Saturday, March 25, 2017

கடகம்: 2017- ஹே விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கின்ற தமிழ்ப் புத்தாண்டு நன்மைகளை அள்ளித் தரும் வருடமாக இருக்கும்.

மொத்தம் 30 வருடங்கள் அடங்கிய தன்னுடைய சுற்றில் சனிபகவான் 3,6,11-ம் இடங்களில் மட்டுமே நன்மைகளை தருவதற்கு கடமைப்பட்டவர். இந்தப் புது வருடத்தில், முப்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வரும் நிலையான ஆறாமிடத்திற்கு சனி வர இருப்பது கடகத்திற்கு மிகவும் மேன்மைகளைத் தருகின்ற ஒரு அமைப்பாகும்.

இந்த அமைப்பின் மூலம் இதுவரை வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்பில் செட்டில் ஆகாத கடக ராசிக்காரர்கள் மேம்பட்ட வருமானங்களைத் தரக்கூடிய வகையில் நிரந்தர அமைப்புகளை பெறுவீர்கள். மாதம் பிறந்தால் நிரந்தரம் வருமானம் உண்டு என்ற அமைப்பு இந்த வருடம் ஆரம்பிக்கும்.

இதுவரை கை கொடுக்காத சொந்தத் தொழிலும், வியாபாரமும் இனிமேல் லாபகரமாக நடக்கத் துவங்கும். வேலை இடங்களில் இதுவரை இருந்து வந்த சிக்கல்களும், எதிர்ப்புகளும் பிறக்க இருக்கும் புத்தாண்டு முதல் விலக துவங்கும்.

தற்போது உங்கள் ராசியின் இரண்டாம் வீடான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் இருந்து இளைய பருவத்தினருக்கு குடும்பம் அமைய விடாமலும், அவர்களது நிதிநிலை உயர்வைத் தடுத்துக் கொண்டும் இருக்கும் ராகுபகவான் ஆகஸ்ட் மாதம் 18-ந்தேதி அங்கிருந்து மாறி உங்களின் ஜென்ம ராசிக்கு வருவதும் இதுவரை குடும்ப விஷயத்தில் நடந்து வந்த சாதகமற்ற அமைப்புகளை மாற்றுகின்ற ஒரு பெயர்ச்சிதான்.

ஆகஸ்ட் மாதம் நடக்க இருக்கும் ராகு-கேது பெயர்ச்சிக்கு பிறகு இதுவரை குடும்பம் அமையாமல் இருந்து கடக ராசிக்காரர்களுக்கு வாழ்க்கைத்துணை அமைந்து குடும்பஸ்தனாவீர்கள். திருமணம் தாமதமாகி வந்த இளையவர்களுக்கு கல்யாணம் கூடி வரும்.

ஏற்கனவே நடந்த திருமணத்தின் மூலம் சிக்கல்களை சந்தித்து நீதிமன்ற வழக்கு போலீஸ் என்று அல்லாடிக் கொண்டிருப்பவர்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்து வழக்கு ஒரு முடிவுக்கு வரும். இந்தக் காலகட்டத்தில் இரண்டாவது திருமணமும் அமைந்து அந்த வாழ்க்கை நல்லபடியாகவும், நீடித்தும் இருக்கும்.

இதுவரை ஐந்தாமிடத்தில் இருந்து வந்த சனிபகவான் விலகுவதால் கடந்த இரண்டு வருடங்களாக பிள்ளைகள் விஷயத்தில் தொல்லைகளையும், மன அழுத்தங்களையும், துயரங்களையும் அடைந்த கடகராசிக்காரர்களுக்கு விடிவுகாலம் ஏற்பட்டு இனிமேல் பிள்ளைகள் மூலம் நல்ல விஷயங்கள் இருக்கும்.

பிள்ளைகள் பற்றிய கவலைகள் தீரும் வருடமாக இந்த வருடம் அமையும். மகனுக்கு இதுவரை நல்ல வேலை கிடைக்கவில்லையே, வயது ஏறிக்கொண்டே போகிறது. மகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று நித்தம் நித்தம் கவலைப்பட்டு தூக்கம் இல்லாமல் இருக்கும் கடக ராசிக்காரர்களின் மனக்குறை தீரும். மகன், மகள் போன்றவர்களின் வேலை, திருமணம் தற்போது தடைகள் இல்லாமல் நடைபெறுவதை பார்க்க முடியும்.

பாவக்கிரகங்கள் மூன்று ஆறு பதினொன்றில் கோட்சாரரீதியில் அமர்ந்திருப்பது நன்மைகளைத் தரும் என்று நமது மூலநூல்கள் குறிப்பிடுகின்றன. அதன்படி புத்தாண்டின் நடுப்பகுதியில் இருந்து சனி ஆறில் வருவது உங்களுக்கு தொழில் அமைப்புகளில் யோகம் தரும்.

அதேபோல கடந்த வருடம் குருபகவான் சாதகமற்ற பலன்களை தரும் மூன்றாமிடத்தில் இருந்ததால் குருவின் மூலம் கிடைக்க இருந்த எந்த பலன்களும் கடகத்திற்கு கிடைக்காத நிலையில் வரும் செப்டம்பர் மாதம் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சிக்கு பிறகு குருபகவான் மூன்றாம் இடத்தை விட நல்ல ஸ்தானமான நான்காம் பாவத்திற்கு இடம் பெயர்வதால் குருவாலும் இனிமேல் உங்களுக்கு நன்மைகள் இருக்கும்.

தொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் திருப்புமுனையான நல்ல சம்பவங்கள் இந்த வருடம் நடக்க இருக்கிறது. தொழிலை விரிவுபடுத்தும் எண்ணங்கள் ஈடேறும். தொழில், வியாபாரம் போன்றவைகள் முன்னேற்ற வழியில் இருக்கும். அதேநேரத்தில் வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும்.

காவல்துறை, வனத்துறை போன்ற சீருடை அணிந்து வேலை செய்யும் துறையினருக்கு இந்த வருடம் பதவிஉயர்வு கிடைக்கும். சம்பள உயர்வு, இதர படிகள் போன்றவைகளும் இருக்கும். அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு ‘இதர வருமானங்கள்’ சிறப்பாக சொல்லிக் கொள்ளும்படி இருக்கும். தொழிலாளர்களுக்கு வேலைப்பளு குறைந்து சம்பளஉயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும். தொழிற்சங்கங்களில் பதவியில் இருப்பவர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். கருத்து வேறுபாடு, குடும்ப பிரச்னைகள் அல்லது வேலை விஷயமாக பிரிந்து இருந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். கணவன் ஓரிடம், மனைவி வேறிடம் என்று வேறு வேறு இடங்களில் பணிபுரிந்தவர்களுக்கு ஒரே இடத்தில் பணிமாறுதல் கிடைத்து குடும்பம் ஒன்று சேரும்.

கூட்டுத்தொழில் ஆரம்பிக்க உகந்த நேரம் இது. தொழில் விரிவாக்கங்கள் பலன் தரும். சுயதொழில் செய்வோருக்கு எடுக்கும் முயற்சிகள் கை கொடுக்கும். பொருளாதார நிலை மிகவும் மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும். தொட்டது துலங்கும். சரியான வருமானம் இன்றி பற்றாக்குறையால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வருமானம் இருக்கும்.

தொழிலதிபர்களுக்கு இதுவரை இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். அரசாங்க ஆதரவு உண்டு. இடைத்தரகர்களை நீக்கி நேரடியாக அமைச்சர்களையோ அதிகாரிகளையோ பார்த்து காரியங்களை வெற்றியாக்க முடியும். எந்த ஒரு காரியத்திலும் எடுக்கும் முயற்சிகள் இப்போது பலிதமாகும். தொழிலை விரிவுபடுத்தலாம். புதிய சோதனை முயற்சிகளை இப்போது செய்யலாம்.

மத்திய மாநில நிர்வாகப் பதவிகளுக்கான ஐ. ஏ. எஸ், குரூப்ஒன் தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கும் ஏற்கனவே எழுதி முடிவுகளுக்கு காத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்திகள் கிடைக்கும். இதுவரை வெளிமாநில வேலைக்குச் செல்ல இருந்த தடைகள் விலகும்.

பிற, இன, மொழி மதக்காரர்கள் உங்களிடம் நேசமாக இருப்பார்கள். வெளி மாநிலத்தவர்கள் நண்பர்களாகக் கிடைப்பார்கள். அவர்களால் நன்மைகள் உண்டாகும். தூரத்தில் பணியிடம் அமையும். பிரயாணங்களால் உற்சாகமாக இருப்பீர்கள். வருடத்தின் பிற்பகுதியில் மிகவும் நல்ல பலன்கள் உங்களுக்கு நடக்கும்.

இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் வருட முற்பகுதியில் மிகவும் யோகமான நிகழ்ச்சிகளை சந்திப்பீர்கள். எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடும் காலம் இது. எதிர்காலத்தில் நீங்கள் எந்தத் துறையில் இருக்கப் போகிறீர்கள் என்பதை இந்த வருடம் நிர்ணயிக்கும் என்பதால் மிகவும் பயனுள்ள வருடமாகும் இது.

கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமான நிலைமையும் மாறி தொழில் நல்லபடியாக நடக்கும். நண்பர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள். தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள் நன்றாக இருக்கும். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள்.

புனித யாத்திரைகள் இப்போது செல்ல முடியும். வயதானவர்கள் காசி, கயா யாத்திரைகள் செல்வீர்கள். இஸ்லாமியர்களுக்கு புனித ஹஜ் பயணம் செல்லும் வாய்ப்பை இறைவன் அருளுவார். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஞானிகளின் ஜீவ சமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறும் பாக்கியம் கிடைக்கும்.

வெளிநாட்டு விஷயங்கள் நல்லபலன் அளிக்கும் என்பதால் இப்போது வெளிநாட்டு வேலைக்கோ அல்லது வெளி தேசத்தில் மேற்படிப்பு படிக்கவோ செல்ல முடியும். அதனால் நன்மைகளும் இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு இப்போது இருக்கும் வாகனத்தை விட நல்ல வாகனம் அமையும். வாகன மாற்றம் செய்வீர்கள். பங்குச்சந்தை யூகவணிகம் போட்டி பந்தயங்களில் சிறிதளவு லாபம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

இதுவரை இழுபறியில் இருந்து வந்த பேச்சு வார்த்தைகள், நடவடிக்கைகள் உங்களுக்கு சாதகமாக முடிவுக்கு வரும். இனிமேல் வராது என்று கை விடப்பட்ட பணம் கிடைக்கும். வயதான பெற்றோரைக் கொண்டவர்கள் அவர்களுடைய உடல் நலத்தில் சிறு பிரச்னை இருந்தாலும் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்வது நல்லது. பெற்றோரால் விரயங்கள் இருக்கக் கூடும்.

பொருளாதார சிக்கல்கள் தீரும். பூர்வீகச் சொத்தில் இதுவரை இருந்து வந்த வில்லங்கம் தீர்ந்து உங்கள் பங்கு உடனே கிடைக்கும். பங்காளித் தகராறுகள் சுமுகமாகத் தீர்த்து வைக்கப்படும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இதுவரை வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். பதவி உயர்வு உண்டு. இடமாற்றம், கேட்டபடியே கேட்கும் இடத்தில் கிடைக்கும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் தனிக்குடித்தனம் போக வேண்டிய சூழ்நிலை வரலாம்.

மொத்தத்தில் கடகத்திற்கு அனைத்து விஷயங்களிலும் நன்மைகளை மட்டுமே தரக்கூடிய வருடமாக இந்த வருடம் அமையும்.

No comments :

Post a Comment