Tuesday, July 19, 2016

தனுசு: 2016 குருப்பெயர்ச்சி பலன்கள்

தனுசு:

தனுசு ராசிக்கு இதுவரை ஒன்பதாமிடத்தில் இருந்து வந்த குருபகவான் தற்போது பத்தாம் இடத்திற்கு மாறுகிறார். நமது மூலநூல்களில் ஒன்பதாமிடம் சிறப்பான இடமாகவும், பத்தாமிடம் கேந்திர வீடு என்பதால் குருபகவானுக்கு சுமாரான இடமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

பத்தில் குரு பதவியைப் பறிப்பான் என்பது கோட்சாரக் குருவிற்கு சொல்லப்படும் ஒரு பழமொழி. ஆயினும் குருபகவான் உங்கள் ராசிநாதன் என்பதால் உங்களுக்கு இது பொருந்தாது. அதேநேரத்தில் தற்போது தனுசு ராசிக்கு ஏழரைச் சனியின் முதல் கட்டம் நடந்து வருவதால் தொழில் வேலை வியாபாரம் போன்ற நிலைகளில் உங்களுக்கு அலைச்சல்கள் இருக்கும்.

இதுவரை ஏழரைச்சனியின் கடுமைகளை உணராமல் இருக்கும் தனுசு ராசிக்காரர்களுக்கு அடுத்தவருடம் முதல் பாதிப்புக்கள் இருக்கும் என்பதால் இப்போதிலிருந்தே வேலை தொழில் வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் கண்ணும் கருத்துமாக இருப்பது நல்லது.

அரசு தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் அனைத்து விஷயங்களிலும் கவனமுடன் வேலை செய்ய வேண்டியது அவசியம். இந்த காலகட்டத்தில் உடன் பணிபுரிபவர்கள் எவரையும் நம்ப வேண்டாம். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் உங்களுக்கு கருத்து வேற்றுமை ஏற்படலாம். அவர்களுடைய ஒத்துழைப்பு கிடைப்பது கடினம்.

மேலதிகாரிகளிடம் மோதல் வேண்டாம். வேலை செய்யும் இடங்களில் பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அந்தரங்கமான விஷயங்களை அனாவசியமாக யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். உயரதிகாரி சொல்வதைக் கேட்டு நடப்பது நல்லது.

சம்பளம் தவிர்த்த ‘இதர’ வருமானங்கள் வரும் துறைகளில் இருப்பவர்கள் எங்கும் எதிலும் கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டியது அவசியம். எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியமாகவோ கவனக்குறைவாகவோ இருக்க வேண்டாம். எவ்வளவு நெருங்கியவராக இருந்தாலும் அடுத்தவர்களை நம்புவது இந்த குருப்பெயர்ச்சியில் சரிபட்டு வராது.

சொந்தத் தொழில் செய்பவர்கள் பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் அதிக கவனமுடன் இருங்கள். வியாபாரிகள் தங்களிடம் வேலை செய்பவர்களின் மேல் ஒரு கண் வைத்திருங்கள். பொருட்கள் தொலையவோ, வீணாகவோ, திருடு போவதற்கோ வாய்ப்பு இருக்கிறது.

சுய தொழில் செய்பவர்களுக்கு நெருக்கடிகள் வரும். அரசாங்க உதவிகள் கிடைப்பது கடினம். தொழில் சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்து போடும்போது ஒன்றுக்கு இரண்டு முறை இதைச் செய்து முடிக்க முடியுமா என்று யோசனை செய்வது நல்லது.

சம்பந்தமில்லாத இடத்தில் இருந்து தொழிலுக்கு இடையூறுகள் வரக்கூடும். வியாபாரிகள் கொள்முதல் மற்றும் கடன் கொடுத்து வாங்குதல் போன்ற அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கடன் கொடுத்தால் திரும்பி வராது. அதே நேரத்தில் நீங்கள் கடன் வாங்கிய இடத்தில் இருந்து உங்களுக்கு நெருக்கடி இருக்கும்.

பெண்களுக்கு இது வேலைச்சுமையைத் தரும் காலமாகும். அலுவலகத்தில் ஒரு முட்டாள்தனமான மேலதிகாரியோடு நீங்கள் போராட வேண்டியிருக்கலாம். அங்கே அப்படி தாங்க முடியாத பணிகளை சமாளித்து விட்டு வீட்டிற்கு வந்தால் வீட்டிலும் நீங்கள்தான் அடி முதல் நுனிவரை அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டியது இருக்கும்.

கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்பீர்கள். குழந்தைகளால் படிப்புச் செலவுகள் போன்றவைகள் இருந்தாலும் அவர்களைப் பற்றிய கவலை இருக்காது. குடும்பத்தில் பொருட் சேர்க்கை இருக்கும். வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவீர்கள்.

இளைய பருவத்தினர் உங்களுக்கு பொருத்தமான வேலை தேடி அலைவீர்கள். சின்ன வேலை கிடைத்தாலும் அதை பிடித்துக் கொண்டு அதிலேயே முன்னேறி மேலே போவது புத்திசாலித்தனம் என்பதால் கிடைக்கும் எந்த வேலையையும் அலட்சியப் படுத்த வேண்டாம்.

சிலருக்கு காதல் அனுபவங்கள் இந்த வருடம் ஏற்படலாம். அதனால் சில கசப்பான அனுபவங்களும் படிப்பினைகளும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. லஞ்சம் கொடுத்து வேலை வாங்குவது போன்ற முறைகேடான வழிகளில் செல்லும்போது உஷாராக இருங்கள். வேலை வாங்கித் தருவதாக சொல்பவரிடம் முன்கூட்டியே நம்பி பணம் தர வேண்டாம். ஏமாறுவதற்கு சந்தர்ப்பம் இருக்கிறது.

பத்தாமிடத்திற்கு மாறும் குருபகவான் தனது புனிதப்பார்வையால் இரண்டு நான்கு ஆறு ஆகிய இடங்களைப் பார்த்து பலப்படுத்துவார் என்பதால் மேற்கண்ட பாவங்களின் தன்மைகள் பலப்படும்.

குரு பகவானின் பார்வை இரண்டாமிடமான தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் விழுவதால் குடும்பத்தில் சந்தோஷமும் மங்கள நிகழ்ச்சிகளும் இருக்கும். தனகாரகனான குரு தனஸ்தானத்தை பார்ப்பதால் அந்த பாவம் வலுப் பெறுகிறது. இதனால் தனலாபம் உண்டாகும். பணத்திற்கு பஞ்சம் இருக்காது. யார் வீட்டு பணமாக இருந்தாலும் உங்கள் கையில் தாராளமாக நடமாடும் என்பதால் பணச்சிக்கல் வராது. கொடுக்கும் வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். உங்கள் வாக்குப் பலிக்கும்.

குருவின் நான்காமிடப் பார்வையால் நீண்ட நாட்களாக வீடு கட்ட வேண்டும் அல்லது வீடு வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தவர்களுக்கு எல்லா அமைப்புகளும் கூடி வந்து உங்களின் வீட்டுக்கனவு நனவாகும். அம்மா வழி உறவினர்களுடன் நல்ல சுமுகமான உறவு இருக்கும். அவர்களால் ஆதாயம் வரும். பூர்வீக தாயார்வழி சொத்துகள் தற்போது கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இருக்கும் பழைய வாகனத்தை மாற்றி புதியதாக வாங்குவீர்கள். வாகனம் இல்லாதவர்களுக்கு வாகனயோகம் இப்போது உண்டு. குருபகவான் நான்காமிடத்தை பார்க்கப் போவதால் மாணவர்களுக்கு படிப்பு நன்கு வரும். தெரிந்த கேள்விதான் கேட்பார்கள் என்பதால் பரீட்சை எழுதுவற்கு சுலபமாக இருக்கும். உயர்கல்வி கற்பதற்கு இருந்து வந்த தடைகள் நீங்கி மேல்படிப்பு படிக்க முடியும்.

குருவின் பார்வை ஆறாமிடத்தில் பதிவதால் தொழில் விரிவாக்கத்திற்காகவோ அல்லது குடும்பத்தில் நடக்க இருக்கும் சுப காரியங்களுக்காகவோ கடன் வாங்க நேரிடும். ஏற்கனவே இருக்கும் கடனை அடைக்க புதிய கடன் வாங்குவீர்கள். ஹவுசிங் லோன், பெர்சனல் லோன் ஏற்படலாம். எந்த சூழ்நிலையிலும் மீட்டர் வட்டி போன்ற கந்து வட்டி வாங்க வேண்டாம். பின்னால் சிக்கல்கள் வரும்.

குருபகவானின் ஆறாமிடப் பார்வையால் மறைமுக எதிரிகள் உருவாகக் கூடும். நெருங்கியவர்களே உங்களுக்கு எதிராகத் திரும்ப வாய்ப்பு இருப்பதால் அனைத்திலும் கவனமாக இருங்கள். உறவினர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்கள், சிறு சண்டைகள் வரலாம்.

பூர்வீகச் சொத்தில் தகராறுகளோ வழக்கு விவகாரங்களோ ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. வீட்டுப் பிரச்னைகளாலும் கோர்ட் போலீஸ் என அலைய நேரிடலாம். ஏற்கனவே நீதிமன்றங்களில் வழக்கு இருப்பவர்கள் தீர்ப்பு வரும் நாள் பக்கத்தில் இருந்தால் அதைக் கொஞ்சம் தள்ளிப் போட முயற்சிப்பது நல்லது. போலீஸ், கோர்ட் வழக்கு போன்றவை இன்னும் சில மாதங்களுக்கு உங்களுக்கு சாதகமாக இருக்காது.

அதிகமான அலைச்சல்களாலும் வேலைப்பளுவாலும் உடல்நலம் பாதிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்ற உடல்நலக் கோளாறுகள் இப்போது வரலாம்.

வயதானவர்கள் உடல் நலத்தில் கண்டிப்பாக அக்கறை வைக்க வேண்டும். இந்த வருடம் உங்களுக்கு மறதியும், யாருக்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்வதாக வாக்குக் கொடுத்தோம் என்பதும் மறந்து போய், வேறு எதையாவது செய்து அதனால் பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

கலைஞர்கள் மற்றும் பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு சில நல்ல முன்னேற்ற வாய்ப்புக்கள் கிடைக்கும். ஏதேனும் ஒரு செயல் அல்லது நிகழ்ச்சியால் நீங்கள் புகழ் அடைவீர்கள். யூகவணிகம் பங்குச்சந்தை ரேஸ் லாட்டரி போன்றவைகளில் அதிகமாக ஈடுபாடு காட்டாமல் இருப்பது நல்லது. இந்த குருப்பெயர்ச்சியால் மேற்படி இனங்களில் வருமானம் வராமல் விரயங்களும் நஷ்டங்களும்தான் இருக்கும்.

யாருக்காவது பரிதாபப்பட்டு உதவி செய்து அதனால் நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் அமைப்பு இருப்பதால் யாருக்கும் எதற்காகவும் ஜாமீன் போட வேண்டாம். யாருக்கும் எதுவும் செய்து தருவதாக தேவையில்லாத வாக்குறுதி கொடுக்க வேண்டாம். சகோதர சகோதரிகளுக்கு இந்த வருடம் உதவி செய்யும்படி இருக்கும். சகோதரிகளால் செலவு உண்டு. என்னதான் செய்தாலும் அண்ணன் எனக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று தங்கைகள் கூறுவதையும் கேட்க வேண்டியிருக்கும்.

பரிகாரங்கள்:

ஏழரைச்சனி நடைபெறுவதால் சனிக்கிழமைதோறும் அருகிலுள்ள பழமையான சிவன் கோவிலில் அருள்புரியும் காலபைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதும், வியாழக்கிழமையன்று தக்ஷிணாமூர்த்தி வழிபாடு செய்வதும் நல்லது. சென்னையில் இருப்பவர்கள் நங்கநல்லூர் மற்றும் ஆழ்வார்ப்பேட்டை ஆஞ்சநேயர் ஆலயங்களுக்கு சென்று அவரின் அருள் பெறுவதும் துன்பங்களைக் குறைக்கும்.

No comments :

Post a Comment