Thursday, December 31, 2015

சிம்மம்: 2016 ராகு – கேது பெயர்ச்சிப் பலன்கள்

சிம்மம்

ராஜராசி எனப்படும் ஆளுமைத்திறன் மிக்க ராசியான சிம்மத்திற்கு ஏற்கனவே இருந்து வந்த சாதகமற்ற நிலையான இரண்டு, எட்டு எனப்படும் நிலையில் இருந்து மாறி தற்போது ஓரளவிற்கு சாதகம்தான் என்று சொல்லக்கூடிய ஒன்று, ஏழாம் இடங்களில் ராகு-கேதுக்கள் இன்னும் ஒன்றரை வருடங்கள் நிலை கொள்ள இருக்கிறார்கள்.

கடந்த ஒன்றரை வருடங்களாக இரண்டாமிடத்தில் நிலைகொண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு பணவரவில் தடைகளையும், பொருளாதார சிக்கல்களையும் கொடுத்து வந்த ராகுவும், எட்டாமிடத்தில் இருந்து வம்பு, வழக்கு, அவமானம் போன்றவைகளைக் கொடுத்து வந்த கேதுவும் 2016-ம் வருடம் ஜனவரி மாதம் ஒன்று மற்றும் ஏழாமிடங்களுக்கு மாறுவது சிம்மராசிக்கு நன்மையான ஒரு அமைப்பே ஆகும்.

இம்முறை ராகுபகவான் உங்களுக்கு ஜென்மராகுவாக மாறினாலும் ஏற்கனவே ராசியில் நிலை கொண்டிருக்கும் சுபக்கிரகமான ஐந்துக்குடைய யோகாதிபதி குருவுடன் இணைவதால் கெடுபலன்களைச் செய்யமாட்டார் என்பதோடு அவரால் உங்களுக்கு சில நன்மைகளும் இருக்கும்.

பொதுவாக ஜென்மராகுவால் மனஅழுத்தம், தவறான முடிவுகளால் சில சங்கடமான சூழல்கள், அறிவுத்திறன் குறைதல், உடல்நலக்கேடு போன்றவை இருக்கும் என்றாலும் இம்முறை குருவின் சேர்க்கையால் ராகுபகவான் புனிதப் படுவதால் மேற்கண்ட கெடுபலன்கள் உங்களுக்கு இருக்காது.

அதேநேரம் ஏழாமிடத்தில் நிலைகொள்ள இருக்கும் கேதுபகவான் உங்களின் மனைவி, நண்பர்கள், கூட்டாளிகள் போன்ற விஷயங்களில் சாதகமற்ற பலன்களை தருவார் என்பதால் இந்த பெயர்ச்சியினால் இளைய பருவத்தினருக்கு தாமததிருமணம், திருமணமானவர்களுக்கு மணவாழ்வில் பிரச்சினைகள், நண்பர்களுக்குள் கருத்து வேறுபாடு, தொழில் முனைவோருக்கு, பங்குதாரர்களிடம் சச்சரவு, கூட்டு தொழிலில் லாபக்குறைவு போன்ற பலன்களை கேது தருவார் என்பதால் மேற்கண்ட இனங்களில் சிம்ம ராசிக்காரர்கள் கவனமுடன் இருப்பது நல்லது.

இந்தப் பெயர்ச்சியினால் உங்களுடைய கௌரவம், அந்தஸ்து கூடும்படியான சம்பவங்கள் நடக்கும். கையில் எந்த நேரமும் பணப்புழக்கம் அதிகரித்து குடும்பத்தில் உங்களுடைய சொல்லை அனைவரும் கேட்கும் நிலை உருவாகும். இதுவரை சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாமல் இருந்த நிலை மாறி உங்களுடைய வாக்கு பலிதம் ஆகும்.

ராசியைப் பார்க்கும் சனிபகவான் உங்களை பிடிவாதக்காரர் ஆக்குவார் என்பதால் எந்தவிதமான கோபத்திற்கும் ஆளாகாமல் பணிவாக இருப்பது நல்லது. அடக்கம் அமரருள் உய்க்கும் என்ற தெய்வவாக்கை நினைவுபடுத்திக் கொள்ளுவது நல்லது. பணி புரியும் இடங்களில் வீண் அரட்டைகள் வேண்டாம். அது தேவையற்ற மனஸ்தாபங்களுக்கோ, வீண்விரோதத்திற்கோ வழிவகுக்கும் என்பதால் கவனமாக இருங்கள்.

அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு துறைரீதியான இடமாறுதல்களோ அல்லது பதவி உயர்வுடன் கூடிய ஊர்மாற்றமோ இருக்கும். தற்போது இருக்கும் வசதியான ஊரை விட்டு வேறு எங்கோ மாற்றம் இருக்கும் என்பதால் பதவி உயர்வு என்றாலும் அதை அரைகுறையான மனதுடன் தான் நீங்கள் ஏற்றுக் கொள்ளும்படி இருக்கும்.

வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்களுடைய விருப்பத்திற்கும் படித்த படிப்பிற்கும் பொருத்தமான வேலைகள் அமைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. நீண்ட நாட்களாக உங்களுக்கு மனவருத்தத்தை கொடுத்துக் கொண்டு இருந்த உயரதிகாரி மாறுதலாகி, அந்த இடத்திற்கு உங்களுக்கு அனுசரணையானவர் வருவார்.

இதுவரை சிக்கலில் இருந்த தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் தடைகள் விலகி நல்லபடியாக நடக்க ஆரம்பிக்கும். சுய தொழில் செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். மஞ்சள் நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு இம்முறை மேன்மையான பலன்கள் இருக்கும்.

முப்பது வயதுகளில் இருக்கும் சிம்மராசி இளைஞர்களுக்கு அர்த்தாஷ்டமச்சனியின் ஆதிக்கத்தினால் இதுவரை சரியான வேலை, தொழில் அமைப்புகள் எதுவும் நடைபெறவில்லை. ஏற்கனவே நல்லதொழில், வேலையில் இருப்பவர்களுக்குக் கூட கடந்த சில மாதங்களாக சனிபகவான் தடைகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்.

தொழில் சம்மந்தமான பிரச்னைகள் அனைத்தும் இந்தப்பெயர்ச்சியின் மூலம் உங்களுக்கு சாதகமாக திரும்பி பொருளாதார நிலைமைகள் உங்களுக்கு நிம்மதியாக இருக்கக்கூடிய அளவிற்கு நிலைமைகள் முன்னேற்றமாக இருக்கும்.

சென்ற காலங்களில் வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த அதிருப்திகளும் சஞ்சலங்களும் விரக்தியும் இனிமேல் இருக்காது. பதவிஉயர்வு உடனே கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த சம்பள உயர்வும் பாக்கித் தொகையும் உடனே பெறுவீர்கள். பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றங்கள் உண்டு.

இதுவரை வெளிநாட்டுக் குடியுரிமை கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கும் விசா பிரச்னையால் வெளிநாடு செல்லமுடியாமல் சிக்கலில் இருந்தவர்களுக்கும் வெளிநாட்டு வேலை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கும் அவர்கள் நினைத்தபடியே செயல்கள் நடந்து நன்மைகள் உண்டாகும்.

நடுத்தரவயது தாண்டிய சிம்மராசிக்காரர்களுக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற ஆரோக்கிய குறைபாடுகள் தற்போது கண்டுபிடிக்கபடும் என்பதால் அவர்கள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளுவது நல்லது. வயதானவர்கள் சிறு உடல் நல பிரச்னைகளையும் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளுவதன் மூலம் சிறிய வியாதி பெரிதாகாமல் தற்காத்துக் கொள்ளலாம்.

பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் குறுகிய கால பயணமாக வெளிநாடு சென்று திரும்புவீர்கள். நீண்ட நாட்களாக விசா கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு தற்போது விசா கிடைக்கும். வயதானவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் பேரன், பேத்திகளை பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். ஒரு சிலர் மகன், மகள்களுக்கு உதவி செய்ய வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வீர்கள்.

நீண்ட நாட்களாக போக முடியாமல் தள்ளிப் போயிருந்த தீர்த்த யாத்திரை இப்போது போக முடியும். காசி கயா பத்ரிநாத் கேதார்நாத் போற வடமாநில புண்ணியத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு இப்போது கிடைக்கும். ஞானிகளின் தரிசனம் கிடைக்கும். மகாபெரியவரின் அதிஷ்டானம் போன்ற மிகப்பெரும் புனித இடங்களை வழிபடும் பாக்கியம் உண்டாகும்.

தள்ளிப் போயிருந்த நேர்த்திக்கடன்களை இப்போது நிறைவேற்ற முடியும். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். சிலர் புனிதத்தலங்களுக்கு அருகில் வேலை மாறுதல்கள் பெறுவீர்கள். சிதிலம் அடைந்த ஆலயங்களை புனருத்தானம் செய்வீர்கள். கும்பாபிஷேக திருப்பணிகளில் கலந்து கொள்ளும் பாக்கியம் கிடைக்கும்.

தந்தைவழி உறவினர்களிடம் நெருக்கம் உண்டாகும். இதுவரை இருந்துவந்த பங்காளிப் பிரச்னை தீரும். பூர்வீக சொத்துக்களில் உங்கள் பாகம் சேதமில்லாமல் உங்களுக்கு கிடைக்கும். பெரியப்பா சித்தப்பாக்கள் மற்றும் தந்தையுடன் பிறந்த அத்தைகளால் லாபம் இருக்கும்.

தந்தையிடமிருந்து ஏதேனும் ஆதாயம் இருக்கும். இளைஞர்களுக்கு நீங்கள் விரும்பிக் கேட்கும் ஒரு பொருளை உங்கள் அப்பா வாங்கித் தருவார். வீட்டில் குழந்தைகளில் உடல் நலத்தில் அக்கறையும், கவனமும் தேவைப்படும். சிறு குழந்தைகளுக்கு சாதாரண உடல்நலக் குறைவு என்றால் கூட அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்வது நல்லது.

மூத்த சகோதரர், சகோதரிகளின் உறவு மேம்படும். அவர்களால் உதவிகள் இருக்கும். இதுவரை திருமணம் தாமதமான அக்கா அண்ணன் போன்றவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணமாகும். அதிகம் பெண்களுடன் பிறந்தவர்கள் தங்கள் சகோதரிகளின் வீட்டு சுபகாரியங்களுக்கு செலவு செய்ய வேண்டியிருக்கும்.

மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்கள். அரியர்ஸ் வரும் வாய்ப்பு இருக்கிறது. காலேஜிற்கு கட் அடிக்காதீர்கள். காலேஜ் உங்களைக் கட் அடித்து விடலாம். இளைஞர்களும், யுவதிகளும் தங்களின் வாழ்க்கைத் துணைவரை பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கலாம். காதல் வரும் வருடம் இது.

பெண்களுக்கு இந்தப் பெயர்ச்சி நல்ல பலன்களையே அதிகம் தரும். கணவர் இனிமேல் உங்களை புரிந்து கொண்டு, உங்கள் மனம் போல் நடந்து கொள்ள ஆரம்பிப்பார். பிள்ளைகள் உங்களின் கஷ்டங்களைப் புரிந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடங்களில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். உங்களின் அந்தஸ்து உயரும்.

உங்களின் உழைப்பும் முயற்சியும் மட்டுமே உங்களுக்கு வெற்றியைத் தரும் என்பதால் உண்மையாக கடுமையாக உழைத்தால் மட்டுமே இப்போது வெற்றி கிடைக்கும். அதே நேரத்தில் சிம்மராசிக்காரர்கள் உழைப்பிற்கு அஞ்சாதவர்கள் என்பதால் உங்களால் எதுவும் செய்ய முடியும் என்பதும் நிஜம்.

மகம் நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்த ராகு கேதுப்பெயர்ச்சி உங்களுக்கு மிகவும் நல்ல பணவரவைத் தரும். குறிப்பாக எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் இருப்பாவர்கள் மிகுந்த முன்னேற்றம் அடைவீர்கள். எனவே அதற்கேற்ப திட்டங்கள் தீட்டி வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளுங்கள். ரேஸ் லாட்டரி பங்குச்சந்தை சூதாட்டம் போன்றவைகள் இப்போது கை கொடுக்காது. சிறிது லாபம் வருவது போல் ஆசைகாட்டி பிறகு மொத்தமாக இருப்பதையும் இழக்க வைக்கும் என்பதால் மேற்கண்ட இனங்களில் கவனமுடன் இருக்கவும்.

பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்தப்பெயர்ச்சியின் ஆரம்பத்திலேயே உங்களுக்கு நல்ல பலன்கள் நடக்கும். பூரம் நட்சத்திரத்தில் ராகுபகவான் குருவுடன் இணையும்போது தொட்டது துலங்கும். முயற்சிகள் பலனளிக்கும். பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்வோருக்கு இந்த நேரம் மிகவும் நல்ல பலன்களைத் தரும். எனவே சோம்பலை உதறித்தள்ளி சுறுசுறுப்பாக காரியம் ஆற்ற வேண்டியது அவசியம். பணத்திற்கு பஞ்சம் இருக்காது. கொடுக்கும் வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். வாக்கு பலிக்கும்.

உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு:

நீண்ட நாட்களாக வீடு கட்ட வேண்டும் அல்லது வீடு வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தவர்களுக்கு வீட்டுக்கனவு நனவாகும். பெரும்பாலானவர்கள் லோன் போட்டுத்தான் வீடு கட்டவோ வாங்கவோ செய்வீர்கள். பெயர்ச்சியின் ஆரம்பத்தில் சிறிது சுணக்கமான பலன்கள் இருந்தாலும் நடுப்பகுதியில் இருந்து நல்ல பலன்கள் நடக்கத் துவங்கி படிப்படியாக உங்களின் தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புக்கள் மிகவும் முன்னேற்றமாக இருக்கும். நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இழுபறியாக இழுத்துக் கொண்டிருந்த விஷயம் சட்டென்று முடிவுக்கு வந்து பெரும்தொகை கைக்கு கிடைக்கும்.

பரிகாரங்கள்

ராகு கேது பெயர்ச்சி நடந்தபிறகு ஒருமுறை ஜென்ம நட்சத்திரத்திற்கு முதல் நாள் மாலை சூரியன் அஸ்தமிக்கும் முன்பே பேரருள் திருத்தலமான ஸ்ரீ காலஹஸ்திக்குச் சென்று இரவு தங்கி அதிகாலை எம்பெருமான் காளத்திநாதனுக்கும் அன்னை ஞானப் பிரசுன்னாம்பிகைக்கும் நடக்கும் ருத்ராபிஷேகத்தில் கலந்து கொண்டு திரும்புங்கள். ஒரு குறையும் வராது.

1 comment :