Saturday, August 19, 2017

THULAAM : 2017 – GURU PEYARCHI – துலாம் : 2017 – குருப்பெயர்ச்சிப் பலன்கள்

துலாம்:

துலாம் ராசிக்கு இதுவரை பனிரெண்டாமிடத்தில் இருந்து விரயங்களையும் செலவுகளையும் கொடுத்து வந்த குருபகவான் இப்போது உங்கள் ராசிக்கே இடம் பெயர்ந்து ஜன்மகுருவாக மாறுகிறார். இந்த நிலை சுமாரானதுதான் என்றாலும் கெடுதல்கள் எதையும் குரு உங்களுக்குத் தரமாட்டார் என்பது உறுதி.

அதேநேரத்தில் சென்ற வருடத்தை விட இந்த வருடம் உங்களுக்கு வருமானம் மிகவும் நன்றாக இருக்கும். பணவரவும் சரளமாக இருக்கும். மேலும் இம்முறை உங்களுக்கு தொழில் மேன்மை மற்றும் பொருளாதார வசதிகளை குருபகவான் அளிப்பார்.

பொதுவாக எந்த ஒரு அமைப்பிலோ, அல்லது நிர்வாகத்திலோ தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு ஜன்மகுரு நன்மைகளைச் செய்வது இல்லை. அதாவது பெரிய தலைவர்கள், ஒரு பெரும் நிறுவனத்தை வழி நடத்துபவர்கள் போன்றவர்களுக்குத்தான் சில அனுபவங்களை ஜன்மகுரு தரும். மற்றவர்களுக்கு தீய பலன்கள் இருக்காது.

குரு மாற்றத்தை விட ஒரு முக்கிய பலனாக கோட்சார நிலையில் அனைத்தையும் கட்டி ஆளும் மிக முக்கிய கிரகமான சனிபகவான் இந்தக் குருப் பெயர்ச்சிக்குப் பின்னர் சில வாரங்களில் உங்கள் ராசியை விட்டு முழுவதுமாக விலகுகிறார். எவர் ஒருவருக்கும் ஏழரைச்சனி விலகியதும் வாழ்க்கை நல்லபடியாக செட்டில் ஆகும் என்பதால் அதற்கு முன்னோட்டமாக இந்தக் குரு மாற்றம் இருக்கும்.

குரு, சனி மாற்றங்கள் சாதகமாக இருப்பதால் இதுவரை இருந்து வந்த மனக் கவலைகள் குழப்பங்கள், உடல்நலக் குறைவு, கடன் தொல்லை மற்றும் எதிர்மறை எண்ணங்கள், தொழில் தேக்கம், அதிர்ஷ்டக் குறைவு, தடைகள், தாமதங்கள் போன்ற அனைத்தும் விலகும்.

வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த அதிருப்திகளும் சஞ்சலங்களும் விரக்தியும் இனிமேல் இருக்காது. உடலிலும் மனதிலும் புதுத் தெம்பு பிறக்கும். எங்கும் எதிலும் உற்சாகமாக இருப்பீர்கள். நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும். எந்த ஒரு செயலையும் உடனுக்குடன் நிறைவேற்ற முடியும்.

இதுவரை நடக்காமல் இருந்த நல்ல விஷயங்கள் நடக்கும். தாமதமாகிப் போனவைகள் கிடைக்கும். மாறும் கிரகநிலைகள் இப்போது மகிழ்ச்சியையும், வருமானத்தையும் தரும். சிந்தனை, செயல்திறன் ஆக்கப்பூர்வமாக இருக்கும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கி மனதில் தன்னம்பிக்கை குடி கொள்ளும். கௌரவம், அந்தஸ்து கூடும்படியான சம்பவங்கள் நடக்கும். கையில் பணப்புழக்கம் அதிகரித்து உங்களுடைய சொல்லை அனைவரும் கேட்கும் நிலை உருவாகும்.

சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு மிகப் பெரிய திருப்பு முனையான நல்ல சம்பவங்கள் இந்த வருடம் நடக்க இருக்கிறது. தொழிலை விரிவு படுத்தும் எண்ணங்கள் ஈடேறும். தொழில், வியாபாரம் போன்றவைகள் முன்னேற்ற வழியில் இருக்கும். அதேநேரத்தில் வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும்.

போட்டி பந்தயங்கள் கை கொடுக்கும். கூட்டுத்தொழிலில் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி பங்குதாரர்களிடையே இணக்கமான சூழல்கள் இருக்கும். கூட்டுத்தொழில் ஆரம்பிக்க உகந்த நேரம் இது. தொழில் விரிவாக்கங்கள் பலன் தரும். சுயதொழில் செய்வோருக்கு எடுக்கும் முயற்சிகள் கை கொடுக்கும். பணிபுரிபவர்களுக்கு நெடுநாட்களாக தள்ளிப் போய் இருந்த பதவி உயர்வும் சம்பள உயர்வும் இப்பொழுது கிடைக்கும்.

தொழிலதிபர்களுக்கு இதுவரை இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். அரசாங்க ஆதரவு உண்டு. இடைத்தரகர்களை நீக்கி நேரடியாக அமைச்சர்களையோ அதிகாரிகளையோ பார்த்து காரியங்களை வெற்றியாக்க முடியும். எந்த ஒரு காரியத்திலும் எடுக்கும் முயற்சிகள் இப்போது பலிதமாகும். தொழிலை விரிவுபடுத்தலாம். புதிய சோதனை முயற்சிகளை இப்போது செய்யலாம்.

ராசியில் ஜன்மகுரு இருப்பதால் ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றிய தீவிர சிந்தனையும், மனக்குழப்பமும் இருக்கும். மனதைப் போட்டு உழப்பிக் கொண்டிருப்பீர்கள். சிலருக்கு மறைமுக வழியில் தனலாபங்கள் இருக்கும். எப்படி வந்தது என்று வெளியில் சொல்ல முடியாத வகையில் பண வரவுகளும் இந்தக் குருப் பெயர்ச்சியால் இருக்கும்.

அடிக்கடி ஞாபகமறதி வரும். கைப்பொருளை எப்போதும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுவது நல்லது. வங்கியிலிருந்து பணம் எடுக்கும் போதோ அல்லது பெரிய தொகைகளை கையாளும்போதோ கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

ராசியில் அமரும் குருபகவான் தனது மதிப்பு மிக்க பார்வையால் உங்களுடைய ஐந்து, ஏழு, ஒன்பதாம் இடங்களை பார்வையிட்டு அந்த இடங்களை புனிதப் படுத்துவார் என்பதால் அந்த பாவங்களின் மூலமாக உங்களுக்கு நல்ல பலன்களைத் தருவார்.

குருவின் ஏழாமிட பார்வையால் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். கருத்து வேறுபாடு, குடும்ப பிரச்னைகள் அல்லது வேலை விஷயமாக பிரிந்து இருந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். வேறு வேறு இடங்களில் பணிபுரிந்த கணவன், மனைவிக்கு ஒரே இடத்தில் பணிமாறுதல் கிடைத்து குடும்பம் ஒன்று சேரும்.

உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும். இதுவரை குரு பகவானால் இருந்து வந்த விரயச் செலவுகள் இனிமேல் இருக்காது. எனவே ஏதேனும் ஒரு தொகையை அது சிறியதாக இருந்தாலும் சேமிக்க முடியும்.

குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடக்கும் என்பதால் வருமானம் வந்தாலும் அதற்கு ஏற்ப சுபச் செலவுகளும் இருக்கும். சொத்து வாங்குவீர்கள். மனைவிக்கு நகை, பெண்குழந்தைகளின் திருமணத்திற்கென்று நகைசேமிப்பு போன்றவைகளை இப்போது செய்ய முடியும்.

பெண்களுக்கு இந்தப் பெயர்ச்சியில் நன்மைகள் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் உங்களின் பேச்சு எடுபடும். மாமியாரிடம் பாராட்டு கிடைக்கும். புகுந்த வீட்டில் மதிக்கப் பெறுவீர்கள். பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். அந்தஸ்து கௌரவம் உயரும். வேலைக்குச் செல்லும் பெண்கள் மதிப்புடன் நடத்தப்படுவீர்கள். கீழே வேலை செய்பவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டு இருப்பார்கள்.

துலாம் ராசியினருக்கு மகன், மகள் விஷயத்தில் இருந்து வந்த மனக்கவலைகள் தீரப் போகிறது. வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்த இளைய வயதினருக்கு நல்ல வேலை கிடைக்கும். தாமதமாகிக் கொண்டே வந்த மகன், மகள் திருமணத்தை இப்போது நல்லபடியாக நடத்துவதற்கு குரு அருள் புரிவார்.

காதலித்துக் கொண்டிருக்கும் இளைய பருவத்தினருக்கு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் கை கூடி வரும். சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பித்து தங்களது வாழ்க்கைத் துணையை அடையாளம் காண்பார்கள். முதல் திருமணம் முறிந்து விவாகரத்தாகி இரண்டாவது வாழ்க்கையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இப்போது நல்ல வழி பிறக்கும்.

குழந்தைகளால் பெருமைப் படத்தக்க சம்பவங்கள் இருக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம். அவர்களின் கல்வியில் முன்னேற்றங்கள் இருக்கும். குழந்தைகள் விரும்பும் பள்ளியிலோ, படிப்பிலோ அவர்களை சேர்த்து விட முடியும். நல்ல காலேஜில் சீட்டு கிடைக்கும்.

புனித யாத்திரைகள் செல்ல முடியும். வயதானவர்கள் காசி, கயா செல்வீர்கள். இஸ்லாமியர்களுக்கு புனித ஹஜ் பயணம் செல்லும் வாய்ப்பை இறைவன் அருளுவார். மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஞானிகளின் ஜீவ சமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறும் பாக்கியம் கிடைக்கும்.

புத்திரதோஷத்தினால் நீண்டகாலமாக குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இப்போது குழந்தை பிறக்கும் நேரம் வந்து விட்டது. குருபகவான் புத்திர காரகன் என்பதால் அவர் ஐந்தாமிடத்தைப் பார்க்கும் இந்தநேரத்தில் எப்பேர்ப்பட்ட தோஷம் இருந்தாலும் அதை நீக்கி குழந்தை பாக்கியம் அருளுவார்.

குலதெய்வத்தின் அருளைப் பெற வேண்டிய நேரம் இது என்பதால் தள்ளிப் போயிருந்த குலதெய்வ வழிபாட்டினை நேர்த்திக் கடன்களுடன் நிறைவேற்ற முடியும். இதுவரை போகாத திருத்தலங்களுக்குச் செல்வீர்கள். தர்மகாரியங்கள் மற்றும் அறப்பணிகளில் ஈடுபட வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு சிலர் உங்களை ஆலயத் தொண்டில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள்.

வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் உங்களுக்கு கை கொடுக்கும். வெளிநாட்டில் படிக்கவோ, வேலை செய்யவோ முயற்சிப்பவர்களுக்கு உடனடியாக விசா கிடைக்கும். இதுவரை வெளிநாடு செல்லாதவர்கள் இப்போது வெளிநாட்டுப் பயணம் செல்லும்படி இருக்கும். பயணங்கள் மூலம் நன்மைகள் இருக்கும்.

பூர்வீக சொத்தில் இதுவரை இருந்துவந்த வில்லங்கம் விலகும். பாகப் பிரிவினைகள் சம்பந்தமாக வழக்கு உள்ளவர்களுக்கு தீர்ப்பு சாதகமாக வரும். பங்காளிச்சண்டை தீரும். தந்தைவழி உறவினர்கள் ஆதரவு கிடைக்கும். தந்தையிடம் இருந்து உதவிகளோ பொருள் வரவுகளோ இருக்கும்.

இதுவரை வீடு வாங்க தடை இருந்தவர்களுக்கு இந்த தடை நீங்கி நல்ல வசதியான ஆடம்பர வீடு அமைய போகிறது. வாடகை வீட்டில் இருப்பவர்கள் இனிமேல் குத்தகை அடிப்படை வீட்டிற்காவது மாற முடியும். நீண்ட நாட்களாக சொந்தவீடு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களின் ஆசை இப்போது நிறைவேறும்.

வீடு சம்பந்தப்பட்ட அனைத்துக் காரியங்களும் நினைத்தபடியே நிறைவேறும். வீடு கட்ட ஆரம்பித்து பாதியில் நிறுத்தியவர்கள் முழுதாக முடித்து கிரகப் பிரவேசம் செய்வீர்கள். எதிர்கால முதலீடாக குழந்தைகள் பெயரிலோ அல்லது உங்கள் பேரிலோ வீட்டுமனை வாங்குவீர்கள். வங்கிக்கடன் வாங்கி வீடு கட்டவோ நல்ல பிளாட் வாங்கவோ முடியும்.

இதுவரை வாகனம் அமையாதவர்களுக்கு வாகனம் அமையும். இருக்கும் வாகனத்தை விற்று விட்டு நல்ல வாகனம் வாங்க முடியும். வாகன யோகம் வந்து விட்டதால் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த அதே மாடலில் புதிய வாகனம் வாங்குவீர்கள். சொகுசு வாகனம் வாங்குவதற்கும் அமைப்பு இருக்கிறது.

தாய்வழி சொந்தங்களிடம் இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் தீரும். அம்மாவின் ஆதரவு கிடைக்கும். தாயார் வழியில் நன்மைகள் உண்டு. மாமன்கள், சித்திகள் உதவுவார்கள். உயர்கல்வி கற்க இருந்து வந்த தடைகள் நீங்கி சிலர் மேற்படிப்பு படிப்பீர்கள்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி கெடுதல்கள் எதுவும் இல்லாமல் எதிர்காலத்தில் நீங்கள் சிறப்பாக இருக்க வேண்டியதற்கான அடிப்படை விஷயங்களைச் செய்யும்.

பரிகாரங்கள்:

மூத்தவர்களுக்கும் குரு ஸ்தானத்தில் இருப்பவர்களுக்கும் சிறு உதவியாக இருந்தாலும் தேடிப் போய் உதவி செய்து அவர்களின் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் பெறுங்கள். வயதானவர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப் பட்டால் உதவுவது, ஏழை மாணவருக்கு கல்வி உதவி, வசதிக் குறைவான பெண்ணிற்கு திருமணத்திற்கு உதவுவது போன்றவைகளால் குருபகவானால் கிடைக்கும் நன்மைகளை இன்னும் பெருக்கிக் கொள்ள முடியும்.

No comments :

Post a Comment