Tuesday, June 21, 2016

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள் - 91 (21.6.2016)

எம்முருகன்,  குயவர்பாளையம்.

கேள்வி :

சூட்சுமத்தின சூட்சுமரே..நான் ஒரு மாலைமலர் வாசகன். உங்கள் கட்டுரைப் பகுதியைப் பார்த்தாலே எரிச்சல் அடைவேன். இந்த ஆளு வேற வாராவாரம் பல்லைக் காட்டிக்கொண்டு பேப்பர்ல ஒரு பக்கத்தைய அடச்சிர்ரான்னு மனதிற்குள் திட்டுவேன். ஜோதிடமாவது, மண்ணாங்கட்டியாவது என்ற மனநிலையில் இருந்த நான். இந்த ஆள் என்னதான் சொல்ல வரான் என்று உங்கள் கட்டுரையைப் படிக்க ஆரம்பித்தேன். அதில் உள்ள ரகசியம், சூட்சுமம், நுணுக்கம் தெரிந்த அடுத்த நிமிடமே என் அறியாமை, திமிர் நொறுங்கி விட்டது. ஜோதிடத்திலும் உங்கள் மீதும் மரியாதையும், நம்பிக்கையும் வந்து விட்டது . ஒன்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். அரசஜாதகம் என்ற தலைப்பில் முன்னாள் அரசரின் ஜாதகத்தை அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து இதுவே ராஜயோக ஜாதகம் என்று சொன்னீர்கள். ஆனால் அவர் ஏன் மீண்டும் அரசனாகவில்லை? 20 ஆண்டுகளாக 8- க்கு 10 கடையில் தையல்தொழில் செய்யும் நான் தொழில் அதிபர் ஆவேனா? 7- ம் வகுப்பு படிக்கும் மகள் படிப்பிலும், உத்தியோகத்திலும் வாழ்க்கையிலும் உயர்ந்த இடத்தில் இருப்பாளா? பொதுநலம் கலந்த சுயநலக் கேள்விகளுக்கு பதிலை எதிர்பார்க்கிறேன்.

பதில்:

நீங்கள் குறிப்பிட்ட அரசஜாதகத்தில் அவர் தற்போது அரசர் ஆவார் என்று நான் சொல்லவே இல்லையே...! ஆனால் 2021-ல் தளபதி மன்னன் ஆவார். இது அவரது ஜாதகப்படி உறுதியான அமைப்பு. உங்களுக்கு விருச்சிகலக்னமாகி பத்தாமிடத்தின் அதிபதி சூரியன் லக்னத்தில் அமர்ந்து பத்தாமிடத்தைச் செவ்வாய் பார்த்ததால் கையில் ஆயுதம் பிடிக்கும் டெய்லர் துறை அமைந்தது.

தற்போது சுபர்வீட்டில் அமர்ந்து, சுபருடன் இணைந்து, சுபர்பார்வையும் பெற்று குருவின் சாரம் வாங்கிய ராகுவின் தசை உங்களுக்கு ஆரம்பித்திருப்பதால் உறுதியாக உங்களால் இதேதுறையில் தொழிலதிபர் ஆக முடியும். மகள் ஜாதகமும் வலுவாக இருப்பதால் அவளது எதிர்காலமும் நன்றாக இருக்கும்.

ஜெயந்தன், ஶ்ரீலங்கா.

கேள்வி :

விதியின் புரியா சதிராட்டங்களை உள்ளபடி உரைக்கும் ஜோதிடத்தின் அறிவுருவே. ...நீண்டகாலமாக வேலையின்றிக் கஷ்டப்படுகிறேன். எதிர்காலம் பற்றித்தான் எப்போதும் சிந்தனை இருக்கிறது. நல்ல வேலை எப்போது? வெளிநாட்டு யோகம் உண்டா? திருமணம் எப்போது? நல்ல மனைவி அமைவாளா?


செவ், 
ரா
குரு
ராசி

சந்,சூ 
பு

ல,சு 
சனி

பதில்:

(விருச்சிக லக்னம், மகரராசி. லக்னத்தில் சுக், சனி. மூன்றில் சூரி, புத. நான்கில் குரு. ஐந்தில் செவ், ராகு. 29.1.1987, 2.10 அதிகாலை, யாழ்ப்பாணம்)

கடந்த சில ஆண்டுகளாக ராகுதசையில் சனி, புதன் புக்திகள் நடப்பதால் கஷ்டப்படுகிறீர்கள். வரும் டிசம்பர் முதல் ஆரம்பிக்க இருக்கும் பதினொன்றாமிடத்தில் சுபத்துவம் பெற்று சந்திரனின் சாரத்தில் இருக்கும் கேது புக்தியில் வேலை கிடைத்து தூர இடங்களுக்குச் செல்வீர்கள். ராகுதசை நடப்பதால் வெளிநாட்டு யோகம் கண்டிப்பாக உண்டு. சுக்கிரபுக்தியில் திருமணம் நடக்கும். ஏழுக்கதிபதி சுபராகி அந்த வீட்டைப் பார்ப்பதால் அருமையான அழகான மனைவி அமைவாள். அடுத்தடுத்து யோகதசைகள் நடக்க இருப்பதால் எதிர்காலத்தில் சிறப்பாக இருப்பீர்கள்.

ஜி. வெங்கட்ட ரமணி, அடையாறு.

கேள்வி :

45 வயதாகும் மகனுக்கு 10 வருடங்களாக வரன் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பல ஜோதிடர்கள் சர்ப்பதோஷம் இருப்பதால் ராமேஸ்வரம் சென்று பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொன்னதால் 2012- ல் அதைச் செய்து முடித்தேன். இரண்டுமுறை கணபதிஹோமமும் இன்னும் சில பரிகாரங்களும் செய்யப்பட்டன. ஆனால் கல்யாணம்தான் ஆகவில்லை. அவனுக்கு எப்போதுதான் கல்யாணம் நடக்கும் என்பதை தயவு செய்து தெரிவிக்கவும்.

பு
சுக் 

சூ
சனி

ராசி
சந்



செவ், 
ரா



குரு

பதில்:

(மிதுனலக்னம், கடகராசி. ஆறில் குரு. எட்டில் செவ், ராகு. பத்தில் புத, சுக். பதினொன்றில் சூரி. பனிரெண்டில் சனி. 2.5.1971, 9.30 காலை, கும்பகோணம்).

சர்ப்பதோஷத்திற்கு ராமேஸ்வரத்தில் பரிகாரம் செய்ய வேண்டும் என்று எந்த ஜோதிடர் உங்களுக்கு சொன்னார்? அதே ஜோதிடர்தான் கல்யாணம் ஆவதற்கு கணபதி ஹோமமும் செய்யச் சொன்னாரா? கர்மவினை வலுவாக இருந்தால் முறையான பரிகாரங்களைத் தெரிந்து கொள்ளக் கூட பரம்பொருள் அனுமதிக்காது.

உங்கள் மகனுக்கு லக்னாதிபதி புதன் நீசமாகி, லக்னத்திற்கு எட்டில் செவ்வாய், ராகு அமர்ந்து அதுவே ராசிக்கும் ஏழாகி, ராசிக்கு இரண்டாம் வீட்டை செவ்வாய் பார்த்து லக்னத்திற்கு இரண்டாம் வீட்டை சனி பார்த்த கடுமையான தார தோஷ ஜாதகம். மனைவியை குறிக்கும் ஏழுக்குடைய குரு ஆறில் மறைந்து சனி பார்வை பெற்றதும் சுக்கிரன் நீசனுடன் இணைந்ததும் குற்றம்.

இரண்டு, எட்டிலும் ராசிக்கு ஏழிலும் ராகு-கேதுக்கள் இருப்பதால் ஜென்ம நட்சத்திரமன்று ஸ்ரீகாளகஸ்தியில் ருத்ராபிஷேகம் செய்யவும். லக்னாதிபதி புதனை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களோடு திருவெண்காட்டிற்கும் சென்று வரவும். பரிகாரங்களைச் செய்ய பரம்பொருள் அனுமதிக்கும் பட்சத்தில் வரும் ஆவணிமாதம் ஆரம்பிக்கும் குடும்பாதிபதி சந்திரபுக்தியில் திருமணம் நடக்கும்.

மு. ராஜசேகர், விழுப்புரம்.

கேள்வி :

ஜோதிட அரசருக்கு வணக்கம். ஆறாண்டு காலமாகவே சனியின் பிடியில் இருக்கிறேன். கஷ்டங்களை உங்களுக்குச் சொல்ல வேண்டியது இல்லை . அடிக்கடி மனநிலை பாதிப்பு ஏற்படுகிறது. சந்திராஷ்டம நாட்களில் அதிகமாகவே இருக்கிறது. எந்தக் கோவிலுக்கும் செல்ல முடியவில்லை . பக்தியுடன் வணங்க முடியவில்லை. புத்தி தடுமாறுகிறது. யாரிடமும் அன்பாகவும் பழக முடியவில்லை. மனநிலை எப்போது பலப்படும்? வருங்காலம் எப்படி? திருமணம் எப்போது? சுயதொழில் எப்போது செய்யலாம்?

பதில்:

துலாம் ராசியாகி ஏழரைச்சனி நடந்ததோடு எட்டுக்குடைய செவ்வாய் பார்வை பெற்ற சனிதசையும் சேர்ந்து கொண்டதால் ஆறு, எட்டுக்குடையவர்கள் பலனாகி உங்களுக்கு பாதிப்பு அதிகமாகி விட்டது. கன்னிலக்னத்தை சனி பத்தாம் பார்வையாகப் பார்த்ததும், நீசசூரியனுடன் ஒரே டிகிரியில் இணைந்து புதன் எட்டுக்குடைய சாரம் பெற்றதும் உங்களைத் தன்னம்பிக்கை இழக்க வைத்து மனதை பாதிக்க வைத்து விட்டது.

தற்போது நடக்கும் புதன்தசை சுயபுக்தி முடிந்ததும் தொழில் நல்லபடியாக அமைந்து திருமணமும் நல்லஇடத்தில் அமையும். ஏழரைச்சனி முடிந்ததும் எல்லா கெடுபலன்களும் சரியாகும்.. லக்னாதிபதி தசை நடப்பதால் எதிர்காலத்தில் நன்றாக இருப்பீர்கள். கவலை வேண்டாம்.

பி. கார்த்திகேயன்ஆழ்வார்திருநகர்.

கேள்வி :

எட்டு வருடமாக நல்ல தூக்கம் இல்லாமல் கஷ்டப்படுகிறேன். தூக்க மாத்திரை மூலம் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். டாக்டர் அறிவுறுத்தலின் மூலம் படிப்படியாக மாத்திரையைக் குறைத்தால் உடலின் இயக்கமும் படிப்படியாக செயல் இழப்பதை உணர முடிகிறது. நிம்மதியான தூக்கம், உடல்நிலை ஆயுள் பற்றி அய்யாவின் அருள்வாக்கை எதிர் பார்க்கிறேன்.

பதில்:

மிதுனலக்னமாகி லக்னாதிபதி புதபகவான் சூரியனுடனும், ராகுவுடனும் நெருங்கி இணைந்து சனியின் பார்வை பெற்று தசை நடத்துவதால் மேற்கண்ட பிரச்னைகள் இருக்கின்றன. லக்னாதிபதி புதன் பனிரெண்டிற்குடைய சுக்கிரனின் சாரத்தில் இருக்கிறார். சாரநாதன் நீசகுருவுடன் இணைந்து எட்டில் மறைவதால் பனிரெண்டாம் ஆதிபத்தியம் கெட்டு புதன் தசையிலிருந்து தூக்கம் இல்லாமல் போய்விட்டது. புதன்தசை முழுக்க இந்தவியாதி நீடிக்கும். கேதுதசையில் குணமடைவீர்கள்.

லக்னாதிபதி லக்னத்தைப் பார்ப்பதாலும் எட்டுக்குடையவன் கேந்திரபலம் பெற்றுள்ளதாலும் அடுத்து யோகதசைகள் நடைபெற உள்ளதாலும் சுக்கிரதசை வரை ஆயுள்பங்கம் இல்லை. புதனுக்குரிய முறையான பரிகாரங்களைச் செய்வதோடு வருடம் ஒரு முறை ஶ்ரீகாளகஸ்திக்கு செல்லவும். நோய் கட்டுக்குள் இருக்கும்.

என்னை லவ் செய்தால் அந்தப் பெண்ணுக்கு ஒருமாதத்தில் 

திருமணமாகிவிடுகிறது..!

. எம் ஆனந்தன் , சிதம்பரம்.

கேள்வி :

எந்த பெண்ணும் என்னை லவ் செய்தால் ஒரு மாதம் இல்லை, இரண்டு மாதத்தில் அந்தப் பெண்ணிற்கு திருமணமாகி விடுகிறது. எனக்குத்தான் திருமணம் நடக்கவில்லை. ஒரு அரசியல்வாதியிடம் உதவியாளராக இருக்கிறேன் . தில்லை நடராஜனைத் தவிர வேறு போக்கிடமும் இல்லை . சிதம்பரத்திலேயே இருக்கலாமா? வியாபாரம் செய்யலாமா? ஜோதிடம் கற்றுக்கொண்டு ஜாதகம் பார்க்கலாமா? எல்லோரும் என்னைக் கருவேப்பிலை மாதிரி பயன்படுத்திக் கொள்கிறார்கள். அரசியல், வியாபாரம் இரண்டில் எது கைகொடுக்கும்?



குரு, 
கே

ல,சூ 
பு,சு



ராசி
சனி



செவ்

சந்


பதில்:

(மிதுனலக்னம், துலாம் ராசி. லக்னத்தில் சூரி, புத, சுக். இரண்டில் சனி. மூன்றில் செவ். பதினொன்றில் குரு, கேது. 7.7.1976, 5.30 காலை, கடலூர்)

லக்னாதிபதி லக்னத்தில் அமர்ந்து ராசிநாதன் வலுவாகி ராசியைக் குரு பார்த்த யோகஜாதகம் உங்களுடையது. கடந்த 6 வருடங்களாக ஏழரைச்சனி நடப்பதால் நிலையான தொழில் அமைப்புகள் இல்லாமல் போய்விட்டது. ஜீவனாதிபதி குருபகவான் கேளயோக அமைப்பில் பதினொன்றில் இருப்பதால் அடுத்த வருட பிற்பகுதியில் நிரந்தரத்தொழில் அமையும்.

அம்சத்தில் சூரியன் உச்சமானதால் அரசியல் தொடர்பும் உங்களை விட்டுப் போகாது. ஜோதிடம் உங்களுக்கு வரும். ஆனால் தொழிலாகச் செய்ய முடியாது. அக்டோபர் மாதம் ஆரம்பிக்கும் சந்திரபுக்தியில் வாழ்க்கைத்துணை அமையும். சிதம்பரத்திலேயே அந்தஸ்து, கவுரவத்துடன் இருப்பீர்கள். தில்லைக்கூத்தன் ஒருபோதும் உங்களைக் கைவிடமாட்டான்.

No comments :

Post a Comment