தமிழ்ப் புத்தாண்டின் ஆரம்ப நாளில் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் உச்ச வலுவுடன்
இருப்பதும், ராசி மற்றும் ராசிநாதனை ஐந்தாமிடத்தில் இருந்து குருபகவான்
பார்ப்பதும் ஒரு நல்ல அமைப்பு என்பதால் வருடம் பிறக்கும் போதே ரிஷப
ராசிக்காரர்களுக்கு நன்மைகளை தரக்கூடிய அமைப்பில் பிறக்கின்றது.
மேலும் இந்த வருடத்தின் பலன்களை உங்களுக்கு இரண்டு பிரிவாக பிரித்துச்
சொல்லுவேன். இன்னும் சில மாதங்கள் கழித்து நடக்க இருக்கின்ற
சனிப்பெயர்ச்சியில் (அக்டோபர் 26) சனிபகவான் அஷ்டமச்சனியாக நிலை கொண்டு
உங்களுடைய வளர்ச்சிக்கு தற்காலிகமாக முட்டுக்கட்டை போடும் அமைப்பில் மாற
இருக்கிறார்.
எனவே இந்த தமிழ்ப் புத்தாண்டின் பிற்பகுதியில் எந்த ஒரு விஷயத்திலும் நீங்கள்
அகலக்கால் வைக்காமல் நிதானத்துடனும், கவனத்துடனும் செயல்பட வேண்டிருக்கும்.
அதேநேரத்தில் என்னதான் இருந்தாலும் உங்களுடைய ராசிக்கு சனிபகவான் ராஜயோகாதிபதி
என்பதால் கெடுதல்கள் எதையும் கண்டிப்பாக செய்யவே மாட்டார்.
சுக்கிரனின் வீடுகளான ரிஷப, துலாம்ராசிகளின் மேல் எப்பொழுதுமே சனிக்கு ஒரு
இணக்கமான புரிதல் உண்டு. எனவே ரிஷபம், துலாம் ராசிக்காரர்களுக்கு அஷ்டமச்சனி
கெடுதல்களை செய்வதில்லை.
ஆயினும் பணத்தின் அருமையை உங்களுக்கு சனிபகவான்தான் புரிய வைக்க வேண்டும்
என்பதால் வெயிலில் இருக்கும் போதுதான் நிழலின் அருமை தெரியும் என்ற
பழமொழியின்படி வருடத்தின் பிற்பகுதியில் இருந்து பணத் தட்டுப்பாட்டினையும்,
பொருளாதாரச் சிக்கல்களையும் கடன் வாங்க வேண்டிய அளவிற்கு நிலைமையையும்
உருவாக்குவார்.
எனவே எதிலும் அகலக்கால் வைக்காமல், புதிதாக எதையும் தொடங்காமல்
கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது அவசியம். இப்போது என்ன செய்து
கொண்டிருக்கிறீர்களோ அதைக் கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தால் மட்டும்
போதும்.
இதுபோன்ற நேரங்களில் சனி புதிதாக ஒருவரை அறிமுகப்படுத்தி 1 லட்சம் போட்டால் 10
லட்சம் எடுத்துவிடலாம் என்றோ, வெறும் 10 ஆயிரத்தில் பல கோடி சம்பாதிக்கலாம்
என்றோ சில தூண்டில்களை போட்டு தொழில் ஆரம்பிக்க வைத்து உங்களை ஏதேனும் ஒரு
விஷயத்தில் நுழைத்து, புலி வாலைப் பிடிக்க வைப்பார்.
பிறகு அதனை நடத்தவும் முடியாமல், விடவும் முடியாமல் சிக்கலுக்குள்ளாக்கி
பரிதவிக்க வைப்பார் என்பதால் இந்த வருடம் புதிதாக அறிமுகமாகும் நபர்களிடமோ,
இதுவரை தெரியாத ஒரு தொழிலை பற்றி தெரிய வந்தாலோ கவனமாக இருங்கள்.
இன்னொரு சிறப்பு பலனாக ஆகஸ்ட் 18-ந்தேதி நடக்க இருக்கும் ராகு-கேது
பெயர்ச்சியின் மூலம் ராகுபகவான் மிகவும் நன்மைகளைத் தரக்கூடிய
மூன்றாமிடத்திற்கு மாறுகிறார். இந்த சிறப்பிற்குள்ளும் ஒரு விசேஷமாக அவர் மாற
இருக்கின்ற கடக வீடு, ராகு நற்பலன்களை தருகின்ற வீடு என்பதால் நடக்க இருக்கும்
ராகு-கேது பெயர்ச்சி உங்களுக்கு சிறந்த பலன்களை தரும்.
கோட்சாரரீதியில் மூன்றாமிடம் எனப்படும் கீர்த்திஸ்தானத்தில் ராகு
இருக்கும்போது ஒருவர் தன்னுடைய செயற்கரிய செயல்களால் புகழ் மற்றும்
வெற்றிகளைப் பெறுவார் என்பது ஜோதிடவிதி அதன்படி ரிஷப ராசிக்காரர்கள் அவரவருடைய
பிறந்தஜாதக அமைப்பு உள்ள அளவுகளின்படி புகழ் அடைவீர்கள்.
இந்த அமைப்பினால் சிலர் வெளிநாடு, வெளிமாநிலம் போன்ற தூர இடங்களுக்கு சென்று
பொருள் சம்பாதிப்பீர்கள். இதுவரை வெளிநாட்டில் படிக்கவோ, வேலை செய்யவோ இருந்த
தடை நீங்குகிறது. அயல்தேசத்தில் செட்டில் ஆக வேண்டும் என்ற ஆசையில்
இருப்பவர்களுக்கு அந்த வாய்ப்பு இப்போது கிடைக்கும்.
மேலும் ஒரு சிறப்பு பலனாக அந்நிய இன, மத, மொழிக்காரர்கள் ஆகஸ்ட் மாதத்திற்கு
பிறகு உங்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவிகரமாக இருப்பார்கள். இஸ்லாமிய,
கிறிஸ்தவ நண்பர்கள் மூலம் நன்மைகளும், பொருளாதார ஆதாயங்களும் இருக்கும்.
முஸ்லீம், கிறிஸ்தவ மதங்களை சேர்ந்தவர்களுக்கு இந்து நண்பர்கள் உதவுவார்கள்.
அவர்களால் லாபங்கள் உண்டு.
செப்டம்பர் மாதம் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சிக்கு பிறகு இப்போது ராசிக்கு
இருக்கும் குருபார்வை விலகுவதாலும் குருபகவான் ஆறாமிடத்திற்கு மாறுவதாலும்
வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் பின்னடைவுகள் ஏற்படும்
என்பதால் நடுத்தர வயது ரிஷப ராசிக்காரர்கள் அனைத்திலும் கவனமுடன் இருப்பது
நல்லது.
தொழில், வேலை, வியாபாரம் போன்றவைகள் சுமாரான பலன்களைத்தான் தரும். வேலைப்பளு
அதிகம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. வியாபாரிகள், விவசாயிகள்,
சொந்தத்தொழில் செய்பவர்கள் உங்களுடைய வேலைக்காரர்களை அதிகம் நம்ப வேண்டாம்.
சுயதொழில் நடத்துவோருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். ஆயினும்
வாங்கும் கடன் நல்லபடியான முதலீடாகவோ அல்லது முன்னேற்றத்திற்கானதாகவோ,
வருமானம் வரும் வகையிலோதான் செலவாகும். வெளிநாடுகளில் வர்த்தக அமைப்புகளை
வைத்திருப்பவர்கள், மாநிலங்களுக்கு இடையே தொழில் செய்பவர்கள் போன்றவர்களுக்கு
நல்ல பலன்கள் உண்டு.
அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கும் வேலைப்பளு அதிகமாக இருக்கும். விருப்பம்
இல்லாத ஊருக்கு மாற்றம் அல்லது துறைரீதியான தேவையில்லாத மாற்றங்கள் நடந்து
உங்களை சங்கடப்படுத்தலாம். வீடு மாற்றம், தொழில் மாற்றம் போன்ற ஏதேனும் ஒன்று
இப்போது நடக்கும்.
குறிப்பிட்ட சிலர் அஷ்டமச்சனியால் அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருக்கும்.
வெளிமாநிலங்களுக்கு செல்வீர்கள். நீண்டதூரப் பயணங்களால் லாபங்கள் இருக்கும்.
இதுவரை வெளிநாடு போக முயற்சித்தவர்களுக்கு இப்போது வெற்றி கிடைக்கும்.
வயதானவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் பேரக்குழந்தைகளை போய்ப் பார்க்கும்
வாய்ப்பு கிடைக்கும். இளம்பருவத்தினர் வேலை விஷயமாக வெளிநாடு செல்வீர்கள்.
பூர்வீக சொத்து விவகாரங்களில் ஏதேனும் வழக்கு போன்ற வில்லங்கம் வரும்.
பங்காளிகளுடன் கருத்து வேற்றுமை வர வாய்ப்பு இருக்கிறது. உறவினர்களுடன் கவனமாக
பழக வேண்டியது அவசியம். தேவையற்ற பேச்சுக்கள் வேண்டாம். சிலருக்கு மறைமுகமான
வழியில் தனலாபங்கள் இருக்கும். எப்படி வந்தது என்று வெளியில் சொல்ல முடியாத
வகையில் பண வரவுகளும் இருக்கும்.
யூகவணிகம், பங்குச்சந்தை முதலீடு, வட்டிக்கு பணம் கொடுத்தல் போன்ற ரிஸ்க்
எடுக்கும் தொழில்களில் கவனமுடன் இருப்பது நல்லது. ஆரம்பத்தில் சிறிது லாபம்
வருவது போல காட்டி பிறகு மொத்த முதலீடும் சிக்கலுக்கு ஆளாகும் நிலை வரலாம்.
குலதெய்வத்தின் அருளைப் பெற வேண்டிய நேரம் இது என்பதால் முறையாக குலதெய்வ
வழிபாடு செய்யுங்கள். தள்ளிப் போயிருந்த குலதெய்வ வழிபாடு மற்றும்
நேர்த்திக்கடன்களை இப்போது நிறைவேற்ற முடியும். கம்ப்யூட்டர் சம்பந்தமாக
படிக்கும் மாணவர்களுக்கு படிப்பில் தேக்க நிலையும், மந்தமான போக்கும்,
மறதிகளும் ஏற்படும். பொறியியல் துறை மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் படிக்க
வேண்டிய காலம் இது.
பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருங்கள். பொது வாழ்க்கையில் உள்ள சிலருக்கு
அதிகாரப் பதவிகள் தேடி வரும். கூடவே விரோதிகளும் எதில் சிக்க வைக்கலாம்
என்றும் அலைவார்கள். கலைஞர்கள் வேலை செய்த பணத்தை பெற போராட வேண்டி இருக்கும்.
நடுத்தர வயதை எட்டுபவர்கள் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டியது
அவசியம். சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகள் கண்டுபிடிக்கப்படும் நேரம் இது
என்பதால் உடல்நல விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் சிறு சுகக்குறைவு என்றாலும்
மருத்துவரை உடனே அணுகுவது நல்லது.
நேர்மையற்ற செயல்கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான தொழில்கள் போன்றவற்றில்
தற்போது ஆர்வம் காட்டாதீர்கள். அவற்றால் சிக்கல்கள் வரலாம். போட்டி
பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். அடிதடி சண்டை போன்றவைகளால் கோர்ட்
காவல்துறை போன்ற இடங்களுக்கு அலைய வேண்டியது ஏற்படக்கூடும் என்பதால் எதிலும்
கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
ஏற்கனவே வழக்கு விவகாரங்கள் இருந்தால் அவற்றை முடிப்பதற்கும் அவசரப்பட
வேண்டாம். தற்போது தீர்ப்பு வரும் நிலை இருந்தால் அவற்றை தள்ளி வைக்க
முயற்சிப்பது நல்லது. தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக வருவது கடினம்.
குடும்பப் பிரச்னைகளும் நீதிமன்றம் செல்லக் கூடிய காலகட்டம் இது.
பெண்களுக்கு நல்லபலன்கள்தான் அதிகம் இருக்கும். குடும்பத்தில் செலவுகள்
அதிகமாக இருக்கும் என்பதால் இருக்கும் சேமிப்பு செலவழிந்து உங்கள் பாடு
திண்டாட்டமாகலாம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இதுவரை தள்ளிப் போய் இருந்த
பதவிஉயர்வும், சம்பளஉயர்வும் தற்போது கிடைக்கும்.
சுபக்கிரகமான குருபகவான் ஆறாமிடத்திற்கு மாறப் போவதால் சில தேவையற்ற
விஷயங்களில் மாட்டிக் கொண்டு உங்களுடைய நல்ல பெயரைக் கெடுத்துக் கொள்வீர்கள்.
தேவையற்றவர்களுக்கு ஜாமீன் போடுவது மற்றும் எவருக்காகவும் கியாரண்டி தருவது
இப்போது கூடாது. பல நாள் சேர்த்து வைத்த நற்பெயர் ஒரு சில நிமிட செயல்களால்
கெடக்கூடும் என்பதால் கவனமாக இருங்கள்.
நிறைவாக ஆரம்பத்தில் அனைத்தையும் தந்து பிற்பகுதியில் கவனத்துடன் இருக்க
வைக்கும் வருடமாக இது இருக்கும்.
No comments :
Post a Comment