Saturday, March 25, 2017

கன்னி: 2017- ஹே விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

கன்னி:

கன்னிக்கு கடந்து போன தமிழ்ப் புத்தாண்டை விட மேம்பட்ட ஒரு வருடமாக பிறக்க இருக்கும் புது வருடம் இருக்கும்.

குறிப்பாக இன்னும் நான்கு மாதங்களில் நடக்க இருக்கும் ராகு-கேது பெயர்ச்சியின் மூலம் அபரிமிதமான நன்மைகளை கன்னி ராசிக்காரர்கள் பெறுவீர்கள் என்பதால் பிறக்க இருக்கும் தமிழ்ப் புத்தாண்டு கன்னி ராசிக்கு சந்தோஷங்களை மட்டுமே தர இருக்கும் ஆண்டாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

ராகுபகவான் நல்ல நன்மைகளைத் தரும் இடமாக 3, 6, 11-ம் இடங்கள் நம்முடைய கிரந்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதிலும் மிக முக்கிய பலனாக மேற்கண்ட பாவங்கள் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ஐந்து இடங்களில் (ஆமேடம் எருது, சுறா, நண்டு, கன்னி) ஒன்றாக இருந்தால் இருந்தால் ராகுபகவான் இன்னும் அதிக சுபத்துவம் பெற்று கூடுதலான நன்மைகளைச் செய்வார் என்பது ஜோதிட விதி.

அந்த அமைப்பின் கீழ் இம்முறை ராகு பகவான் உங்கள் ராசிக்கு 11-ம் வீடான கடகத்தில் அமர்வதால் இம்முறை கன்னி ராசிக்காரர்களுக்கு வேலை, தொழில் விஷயங்களில் நற்பலன்களோடு மிகுந்த லாபங்களும் இருக்கும்.

இந்த அமைப்பின் மூலம் ராகுவின் சிறப்புக்களான வெளிமாநிலம், வெளிநாடு, இயங்கிக் கொண்டே இருக்கும் பொருட்கள், அந்நியமொழி, இன, மதம் போன்ற விஷயங்களில் கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல லாபங்கள் இருக்கும். இதுவரை உங்களுடைய தொழில் அமைப்புகளில் இருந்து வந்த சிக்கல்கள் இனிமேல் இருக்காது.

ஒரு வியாபாரத்தையோ, தொழிலையோ ஆரம்பித்து காலுன்ற முடியாமல் தடுமாறிக் கொண்டிருப்பவர்கள் இந்த புது வருடத்தில் தொழிலில் நிலைத்தன்மை பெற்று வாழ்க்கையில் செட்டில் ஆவீர்கள்.

எந்த ஒரு விஷயத்திலும் இருந்து வரும் தடைகளும், தாமதங்களும், மனக் குழப்பங்களும் இனிமேல் விலகும். சொந்த வாழ்க்கையில் தோல்வியை சந்தித்தவர்கள், கருத்து வேறுபாடுகளால் வாழ்க்கைத்துணையைப் பிரிந்தவர்கள், ஏற்கனவே நடந்து முடிந்த திருமண உறவில் சிக்கல்களை சந்தித்து நீதிமன்ற படிக்கட்டுகளை ஏறிக்கொண்டிருப்பவர்கள் சாதகமான திருப்பங்களை இனிமேல் உணர்வீர்கள்.

ராகு கேதுப் பெயர்ச்சியை அடுத்து செப்டெம்பர் மாதம் 12 ம் தேதி நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சியும் மிகவும் நன்மைகளையும், பணவரவையும் தரக்கூடிய இரண்டாமிடத்தில் நடைபெறுவதால் பருத்தி புடவையாய்க் காய்த்தது போன்ற ஒரு அதிர்ஷ்ட நிலை கன்னிக்கு உருவாகிறது.

குருவை அடுத்து அக்டோபர் மாதம் 26 ம் நாள் நடைபெற இருக்கும் சனிப்பெயர்ச்சி நான்காமிடத்தில் அமைந்தாலும் சனிபகவான் உங்களுக்கு யோகாதிபதி என்பதால் கெடுதல்களைச் செய்ய மாட்டார்.

இதுவரை மனதில் இருந்துவந்த எதிர்மறைஎண்ணங்கள், தாழ்வு மனப்பான்மைகள் இனிமேல் இருக்காது. இனம்புரியாத கலக்கத்தில் இருந்து வந்தவர்கள் இனிமேல் புது உற்சாகம் அடைவீர்கள். இதுவரை இருந்து வந்த கெட்ட விளைவுகள் இனி இருக்காது.

உங்களைப் பிடிக்காமல் உங்களை எதிர்த்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் உங்களைப் பார்த்து பயப்படும்படி நிலைமை மாறும். கடன் பிரச்னைகள் தலை தூக்காது. புதிய கடன்கள் வாங்கும்படி நேரிட்டாலும் பழைய கடன்களை சுத்தமாக அடைத்துவிட்டு நிம்மதியாக இருப்பீர்கள். வெளியிடங்களில் மதிப்பு, மரியாதை கௌரவம் நல்லபடியாக இருக்கும்.

பணவரவு மிகவும் நன்றாக இருக்கும். வருமானத்திற்கு எந்த வித குறையும் இருக்காது. தொழில்அதிபர்கள், உயரதிகாரிகள், அரசியல்வாதிகள், கலைஞர்கள் உள்ளிட்ட எல்லாத் துறையினருக்கும் இது மிகவும் நல்லநேரம். எந்தக்காரியமும் அதிக முயற்சி இல்லாமலேயே வெற்றி பெறும்.

வேலை செய்யும் இடங்களில் சந்தோஷமான சூழல்கள் இருக்கும். பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு அல்லது இரண்டும் இந்த வருடம் கண்டிப்பாக உண்டு. இந்த வருடம் உங்களின் தொழில், வேலை, வியாபாரம் போன்றவைகள் நல்ல நிலையில் இருக்கும்.

வேலை தேடி அலைந்து கொண்டிருக்கும் இளைய வயதுக்காரர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். ஏற்கனவே தொழில் ஆரம்பித்து இன்னும் காலூன்ற முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த வருடம் தொழில் நல்ல முன்னேற்றமாக நடக்கும். எல்லா விஷயங்களும் நிதானமாக நல்லபடியாக நடக்கும்.

இதுவரை தொழில் விஷயங்களில் சரிவைச் சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது மளமளவென தொழில் முன்னேற்றம் பெறுவதை கண்ணெதிரே காண்பீர்கள். அலுவலகங்களில் இதுவரை எதிர்ப்புகளையும், பின்னடைவுகளையும் சந்தித்தவர்கள் இனிமேல் அவை அனைத்தும் மாறி உங்களுக்கு சாதகமான சூழல் அமைவதையும் பார்க்க முடியும்.

முதல் திருமணம் கோணலாகி காவல் நிலையம், வழக்கு, நீதிமன்றம் என்று அலைந்து திரிந்தவர்களுக்கு அனைத்தும் இப்போது நல்லபடியாக ஒரு முடிவிற்கு வந்து தெளிவு பிறக்கும். இரண்டாவது வாழ்க்கைக்கான அமைப்புகள் இந்த வருடம் உருவாகும். இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாகவும் இருக்கும்.

கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் உண்டு. ஆன்மீக ஈடுபாடு இந்த வருடம் உங்களுக்கு அதிகமாக இருக்கும். புனிதத் தலங்களுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும். ஷீரடி, மந்திராலயம் போன்ற இன்றும் மகான்கள் வாழ்ந்து நம்மை ஆசிர்வதிக்கும் இடங்களுக்கு சென்று வருவீர்கள்.

உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்கள் வெகுவிரைவில் குணம் அடைவார்கள். மருத்துவத்திற்கு கட்டுப்படாமல் போக்குக்காட்டிக் கொண்டிருந்த வியாதிகள் இனிமேல் நல்ல பிள்ளையாக உங்களை விட்டு விலகும். கடந்த காலங்களில் மகன், மகள் விஷயத்தில் உங்களுக்கு கவலைகள் இருந்து வந்தன. சிலர் பிள்ளைகளுக்கு எத்தனையோ வரன் பார்த்தும் திருமணம் முடிக்க முடியாமல் இருந்தீர்கள். அவை அனைத்தும் இப்போது நீங்கி பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை இந்த வருடம் சிறப்பாகச் செய்வீர்கள்.

குடும்பத்தில் சுபகாரியங்கள் இருக்கும். நீண்ட நாட்களாக குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிலர் தாத்தா, பாட்டியாக பதவிஉயர்வு பெறுவீர்கள். இதுவரை பள்ளி, கல்லூரிகளுக்கு ஒழுங்காக செல்லாமல் கெட்டபெயர் எடுத்து உங்களை மனக்கஷ்டத்திற்கு ஆளாக்கிய பிள்ளை இப்போது ஒழுங்காக சென்று உங்களை சந்தோஷப்படுத்துவார்.

சரக்கு வாகனங்கள், பெட்ரோல்பங்க், மதுபானத் தொழில் சம்பந்தப்பட்டோர், விவசாயிகள், நிலத்தரகர்கள், மருத்துவமனையினர், கடைநிலை ஊழியர்கள், துப்புரவு தொழிலாளர்கள், ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சித் தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்டவர்கள் மிகவும் வளம் பெறுவார்கள். வருமானமும் சிறப்பாக இருக்கும்.

கடந்த வருடங்களில் வீடு வாங்குவதற்கு, புது வீடு கட்டுவதற்கு இருந்த சிக்கல்கள் இனிமேல் இருக்காது. நல்ல வீட்டில் குடி போவீர்கள். பூர்வீக சொத்து சம்பந்தமாக இதுவரை இருந்து வந்த பாகப்பிரிவினை பிரச்னைகள், பங்காளித் தகராறு போன்றவைகள் இந்த வருடம் சுமுகமாக உங்களுக்கு லாபகரமாக முடிவுக்கு வரும்.

நேர்த்திக்கடன்களை செலுத்தாமல் இருப்பவர்கள் உடனடியாக நல்லபடியாக நிறைவேற்றலாம். குலதெய்வவழிபாடு சரிவரச் செய்யாதவர்கள் உடனே அதைச் செய்யும்படி இருக்கும். வருட ஆரம்பத்தில் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்து சுபவிரயங்கள் இருக்கும். திருமணம், கிரகப்பிரவேசம், பூப்புனித நீராட்டு விழா, வளைகாப்பு போன்ற மங்கள நிகழ்ச்சிகளை வருட முற்பகுதியில் செய்வீர்கள்.

வியாபாரிகளுக்கு கொள்முதல் வியாபாரம் போன்றவைகளில் பிரச்னை எதுவும் இருக்காது. விவசாயிகளுக்கு இது மிகவும் நல்ல வருடம். விளைந்த பயிருக்கு நியாயமான விலை கிடைக்கும். பணப்பயிர் மற்றும் எண்ணை வித்துகள் போன்றவை பயிரிட்டவர்களுக்கு இந்த வருடம் லாபம் வரும். அரசு, தனியார்துறை பணியாளர்கள், இரும்பு சம்பந்தப்பட்ட துறையினர், உழைப்பாளிகள் போன்றவர்களுக்கு மிகவும் நல்ல பலன்கள் கிடைக்கும்.

தெய்வத்தின் அருளும், கிரகங்களின் ஆசியும் இந்த வருடம் பரிபூரணமாக உங்களுக்கு கிடைப்பதால் இந்த வருடம் நீங்கள் எடுத்த காரியம் அனைத்தும் வெற்றி பெற்று உங்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒரு வருடமாக இது அமையும்.

சில நிலைகளில் பணத்திற்காக பொய்பேச நேரலாம். அதனால் பணம் கிடைக்கும். யாரிடமும் சண்டை போடாதீர்கள். வாக்குவாதமும் செய்யாதீர்கள். சிறியதாக ஆரம்பிக்கும் பிரச்னை பெரியதாக மாறி நண்பர்களை விரோதியாக்கும். பேசுவதிலோ திட்டுவதிலோ கவனமாக இருங்கள். வாயைக் கட்டுப்படுத்துங்கள்.

பெண்களுக்கு இனிமேல் யோக காலம்தான். இதுவரை வெளியே சொல்ல முடியாமல் நீங்கள் பட்ட துயரங்கள் மிக அதிகம். கடவுள் உங்களை ஒருபோதும் கை விடமாட்டார். வீட்டிலும் அலுவலத்திலும் இனிமேல் உங்களுக்கு எந்தப் பிரச்னைகளும் இருக்காது.

பிறந்த ஜாதகத்தில் யோகமான தசாபுக்திகள் நடந்து கொண்டிருக்கும் கன்னி ராசிக்காரர்களுக்கு கண்ணா லட்டு தின்ன ஆசையா என்பது போல இரட்டிப்பு நல்ல பலன்கள் நடக்கும். குறிப்பிட்ட சிலர் ஏதேனும் ஒரு விஷயத்தில் புகழ் அடைவீர்கள்.

மொத்தத்தில் பிறக்க இருக்கும் தமிழ்ப் புத்தாண்டு கன்னிக்கு கவலைகளைப் போக்கும் ஒரு ஆண்டாக இருக்கும்.

No comments :

Post a Comment