மேஷம்:
பிப்ரவரி மாதம் முழுவதும் ராசிநாதன் செவ்வாய் எட்டில் மறைந்தாலும் ஆட்சியாக
இருக்கிறார். ராசிக்கு குரு பார்வை இருப்பது இன்னுமொரு
சிறப்பு என்பதோடு
மாதத்தின் ஆரம்ப நாளிலேயே சூரியனும், சந்திரனும் சுபத்துவமாக இருக்கும்
பௌர்ணமியாக அமைவதால் இது மேஷராசிக்கு மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் தரும்
மாதமாக அமையும். எதையும் முழுமையாகச் செய்ய முடியாமல் தயங்கித் தயங்கி தவித்து
கொண்டிருந்த மேஷத்தினர் இப்போது நல்ல சூழ்நிலைகள் அமைவதை உணர்வீர்கள்.
மூன்றாமிடம் வலுப் பெறுவதால் உங்களுடைய மனோபலமும், எதையும் நேர்முகத்துடன்
சந்திக்கும் தைரியமும் இப்போது அதிகரிக்கும். இதுவரை சந்திக்கத் தயங்கிய பல
விஷயங்களை தைரியமாக எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். ராசிக்கு குருவின் பார்வை
கிடைப்பதால் தொட்டது துலங்கும். அறிவால் எதையும் சாதிப்பீர்கள். ஊக்கத்துடன்
செயல்படுவீர்கள். எதையும் சிறப்பான முறையில் செய்து முடிப்பீர்கள். அந்தஸ்து
கௌரவம் உயர்வான நிலையில் இருக்கும். சமூகத்தில் பெரிய நிலையில் இருப்பவர்களின்
அறிமுகமும் நட்பும் கிடைக்கும். தந்தைவழி உறவினர்களால் கருத்து வேறுபாடு
உண்டு. வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும்.
சிலருக்கு வாழ்க்கைத்துணை அமைவதற்கான ஆரம்பங்கள் இருக்கும். தாமதமாகி வந்த
அனைத்து விஷயங்களும் தடைகள் நீங்கி உங்களின் மனம் போல் நடக்கும்.
இளையபருவத்தினருக்கு திருமணம் நிச்சயம் ஆகும். தம்பதியினருக்கு புத்திர
பாக்கியம் உண்டு. தொழில் சிறப்படையும். வியாபாரம் விருத்தியாகும். வேலை
செய்யும் இடத்தில் புகழ் பெறுவீர்கள். கடன்கள் கட்டுக்குள் இருக்கும்.
வழக்குகளில் தீர்ப்புகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். ஆறுக்குடையவன் வலுப்
பெறுவதால் நடுத்தர வயதுடையவர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
5,6,7,11,12,13,22,23 ஆகிய நாட்களில் பணம் வரும். 5-ம் தேதி இரவு 10.29 முதல்
8-ம் தேதி காலை 7.45 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய
முயற்சிகள் எதையும் ஆரம்பிக்க வேண்டாம். இந்த தினங்களில் அறிமுகமாகும்
ஒருவரின் மூலம் பின்நாட்களில் சிக்கல்கள் வரும் என்பதால் அனைத்திலும் கவனமாக
இருப்பது நல்லது.
No comments :
Post a Comment