Saturday, March 25, 2017

துலாம்: 2017- ஹே விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு சிறந்த நன்மைகளைத் தர இருக்கின்ற அமைப்பில் இந்த தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது.

ஒரு முக்கியமான பலனாக இந்த வருடத்துடன் துலாமிற்கு இதுவரை கடுமையான பலன்களைக் கொடுத்து உங்கள் முன்னேற்றத்தை தடுத்துக் கொண்டிருந்த ஏழரைச்சனி அமைப்பு முடிய இருப்பதால் இனிமேல் துலாம் ராசிக்கு எவ்விதமான கெடுபலன்களும் சொல்வதற்கு இல்லை.

புது வருடத்தின் ஆரம்ப நாளிலேயே உங்கள் ராசிநாதன் சுக்கிரன் உச்ச வலுவுடன் இருப்பதும், அவரை இன்னொரு சுபக்கிரகமான குருபகவான் பார்ப்பதும் துலாம் ராசிக்காரர்களுக்கு நன்மைகளையும், மேன்மைகளையும் தரக்கூடிய அமைப்பு என்பதால் இந்த தமிழ் புதுவருடம் உங்கள் வாழ்க்கையை நல்ல விதமாக மாற்றி அமைக்கக் கூடிய சம்பவங்கள் நடக்கும் வருடமாக இருக்கும்.

இதுவரை ஏழரைச்சனியின் தாக்கத்தினால் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் சிக்கல்களை சந்தித்தவர்கள் இந்த வருடத்தில் இருந்து அவை நீங்கப் பெறுவீர்கள். புதிதாக தொழில், வியாபாரம் போன்றவைகளை ஆரம்பித்து லாபகரமாக நடத்த முடியாமல் திணறிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த வருடத்தில் இருந்து விடிவுகாலம் பிறந்து தொழில் நிலைமைகள் சீராகும்.

வேலை, தொழில் போன்ற விஷயங்களிலும், அலுவலகங்களிலும் நிம்மதியற்ற சூழ்நிலையைச் சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் அனைத்தும் நல்லபடியாக மாறி பணிபுரியும் இடங்களில் ஒரு சந்தோஷமான சூழல் இருப்பதை உணர முடியும்.

எந்த ஒரு விஷயத்திலும் தனக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லை, தன்னுடைய திறமைக்கு ஏற்ற சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை என்ற மனக்குறையில் இருந்தவர்கள் அவை நீங்கப்பெற்று ஒரு அதிர்ஷ்டமான காலத்தில் நுழைவீர்கள். சிலருக்கு இதுவரை இருந்து வந்த தாழ்வு மனப்பான்மை விலகப் பெற்று தன்னம்பிக்கை கூடுதலாகும்.

மேம்போக்காகப் பார்க்கையில் புத்தாண்டின் ஆரம்பத்தில் ஆகஸ்டு மாதம் நடக்க இருக்கும் ராகுகேதுப் பெயர்ச்சி சாதகமற்ற அமைப்பைக் கொடுப்பது போலத் தோன்றினாலும் ராகுபகவான் தனக்கு மிகவும் பிடித்த வீடான கடகத்திற்கு மாறுவதால் உங்களுக்குக் கெடுதல்களைச் செய்ய மாட்டார்.

அதேநேரத்தில் இதன் பலனாக உங்களுக்கு தொழில் விஷயங்களில் அடிக்கடி தூர இடங்களுக்குப் பயணங்கள் இருக்கும். இன்னும் சிலருக்கு இதுவரை எதிர்பார்த்துக் காத்திருந்த வெளிநாட்டு வாய்ப்பு இப்போது கிடைக்கும். இன்னும் சிலருக்கு வெளிமாநில வாய்ப்புகளும், வடக்கு நோக்கிய விஷயங்களும் இருக்கும்.

ராகுகேதுக்களை அடுத்து செப்டம்பர் மாதம் 12ம் நாள் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சியும் உங்களுக்கு நல்ல பலன்களை மட்டுமே தர இருக்கிறது. இதன் மூலம் இதுவரை உங்களுக்கு இருந்து வந்த வீண்செலவுகள் தடுக்கப்படும். விரயங்கள் நிற்கும். மருத்துவச் செலவுகளோ, கடன் தொல்லைகளோ இருக்காது.

குருப்பெயர்ச்சியின் மூலம் இளைய பருவத்தினர் சிலருக்கு இதுவரை அமையாத திருமணம், புத்திரபாக்கியம், நிரந்தர வேலை, தொழில் பாக்கியங்கள் கிடைக்கும். மிக உன்னத பலனாக சொல்லப்போனால் ஒரு பத்து வயது குறைந்தது போன்ற உடல்திறனையும், புத்துணர்ச்சியையும் இந்தப் புதுவருடம் கொடுக்கும் என்றால் அது மிகையாகாது.

குறிப்பாக முப்பது வயதுக்களில் இருக்கும் இளைய பருவத்தினருக்கு இனிமேல் வேலை, தொழில் போன்ற ஜீவன அமைப்புகள் நல்லபடியாக அமைந்து இந்த வருடத்திலிருந்து ஒரு நிரந்தர வருமானம் வரத்தொடங்கும். இனிமேல் பணத்தட்டுப்பாடு என்பது உங்களுக்கு இருக்காது.

திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு இந்த வருடம் நல்லபடியாக திருமணம் கூடி வரும். குறிப்பிட்ட சிலர் விரும்பிய வாழ்க்கைத்துணையை அடைவீர்கள். வீட்டிற்குப் பயந்து காதலை மனதிற்குள் பூட்டி ஒளித்து வைத்திருந்தவர்கள் தைரியம் வந்து பெற்றோரிடம் சொல்லி அவர்களின் சம்மதத்தையும் பெறுவீர்கள்.

முதல் திருமண வாழ்க்கை முறிந்து இரண்டாம் திருமணத்திலாவது நிம்மதி இருக்குமா என்று பயந்து கொண்டிருப்பவர்களுக்கு இப்போது திருமண அமைப்பு உண்டாகும். அந்த இரண்டாவது வாழ்க்கை நன்றாகவும் நிம்மதியாகவும் இருக்கும்.

பொதுவாக சொல்லப் போனால் இளையபருவத்தினருக்கு இந்த வருடத்தில் இருந்து வாழ்க்கையின் அனைத்து பாக்கியங்களும் கிடைக்கப் பெற்று நிம்மதியாக வாழ்க்கையில் செட்டில் ஆவீர்கள். நடுத்தர வயதுக்காரர்களுக்கு கடந்த சில வருடங்களாக வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் இருந்து வந்த தடங்கல்களும் எதிர்மறை அனுபவங்களும் இனிமேல் இருக்காது. தொழில் நல்லபடியாக நடக்கும். வியாபாரம் மேன்மேலும் பெருகும்.

புதிதாக தொழில் தொடங்குவதற்கு இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கும் என்பதால் உடனே தொழில் தொடங்கலாம். ஏற்கனவே தொழில் சரியின்றி இருந்தவர்களுக்கு இனி நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலை விரிவு படுத்தலாம். வியாபாரிகள் தங்களின் வியாபாரத்தை விரிவு படுத்தவும், புதிய முயற்சிகள் எடுக்கவும் நல்லநேரம் இது. துணிந்து எதிலும் இறங்கி செயல்படுங்கள். ரிஸ்க் எடுத்தால்தான் வாழ்க்கையின் உயரத்திற்குச் செல்ல முடியும்.

குலதெய்வத்தின் அருள் பூரணமாக கிடைக்கும் வருடம் இது. நவகிரக சுற்றுலா போவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் நேர்த்திக் கடன்களை செலுத்துவீர்கள். மகான்களின் தரிசனமும் அருளும் கிடைக்கும். குடும்பத்தில் உற்சாகமும், செல்வச் செழிப்பும் இருக்கும். குடும்பத்திற்கு தேவையான அனைத்துப் பொருட்களும் வாங்குவீர்கள்.. நகைகள் சேரும். வீட்டை அழகுபடுத்துவீர்கள். வீட்டை விரிவுபடுத்தி இன்னும் கட்டுவீர்கள்.

அரசு, தனியார்துறைகளின் ஊழியர்கள், கலைஞர்கள், உழைப்பாளிகள், வியாபாரிகள், விவசாயிகள், மீனவர்கள், பொதுவாழ்வில் இருப்போர் உள்ளிட்ட எல்லாத்தரப்பு துலாம் ராசிக்காரர்களுக்கும் மிகவும் அதிர்ஷ்டத்தை தரப்போகும் வருடம் இது. எனவே இதை நன்கு பயன்படுத்திக் கொண்டு முன்னேறுங்கள்.

கலைத்துறையினர், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் மிகவும் நல்ல சந்தர்ப்பங்களை அடைவீர்கள். அதிர்ஷ்டம் இந்த வருடம் மிகவும் நன்றாக உங்களுக்கு கை கொடுக்கும். இதுவரை எந்த விஷயத்திலும் தடைகளைச் சந்தித்து, முட்டுச்சந்தில் போய் முட்டி நிற்பதைப் போல் உணர்ந்தவர்கள் நிலைமை மாறி அனைத்தும் சாதகமாக நடப்பதை உணருவீர்கள்.

இதுவரை உடல்நலமில்லாமல் இருந்தவர்கள் மருத்துவர்களே ஆச்சரியப்படும் அளவிற்கு உடல்நலத்தில் முன்னேற்றம் பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். மகன், மகள்களின் திருமணத்தை மிகவும் விமரிசையாக நடத்தலாம். பேரன், பேத்திகளைப் பற்றிய நல்ல செய்திகளும் கிடைக்கும்.

வருமானம் மிகவும் சிறப்பாக இருக்கும். பணத்தை சேமித்து எதிலாவது முதலீடு செய்வீர்கள். வீட்டுமனையோ, கட்டிய வீடோ, வாங்குவதற்கு யோகம் இருக்கிறது. நீண்டகாலமாக எதிர்பார்த்த பதவி உயர்வு கூடுதல் சம்பளத்துடன் நிச்சயமாகக் கிடைக்கும்.

குடும்பத்தில் சுமுகமும் அமைதியும் இருக்கும் சேமிக்க முடியும். இதுவரை நகைகளை அடமானம் வைத்த நிலை மாறி அவற்றை மீட்பதோடு புதிதாக நகை வாங்கவும் முடியும். மூத்த சகோதரசகோதரிகள் உதவுவார்கள். எல்லாவற்றிற்கும் அடுத்தவர்களை எதிர்பார்த்திருந்த நிலைமை மாறி நீங்கள் மற்றவர்களுக்கு உதவுவீர்கள்.

வருடம் பிறந்ததிலிருந்தே உங்களின் மனவலிமை நன்றாக இருக்கும். எதையும் சமாளிக்கலாம் என்ற தைரியம் பிறக்கும். வெளிநாட்டுத் தொடர்பால் நன்மை அடைவீர்கள். வெளிநாடு போகவும் வாய்ப்பு இருக்கிறது. வேற்று மதத்தினர் உங்களுக்கு உதவுவார்கள். தாய்வழி உறவிலும் மிகவும் நல்ல பலன்கள் இருக்கும்.

மருத்துவம், ஆன்மிகம், எலக்டிரிகல் எலக்ட்ரானிக்ஸ், அன்றாடம் அழியும் பொருட்கள் போன்ற துறைகளில் இருப்பவர்கள் மிகப்பெரிய லாபம் அடைவீர்கள். பெண்கள் தொடர்பான துறைகளிலும், அழகு, ஆடம்பரம், கலைகள் போன்ற துறைகளிலும் இருப்பவர்களுக்கும் விசேஷமான நல்ல பலன்கள் நடக்கும்.

பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும், கௌரவமும் கிடைக்கும். உங்களின் ஆலோசனை குடும்பத்தில் உள்ள ஆண்களால் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற நல்ல பலன்கள் இருக்கும். நீண்டநாட்களாக நினைத்திருந்த காரியம் நிறைவேறும். அனைவரிடமும் பாராட்டுப் பெறுவீர்கள். கேட்டது கேட்ட இடத்தில் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்திலும் அலுவலகத்திலும் கௌரவமாக நடத்தப் படுவீர்கள்.

இதுவரை முயற்சி செய்தும் நடைபெறாத பல விஷயங்கள் இனிமேல் தெய்வத்தின் அருளால் முயற்சி இல்லாமலேயே வெற்றியைத் தரும். இனிமேல் உங்களின் பொருளாதாரநிலை மிகவும் மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும். தொட்டது துலங்கும்.

கடந்த காலங்களில் பெரும்பாலான துலாம் ராசிக்காரர்கள் மனக் கஷ்டங்களையும் வாழ்வில் தடைகளையும் சந்தித்தீர்கள். அப்படிப்பட்ட நிலை எதுவும் இனிமேல் இருக்காது. எல்லா விஷயங்களும் நிதானமாக நல்லபடியாக நடக்கும்.

சுருக்கமாக சொன்னால் பிறக்க இருக்கும் தமிழ்ப் புத்தாண்டில் துலாம் ராசிக்காரர்கள் எதையும் சாதிப்பீர்கள். உங்களைச் சுற்றி வெற்றி கொடியினை மட்டும் பறக்க விடுவீர்கள்.

1 comment :

  1. Sir please I am begging you, please tell me about my future , I add you my chart details. I am thula rasi swatti nadchathira. 22.08.1985, time am:6.8.00. And first house simmam sun aadchi,third house sani udcham with moon ,rahu. Six house guru,11 house sukiran, 12 house puthan,sewwai. Please I am waiting your replay. Please

    ReplyDelete