Saturday, February 3, 2018

ரிஷபம்: 2018 பிப்ரவரி மாத பலன்கள்


ரிஷபம்:

ஆட்சி பெற்ற செவ்வாய் ராசியை பார்ப்பதால் ரிஷப ராசிக்காரர்களுக்கு கோபத்தை உருவாக்கக் கூடிய நிகழ்வுகள் நடக்கும் மாதமாக பிப்ரவரி
இருக்கும். எவ்வளவு நிதானமானவராக இருந்தாலும் கூட பொறுமையைக் கைவிடச் செய்யும் அளவிற்கு வம்புக்கு இழுக்கும் சம்பவங்களை சுற்றி இருப்பவர்கள் செய்வார்கள் என்பதால் ரிஷபத்தினர் பேச்சிலும், செயலிலும் கவனமாக இருக்க வேண்டிய மாதம் இது. இதை தவிர்த்து வேலை, தொழிலில் வேறு எந்தவித தொந்தரவுகளும் இருக்காது.


சிலருக்கு கைக்கெட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலை உண்டாகி எதிலும் தாமதத்தை தரும் மாதம் இது. தாய்வழி உறவு, பங்காளிகள் போன்ற உறவுகளால் நிம்மதியற்ற நிலைமையும், பெண்கள் மற்றும் பெண்கள் உபயோகப்படுத்தும் விஷயங்களில் செலவுகளும் இருக்கும். செவ்வாய் சுபவலு அடைவதால் இதுவரை கருத்து வேற்றுமைகளால் மனச் சங்கடத்தில் இருந்து வந்த தம்பதிகள் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி இணைவீர்கள். சிலருக்கு எதிர்பார்க்கும் இடத்தில் இருந்து பணம் கிடைப்பதில் தடைகள் இருக்கும். சிலருக்கு கடன் வாங்க வேண்டிய நெருக்கடிகள் இருக்கும். கடன்காரர்களுக்கு சொல்லும் தேதியில் பணம் தரமுடியாமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது. தந்தைவழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும்.

சகாய ஸ்தானம் எனப்படும் உதவிகளைப் பெறுகின்ற வீட்டில் ராகு இருப்பதால் எதிர்பாராத இடத்திலிருந்து சரியான நேரத்தில் உதவிகள் கிடைக்கும். எனவே பிறந்த ஜாதக அமைப்பின்படி தற்போது சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருக்கும் ரிஷப ராசிக்காரர்கள் கலங்கத் தேவையில்லை. உங்களில் ரோகினி நட்சத்திரக்காரர்களுக்கு ஆபரணச் சேர்க்கை எனப்படும் நகை வாங்குதல் இருக்கும். மனைவிக்கோ குழந்தைக்கோ சொந்த வருமானத்தில் சேமிக்கப்பட்ட பணத்தில் இருந்து நகை வாங்கித் தருவீர்கள்.

1,2,3,8,9,10,24,25 ஆகிய நாட்களில் பணம் வரும். 8-ம் தேதி காலை 7.45 முதல் 10-ம் தேதி இரவு 7.52 வரை சந்திராஷ்டமம் என்பதால் மேற்கண்ட நாட்களில் முக்கியமான முடிவுகள் எதையும் எடுக்காமல் இருப்பது நல்லது. இந்த நாட்கள் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் எவரிடமும் வீண் வாக்குவாதமோ, சண்டை சச்சரவோ செய்ய வேண்டாம்.

No comments :

Post a Comment