Thursday, December 22, 2016

விருச்சிகம்: 2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

விருச்சிகம்:

கடந்த நான்கு வருடங்களாக விருச்சிக ராசிக்காரர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற வேதனைகளும், துயரங்களும் மிக அதிகம் என்பதை என்னுடைய ராசிபலன்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன்.

என்னிடம் ஜாதகம் பார்க்க வருபவர்களில் எண்பது சதவீதம் பேர் விருச்சிக ராசிக்காரர்கள் அல்லது விருச்சிக ராசியினை கணவன், மனைவி, அல்லது குழந்தைகளாக வீட்டினில் கொண்டவர்கள் என்பதையும் அடிக்கடி எழுதியிருக்கிறேன்.

கடந்த சில மாதங்களாக அலுவலகத்தில் நான் உள்ளே நுழைந்ததும் பார்க்கின்ற முதல் ஜாதகர் நிச்சயம் விருச்சிக ராசிக்காரராகத்தான் இருப்பார். நிறைய முறை இது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. உள்ளே நுழைந்ததுமே நீங்கள் விருச்சிகம்தானே என்று எத்தனையோ பேரைக் கேட்டிருக்கிறேன்.

பனிரெண்டு ராசிகளில் விருச்சிகத்திற்கு மட்டுமே ஏழரைச் சனியாக சனிபகவான் ஆரம்பிக்கும் போதே உச்சநிலையில் வருவதால் சனியின் ஆரம்பத்திலேயே கெடுபலன்கள் விருச்சிகத்திற்கு நடக்கத் தொடங்கி விடுகின்றன. இந்தமுறை விருச்சிகத்தினர் எதையும் சமாளிக்க முடியாமல் திணறித்தான் போனீர்கள்.

2017-ம் வருடம் விருச்சிகத்தின் வேதனைக்கு முடிவு கட்டும் வருடமாக இருக்கும். கடும் இழப்பு, நெருங்கியவரின் பிரிவு, துயரம், கடன், ஆரோக்கிய குறைவு, மன அழுத்தம், வேலையில், தொழிலில் சிக்கல், வழக்கு போன்ற எல்லாவிதமான கெடுபலன்களையும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த வருடத்துடன் அனைத்தும் ஒரு முடிவிற்கு வரும்.

வருட இறுதியில் அக்டோபர் மாதம் 26 ம் தேதி நடக்க இருக்கும் சனிப்பெயர்ச்சி மூலமாக உங்களுக்கு நன்மைகள் நடக்க வேண்டும் என்பதால் அதற்கு முன்னதாக வரும் ஏப்ரல் மாதத்திலிருந்தே உங்களைத் தொல்லைப் படுத்திக் கொண்டிருக்கும் அனைத்து பிரச்சினைகளும் குறைய ஆரம்பித்து வருட முடிவில் தீர்வு கிடைக்க ஆரம்பிக்கும்.

இதுவரை எதையும் சமாளிக்க முடியாமல் குழப்பத்திலும், கடுமையான மன அழுத்தத்திலும் இருக்கும் விருச்சிக ராசிக்காரர்கள் 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு எந்த பிரச்சினையாக இருந்தாலும் தைரியமாக எதிர் கொண்டு சிக்கல் இல்லாமல் தீர்த்துக் கொள்ள ஆரம்பிப்பீர்கள்.

புது வருடத்தின் ஆகஸ்ட் மாதம் 18 ம் தேதி நடக்க இருக்கும் ராகு-கேது பெயர்ச்சி இம்முறை ராகுபகவான் தனக்குப் பிடித்த வீடான கடகத்திற்குப் பெயர்ச்சியாவதும், கேது நன்மைகளைச் செய்யும் வீடான மூன்றாமிடத்திற்கு மாறுவதும் நல்ல பலன்களைத் தரும் என்பதால் வருடத்தின் பிற்பகுதியில் இருந்தே உங்களின் கஷ்டங்கள் குறைய ஆரம்பிக்கும்.

செப்டம்பர் 12 ம் தேதி மாதம் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான பலன்களை தர இயலாது போனாலும் வருடத்தின் முடிவில் நடக்க இருக்கும் சனிப்பெயர்ச்சியின் மூலம் ஜென்மச்சனி விலகுவதால் உங்களுக்கு இதுவரை இருந்து வந்த அத்தனை சிக்கல்களும் இந்த வருட பிற்பகுதியில் இருந்தே விலகும் என்பது உறுதி.

உங்களுடைய தொழில், வேலை, வியாபாரம் போன்ற விஷயங்களில் நல்ல வளர்ச்சி இருக்கும் வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் இதுவரை இருந்து வந்த மந்த நிலை விலகி தொழில் வியாபாரம் மிகவும் சிறப்பாக நடைபெறும். பொருட்கள் சேதமின்றி மீதமுமின்றி லாபத்திற்கு விற்பனையாகும்.

அதேநேரத்தில் வியாபாரிகள் தொழிலிடத்திலேயே இருந்து கவனிக்க வேண்டியது அவசியம். வேலைக்காரர்களை நம்பி கடையையோ தொழில் ஸ்தாபனத்தையோ ஒப்படைத்தால் வேலை செய்பவர்களின் ஆதிக்கம் மேலோங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

பெரிய அளவில் பணம் கொண்டு போகும் நேரங்களில் கவனமாக இருக்க வேண்டும். பெரிய தொகை பரிமாற்றங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். அனைத்திற்கும் வேலை செய்பவர்களை நம்பாமல் கவனமாக இருப்பது நல்லது. ஜென்மச்சனி இந்த வருடத்தின் இறுதியில்தான் விலகுகிறது என்பதை கவனத்தில் கொள்வது நல்லது.

புதிதாக வேலை தேடிகொண்டிருக்கும் இளைய பருவத்தினருக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கும். ஒருசிலருக்கு வெளியூரிலோ வெளிமாநிலத்திலோ தூரதேசங்களிலோ தங்கி வேலை செய்ய கூடிய அமைப்புகள் உருவாகும். இருக்கும் இடத்தில் இருந்து தொலைதூரம் செல்லும் படியான மாற்றங்கள் சிலருக்கு உருவாகும்.

பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள், கலைத்துறையில் இருப்பவர்கள், அன்றாடத் தொழில் செய்பவர்களுக்கு இனிமேல் பிரச்னைகள் எதுவும் இருக்காது. விவசாயிகளுக்கு இது நன்மை தரும் காலம். விளைந்த பயிருக்கு நியாயமான விலை கிடைக்கும். பணப்பயிர் மற்றும் எண்ணை வித்துகள் போன்றவை பயிரிட்டவர்களுக்கு லாபம் வரும்.

தொழிலதிபர்கள், கலைஞர்கள், பத்திரிகை மற்றும் ஊடக துறையினர், இயக்கும் தொழில் செய்பவர்கள், தினசரி சம்பளம் பெறுபவர்கள் உள்ளிட்ட சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரும் முன்னேற்றம் காணுவீர்கள். குறிப்பாக காண்ட்ராக்டர்கள், நிர்வாகப்பணி சம்பந்தப்பட்டவர்கள், ஒரு துறைக்கோ அல்லது நிறுவனத்திற்கோ தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், தந்தையின் தொழிலைச் செய்பவர்கள், நெருப்பு சம்பந்தப்பட்டவர்கள் போன்றோருக்கு இந்த வருடம் நல்ல பலன்களைத் தரும்.

அரசு தனியார்துறைகளில் பணிபுரிபவர்கள் சம்பளம் தவிர்த்த மேல் வரும்படிகளுக்கு அதிகமாக ஆசைப்பட வேண்டாம். அதனால் சிக்கல்கள் வரலாம். முறைகேடான வருமானங்கள் வரும்போது விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம். அவற்றால் வேறு விதமான பிரச்னைகள் வரும்.

பணியிடங்களில் மேலதிகாரி சொல்வதைக் கேட்டு நடப்பது நல்லது. எவரிடமும் வீண் வாக்குவாதம் செய்யாதீர்கள். நண்பர்களும் விரோதியாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த காலகட்டத்தில் சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதால் யாரையுமே பகைத்துக் கொள்ள வேண்டாம்.

இதுவரை செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு மாற முயற்சி எடுத்துக் கொண்டிருப்பவர்கள் அதைக் கவனமாகச் செய்யுங்கள். பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகமாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. வேலை செய்யும் இடத்தில் முதலாளியாலோ அதிகாரியாலோ மனக் கசப்புக்கள் வருவதற்கும் சங்கடங்கள் தோன்றுவதற்கும் வாய்ப்பு இருப்பதால் எதிலும் எச்சரிக்கையும் கவனமுமாக இருந்து பொறுத்துப் போவது நல்லது.

சில அத்தியாவசியத் தேவைகளுக்கு கடன் வாங்கியே ஆகவேண்டியது இருக்கும். எவ்வளவு பெரிய தலை போகிற பிரச்னையாக இருந்தாலும் கந்து வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். கடன் வாங்குவதால் பிரச்சனைகள் தீராமல் இன்னும் அதிகமாகவே செய்யும். ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன் வாங்குவது சட்டியிலிருந்து தப்பித்து அடுப்பில் விழுந்த கதை ஆகிவிடும்.

சொந்தத் தொழில் வைத்திருப்பவர்கள் அதனை விரிவாக்கம் செய்வதற்கான முயற்சிகளை செய்வீர்கள். இதுவரை தாமதமாகி வந்த வங்கிக்கடன் தற்போது உடனடியாக ஓகே செய்யப்படும். இதுவரை உங்களிடம் முகம் கொடுத்தும் பேசாத வங்கி அதிகாரி தற்போது உபசரித்து கடன் தருவார். ஆடம்பரச் செலவுகளுக்கு கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. கிரெடிட்கார்டு உபயோகப் படுத்துவதில் கவனமாக இருப்பது நன்மையைத் தரும்.

யாரிடமும் தேவையற்ற வீண் வாக்குவாதம் வைத்துக் கொள்ள வேண்டாம். தேவையற்ற பிரச்னைகளில் தலையிட வேண்டாம். யாரையும் நம்பி கையெழுத்து போடுவதோ எவருக்கும் ஜாமீன் கொடுப்பதோ கூடாது.

நடுத்தர வயதை எட்டுபவர்கள் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டியது அவசியம். சர்க்கரை ரத்தஅழுத்தம் போன்றவைகள் கண்டுபிடிக்கப்படும் நேரம் இது என்பதால் உடல்நல விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் சிறு சுகக்குறைவு என்றாலும் மருத்துவரை உடனே அணுகுவது நல்லது. முடிந்தால் ஒரு முழு உடல் பரிசோதனை கூட செய்து கொள்ளலாம்.

நேர்மையற்ற செயல்கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான தொழில்கள் போன்றவற்றில் தற்போது ஆர்வம் காட்டாதீர்கள். அவற்றால் சிக்கல்கள் வரலாம். போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். பங்குச் சந்தை போன்ற ஊக வணிகங்கள் இப்போது கை கொடுக்காது. நஷ்டம் வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் ஷேர் மார்க்கட்டில் மிகவும் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கல்களில் மிகவும் கவனமாக நடந்து கொள்வது நல்லது.

அடிதடி சண்டை போன்றவைகளால் கோர்ட் காவல்துறை போன்ற இடங்களுக்கு அலைய வேண்டியது ஏற்படக்கூடும் என்பதால் எதிலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏற்கனவே வழக்கு விவகாரங்கள் இருந்தால் அவற்றை முடிப்பதற்கும் அவசரப்பட வேண்டாம். தீர்ப்பு வரும் நிலை இருந்தால் அவற்றை தள்ளி வைக்க முயற்சிப்பது நல்லது.

பெண்களுக்கு இந்த வருடம் நல்லபலன்கள்தான் அதிகம் இருக்கும். குடும்பத் தலைவியாக இருக்கும் பெண்களுக்கு அதிகமாக நன்மைகள் நடைபெறும். குடும்பத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதால் இருக்கும் சேமிப்பு செலவழிந்து உங்கள் பாடு திண்டாட்டமாகலாம். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். இருவரும் ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து போவீர்கள்.

எனவே எப்படிப் பார்த்தாலும் உங்களின் எதிர்கால நன்மைக்கு அச்சாரம் போடும் வருடமாக புது வருடம் அமையும் என்பது உறுதி. வருடத்தின் இறுதியில் நடக்க இருக்கும் சனிப்பெயர்ச்சியில் இருந்து வாழ்வில் வசந்தம் காண்பீர்கள்.

No comments :

Post a Comment