Monday, March 28, 2016

விருச்சிகம் : 2016 – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இதுவரை இருந்து வந்த துன்பங்களை நீக்கி மனதில் இருக்கும் சுமையையும், பாரத்தையும் இறக்கி வைக்கும் புத்தாண்டாக இந்த தமிழ் புது வருடம் இருக்கும் என்பது நிச்சயம்.

ஏழரைச்சனியின் துன்பங்களை மனஉறுதியுடனும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையுடனும் எதிர்கொண்டு சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்கு துன்பங்களை தீர்க்கும் ஆண்டாக இந்த துன்முகி ஆண்டு இருக்கும்.

ஏற்கனவே எழுதும் அனைத்து வார மாத வருட பலன்களிலும் என்னிடம் ஜாதகம் பார்க்க வருபவர்களில் எண்பது சதவிகிதம் பேர் விருச்சிக ராசிக்காரர்கள் அல்லது விருச்சிக ராசியினை மகன் மகளாக மனைவி கணவனாக வீட்டில் கொண்டவர்கள் என்று எழுதி வருகிறேன்.

விருச்சிக ராசிக்காரர்களின் கஷ்டங்கள் அனைத்திற்கும் விடிவுகாலம் பிறந்து விட்டது. இந்த தமிழ்ப் புத்தாண்டில் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சி மிகுந்த நன்மைகளை உங்களுக்குத் தரும். அதற்குப் பிறகு வரும் சனிப்பெயர்ச்சியோடு உங்களை ஆட்டிப் படைத்த ஜன்மச்சனியும் முடிவடைந்து உங்களின் அனைத்து கெட்டவைகளும் ஒழியப் போகின்றன.

சென்ற காலங்களில் உங்கள் ராசிக்கு இருந்து வந்த சரியில்லாத கோட்சார நிலையினால் உங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களும், வாழ்க்கைச் சிக்கல்களும், கடன் தொல்லைகளும், உடல்நலப் பிரச்னைகளும் வம்பு வழக்கு கோர்ட் பிரச்னைகளும் அடியோடு விலகி நன்மைகள் நடக்கப் போகிறது.

வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு உங்களுடைய அந்தஸ்து, கௌரவம், சிந்தனை, செயல்திறன் அனைத்தும் பொலிவடையும். உங்கள் உடலும், மனமும் புத்துணர்ச்சி பெறும். முகத்தில் எந்நேரமும் சந்தோஷம் தெரியும். இதுவரை மனதில் இருந்து வந்த குழப்பங்கள் உடனே விலகும்.

சென்ற காலங்களில் உங்களை வாட்டி வதைத்த சோம்பல், மந்தம், விரக்தி மற்றும் தோல்வி மனப்பான்மைகள் இனிமேல் உங்களிடம் நெருங்காது. அனைத்து விஷயங்களிலும் இருந்த வந்த தொல்லைகள், தடைகள், தாமதங்கள் விலகி அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசப் போகிறது. 

இனிமேல் உங்களுடைய மனதைரியம் கூடும். எதையும் சந்திக்கும் ஆற்றல் பெறுவீர்கள். நாளைக்குப் பார்க்கலாம் என்ற ஒத்திப்போடுதல் இருக்காது. இதுவரை நீங்கள் பயந்து கொண்டிருந்த செயல்கள் அனைத்திலும் தலைகீழ் மாற்றங்கள் இருக்கும்.

மனதிற்கு பிடித்த வேலை கிடைக்காமல் அலைந்து கொண்டிருந்த இளைய பருவத்தினருக்கு அவர்கள் படிப்புக்குத் தகுந்த நல்ல வேலை உடனடியாக கிடைக்கும். ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு இதுவரை கிடைக்காத பதவி உயர்வு, சம்பள உயர்வு, நிலுவையில் இருந்த தொகையோடு சேர்த்து உடனடியாக கைக்கு வரும்.

சுயதொழில் செய்வர்கள் தொழில் வளர்ச்சியை காண்பார்கள். வியாபாரிகளுக்கு நன்மைகள் நடக்கும் காலகட்டம் இது. தொழிலில் சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் தொழில் முன்னேற்றப் பாதையில் செல்வதைக் காண்பீர்கள். தொழில் அதிபர்களுக்கு அரசு உதவி கிடைக்கும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருந்து உற்பத்தியை மேலும் பெருக்கித் தருவார்கள்.

விவசாயிகளுக்கும், கலைத்துறையினருக்கும் நீங்கள் ஏற்கனவே மனதில் நினைத்திருந்த முன்னேற்றத் திட்டங்களைச் செயல்படுத்த அதிர்ஷ்டம் இனி கை கொடுக்கும். பொது வாழ்க்கையில் இருக்கக் கூடியவர்களுக்கு இது மிகவும் மேன்மையை தரக்கூடிய காலமாக அமையும். அதிகாரப் பதவிகள் தேடி வரும்.

சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்த விருச்சிக ராசிக்காரர்களுக்கு இனிமேல் நிலையான ஒரு தொழில் அமைப்பு உருவாகி மாதாமாதம் நிரந்தர வருமானம் வரும். நண்பர்களால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் இருக்கும். இதுவரை சுப காரியங்களுக்கு இருந்த தடை விலகி குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் சுற்றுலா செல்வது போன்ற மனதிற்கு இனிமை தரும் நிகழ்வுகளும் நடக்கும்.

வீடு கட்டுவதற்கு இதுவரை இருந்து வந்த தடைகள் விலகும். சிலருக்கு கட்டிய வீடோ, காலிமனையோ வாங்குவதற்கு இப்போது நல்ல சந்தர்ப்பம் வரும். புதிதாக நல்ல வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தில் சொத்து சேர்க்கை மற்றும் பொன்நகை சேர்க்கை இருக்கும். குடும்பத்திற்கு தேவையான அனைத்து விதமான பொருட்களையும் இப்போது வாங்க முடியும்.

உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும். இதுவரை இருந்து வந்த விரயச் செலவுகள் இனிமேல் இருக்காது. எனவே ஏதேனும் ஒரு தொகையை அது சிறியதாக இருந்தாலும் சேமிக்க முடியும். குடும்பத்தில் மங்களகாரியங்கள் நடக்கும் என்பதால் வருமானம் வந்தாலும் அதற்கு ஏற்ப சுபச்செலவுகளும் இருக்கும்.

நீண்ட தூர புனித யாத்திரைகள் இப்போது செல்ல முடியும். வயதானவர்கள் காசி கயா போன்ற புனித யாத்திரைகள் செல்வீர்கள். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஞானிகளின் ஜீவ சமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறும் பாக்கியம் கிடைக்கும். குலதெய்வத்தின் அருளைப் பெற வேண்டிய நேரம் இது என்பதால் முறையாக குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். தள்ளிப் போயிருந்த குலதெய்வ வழிபாட்டினை உடனடியாக நேர்த்திக்கடன்களுடன் நிறைவேற்ற முடியும்.

குடும்பத்தில் இதுவரை தடைப்பட்டு கொண்டிருந்த மங்கள காரியங்கள் இனிமேல் வெகு சிறப்பாக நடைபெறும். திருமணமாகாதவர்களுக்கு குருபலம் வந்து விட்டதால் இந்த வருடம் திருமணம் நடைபெறும். காதலித்துத் கொண்டு இருப்பவர்களுக்கு பெரியவர்களின் சம்மதத்துடன் திருமணம் நடக்கும். சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பிப்பீர்கள். குழந்தை பாக்கியம் தாமதித்தவர்களுக்கு தற்போது நல்ல முறையில் குழந்தை பிறக்கும்.

தவிர்க்க முடியாத பிரச்னைகளால் முதல் திருமணம் முறிவடைந்து விவாகரத்து பெற்றவர்களுக்கு தற்போது இரண்டாவது திருமணம் நடக்கும். இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாக அமையும். சிலருக்கு கமிஷன், தரகு போன்றவைகளின் மூலமாக நல்ல பெரிய தொகை ஒரே நேரத்தில் ‘லம்ப்’பாக கிடைக்கும். சகோதரர்களிடம் நல்ல உறவும் நன்மைகளும் இருக்கும். சகோதர சகோதரிகள் உதவிகரமாக இருப்பார்கள்.

பெண்களுக்கு இது மிகச் சிறப்பான நன்மைகளைத் தரும் ஆண்டாகும். உங்களின் மதிப்பு உயரும். நான்கு பேர் கூடும் இடத்தில் தனித்துவமாக தெரிவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் இதுவரை இருந்த வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும்.அலுவலகத்தில் ஆண்கள் உங்களுக்கு அடங்கி இருப்பார்கள். இதுநாள் வரை இருந்து வந்த மேல் அதிகாரி தொந்தரவு இனி இருக்காது. புகுந்த வீட்டில் அந்தஸ்து, கௌரவம் கூடும்.

மொத்தத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஒரு திருப்பு முனையான ஆண்டாக இது அமையும் என்பதால் இனி என்றும் சுகம்தான்.

2 comments :

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. இரண்டு காலிலும் உள்ள மூட்டு வலி நின்றாலே போதும். இது எனது மனைவியின் வியாதியாகும்.அவர்கள் விருசிக ரசி

    ReplyDelete