மீன ராசிக்கு நல்ல பலன்களைக் கொடுக்கும் இடமாக நமது மூலநூல்களில்
சொல்லப்பட்டிருக்கும் ஆறாமிடத்தில் இருந்து மாறி ஐந்தாமிடத்திற்கு ராகு
செல்கிறார். தற்போது பனிரெண்டாமிடத்தில் இருக்கும் கேது மிக நல்ல பலன்களைத்
தரக்கூடிய பதினொன்றாம் இடத்திற்கு மாறுகிறார்.
ராகு-கேதுகளுக்கு பதினொன்றாமிடம் சந்தேகத்திற்கு இடமில்லாத நன்மைகளைத்
தரக்கூடிய பாவம் என்பதால் லாப ஸ்தானத்திற்கு மாறப் போகும் கேதுபகவானால்
மீனத்திற்கு நன்மைகள் இருக்கும்.
ஒரு முக்கிய பலனாக நமது மூலநூல்களில் ஐந்தாமிடத்தில் ராகு இருப்பது அதிர்ஷ்டக்
குறைவானதாகவும், பிள்ளைகள் விஷயத்தில் செலவுகளும், மனவருத்தமும்,
விரையங்களும், பெற்றவர்களின் பேச்சை பிள்ளைகள் கேட்க மாட்டார்கள் என்றும்
எதிர்மறை பலனாக சொல்லப்பட்டிருகிறது.
ஆயினும் ராகுபகவான் இப்போது மாறப் போகும் கடக வீடு அவருக்கு மிகவும்
பிடித்தமான வீடு என்பதால் கடகத்தில் இருக்கும் ராகு கெடுதல்களைச் செய்ய
மாட்டார் என்ற அடிப்படையில் மீன ராசிக்கு ராகுவால் எந்தக் கெடுதல்களும் வர
வாய்ப்பிலை.
எனவே ராகு-கேதுக்களின் இரண்டு நிலைகளிலும் இம்முறை மீன ராசி நன்மைகளையே
அதிகமாகப் பெறும் என்பதால் இந்தப் பெயர்ச்சியை மீனத்தினர் பரிபூரணமாக
உபயோகப்படுத்திக் கொண்டு உயர்வது நிச்சயம்.
பதினொன்றில் இருக்கும் கேதுபகவான் ஆன்மீக விஷயங்களில் உங்களுக்குச் சில
நன்மைகளைச் செய்வார். குறிப்பிட்ட சிலருக்கு கோவில் கட்டும் அமைப்பையும்,
இன்னும் சிலருக்கு ஏற்கனவே சிதிலம் அடைந்திருக்கும் பழமையான திருக்கோவில்களை
சீரமைத்து புனருத்தானம் செய்யும் வாய்ப்பையும் தருவார்.
இன்னும் சிலருக்கு ஆன்மீகத்தில் அதிகமான ஈடுபாட்டையும், வேறு சிலருக்கு ஆலயம்
சம்பந்தப்பட்ட பதவிகளையும் அறங்காவலர் போன்ற பணிகளையும் கேதுபகவான் தருவார்
என்பதால் இந்த ராகு-கேதுப்பெயர்ச்சி மீன ராசிக்கு மிகவும் ஒரு நல்ல
பெயர்ச்சியாக இருக்கும் என்பது உறுதி.
அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு துறைரீதியான இடமாறுதல்களோ அல்லது பதவி
உயர்வுடன் கூடிய ஊர்மாற்றமோ இருக்கும். தற்போது இருக்கும் வசதியான ஊரை விட்டு
வேறு எங்கோ மாற்றம் இருக்கும் என்பதால் பதவி உயர்வு என்றாலும் அதை அரைகுறையான
மனதுடன் தான் நீங்கள் ஏற்றுக் கொள்ளும்படி இருக்கும்.
வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்களுடைய விருப்பத்திற்கும் படித்த
படிப்பிற்கும் பொருத்தமான வேலைகள் அமைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. நீண்ட
நாட்களாக உங்களுக்கு மனவருத்தத்தை கொடுத்துக் கொண்டு இருந்த உயரதிகாரி
மாறுதலாகி, அந்த இடத்திற்கு உங்களுக்கு அனுசரணையானவர் வருவார்.
இதுவரை சிக்கலில் இருந்த தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள்
தடைகள் விலகி நல்லபடியாக நடக்க ஆரம்பிக்கும். சுய தொழில் செய்வோருக்கு புதிய
ஆர்டர்கள் கிடைக்கும். மஞ்சள் நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு
இம்முறை மேன்மையான பலன்கள் இருக்கும்.
முப்பது வயதுகளில் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை, தொழில் சம்மந்தமான
பிரச்னைகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக திரும்பி பொருளாதார நிலைமைகள்
நிம்மதியாக இருக்கக்கூடிய அளவிற்கு முன்னேற்றமாக இருக்கும்.
சென்ற காலங்களில் வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த அதிருப்திகளும்
சஞ்சலங்களும் விரக்தியும் இனிமேல் இருக்காது. பதவிஉயர்வு உடனே கிடைக்கும்.
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த சம்பள உயர்வும் பாக்கித் தொகையும் உடனே
பெறுவீர்கள். பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றங்கள் உண்டு.
இதுவரை வெளிநாட்டுக் குடியுரிமை கிடைக்காமல் தவித்துக்
கொண்டிருந்தவர்களுக்கும் விசா பிரச்னையால் வெளிநாடு செல்லமுடியாமல் சிக்கலில்
இருந்தவர்களுக்கும் வெளிநாட்டு வேலை எதிர்பார்த்துக் காத்துக்
கொண்டிருந்தவர்களுக்கும் அவர்கள் நினைத்தபடியே செயல்கள் நடந்து நன்மைகள்
உண்டாகும்.
நடுத்தரவயது தாண்டியவர்களுக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற ஆரோக்கிய
குறைபாடுகள் தற்போது கண்டுபிடிக்கப்படும் என்பதால் அவர்கள் முழு உடல் பரிசோதனை
செய்து கொள்ளுவது நல்லது. வயதானவர்கள் சிறு உடல் நல பிரச்னைகளையும்
அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளுவதன் மூலம்
சிறிய வியாதி பெரிதாகாமல் தற்காத்துக் கொள்ளலாம்.
பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் குறுகிய கால பயணமாக வெளிநாடு சென்று
திரும்புவீர்கள். நீண்ட நாட்களாக விசா கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு தற்போது
விசா கிடைக்கும். வயதானவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் பேரன், பேத்திகளை
பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். ஒரு சிலர் மகன், மகள்களுக்கு உதவி செய்ய
வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வீர்கள்.
நீண்ட நாட்களாக போக முடியாமல் தள்ளிப் போயிருந்த தீர்த்த யாத்திரை இப்போது போக
முடியும். காசி கயா பத்ரிநாத் கேதார்நாத் போற வடமாநில புண்ணியத்தலங்களை
தரிசிக்கும் வாய்ப்பு இப்போது கிடைக்கும். ஞானிகளின் தரிசனம் கிடைக்கும். மகா
பெரியவரின் அதிஷ்டானம் போன்ற மிகப்பெரும் புனித இடங்களை வழிபடும் பாக்கியம்
உண்டாகும்.
மூத்த சகோதரர், சகோதரிகளின் உறவு மேம்படும். அவர்களால் உதவிகள் இருக்கும்.
இதுவரை திருமணம் தாமதமான அக்கா அண்ணன் போன்றவர்களுக்கு நல்ல இடத்தில்
திருமணமாகும். அதிகம் பெண்களுடன் பிறந்தவர்கள் தங்கள் சகோதரிகளின் வீட்டு
சுபகாரியங்களுக்கு செலவு செய்ய வேண்டியிருக்கும்.
பதினொன்றாமிடத்திற்கு மாறும் கேதுவின் முக்கியபலனாக இதுவரை கடன் தொல்லையில்
அவதிப் பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும். கடனை
அடைப்பதற்கான வழிகள் தெரியும். கடன் தீர்ந்தே ஆகவேண்டும் என்பதால் வருமானமும்
கூடும். இதுவரை உங்களை விரோதியாக நினைத்தவர்கள் மனம் மாறி நட்பு
பாராட்டுவார்கள்.
இதனால் இதுவரை மீன ராசிக்காரர்களுக்கு இருந்து வந்த கடன் தொல்லைகளும்,
பணப்பிரச்சினைகளும் தீரும். குறிப்பிட்ட சிலருக்கு வேண்டாத நபர்களாலும்,
பொறாமை கொண்டவர்களாலும் இருந்து வந்த சங்கடங்களும், உடல் நலக்குறைவுகளும்
நீங்கும்.
பொதுவிஷயங்களிலும், குடும்பத்திலும், அலுவலகத்திலும் உங்களைப்
பிடிக்காதவர்களின் கை தாழ்ந்து உங்களின் கை ஓங்கும். குடும்பத்தில் உங்களைப்
புரிந்து கொள்ளாமல் உங்கள் மேல் கோபம் கொண்டிருந்தவர்கள் தங்கள் தவறை உணர்ந்து
இனிமேல் நீங்கள் சொல்வதைக் கேட்பார்கள்.
இதுவரை உங்களுக்கு தடங்கலாகி வந்த அனைத்துக் காரியங்களிலும் வெற்றி உண்டாகும்.
உங்களின் லட்சியங்கள் நிறைவேறும் காலம் இது. கடந்த காலங்களில் பெரிய முயற்சி
எடுத்து கஷ்டப்பட்டும் நினைத்த காரியம் நிறைவேறாதவர்கள் இப்போது அதிக சிரமம்
இல்லாமல் அதிர்ஷ்டத்தினால் அனைத்தும் நடப்பதைப் பார்ப்பீர்கள்.
குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த சிறுசிறு சண்டை, சச்சரவுகள் கணவன்
மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள், கூட்டுக் குடும்பத்தில்
தொடர்ந்த முரண்பாடுகள் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாததால் ஏற்பட்டிருந்த
பிணக்குகள் அனைத்தும் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதுகலமும்
இருக்கும்.
கணவன் ஓரிடம் மனைவி வேறிடம் என்று பிரிந்து இருந்தவர்கள், வேலை விஷயமாக
வெளியூரில் பிரிந்து வேலை பார்த்தவர்கள் உடனடியாக ஒன்று சேருவீர்கள்.
பிள்ளைகள் விஷயத்தில் செலவுகள் இருக்கும். படிப்புச்செலவு மற்றும் அவர்களுடைய
எதிர்கால வாழ்க்கைக்கான அடித்தளச் செலவுகளுக்காக கையில் இருக்கும் சேமிப்பை
நீங்கள் செலவிட வேண்டியதிருக்கும்.
இந்த காலகட்டத்தில் விரயங்கள் இருக்கும் என்பதால் பாக்கெட்டில் இருந்து பணத்தை
எடுக்குமுன் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து செலவு செய்யுங்கள். கோர்ட்,
கேஸ், நிலம் சம்பந்தமான வழக்குகள். போலீஸ் விவகாரங்கள் கிரிமினல் வழக்குகள்
உள்ளவர்கள் இந்த சாதகமான காலத்தில் வழக்கை முடிக்கப் பாருங்கள்.
பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும் கௌரவமும் கிடைக்கும். பெண்களின் ஆலோசனை
குடும்பத்தில் இருக்கும் ஆண்களால் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும்
மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற நல்ல பலன்கள் இருக்கும்.
அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள்.
உடன் பணிபுரியும் ஆண்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும். பெண்கள்
நீண்டநாட்களாக நினைத்திருந்த காரியம் இப்போது நிறைவேறும். அனைவரிடமும்
பாராட்டுப் பெறுவீர்கள். கேட்டது கேட்ட இடத்தில் உங்களுக்கு கிடைக்கும்.
குடும்பத்திலும் அலுவலகத்திலும் கௌரவமாக நடத்தப் படுவீர்கள்.
சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டும் வாய்ப்போ அல்லது கட்டிய பழைய வீடோ
வாங்கும் யோகம் வருகிறது. பெருநகரங்களில் இருப்பவர்கள் அருமையான ஒரு பிளாட்
வாங்குவீர்கள். வாகனமாற்றம் உண்டு. இதுவரை வாங்க முடியாத நீங்கள் விரும்பிய
வாகனம் இப்போது வாங்க முடியும். தாயாருக்கு இருந்துவந்த உடல்நலக்குறைவு
சரியாகும்.
எந்த ஒரு விஷயத்திலும் காலூன்றி நிற்கமுடியாமல் தவித்துக்
கொண்டிருப்பவர்களுக்கு தற்போது நல்ல வாய்ப்புகள் கிடைத்து அவர்களும் தங்கள்
துறைகளில் நிலைபெற முடியும். குறிப்பிட்ட சில மீன ராசிக்காரர்களின் செயல்திறன்
நல்லவிதமாக வெளிப்பட்டு சாதனைகளும் செய்வார்கள்.
உங்களில் சிலருக்கு மாமியார் வீட்டில் இருந்து வாழ்க்கைத்துணையின் பங்காக
ஏதேனும் ஒரு சொத்தோ, அல்லது நல்லதொகையோ சரியான சந்தர்ப்பத்தில் கிடைக்கும்.
ரியல்எஸ்டேட், வீடு கட்டிக் கொடுக்கும் புரமோட்டர்கள், சிகப்புநிறம்
சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், செம்மண் பூமி, ஆறு, மலைப்பாங்கான இடங்களில்
தொழில் வைத்திருப்பவர்கள் மேன்மைகளை அடைவீர்கள்.
பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு:
இரட்டிப்பு நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். இந்த வருடத்தின் பிற்பகுதியில்
இருந்து பணப்பிரச்னைகள் தீரும். கடன் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. ஒரு
சிலர் வெளிநாட்டில் வேலை செய்யப் போக வேண்டியிருக்கும். எதிர்கால
முன்னேற்றத்திற்கான திருப்புமுனை அமைப்புகள் இப்போது இருக்கும்.
வேற்றுமதத்தினர் உங்களுக்கு உதவுவார்கள். தந்தைவழி உறவில் மிகவும் நல்ல
பலன்கள் இருக்கும். கணிதம் சாப்ட்வேர் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு
ஏதேனும் பரிசு அல்லது விருது கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. வேலையில்
பாராட்டப்படுவீர்கள்.
உத்திராட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு:
உங்களின் அனைத்துத் திறமைகளையும் மற்றவர்கள் அடையாளம் கண்டுகொள்ளும் நேரம்
இது. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் எனும் பழமொழி இப்போது உங்களுக்குப்
பொருந்தும். தோல்விகள் அனைத்தும் வெற்றியின் படிக்கட்டுகளாக மாறும் என்பதால்
உற்சாகத்துடன் செயலாற்றுவீர்கள். பழைய வாகனங்களை வைத்திருந்து ரிப்பேர் செலவு
பார்ப்பதை விட அதை மாற்றி வேறு வாகனம் வாங்குவது நல்லது. தாயாரின் உடல்நிலை
கவனிக்கப்பட வேண்டும். தொழிலில் நல்ல மாற்றங்கள் இருக்கும். நிறைய செலவுகளும்
விரயங்களும் இருப்பதை கிரகங்கள் காட்டுகின்றன. வருமானத்தை சேமிக்க முயற்சி
செய்யுங்கள்.
ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்தப் பெயர்ச்சியினால் உங்களுடைய கௌரவம், அந்தஸ்து கூடும்படியான சம்பவங்கள்
நடக்கும். கையில் எந்த நேரமும் பணப்புழக்கம் அதிகரித்து குடும்பத்தில்
உங்களுடைய சொல்லை அனைவரும் கேட்கும் நிலை உருவாகும். இதுவரை சொன்ன சொல்லை
காப்பாற்ற முடியாமல் இருந்த நிலை மாறி உங்களுடைய வாக்கு பலிதம் ஆகும். எந்த
ஒரு விஷயத்திலும் இருந்து வந்த மனக்கவலைகள் குழப்பங்கள், மற்றும் எதிர்மறை
எண்ணங்கள், தொழில்தேக்கம், அதிர்ஷ்டக்குறைவு, தடைகள், தாமதங்கள் போன்ற
அனைத்தும் இனித் தீரும்.
பரிகாரங்கள்:
கேதுபகவானிடம் இருந்து பெறப்போகும் நன்மைகளைக் கூட்டிக்கொள்ள ஞானிகளின்
ஜீவசமாதிகளுக்குச் சென்று அவர்களின் ஆசிகளைப் பெற்று வாருங்கள்.
தென்மாவட்டத்தவர்கள் மதுரை திருப்பரங்குன்றத்தில் அருள்பாலிக்கும்
சோமப்பசாமிகளின் ஜீவசமாதியில் வழிபடலாம்.
No comments :
Post a Comment