Tuesday, February 28, 2017

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள் - 124 (28.2.2017)

கே. ஜெயபால், சேலம் – 9.



கேள்வி:

பலமுறை கடிதம் எழுதியும் என் மகனுக்கு எப்போது குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று பதில் சொல்லாதது கவலையாக இருக்கிறது.

பதில்:

தந்தை, மகன், மருமகள் என வாராவாரம் பத்திற்கும் மேற்பட்ட கடிதங்களை எழுதுகிறீர்கள். எந்தக் கடிதத்திலும் பிறந்தநேரம், இடம், தேதி குறிப்பிடப்படவில்லை. மேற்கண்ட விவரங்களைக் குறிப்பிடாத ஜாதகங்களுக்கு துல்லியமாக பலன் சொல்ல முடியாது என்பதால் உங்களுக்கு பதில் தர முடியவில்லை. எந்த ஒரு நல்ல ஜோதிடரும் பிறந்தநாள், நேரம், இடம் ஆகியவற்றை கொண்டு ஜாதகம் சரியாக கணிக்கப்பட்டு இருக்கிறதா என்று உறுதிபடுத்திக் கொண்ட பிறகு பலன் சொல்வதே சரியாக இருக்கும்.

கி. இரவிச்சந்திரன், குரோம்பேட்டை.


கேள்வி :

நான் பல கடிதங்கள் எழுதியும் தாங்கள் பதில் சொல்லவில்லை.

பதில்:

உங்கள் கேள்விக்கு நான் பதில் கொடுத்தாலும், அதை தெரிந்து கொள்வதற்கும் பரம்பொருளின் அனுமதி வேண்டும். கேள்வி கேட்ட நீங்கள்தான் பதில் வருகிறதா என்பதையும் தொடர்ந்து பார்க்க வேண்டும். முன்பே உங்களுக்கு பதில் கொடுத்திருக்கிறேன். இணையதளத்தில் மாலைமலர் இ-பேப்பரில் பழைய இதழ்களை தேடி உங்களுடைய பதிலை தெரிந்து கொள்ளுங்கள்.

கே. ஆர். கிருஷ்ணசாமி, மந்தைவெளி.


ரா 
சந்,செ
ராசி
சூ,சு
பு,கே
வி
சனி


கேள்வி :

ஜோதிட அரசனுக்கு வணக்கம். மகளுக்கு எவ்வளவோ ஜாதகம் பார்த்தும், நிறைய கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்தும் திருமணம் தடையாகவே இருக்கின்றது. அருள்கூர்ந்து திருமணம் எப்பொழுது நடைபெறும் என்பதை ஆராய்ந்து சொல்லும்படி பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.

பதில்:

(மிதுன லக்னம், கும்ப ராசி. 5-ல் சனி, 6-ல் குரு. 7-ல் புத, கேது. 8-ல் சூரி, சுக். 9-ல் செவ். 18.1.1983, மதியம் 3.35, சென்னை)

மகளுக்கு லக்னத்திற்கு ஏழாமிடத்தை உச்ச சனி பார்த்து, ராசிக்கு ஏழாமிடத்தை செவ்வாய் பார்த்த களத்திரதோஷ ஜாதகம். ஏழுக்குடைய குருவும் ஆறில் மறைந்திருக்கிறார். இதுபோன்ற ஜாதகங்களுக்கு தாமதமாக திருமணமாவது நல்ல வாழ்க்கையைத்தான் கொடுக்கும். கவலைப்பட வேண்டாம்.

ஐந்தாம் வீட்டில் உச்சசனி அமர்ந்து புத்திரக்காரகன் குரு, ஆறில் மறைந்துள்ளதால் மகளுக்கு புத்திரதோஷமும் இருக்கிறது. தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் சனிதசை குருபுக்தியில் இந்த வருட பிற்பகுதியில் திருமணம் நடக்கும். புதனுக்குரிய முறையான பரிகாரங்களை உடனடியாக செய்யவும்.

ஜி.கே. லட்சுமிபதி வேலூர்.

செ
ராசி
வி,கே
ரா

பு,சு 
சனி,ல
சூ
சந்


கேள்வி :

மகன் டிப்ளோமோ மெக்கானிக் படிப்பை 2009-ல் முடித்தான். ஆனால் தேர்ச்சி ஆகவில்லை. வேலைக்குச் சென்றால் 3 அல்லது 4 மாதம் மட்டும் ஒரு வேலைக்கு போகிறான். பிறகு ஏதாவது காரணம் கூறி வேலையை விட்டு விடுகிறான். அவன் சொந்தத்தொழில் செய்ய வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது. ஆனால் போதிய நிதிநிலையில் நான் இல்லை. மகனின் எதிர்க்காலம் எப்படி இருக்கும்?

பதில்:

(தனுசு லக்னம், துலாம் ராசி. 1-ல் சுக், புத, சனி. 6-ல் செவ். 8-ல் குரு, கேது. 12-ல் சூரி. 12.12.1990, காலை 8.15, வேலூர்)

மகன் ஜாதகத்தில் லக்னாதிபதி உச்சம் பெற்று, ராசிக்கு பத்தில் உச்ச கிரகம் அமர்ந்து, ஜீவனாதிபதி புதன் லக்னத்தில் திக்பலம் பெற்றதால் சொந்தத்தொழில் செய்ய முடியும். தற்போது அவரது துலாம்ராசிக்கு ஏழரைச்சனி நடந்து கொண்டிருப்பதால் எதிலும் அக்கறையின்றி இருக்கிறார். தற்போது லக்னாதிபதி குருவின் தசையில், தொழில்ஸ்தானாதிபதி புதனின் புக்தி நடப்பதால் இந்த வருட பிற்பகுதியில் நடக்க இருக்கும் சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு நிரந்தரமான சொந்த தொழில் அமையும். எதிர்காலம் கவலைப்படும்படி இருக்காது.

எஸ். ஆனந்த், சென்னை.

கேள்வி :

எனது ராசிக்கட்டத்தில் லக்னத்திற்கு ஏழில் செவ்வாயும் , எட்டில் சனியும் உள்ளது. ஆனால் பாவகக்கட்டத்தில் ஏழில் செவ்வாய், சனி சேர்ந்துள்ளது. தற்போது எனக்கு சனிதசை ஆரம்பித்துள்ளது. சனிக்கு வீடு கொடுத்த சந்திரன் உச்சமாக இருக்கிறார். ஒரு தசை நடைபெறும் கிரகத்திற்கு வீடு கொடுத்த கிரகம் உச்சமானால் அந்த தசை யோகம் செய்யும் என்று எழுதி இருக்கிறீர்கள். அதன்படி எனக்கு சனிதசை யோகம் செய்யுமா? ராசிப்படி எட்டில் இருக்கும் பலன் அல்லது பாவகப்படி ஏழில் இருக்கும் பலன் இரண்டில் சனி எதைச் செய்யும்?

பதில்:

தசாநாதனுக்கு வீடு கொடுத்த கிரகம் உச்சம் பெற்றால் அந்த தசை நன்மைகளை செய்யும் என்பது ஜோதிடவிதி. அதேநேரத்தில் சனி ஒரு மனிதனுக்கு நன்மைகளைச் செய்ய வேண்டுமெனில் குருவோடு இணைவு, அல்லது குருவின் பார்வை என்பது போன்ற சுபத் தொடர்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.

உங்கள் ஜாதகத்தில் நவாம்சத்தில் சனி, குருவோடு இணைந்திருப்பது சிறப்பு. சனி தன்னுடைய சுய நட்சத்திரத்தில் அமர்ந்திருப்பதால் சொந்த ஊரை விட்டு தூர இடங்களில் உங்களை வேலை செய்ய வைத்து அதாவது வெளிநாடு, வெளிமாநிலம் போன்ற இடங்களுக்கு உங்களை அனுப்பி பொருள் தேட வைப்பார்.

ராசிப்படி ஒரு கிரகம் இருக்கின்ற ஆட்சி, உச்சம், பகை, நீசம் போன்ற கிரக வலுக்களை கணக்கிட்டுக் கொண்டு, பாவகத்தில் அந்த கிரகம் இருக்கும் வீட்டின் பலனைச் செய்வார் என்று பலன் சொல்ல வேண்டும். உங்கள் ஜாதகப்படி சனி பகவான் பாவகத்தில் ஏழாம் வீடான மிதுனத்தில் நட்பு நிலையில் இருந்தாலும், ஏழில் பகை வீட்டில் இருக்கின்ற நிலைபெற்று ஏழாமிடத்து பலன்களை செய்வார்.

எஸ். அம்ஸா, உடுமலைப்பேட்டை.

வி சனி சூ,பு சுக்
ராசி ரா
கே
செ,ல சந்


கேள்வி :

இவன் 10-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தான். தற்போது கல்வி கொஞ்சம் தடைப்படுகிறது. ராகு தசை நடப்பதினாலா? 12-ம் வகுப்பு படிக்கிறான். நல்ல மதிப்பெண் எடுப்பானா? வெளிநாடு செல்வான் என்று ஜோதிடர்கள் சொல்கிறார்கள். எந்தத்துறையில் வேலை பார்ப்பான்? மெக்கானிக்கல் என்ஜினீயர் அல்லது ஐ.டி. இதில் எந்த துறையில் சிறப்பாக வருவான்? படிப்பு அல்லது வேலைக்காக எதற்காக வெளிநாடு செல்வான்?

பதில்:

(துலாம் லக்னம், கன்னி ராசி. 1-ல் செவ். 6-ல் குரு. 7-ல் சனி. 8-ல் சூரி, புத. 9-ல் சுக். 10-ல் ராகு. 25.5.1999, மாலை 4.20, உடுமலைப்பேட்டை)

பள்ளிப்பருவத்தில் ராகுதசை நடந்தாலே குழந்தைகளுக்கு படிப்பைத் தவிர விளையாட்டு உள்ளிட்ட மற்ற விஷயங்களில் ஆர்வம் மேலோங்கி இருக்கும் என்பதை அடிக்கடி எழுதி வருகிறேன். இதுபோன்ற அமைப்புள்ள குழந்தைகளை பெற்றவர்கள்தான் அனுசரணையாக இருந்து கண்காணிக்க வேண்டும்.

உங்கள் மகன் ஜாதகத்தில் எட்டு, ஒன்பதிற்குடைய சுக்கிரனும், புதனும் பரிவர்த்தனையாகி இருப்பது சிறப்பான ஒரு அமைப்பு. இதன் மூலம் வெளிநாட்டைக் குறிக்கும் எட்டாம் அதிபதி சுபராகி ஆட்சி வலுப் பெறுகிறார். தூர இடங்களுக்குச் செல்வதைக் குறிக்கும் பனிரெண்டாம் பாவத்தை குரு பார்ப்பதும், எட்டு, பனிரெண்டுக்குடையவர்களே பரிவர்த்தனையாகி இருப்பதும் உங்கள் மகன் முழுவதும் வெளிநாட்டில்தான் இருப்பார் என்பதை உறுதிப்படுத்துகிறது.

ஜீவனாதிபதி பனிரெண்டில் அமர்ந்து, வெளிநாட்டைக் குறிக்கும் ஜலராசியான கடகத்தில் ராகு இருப்பதால் உங்கள் மகன் இந்தியாவில் படித்து முடித்து, வேலைக்காக வெளிநாடு சென்று அங்கேயே செட்டில் ஆவார். அடுத்து பனிரெண்டாம் இடத்தோடு சம்பந்தப்பட்ட குரு தசையும், அதனையடுத்து சர ராசியான மேஷத்தில் ராசிக்கு எட்டில் உள்ள சனி தசை நடக்க இருப்பதாலும் ஆயுள் முழுவதும் வெளிநாட்டில் இருப்பார்.

டி. வி. கிருஷ்ணன், படாளம்.

செவ் குரு சுக்
ராசி சூ
சந்
பு,கே
சனி


கேள்வி :

எனக்கு ஜோதிடம் தெரியாத போதும் பல்லாண்டு கால ஆராய்ச்சியின் பலனாக ஆழ்ந்த அனுபவத்துடன் தாங்கள் கூறும் விளக்கங்களைப் படித்து, மனத்திற்கு புத்துணர்வும், ஜோதிடத்தின் மீது நம்பிக்கையும் ஏற்படுகிறது . எனது பேரன் பி.இ. மூன்று ஆண்டுகள் மட்டும் படித்து விட்டு உடல்நிலை சரியில்லாததால் படிப்பை நிறுத்தி விட்டு வீட்டில் சும்மா இருந்து வருகிறார். முரட்டுசுபாவத்துடன் பேசுவதோடு எதிலும் நிரந்தரமில்லாமல் இருக்கிறார். 27 வயதாகும் அவர் இனிமேல் என்ன வேலை, தொழில் செய்வார் என்று கவலையாக இருக்கிறது. ஜோதிடத்தில் வேறு எதைக் கேட்பது என்றும் தெரியவில்லை. பேரனின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்பதை கூற விரும்புகிறேன்.

பதில்:

(கன்னி லக்னம், சிம்ம ராசி. 4-ல் சனி. 7-ல் செவ். 9-ல் குரு. 10-ல் சுக். 11-ல் சூரி. 12-ல் புத. கேது. 13.8.1988, காலை 8.58, பெங்களூர்)

பேரனின் ஜாதகத்தில் லக்னத்தை செவ்வாய், சனி இருவரும் பார்ப்பதால் கோபக்காரனாகவும் மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாதவனாகவும் இருப்பான். பத்தாமிடத்தை செவ்வாய், சனி பார்த்து 10-க்குடையவன் 12-ல் மறைந்ததால் சொந்தத்தொழில் செய்யக்கூடாது. வேலைக்கு போவதே நல்லது.

தற்போது விரையாதிபதி சூரிய தசை நடப்பதால் எதிலும் பிடிப்பின்றி இருப்பார். ஆயினும் லக்னத்தை குரு பார்ப்பதால் எப்படியும் நல்லபடியாக பிழைத்துக் கொள்வார். 31 வயதிற்குப் பிறகு நடக்க இருக்கும் சந்திரதசை முதல் வாழ்க்கை நன்றாக அமைந்து படிப்படியான முன்னேற்றம் இருக்கும். பேரனைப் பற்றி கவலைப்பட வேண்டும்.

என்னுடன் பிறந்தவர்கள் எத்தனை பேர் என்று சொல்ல முடியுமா?

எல். காசிநாதன், ஈரோடு.

கேள்வி :

நீங்கள் எழுதி வரும் ஜோதிடம் எனும் தேவரகசியம் தொடரில் சொல்லும் சூட்சுமங்கள் அனைத்தும் உண்மையில் தேவரகசியங்கள்தான். ஒவ்வொரு சூட்சுமங்களும் உண்மையில் பிரமிப்பை தருகின்றன. ஆனால் அடிக்கடி திருக்கணித பஞ்சாங்கம்தான் சரியானது. வாக்கிய பஞ்சாங்கம் தவறானது என்று நீங்கள் எழுதுவதை எங்கள் ஊர் ஜோதிடர் மறுக்கிறார். வாக்கியப்படி எழுதிய ஜாதகத்தைக் கொண்டு என்னுடன் பிறந்தவர்கள், என் தாய், தந்தையுடன் பிறந்தவர்கள் அனைவரையும் அவர் மிகத் துல்லியமாக சொல்வதோடு வாக்கியம்தான் சரி என்று சவால் விடுகிறார். இதற்கு நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்? என் ஜாதகத்தை அனுப்பி இருக்கிறேன். திருக்கணிதப்படி பலன் பார்க்கும் உங்களால் என்னுடன் பிறந்தவர்கள் மற்றும் என் தாய்-தந்தையுடன் பிறந்தவர்கள் எத்தனை பேர் என்று சொல்ல முடியுமா?

பதில்:

உங்கள் தந்தையுடன் பிறந்தவர்கள் 3 ஆண்கள், 3 பெண்கள். அதில் ஒரு பெண் இப்போது உயிரோடு இல்லை. உங்கள் தாயுடன் பிறந்தது ஒரே ஒரு பெண் மட்டும்தான். உங்களுக்கு தாய்மாமன் இல்லை. உங்கள் பெற்றோருக்கு நீங்கள் மொத்தம் 3 ஆண்மக்கள், உங்களுடன் பிறந்தது ஒரே ஒரு சகோதரி மட்டும். உங்கள் ஜாதகத்தின் ஓரத்தில் எழுதியுள்ள 1943, 1402, 1331 என்ற எண்களுக்கு என்ன அர்த்தம் என்று அந்த ஜோதிடரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.

No comments :

Post a Comment