லாத ஐம்பது ஆண்டுகளுக்கு முன் பிறந்த அனைவரின் குறிப்புகளும் தோராயமானதே. 

மோடி அவர்கள் பிறக்கும்போதே பிரதமர் ஆவார் என்று யாரும் அவரது ஜாதகத்தை எழுதி பத்திரப்படுத்தி இருக்கப் போவது இல்லை. ஓரளவிற்கு அவர் நல்ல நிலைக்கு வந்த பிறகே அவரது குடும்ப உறுப்பினர்களிடமோ, வேறு சில வழிகளிலோ அவரது பிறந்த விபரங்களை சேகரித்து இதுதான் அவரது ஜாதகம் என்று காட்டப்படுகிறது. அது ஒருபோதும் துல்லியமானதாக இருக்காது. 

அக்காலத்தில் ஜோதிட நம்பிக்கையுள்ள குடும்பங்களில் மட்டுமே குழந்தை பிறக்கும் சரியான நேரத்தை குறித்து வைக்கும் வழக்கம் இருந்தது. இங்கே பலரின் பிறந்த நேரங்கள் குத்துமதிப்பானதுதான். அதிலும் குழந்தை நள்ளிரவில் பிறந்தால் சொல்லவே வேண்டியதில்லை. நேரம் முன்பின்னாகத்தான் இருக்கும். அதேபோல கிராமங்களில் பிறந்தவர்களின் விபரங்களும் தோராயமானதுதான்.  

பிரபலமானவர்களின் ஜாதகங்கள் என்று இணையத்தில் வருபவற்றை நம்பாதீர்கள் என்று என்னைப் படிப்பவர்களை அடிக்கடி கேட்டுக் கொள்கிறேன். இதற்கு மறைந்த எம்ஜிஆர் அவர்களின் உண்மையான ஜாதகமும் ஒரு சாட்சி. 

எம்ஜிஆர் 17-1-1917 அன்று பிறந்ததாக ஒரு ஜாதகத்தை எழுதி சில ஆண்டுகளுக்கு முன் பலன் சொன்ன அத்தனை ஜோதிடர்களும், ஜோதிடத்தின் உண்மைத் தன்மையைக் குறைத்தவர்கள்தான். 

ஜோதிடம் ஒருபோதும் சமரசத்திற்கு உள்ளாகாது. ஜாதகத்தை மதிப்பிடும்போதே அது குப்பை அள்ளுபவன் ஜாதகமா, கோடீஸ்வரன் ஜாதகமா என்று கணிக்க இயலாமல், கையில் கிடைத்த ஜாதகத்தை வைத்து அதற்குத் தகுந்தாற்போல் பலன் எழுதுவதற்கும், சொல்வதற்கும் பெயர் ஜோதிடம் அல்ல.

பிரபலமானவர்கள் உண்மையான ஜாதகத்தை வெளிப்படையாகத் தருவதில்லை அல்லது அவரது குறிப்புகள் துல்லியமாக அவருக்கே தெரியாது. தெரிந்தாலும் ஜாதகத்தை வெளியே சொல்வதில் ஆயிரம் பிரச்னைகள் இருக்கின்றன. ஜோதிடர்கள்தான் ஆர்வக் கோளாறில் கையில் கிடைக்கும் ஜாதகப்படி பலன்களை எழுதி, அந்தக் கணிப்பு தவறி, ஜோதிடத்தின் மாண்பைக் கெடுக்கிறார்கள். 

இணையத்தில் உள்ள ஜெயலலிதா, ரஜினி போன்றவர்களின் ஜாதகங்கள் இதற்கு விதிவிலக்கு. எனக்கு நன்கு தெரிந்த, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் பத்தாவது வரை படித்த, அவரது தோழியின் மூலம் நான் ஜெயலலிதாவின் ஜாதகத்தை உறுதிப்படுத்தி இருக்கிறேன். 

ரஜினிகாந்த் ஜாதகமும் ஒருமுறை அவருக்கு மிகவும் நெருக்கமான ஒருவரால் என்னிடம் உறுதிப்படுத்தப்பட்டது. அதேபோல கலைஞர் அவர்களின் துல்லியமான பிறந்த நேரமும் எவருக்கும் தெரியாது. ஒரு கால் மணி நேர இடைவெளிக்குள் தான் அவரது ஜாதகமும் கணிக்கப்படுகிறது. ஆகவே பிரதமர் மோடி அவர்களின் ராசி விருச்சிகம் என்பது தவறாகக் கூட இருக்கக் கூடும். 

அடுத்த வெள்ளிக்கிழமை தொடரலாம்...

(01-06-2018 மாலைமலரில் வெளிவந்தது)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் - செல்:8681998888, 8870998888, 8428998888, 7092778888, 8754008888, 044-24358888, 044-48678888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

1 comment :

  1. வணக்கம் குருஜி..!!

    அஷ்டவர்க்கத்தைப் பற்றி படிக்கும்போது, ஏழரைச் சனியோ அல்லது அஷ்டமச் சனியோ எதுவாக இருந்தாலும், சனி இருக்கும் வீடுகளில் சர்வாஷ்டக வர்க்கப் பரல் 28 அல்லது அதற்கு மேல் இருந்தால் அதன் தாக்கம் பெரிதாக (கடுமையாக) இருப்பதில்லை என்று படித்த ஞாபகம். தங்கள் அனுபவத்தில் அது சரியா தவறா என்று கூறுங்கள் குருஜி..!!

    நன்றி 🙏

    ReplyDelete