Tuesday, August 11, 2015

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள் - 50 (11.8.2015)

பி. ராமச்சந்திரன் மதுரை -7

கேள்வி :

ரா
ராசி
சூ,சுக்
சந்
பு
குரு
கே
செவ்
சனி

நிறைய பெண் வீட்டாருக்கு மகன் ஜாதகத்தை அனுப்பியதில் ஆயில்ய நட்சத்திரம் என்றாலே வேண்டாம் என்று சொல்லி விடுகிறார்கள். ஒரே மனவேதனையாக இருக்கிறது. என்ன செய்வது என்று புரியவில்லை. உங்களின் தீவிரவாசகனான எனக்கு மகனின் திருமண அமைப்பைப் பற்றி தெளிவுபடுத்த வேண்டுகிறேன்....

பதில்:

(சிம்ம லக்னம் கடகராசி. லக்னத்தில் புத மூன்றில் செவ் சனி நான்கில் கேது ஐந்தில் குரு பனிரெண்டில் சூரி சுக்)

மகன் பிறந்தது 29 ஜூலை 1987 காலை 8.55 என்று எழுதியுள்ளீர்கள். ஜாதகப்படி 1984 என்றால்தான் ஆயில்யம் நட்சத்திரமும் நீங்கள் அனுப்பியுள்ள ஜாதகமும் ஒத்துவரும். எது சரி என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். ஆயில்யம் நட்சத்திரம் என்பது ஒரு மூடநம்பிக்கைதான் என்பதை ஏற்கனவே இதே பகுதியில் விரிவாகச் சொல்லியிருக்கிறேன்.

உங்கள் மகனுக்கு ராசிக்கு நான்கில் சனி செவ்வாய் இணைந்து ஐந்தாம் வீட்டையும் அங்குள்ள குருவையும் உச்ச சனி பார்த்த தோஷத்தால் முப்பத்தி ஒன்று வயது வரை திருமணமாகவில்லை. ஆயில்யம் என்பது இரண்டாம் பட்சம்தான். தற்போது நடக்கும் சுக்கிரதசையில் சுக்கிரனின் வீட்டில் அமர்ந்து தாம்பத்திய சுகத்தை தரும் அதிகாரம் பெற்ற ஏழுக்குடைய சனியின் புக்தியில் லக்னத்தில் அமர்ந்து ஏழாம் வீட்டை திக்பலம் பெற்றுப் பார்த்த குடும்பாதிபதி புதனின் அந்தரத்தில் வரும் அக்டோபர் மாதத்திலிருந்து ஏப்ரல் மாதத்திற்குள் உறுதியாகத் திருமணம் நடக்கும்.

டி. சோமசுந்தரம் கோவை-201

கேள்வி

மகள் ஜாதகத்தை பல ஜோதிடர்களிடம் காட்டியதில் ஒவ்வொருவரும் ஒரு மாதிரி சொல்கிறார்கள். ஜோதிடர்கள் சொன்ன அனைத்துப் பரிகாரங்களும் செய்து விட்டேன். ஒன்பது நவக்கிரகக் கோவில்கள், நவதிருப்பதிக் கோவில்கள், தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய கோவில்கள் கர்நாடகா சிருங்கேரி தர்மஸ்தலம், உடுப்பி முருடேஸ்வரா போன்ற கோவில்களுக்கும் திருப்பதி காளகஸ்தி போன்ற கோவில்களுக்கும் குடும்பத்துடன் சென்று அர்ச்சனை செய்து வந்துளேன். இருப்பினும் திருமணம் தடைப்படுகிறது, குருஜி அவர்கள் என்மகள் ஜாதகத்தைப் பார்த்து எப்போது திருமணம் ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா என்று சொல்ல தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

பதில்

டைபாய்டு ஜுரமா மலேரியாவா... இல்லை நிமோனியா டெங்குவா... அதுவும் இல்லை சாதாரண ஜுரமா என்று கண்டுபிடிக்கத் தெரியாமல் எல்லாக் காய்ச்சல் மாத்திரையையும் மொத்தமாக சாப்பிட்டு விட்டேன் என்று கடிதம் எழுதியிருக்கிறீர்கள்...

கும்பலக்னம் சிம்மராசியாகி லக்னத்தில் ராகு அமர்ந்து அதுவே ராசிக்கு ஏழாகி லக்னத்திற்கு ஏழில் செவ்வாய் அமர்ந்து ராசிக்கு ஏழாமிடத்தை சனி செவ்வாய் இரண்டும் பார்த்து ஆறுக்குடையவன் களத்திரஸ்தானத்தில் அமர்ந்து களத்திரகாரகன் சுக்கிரன் நீசமாகி சனி பார்வை பெற்ற ஜாதகம். ஐந்தில் குரு தனித்து அமர்ந்து புத்திர ஸ்தானாதிபதி புதன் எட்டில் மறைந்து இருவரையும் சனி பார்த்து புத்திரதோஷமும் இருக்கிறது. புத்திரகாரகன் குருவும் அம்சத்தில் நீசம்.

இதுபோன்ற அமைப்புள்ள பெண்ணிற்கு இருபத்தியெட்டு வயதிற்கு மேல்தான் திருமணம் நடக்கும். மேலும் மகளின் கும்பலக்னத்திற்கு நன்மைகளைச் செய்யாத சந்திரனின் தசை முப்பது வயது வரை நடக்கிறது. சந்திரன் ஏழில் செவ்வாயுடன் இருப்பதால் திருமணத்தை தந்தால் கூடவே பிரச்னைகளையும் தருவார். தாமத திருமணம் நல்லது. ஜாதகப்படி 2019 தைமாதம் திருமணம் நடக்கும். பரிகாரங்களை எழுத மாலைமலரில் இடம் போதாது.

எஸ்.விஸ்வநாதன் திருப்பூர்.

கேள்வி

சனி
ரா
சந் குரு
செவ்
ராசி
சூ,பு
சுக்
கே

மதிப்பிற்குரிய ஆசான் அவர்களே.. தங்கள் சீடனின் பணிவான வணக்கங்கள். திதி சூன்யம் பெற்ற லக்னம். லக்னாதிபதியும் ஐந்திற்குடையவனும் எட்டில் மறைவு. பாதகாதிபதி தசையில் பிறந்து ஆயுள் முழுக்க அஷ்டமாதிபதி தொடர்புடைய தசைகள் நடக்கும் எனது ஜாதகத்தைப் பார்த்து விட்டு சமீபத்தில் ஒரு ஜோதிடர் நீங்கள் உயிரோடு இருப்பதே ஆச்சரியமாக உள்ளது என்று சொன்னார். எனக்கும் இது ஆச்சரியம்தான். ஆனால் கடவுளின் கருணையால் வாழ்க்கை சீராகவே செல்கிறது. ஆனால் தற்போது மனதில் சிறு சஞ்சலம். நடக்கும் சனிதசையில் வரப்போகும் கேதுபுக்தி என்னைப் பயமுறுத்துகிறது. மகளின் திருமணத்தை முடித்துவிட்டு கண்ணயர்வேனா? ஜோதிட மகாகுருவின் மேலான கருத்துகளை சீடனுக்குச் சொல்ல வேண்டுகிறேன்.

பதில்

(விருச்சிகலக்னம் ரிஷபராசி. ஐந்தில் சனி ஆறில் ராகு எட்டில் குரு செவ் ஒன்பதில் சூரி புத சுக்)

இது போன்ற சீடர்களால் குருவிற்கும் கெட்ட பெயர். ஆச்சரியப்பட்ட ஜோதிடரால் ஜோதிடத்திற்கும் கெட்ட பெயர். விருச்சிக லக்னத்திற்கு செவ்வாய் ஆறுக்குடையவரும் ஆவார் என்பதாலும் ஆறாமிடம்தான் மூலத்திரிகோண இடம் என்பதாலும் பாபக்கிரகங்கள் லக்னத்தில் ஆட்சி பெறுவதைவிட மறைந்து சுபத்துவம் பெறுவது நல்லது என்பதன்படி லக்னாதிபதி குருவுடன் இணைந்து சுபத்துவம் பெற்ற நல்ல யோக ஜாதகம் உங்களுடையது.

பாதாகாதிபதி உச்சம் பெற்றாலும் அவர் தேய்பிறைச் சந்திரன் என்பதால் அவரது பாக்யாதிபதிபத்தியம்தான் இங்கே வேலை செய்யும். அதுவும் பத்துக்குடைய சூரியனுக்கும் அடுத்து வரப்போகும் புதன் சுக்கிர தசைகளுக்கும் வீடு கொடுத்த சந்திரன் உச்சமானதும் யோகம். திதிசூன்ய லக்னாதிபதி எட்டில் மறைந்ததால் தோஷ நிவர்த்தி.

நடைபெறும் தசாநாதன் சனி குருவின் வீட்டில் அமர்ந்ததால் கெடுதல்களை செய்யமாட்டார். பிறந்ததிலிருந்து சந்திரன் செவ்வாய் ராகு குரு என யோகதசைகள் நடந்ததால் நீங்கள் பெரிதாக எதுவும் கஷ்டப்பட்டிருக்க மாட்டீர்கள். எட்டாமிடம் சுபத்துவம் பெற்று அஷ்டமாதிபதிக்கு வீடு கொடுத்தவன் உச்சமானதால் உங்களுக்கு தீர்க்காயுள். சனிதசை கேதுபுக்தியில் கேதுவிற்கு குருபார்வை இருப்பதால் நீங்கள் நினைப்பது நடக்காமல் கோவில் கோவிலாக பார்க்கும் ஆன்மீக பயணம்தான் நடக்கும். ஜோதிடத்தை அரைகுறையாகப் புரிந்து கொண்டு நீங்களாக எதுவும் கற்பனை செய்து கொள்ள வேண்டாம்.

ஆர். மீனாட்சி கோவை

கேள்வி

திருமணமானவுடன் தொடங்கிய அழுகை கஷ்டம் இன்றுவரை தொடர்கிறது. தூங்கும்போது திடீர்திடீரென எழுந்து அழுதுகொண்டு இருக்கிறேன். மகன் எம்.சி.ஏ. படித்து கம்பெனி ஆரம்பித்து சரியில்லாமல் மூன்றுவருடமாக வேலைக்கு முயற்சி செய்கிறான். வேலை கிடைக்கவில்லை. திருமணமும் இல்லை. வயது ஏறிக்கொண்டே போகிறது. இதுவரை மூன்று கடிதம் எழுதிவிட்டேன். இரண்டு வரியாவது பதில் தாருங்கள்...

பதில்

மகனது கன்னிராசிக்கு ஏழரைச்சனி முடிந்து விட்டதால் இனிமேல் நன்றாக இருப்பார். தற்போது ராகுதசை நடப்பதால்தான் எல்லாமே தடையாகி வருகிறது. ஜென்மநட்சத்திரத்திற்கு முதல்நாள் இரவு ஸ்ரீகாளஹஸ்தியில் தங்கி காளத்திநாதனை தரிசித்து வேண்டி வாருங்கள். நடைபெறும் ராகுதசை சந்திர புக்தியில் இந்த ஆவணி மாதத்திற்கு மேல் வேலையும் அடுத்த தைமாதத்தில் திருமணமும் நடக்கும்.

2018ல் ஆரம்பிக்கும் குருதசையில் இந்த மகன் மூலம் நீங்கள் பாட்டியாக வேண்டும். மகனை சுறுசுறுப்பாக வேலை தேடச் சொல்லுங்கள். கஷ்டங்கள் அனைத்தும் அவருக்கு முடிந்து நல்லகாலம் ஆரம்பித்து விட்டது. இனிமேல் என்றைக்கும் அவர் சுகமாக இருப்பார்.

எம். சின்னச்சாமி கூத்தாண்டவர் நகர்

கேள்வி

காதல் தோல்வியால் தற்கொலைவரை போய் விட்டேன். வாழ்க்கையில் துன்பங்கள்தான் அதிகம். அப்பா அம்மா இருவரும் இறந்து விட்டார்கள். டிப்ளமா படித்துவிட்டு சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்கிறேன். எனக்கு ஜாதகம் எழுதவில்லை. திருமணம் நடைபெறுமா? காதல் திருமணமா? வீட்டில் பார்ப்பதா?

பதில்

நீங்கள் கொடுத்திருக்கும் 25-5-1981ம் தேதிக்கும் மார்கழி மாதம் இரண்டாம் தேதி ரேவதி நட்சத்திரத்திற்கும் சம்பந்தமே இல்லையே. கொடுத்திருக்கும் ஆங்கில தேதிப்படி வைகாசி மாதம் அல்லவா வருகிறது? சரியான பிறந்த விபரங்களை தேடி அல்லது கேட்டு அனுப்புங்கள். நிச்சயம் பதில் தருகிறேன்.

ஆன்மீகத்தில் முழுமையடைய புண்ணியஸ்தலம் செல்ல வேண்டுமா?

பி. ரகுபதி காரமடை

கேள்வி.

சனி
சந்
ரா
ராசி
கே
சூ
குரு
பு
செவ்

நான் ஆன்மீகத்துறையில் ஈடுபாடு உள்ளவன். என் குருநாதர் சமாதிநிலை அடைந்து ஏழு வருடங்களாகிறது. அவருக்கு அடுத்து எனக்கு குருஸ்தானம் கொடுத்துள்ளார். ஆன்மீகத்தில் முழுமையடைய ஏதாவது புண்ணியஸ்தலம் செல்ல வேண்டுமா? எலெக்ட்ரிக்கல் காண்ட்ராக்டர் வேலை செய்கிறேன். வேறு தொழில் உள்ளதா? திருமணம் எப்போது? எதிர்காலம் எப்படி?

பதில்

(மிதுனலக்னம் ரிஷபராசி மூன்றில் கேது நான்கில் புத செவ் ஐந்தில் சூரி குரு பதினொன்றில் சனி)

சனி நீசவக்ரமாகி குருவின் பார்வையைப் பெற்று சூட்சும வலுவும் அடைந்து லக்னத்தைப் பார்த்து, சனிபார்வை பெற்ற குருவும் லக்னத்தைப் பார்த்ததால் ஆன்மீக ஈடுபாடு. எட்டுவயதில் இருந்து இருபத்தியாறு வயதுவரை சனியின் வீட்டில் அமர்ந்து குருவின் பார்வை வாங்கிய ராகுவின் தசையில் ஆன்மீகத் தொடர்பும் அதன்பிறகு நாற்பத்தி இரண்டு வயதுவரை நடந்த குருதசையில் குருவின் ஆசீர்வாதமும் அணுக்கமும் கிடைத்திருக்கும்.

தற்போது நடக்கும் சனிதசை முழுக்க முழுக்க உங்களை ஆன்மீகத்தில் கொண்டு செல்லும் என்பதால் திருமணவாய்ப்பு இல்லை. ஏழுக்குடையவனை நீசசனி பார்த்து ராசிக்கு ஏழில் சுக்கிரன் அமர்ந்து ஏழாமிடத்தை செவ்வாய் பார்த்து மனைவிஸ்தானமே பலவீனமாகி விட்டது. ஜீவனஸ்தானதிபதி குருவுடன் சூரியன் இணைந்ததால் எலெக்ட்ரிக்கல் தொழில் உங்களுக்கு சரிதான். ஏதோ வரவுக்கும் செலவுக்கும் வந்து கொண்டிருக்கும்.

இந்த புண்ணிய பூமியில் நம் கண்முன்னே நடமாடிய ஆன்மீகத் திருவுருக்களான காஞ்சித்தெய்வம் மகாபெரியவர் ஷீரடிமகான் பகவான் ரமணமகரிஷி ஸ்ரீராகவேந்திரர் போன்ற எண்ணற்ற மகான்கள் தங்களின் அருள் அலைகளை இன்னமும் வழங்கிக் கொண்டிருக்கும் புனித இடங்களுக்குச் சென்று வாருங்கள். எல்லாம் சித்திக்கும். எதிர்காலம் ஆன்மீகத்தோடு இணைந்திருக்கும்.

1 comment :