Friday, March 2, 2018

கடகம்: 2018 மார்ச் மாத பலன்கள்

கடகம்:

கடக ராசிக்கு யோகக் கிரக நிலைகளே இந்த மாதம் அமைகின்றன. குறிப்பாக பாபக் கிரகங்களான செவ்வாயும், சனியும் ஆறாமிடத்தில் இணைவது கடன், நோய், எதிர்ப்புகளை விலக்கும் ஒரு அமைப்பு என்பதால் நீண்டகாலமாக தொல்லைகளை கொடுத்து கொண்டிருக்கின்ற கடன் பிரச்சினைகளுக்கு இந்த மாதம் தீர்வு கிடைக்கும். சிலருக்கு வேலையிடங்களில் இருந்து வந்த எதிர்ப்புகள் அடியோடு விலகும். அனைத்திலும் திருப்தியான மாதம் இது. எண்ணியது எண்ணியபடி நடக்கும். குடும்பத்தில் சுபிட்ஷம் நிலவும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள்.

நீண்ட நாட்களாக கோட்சார நிலைமைகள் நன்கு அமையாத கடகராசிக் காரர்களுக்கு “வராது வந்த மாமணி போல” மார்ச் மாதம் முழுவதும் குரு பகவானும், உச்சம் பெற்ற சுக்கிரனும் நான்கு ஒன்பதாமிடங்களில் பரிவர்த்தனை பெறுவது நல்ல அமைப்பு. எனவே எந்த ஒரு வாய்ப்பையும் நீங்கள் வீணடிக்காமல் முன்னேற வேண்டிய மாதமாக இது இருக்கும். மாதம் முழுவதும் சாதகமான கிரக அமைப்புகள் இருப்பதால் தயக்கமும், சோம்பலுமின்றி பரம்பொருளைப் பிரார்த்தித்து நீங்கள் எந்த முயற்சிகள் எடுத்தாலும் அனைத்தும் வெற்றியாகும். மூன்றாமதிபதி புதன் நீசமாக இருந்தாலும் அவருக்கு வீடு கொடுத்த குரு பரிவர்த்தனை அடைவதால் சிலருக்கு மறைமுகமான லாபங்கள் இருக்கும்.

எட்டுக்குடையவன் எட்டாம் வீட்டைப் பார்ப்பதால் வெளிநாடுகளில் இருக்கும் பிள்ளைகளிடமிருந்து நல்லசெய்திகள் உண்டு. சிலருக்கு குருட்டு அதிர்ஷ்டம் செயல்படும் என்பதால் எதிர்பாராத ஏதேனும் ஒரு லாபத்தை இந்தமாதம் எதிர்பார்க்கலாம். மாதம் முழுவதும் இயற்கைச் சுபரான சுக்கிரன் உச்சநிலையில் இருப்பது பெண்களால் லாபங்களும் இனிமையான சம்பவங்களும் இருக்கும் என்பதைக் காட்டுகிறது. குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகளும் பணவரவுகளும் இருக்கும். மனைவி மற்றும் பங்குதாரர்கள் வழியில் லாபங்கள் உண்டு. குறிப்பாக வேலைக்கு செல்லும் மனைவியால் உங்களின் தேவைகள் நிறைவேறும். கலைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள் போன்ற துறையினருக்கு இந்த மாதம் சிறந்த மாதம்.

5,6,8,10,14,15,16,20,21,28 ஆகிய நாட்களில் பணம் வரும். 15-ம் தேதி அதிகாலை 4.13 மணி முதல் 17-ம்தேதி மதியம் 1.31 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் நீண்ட தூர பிரயாணங்களோ புதிய முயற்சிகளோ இந்த நாட்களில் செய்ய வேண்டாம்.

No comments :

Post a Comment