Thursday, December 22, 2016

ரிஷபம்: 2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு 2017 வருடம் நல்ல பலன்களையும், பண வரவுகளையும், தொழில் முன்னேற்றங்களையும் கொடுக்கும் வருடமாக இருக்கும். கடந்த சில வருடங்களாக கோட்சார ரீதியில் நல்ல பலன்கள் நடக்காத ரிஷபத்தினருக்கு பிறக்க இருக்கும் புத்தாண்டு சிறந்த ஆண்டாக இருக்கும்.

இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 18-ம் நாள் நடக்க இருக்கும் ராகு-கேது பெயர்ச்சியினால் ராகுபகவான் தற்போது இருக்கும் நான்காமிடத்தில் இருந்து மாறி மூன்றாமிடத்திற்கு வருவது உங்களுக்கு யோகம் தரும் அமைப்பு.

ஒரு சிறப்பு அம்சமாக ராகுவிற்கு மிகவும் பிடித்த வீடான கடகத்தில் அவர் நிலை கொள்கிறார் என்பதால் இந்த வருடம் முழுவதுமே உங்களுக்கு சிறந்த பலன்களும், கேட்கும் இடங்களில் சரியான நேரத்தில் உதவிகள் கிடைத்தலும், அந்தஸ்து, கௌரவம் உயர்தலும் இருக்கும்.

இளம் பருவத்து ரிஷப ராசிக்காரர்களுக்கு வருடத்தின் பிற்பகுதியில் வெளிநாடு சம்பந்தப்பட்ட வேலைகள் கிடைப்பதும், வெளிமாநிலத்திற்கு வேலை விஷயமாக செல்வதும் அதன் மூலம் நற்பயன்களும் உண்டு.

சிலருக்கு தொழில் விஷயமாக இஸ்லாமிய நாடுகளுக்குச் செல்வதும், கிறிஸ்துவ, இஸ்லாமிய நண்பர்கள் பங்குதாரர்கள் மூலமாக நன்மைகள் நடப்பதும் உண்டு. இதுவே ஜாதகர் இஸ்லாமியர் அல்லது கிறித்துவராக இருந்தால் அவருக்கு இந்து மத நண்பர்கள் மூலம் மேன்மைகளும் உதவிகளும் இருக்கும்.

அதேநேரத்தில் தற்போது கண்டகச்சனி எனப்படும் ஏழாமிடத்தில் அமர்ந்திருக்கும் சனிபகவான் வருடத்தின் இறுதியான அக்டோபர் மாதம் 26- ம் நாள் எட்டாமிடத்திற்கு மாறி அஷ்டமச்சனியாக மாறப்போவதால், அடுத்த வருடம் உங்களுடைய வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் சிக்கல்கள் தோன்ற ஆரம்பிக்கும். பணவரவு குறையும். ஆகவே ஏதேனும் புதிய தொழில்கள் ஆரம்பிப்பதற்கு இந்த வருடம் ஏற்றதல்ல.

அஷ்டமச் சனிக்கு முன்பாக சனிபகவான் நம்முடைய மனதைக் குழப்பி புதிய முயற்சிகளில் இறங்க வைத்து அதில் சிக்கல்களை உருவாக்கி தொழிலை நடத்தவும் முடியாமல், விடவும் முடியாமல் புலி வாலைப் பிடித்தது போன்ற ஒரு நிலையை உருவாக்குவார் என்பதால் இந்த வருடம் அதிக முதலீடு செய்து புதிய முயற்சிகளை செய்வதை தவிர்ப்பது நல்லது.

மேலும் ஏதேனும் ஒரு சொத்தை விற்றோ, அடமானம் வைத்தோ, கொலட்ரால் கொடுத்தோ புதிய தொழில் எதுவும் ஆரம்பிக்க வேண்டாம். அதேபோல உங்களின் சேமிப்புகளையும் ரிஸ்க்கான துறைகளில் முதலீடு செய்ய வேண்டாம்.

என்னடா... இந்த வருடத்திற்கு பலன் சொல்லச் சொன்னால் குருஜி அடுத்த வருடத்திற்கு பலன் சொல்லி கொண்டிருக்கிறாரே என்று நினைப்பீர்களேயானால், ஜோதிடம் என்பதே நாளை வருவதை ஓரளவு எடுத்து சொல்லி தற்காத்துக் கொள்ள அறிவுறுத்துவதுதான் என்பதால் அடுத்த வருடம் என்ன நடக்கும் என்பதையும் முன்கூட்டியே சொல்ல வேண்டியதும் ஒரு ஜோதிடரின் கடமைதான்.

இந்த ஒரு பலனை தவிர்த்து பிறக்க போகும் புத்தாண்டு உங்களுக்கு நல்ல அமைப்புகளையே தரும். வருடத்தின் பெரும்பகுதி நாட்கள் செப்டம்பர் மாதம் 12 ம் தேதிவரை குருபகவான் உங்களுக்கு நன்மைகளைத் தரும் அமைப்பில் இருக்கிறார் என்பதால் அவர் மூலமும் உங்களுக்கு நல்லவைகள் மட்டுமே நடக்கும்.

உங்கள் உடலும் மனமும் இந்த வருடம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். முகத்தில் எந்நேரமும் சந்தோஷம் தெரியும். இதுவரை மனதில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். சென்ற காலங்களில் உங்களை வாட்டி வதைத்த சோம்பல், மந்தம், விரக்தி மற்றும் தோல்வி மனப்பான்மைகள் இனிமேல் உங்களிடம் நெருங்காது.

அனைத்து விஷயங்களிலும் இருந்த வந்த தொல்லைகள் தடைகள் தாமதங்கள் விலகி நல்லவைகள் இப்போது நடக்கும். பிறந்த ஜாதகத்தில் நல்ல யோக தசா புக்திகள் நடந்து கொண்டு இருந்தால் உங்களில் சிலர் சாதனைகளை படைத்து புகழின் உச்சிக்கு செல்வீர்கள் என்பது உறுதி.

இதுவரை வேலை, வியாபாரம், தொழில் போன்ற ஜீவன அமைப்புகளில் இருந்து வந்த போட்டிகளும், எதிர்ப்புகளும், பொறாமைகளும், தடைகளும் விலகி அனைத்தும் உங்களுக்கு நன்மை தரும் விஷயங்களாக மாறும். பணிபுரியும் இடங்களில் இதுவரை இருந்து வந்த நிம்மதியற்ற சூழல் இனிமேல் இருக்காது.

இளைய பருவத்தினருக்கு நல்லவேலை கிடைத்து திருமணமும் நடக்கும். காதலிப்பவர்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் நீங்கள் நினைத்தவரை மணமுடிப்பீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு. மணவாழ்வில் பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு அது தீரும். சிலருக்கு வேலை மாற்றம் நடந்து வெளியூரில் வேலை அமையும்.

சுயதொழில் செய்வோருக்கு எடுக்கும் முயற்சிகள் கை கொடுக்கும். தொழிலில் இருந்த முட்டுக்கட்டைகளும் அதிருப்தியான நிலைமையும் மாறி தொழில் சூடு பிடிக்கும். வேலை செய்பவர்களும் பங்குதாரர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரிகளுக்கு இது மிகுந்த லாபங்கள் வரக்கூடிய ஒரு காலகட்டமாக அமையும். எல்லாவிதமான வியாபாரமும் இப்போது கை கொடுக்கும்.

சில தொழில்முனைவோர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் கிடைத்து அமோகமான தொழில் வெற்றியைப் பெற்று பெரும்பணக்காரர்கள் ஆவதற்கு தற்போது வாய்ப்பு இருக்கிறது. விடா முயற்சியுடன் எதையும் செய்வதன் மூலம் கடவுள்அருள் உங்கள் பக்கம் இருக்கும் என்பது நிச்சயம்.

அரசு வேலை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. மத்திய மாநில அரசுகளின் முதன்மைத் தேர்வுகளான ஐ.ஏ.எஸ், குரூப்ஒன் போன்ற பதவிகளுக்கு நல்லமுறையில் தேர்வுகளை எழுத முடியும். ஏற்கனவே தேர்வுகளை எழுதி முடிவுகளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.

வருடம் முழுவதும் உங்களின் பொருளாதார நிலை மிகவும் மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும். தொட்டது துலங்கும். இதுவரை வருமானம் இன்றி பணப்பற்றாக்குறையால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பணப்பிரச்னை இல்லாத அளவுக்கு நல்ல வருமானம் இருக்கும்.

தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு ஆலயப்பணி செய்யும் பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாட்களாக போக முடியாமல் தள்ளிப் போயிருந்த தீர்த்த யாத்திரை இப்போது போக முடியும். காசி கயா பத்ரிநாத் கேதார்நாத் போன்ற வடமாநில புண்ணியத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு இப்போது கிடைக்கும்.

ஞானிகளின் தரிசனம் கிடைக்கும். மகாபெரியவரின் அதிஷ்டானம் போன்ற மிகப்பெரும் புனித இடங்களை வழிபடும் பாக்கியம் உண்டாகும். தள்ளிப் போயிருந்த நேர்த்திக்கடன்களை இப்போது நிறைவேற்ற முடியும். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்வீர்கள்.

தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள் நன்றாக இருக்கும். இளைஞர்களுக்கு நீங்கள் விரும்பிக் கேட்கும் ஒரு பொருளை உங்கள் அப்பா வாங்கித் தருவார். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. இதுவரை இருந்துவந்த பங்காளிப் பிரச்னை தீரும். பூர்வீக சொத்துக்களில் உங்கள் பாகம் சேதமில்லாமல் உங்களுக்கு கிடைக்கும். பெரியப்பா சித்தப்பாக்கள் மற்றும் தந்தையுடன் பிறந்த அத்தைகளால் லாபம் இருக்கும்.

மூத்த சகோதரர், சகோதரிகளின் உறவு மேம்படும். அவர்களால் உதவிகள் இருக்கும். அண்ணன் தம்பி அக்கா தங்கை உறவுகள் பலப்படும். வயதில் மூத்தவர்களுக்கு மங்களகரமான நிகழ்ச்சிகள் வீட்டில் நடைபெறும். இதுவரை திருமணம் தாமதமான அக்கா அண்ணன் போன்றவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணமாகும். அதிகம் பெண்களுடன் பிறந்தவர்கள் தங்கள் சகோதரிகளின் வீட்டு சுபகாரியங்களுக்கு செலவு செய்ய வேண்டியிருக்கும்.

குறிப்பிட்ட சிலருக்கு இப்போது இருக்கும் வாகனத்தை விட நல்ல வாகனம் அமையும். வாகன மாற்றம் செய்வீர்கள். அருமையான புதிய வீடு கட்டுவீர்கள். பெருநகரங்களில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் சொந்தமாக டீலக்ஸ் பிளாட் அமையும்.

பொதுவாழ்வில் உள்ள அரசியல்வாதிகளுக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். ஊடகம் பத்திரிக்கை போன்ற துறையில் இருப்பவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது வசந்த காலமாகும். கலைத்துறையினர் இதுவரை இல்லாத நல்ல திருப்பங்களைக் காண்பீர்கள். அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு ‘இதர வருமானங்கள்’ சிறப்பாக சொல்லிக் கொள்ளும்படி இருக்கும்.

பெண்களுக்கு இந்த வருடம் நல்ல பலன்களை அதிகம் தரும். இதுவரை உங்களை புரிந்துக் கொள்ளாத கணவர் இனிமேல் உங்களை புரிந்து கொண்டு, உங்கள் மனம் போல் நடந்து கொள்ள ஆரம்பிப்பார். பிள்ளைகள் உங்களின் கஷ்டங்களைப் புரிந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடங்களில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். உங்களின் அந்தஸ்து உயரும்.

கடன்கள் கட்டுக்குள் இருக்கும். சிலர் புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள். சிலருக்கு நிரந்தரமாக கடன்கள் அடைந்து நிம்மதி கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். இதுவரை மருத்துவத்திற்கு கட்டுப்படாமல் இருந்து வந்த நோய்கள் தீரும்.

ரிஷப ராசிக்கு இது எதிர்கால முன்னேற்றத்திற்கு அடித்தளம் போடும் காலகட்டமாக அமையும் என்பதால் இப்போது ஏற்படும் நன்மைகளால் உங்கள் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்வீர்கள்.

No comments :

Post a Comment