மேஷ ராசிக்கு தற்போது ஐந்தாமிடத்தில் இருக்கும் ராகு பகவான்
நான்காமிடத்திற்கும், பதினொன்றாம் இடத்தில் இருக்கும் கேது பகவான்
பத்தாமிடத்திற்கும் மாறுகிறார்கள்.
பொதுவாக ராகு-கேதுக்கள் இரண்டு கிரகங்களாக கருதப்பட்டாலும் இவற்றில் தலை
என்று சொல்லப் படக்கூடிய ராகுவை முதன்மைப்படுத்தியே பலன்கள் சொல்லப்
படுகின்றன.
அதன் அடிப்படையில் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக ஒரு மனிதனுக்கு அதிர்ஷ்டத்தை
தரும் ஸ்தானமான, திரிகோண ஸ்தானம் என்று சொல்லப் படக்கூடிய, ஐந்தாமிடத்தில்
இருள் கிரகமான ராகு பகவான் அமர்ந்து கடந்த ஒன்றரை வருட காலமாக உங்களுக்கு வர
இருக்கின்ற அதிர்ஷ்டங்களை தடுத்துக் கொண்டிருந்தார்.
இது போன்ற ஐந்தாமிட ராகு அமைப்பினாலும், அஷ்டமச் சனி நடப்பில் இருந்ததாலும்
பெரும்பாலான மேஷ ராசிக்காரர்கள் கடந்த இரண்டு வருடங்களாக அல்லல் பட்டுப்
போனீர்கள். வருகின்ற ராகு-கேது பெயர்ச்சியின் மூலம் மேஷ ராசிக்கு துன்பங்களில்
இருந்து விடுதலை கிடைக்கும் ஒரு காலமாக இருக்கும்.
ஐந்தாமிடத்தில் இருந்து ராகு விலகுவதால் இதுவரை எந்த ஒரு அமைப்பிலும் வேலை,
திருமணம் போன்ற வாழ்க்கை அமைப்புகளில் நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்த
இளைய பருவத்தினருக்கு தற்போது வாழ்க்கையில் செட்டில் ஆகும் அமைப்புகள் நடைபெற
துவங்கும்.
எந்த ஒரு காரியத்திலும் தடைகளை உணர்ந்தவர்கள், எதுவுமே நடக்கவில்லையே, எனக்கு
மட்டும் என் திறமைக் கேற்ற அங்கீகாரமோ, வேலையோ கிடைக்கவில்லையே என்று புலம்பி
கொண்டிருந்தவர்களுக்கு இந்த ஆகஸ்ட் மாதம் நடக்க இருக்கும் ராகு-கேது
பெயர்ச்சியின் மூலம் ஒரு விடியல் இருக்கும்.
பனிரெண்டு ராசிகளிலும் கடந்த இரண்டு வருட காலமாக அதிகமாக பாதிக்கப்பட்ட ராசி
விருச்சிகம் என்றால், அதனையடுத்து பாதிக்கப்பட்ட ராசி மேஷமாகத்தான் இருக்கும்.
கடந்த இரண்டு வருடங்களாக நல்லவைகள் எதுவும் நடக்காமல் இருந்த உங்கள்
அனைவருக்கும் தற்போது நடக்க இருக்கும் ராகு-கேது பெயர்ச்சி நன்மைகளை தரும்.
அதே நேரத்தில் ராகு-கேதுக்கள் தற்போது மாற இருக்கும் நான்கு, பத்தாமிடங்கள்
அவைகளுக்கு நன்மைகள் தரும் இடமாக நம்முடைய மூல நூல்களில் சொல்லப்படவில்லை.
ஆயினும் பாபக் கிரங்கள் ஐந்து, ஒன்பது எனப்படுகின்ற திரிகோண ஸ்தானத்தில்
இருப்பதை விட நான்கு, ஏழு, பத்து ஆகிய கேந்திர ஸ்தானங்களில் நற்பலன்களை
தருவார்கள் என்ற விதிப்படி கடந்த ஐந்தாமிடத்தில் தராத நல்ல பலன்களை நான்கு,
பத்தாமிடங்களில் மேஷத்திற்கு தருவார்கள்.
அதிலும் ராகு-கேது பெயர்ச்சியை அடுத்து இன்னும் சில வாரங்களில் நடக்க
இருக்கும் குருப் பெயர்ச்சியின் மூலம் குருபகவான் தற்போது இருக்கும் சாதகமற்ற
இடமான ஆறாமிடத்தில் இருந்து மாறி ஏழாமிடத்திற்கு செல்வது மேஷராசிக்கு மிகவும்
சந்தோஷமான செயல்களை நடத்தும் ஒரும் அமைப்பு.
அதனை அடுத்த சில வாரங்களில் நடக்க இருக்கும் சனிப்பெயர்ச்சியின் மூலம் மேஷ
ராசிக்கு அஷ்டமச்சனி விலக இருப்பதும் உங்களுக்கு மிகப் பெரிய நல்ல மாற்றங்களை
தரும் என்பதால் இந்த ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு உங்களுடைய அனைத்து வித
அமைப்புகளிலும் மாற்றங்கள் உண்டாகி எல்லா விதத்திலும் மேஷ ராசிக்காரர்கள்
சந்தோஷமாக இருப்பீர்கள் என்பது உறுதி.
கேதுபகவான் தற்போது சாதகமான இடம் என்று சொல்லப்படும் பதினொன்றாமிடத்தில்
இருக்கிறார். இனிமேல் நிதானமான பலன்களை தரக்கூடிய பத்தாமிடத்திற்கு மாறுவார்.
இதனால் வேலை,தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் பாதிக்கப்படுமோ என்ற
கவலை உங்களுக்குத் தேவையில்லை.
பொதுவாக ராகு-கேதுக்களுக்கு கடக வீடும், மகர வீடும் நற்பலன்களை தரக் கூடியதாக
சொல்லப்பட்டுள்ளதால் இம்முறை சர ராசிகள் என்று சொல்லப் படக் கூடிய இந்த இரண்டு
வீடுகளில் மாறுவதன் மூலம் அனைவருக்குமே ராகு-கேதுக்கள் நற்பலன்களை மட்டுமே
தருவார்கள் என்பதும் நிச்சயமான ஒன்று.
பொதுவாகச் சொல்லப் போனால் இந்த பெயர்ச்சி முழுவதுமே நல்ல பலன்கள் நடக்கும். பண
வரவு திருப்தியாக இருக்கும். நீண்ட நாள் கனவு ஒன்று இந்த வருடம் நனவாகும்.
உங்கள் மனது போலவே எல்லா நிகழ்ச்சிகளும் நடக்கும். வீட்டில் மங்கள
நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமணம் ஆகாத இளைய பருவத்தினருக்கு திருமணம்
நடைபெறும்.
ஐந்திலிருந்து ராகு விலகுவதால் பெற்ற பிள்ளைகள் விஷயத்தில் நல்லது நடக்கும்.
மகன், மகளுக்கு திருமணம் கூடி வரவில்லையே என்று வருத்தப்பட்டுக்
கொண்டிருப்பவர்களுக்கு அந்தக் கவலை இப்போது நீங்கும். புத்திரபாக்கியம்
தாமதப்பட்டுக் கொண்டு வந்தவர்களுக்கு புத்திர ஸ்தானத்திலிருந்து பாபக் கிரகமான
ராகு விலகுவதால் குழந்தைச் செல்வம் கிடைக்கும்.
இதுவரை நல்ல வேலை கிடைக்காமல் சோர்ந்து போயிருந்தவர்களுக்கு மனதுக்கு பிடித்த
வகையில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். அரசு தனியார் துறை ஊழியர்களுக்கு
‘இதர வருமானங்கள்’ சிறப்பாக சொல்லிக் கொள்ளும்படி இருக்கும். தொழிலாளர்களுக்கு
வேலைப்பளு குறைந்து சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும்.
தொழிற்சங்கங்களில் பதவியில் இருப்பவர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
சொந்தத்தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், இயக்கும் வேலையில் உள்ளவர்கள் போன்ற
துறையினர் தங்களது தொழிலை விரிவாக்கம் செய்வதற்கோ புதிய கிளைகள்
ஆரம்பிப்பதற்கோ இது மிகவும் நல்ல நேரம். அஷ்டமச் சனி முடிவதால் நீங்கள்
செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெறும். இதுவரை இருந்த தடைகள் அகலும்.
சோம்பலாக இருந்த நீங்கள் சுறுசுறுப்படைவீர்கள்.
வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். மனதில் உற்சாகமும்
புத்துணர்ச்சியும் இருக்கும். குடும்பத்தில் குதூகலம் நிலவும். இன்பச்
சுற்றுலா சென்று வருவீர்கள். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். சகோதரர்கள்
உதவுவார்கள்.
குடும்பத்தில் சொத்துச்சேர்க்கை, நகைகள் வாங்குதல், சேமிப்புகளில் முதலீடு
செய்தல், குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்கள் போன்றவைகளை இப்போது செய்ய
முடியும். இதுவரை சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டும் வாய்ப்போ அல்லது
கட்டிய பழைய வீடோ வாங்கும் யோகம் வருகிறது.
குறிப்பிட்ட சில மேஷ ராசிக்காரர்கள் தங்களுடைய எதிர்கால வாழ்க்கைத் துணையை
இப்போது சந்திப்பீர்கள். காதல் வரும் நேரம் இது. சிலருக்கு மனம் விரும்பிய
வாழ்க்கை கிடைக்கும். காதலர்களுக்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும்.
தந்தைவழி உறவினர்களிடம் நெருக்கம் உண்டாகும். இதுவரை இருந்துவந்த பங்காளிப்
பிரச்னை தீரும். பூர்வீக சொத்துக்களில் உங்கள் பாகம் சேதமில்லாமல் உங்களுக்கு
கிடைக்கும். பெரியப்பா சித்தப்பாக்கள் மற்றும் தந்தையுடன் பிறந்த அத்தைகளால்
லாபம் இருக்கும்.
தள்ளிப் போயிருந்த நேர்த்திக்கடன்களை இப்போது நிறைவேற்ற முடியும்.
குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். தந்தையிடமிருந்து ஏதேனும்
ஆதாயம் இருக்கும். மூத்த சகோதரர், சகோதரிகளின் உறவு மேம்படும்.
வயதான தாயாரை நன்கு கவனியுங்கள். அவரின் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள். தாயாரை
விட்டு விலகி தூர இடங்களில் வசிப்பவர்கள் மாதம் ஒரு முறையாவது அவரைப் போய்
பார்த்து அவரின் ஆசீர்வாதங்களை பெற்று வருவது நல்லது. நான்கில் இருக்கும் ராகு
தாயார் விஷயத்தில் இழப்புக்களையும் மனக் கஷ்டங்களையும் தருவார்.
குழந்தைகளால் பெருமைப்படத்தக்க சம்பவங்கள் இருக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல
செய்திகளை எதிர்பார்க்கலாம். அவர்களின் கல்வியில் முன்னேற்றங்கள் இருக்கும்.
குழந்தைகள் விரும்பும் பள்ளியிலோ, படிப்பிலோ அவர்களை சேர்த்து விட முடியும்.
நல்ல காலேஜில் சீட்டு கிடைக்கும்.
பயணம் தொடர்பான விஷயங்களில் வருமானம் வரும். அடிக்கடி பிரயாணங்கள்
செய்வீர்கள். தொலைதூர பிரயாணங்களோ வெளிநாட்டு பயணங்களோ நடக்கும். இதுவரை
வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்கும்.
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு. வெகுநாட்களாக
எதிர்பார்க்கும் குடியுரிமை கிடைக்கும். தாய் தந்தையை பார்க்க தாய்நாடு வந்து
திரும்பலாம். இருக்கும் நாட்டில் சுமுக நிலை இருக்கும்.
தனியார் துறையினர் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் போன்றவர்களுக்கு
நிர்வாகத்திடம் கருத்து வேற்றுமைகள் ஏற்படலாம். சொந்தத்தொழில் செய்பவர்கள்,
வியாபாரிகள், தனது அறிவையும் புத்திசாலித்தனத்தையும் முதலீடாக வைத்து
சுயதொழில் செய்பவர்கள் அனைவருக்கும் இது முன்னேற்றமான காலம்தான்.
தொலைக்காட்சி, சினிமாத்துறை போன்ற ஊடகங்களில் இருக்கும் கலைஞர்கள்,
பத்திரிகைத்துறையினர், காவல் துறையினர், நீதித்துறையினர், வாகனங்களை
இயக்குபவர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள், தொழில் அதிபர்கள்,
வெளிநாட்டுத் தொடர்புடையவர்கள், கணிப்பொறி சம்பந்தப்பட்டோர்,
சொல்லிக்கொடுப்போர் போன்ற அனைத்துத் தரப்பினருக்கும் இந்த ராகுகேதுப்பெயர்ச்சி
நல்ல பலன்களையே தரும்.
அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு:
உங்கள் நட்சத்திரநாதன் கேதுபகவான் உச்ச மகர வீட்டில் அமர்ந்து வலுவாக இருப்பது
மிகவும் நல்ல அமைப்பாகும். சுப வலுவடைந்திருக்கும் கேது உங்களின் தொழில், வேலை
விஷயங்களில் நல்ல மாற்றங்களை தருவார். குறிப்பாக மருத்துவம், ஆன்மிகம்,
எலக்டிரிகல் எலக்ட்ரானிக்ஸ், அன்றாடம் அழியும் பொருட்கள் போன்ற துறைகளில்
இருப்பவர்கள் லாபம் அடைவீர்கள். சுயதொழில் செய்பவர்களுக்கோ, அரசு-தனியார்
துறைகளில் வேலை செய்பவர்களுக்கோ, வியாபாரிகளுக்கோ, கலைஞர்களுக்கோ,
பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கோ தொழில் அமைப்புகளில் எவ்விதப் பிரச்சினையும்
ஏற்படாது.
பரணி நட்சத்திரக்காரர்களுக்கு:
உங்கள் நட்சத்திர நாதன் சுக்கிரன் ராகுவுக்கு நண்பர் என்பதால் உங்களுடைய வேலை
தொழில் வியாபார அமைப்புக்கள் இந்தப் பெயர்ச்சியினால் சிறப்பாக நடைபெறும்.
குறிப்பாக கலைத்துறையிலும் பெண்கள் தொடர்பான துறைகளிலும், அழகு, ஆடம்பரம்
சொகுசு வாகனம் அலங்காரம் போன்ற துறைகளிலும் இருப்பவர்களுக்கு மிக விசேஷமான
நல்ல பலன்கள் நடக்கும். ஒரு சிலருக்கு பிள்ளைகளின் கல்வித்தடை, அவர்களுக்கு
நல்லவேலை அமையாத நிலை, திருமணம் போன்ற சுபகாரியத் தடைகளையும் ராகுபகவான்
தருவார்.
கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு:
உங்கள் ராசிநாதனும் நட்சத்திர நாதனும் சூரியன்தான். சூரியனுக்கு ராகு பகைவர்
என்பதால் பங்குச் சந்தை போன்ற ஊக வணிகங்கள் இப்போது கை கொடுக்காது. நஷ்டம்
வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் ஷேர் மார்க்கட்டில் மிகவும் கவனம் தேவை.
கொடுக்கல் வாங்கல்களில் மிகவும் கவனமாக நடந்து கொள்வது நல்லது.
குறுக்குவழியில் பணம் வரும் சூழ்நிலையில் விழிப்பும் எச்சரிக்கையும் தேவை.
எங்கும் எதிலும் கவனமாக இருங்கள். எவரிடமும் மனம் விட்டுப் பேச வேண்டாம். யார்
எங்கே எப்படி உங்களுக்கு எதிராக திரும்புவார்கள் என்று தெரியாது.
பரிகாரங்கள்:
மேஷ ராசிக்காரகளின் தொழில் அமைப்புகளில் ஏற்பட இருக்கும் பாதிப்புகள் விலக
வேலூர் வாலாஜாபேட்டை சென்று அங்குள்ள தன்வந்திரி பீடத்தில் கயிலை ஞானகுரு ஸ்ரீ
முரளிதர சுவாமிகளால் ஒரே கல்லில் ஸ்தாபிக்கப்பட்ட ராகு கேதுக்களை வணங்கி
முறையான பரிகாரங்களைச் செய்வது நல்லது.
No comments :
Post a Comment