Thursday, September 1, 2016

ரிஷபம்: 2016 செப்டம்பர் மாத பலன்கள்

ரிஷபம்:

ரிஷபநாதன் சுக்கிரன் மாத ஆரம்பத்தில் பலவீனமான நிலையில் இருப்பதால் இந்த மாத ஆரம்பத்தில் சிலவிஷயங்கள் உங்கள் கையை மீறி நடக்கும். ஆனால் பிற்பகுதியில் சுக்கிரன் பலம் பெறுவதால் அனைத்து நல்ல விஷயங்களும் இந்தமாதம் உங்களுக்கு உண்டு. ரிஷபத்திற்கு இப்போது கோட்சாரத்தில் கிரகநிலைகள் நன்றாக இருக்கின்றன. நல்ல சந்தர்ப்பங்கள் வாழ்க்கையில் ஓரிரு முறைதான் வந்து கதவை தட்டும் என்பதால் கிடைக்கும் வாய்ப்பை நழுவ விடாமல் இந்தமாதம் சுறுசுறுப்புடன் செயலாற்ற வேண்டியது அவசியம்.

சுக்கிரனின் பலவீனத்தால் ஏதேனும் ஒரு விஷயத்தில் பதற்றப்பட்டு முடிவெடுத்து அது தவறாகி போவதற்கு வாய்ப்பு இருப்பதால் எங்கும், எதிலும் நிதானத்துடன் இருங்கள். பொதுவாக, அடிக்கடி நான் எழுதுவதுபோல் ரிஷப ராசிக்காரர்களைக் கெடுப்பதற்கு வெளியில் இருந்து ஆள் வரவேண்டாம். உங்களுக்கு நீங்களேதான் எதிரி என்பதால் நீங்களே ஏதாவது தவறாக முடிவெடுத்து வாய்ப்புகளை நழுவ விடுவீர்கள். மாதத்தின் முற்பகுதியில் பிள்ளைகளால் செலவுகளும், பிற்பகுதியில் அவர்கள் மூலம் நன்மைகளும் இருக்கும். கலைத்துறையினருக்கு சற்று சுணக்கமான மாதம்தான் என்றாலும், உங்களுடைய கடின உழைப்பு என்றுமே வீண் போகாது. அரசுத் துறையினர் இந்த மாதம் நல்ல திருப்புமுனைகளைச் சந்திப்பீர்கள்.

ஏழாமிடத்தில் அமர்ந்து கணவன்மனைவி இடையே கருத்து வேற்றுமைகளையும், குடும்பத்தில் சில தேவையற்ற பிரச்னைகளையும் செய்து கொண்டு இருக்கும் சனியை விட்டு இந்தமாதம் செவ்வாய் விலகுவதால் இனிமேல் குடும்பத்தில் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போங்கள். மனைவி பேச்சைக் கேட்பதால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது. உங்கள் கௌரவமும் பாழாகாது. 

3,4,5,8,9,17,18,19,25,26 ஆகிய நாட்களில் பணம் வரும். 10-ந்தேதி காலை 7 மணி முதல் 12-ந்தேதி மாலை 4 மணி வரை சந்திராஷ்டம தினங்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முதலீடுகளோ, முயற்சிகளோ செய்வதை தள்ளி வைப்பது நல்லது. மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் யாரிடமும் சண்டையோ, வீண் வாக்கு வாதமோ செய்ய வேண்டாம்.

No comments :

Post a Comment