Thursday, December 31, 2015

கன்னி: 2016 ராகு – கேது பெயர்ச்சிப் பலன்கள்,

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு கடந்த காலங்களில் ஜென்மராகுவாக ராசியிலேயே நிலை கொண்டிருந்து உங்களின் சிந்தனைகளை ஆக்கிரமித்து செயல்திறனைக் குறைத்து இருட்டான ஒரு நிலையில் நிறுத்தி வைத்திருந்த ராகுபகவான் அந்த நிலை மாறி கெடுபலன் தராத பனிரெண்டாம் இடத்திற்கு மாறிச் செல்கிறார்.

இதில் ஒரு முக்கியநிலையாக அவர் ஏற்கனவே பனிரெண்டில் இருக்கும் குருவுடன் இணைவார் என்பதாலும் குருபகவான் உங்களுக்கு நான்கு மற்றும் ஏழாம் இடங்களுக்கு அதிபதி என்பதாலும் ராகுவின் இந்த மாற்றத்தால் குருவுடன் இணைந்து சுபத்தன்மை பெற்ற ராகுபகவான் சுபவிரயங்களைச் செய்து உங்களுக்கு நன்மைகளைச் செய்வார்.

இதுவரை சொந்தவீடு இல்லாதவர்களுக்கு சொந்த வீடு கட்டுதல், அல்லது கட்டிய வீடு வாங்குதல் போன்ற பலன்களும் பெருநகரங்களில் சிலருக்கு பிளாட் வாங்குதல் போன்ற பலன்களும் இந்த ராகுகேது பெயர்ச்சியினால் நடக்கும்.

உங்கள் ராசிக்கு ஏழாமிடத்திற்குரிய களத்திர ஸ்தானாதிபதியுடன் ராகு இணைவதால் இந்தப்பெயர்ச்சியால் இதுவரை திருமணமாகாமல் தாமதித்துக் கொண்டிருக்கும் இளையபருவத்தினருக்கு நல்லவிதமாக திருமணம் நடைபெறும். ஏற்கனவே முதல் திருமணம் கசந்து முறிவிற்குள்ளானவர்களுக்கும் இரண்டாம் திருமணம் நினைத்தபடியே நடந்தேறும். அது நிலையாகவும் இருக்கும்.

அடுத்து ராகு-கேதுக்களுக்கு நல்லபலன்களைத் தரும் இடமாக நமது மூலநூல்களில் சொல்லப்பட்ட 3, 6, 11-ம் இடங்களில் தற்போது உங்களின் ஆறாமிடத்திற்கு கேதுபகவான் மாற இருப்பது கன்னிராசிக்கு யோகம் தரும் ஒரு அமைப்பாகும்.

ஆறாமிடத்திற்கு மாறும் கேதுவின் முக்கியபலனாக இதுவரை கடன் தொல்லையில் அவதிப் பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும். கடனை அடைப்பதற்கான வழிகள் தெரியும். கடன் தீர்ந்தே ஆகவேண்டும் என்பதால் வருமானமும் கூடும். இதுவரை உங்களை விரோதியாக நினைத்தவர்கள் மனம் மாறி நட்பு பாராட்டுவார்கள்.

இதனால் இதுவரை கன்னிராசிக்காரர்களுக்கு இருந்து வந்த கடன் தொல்லைகளும், பணப்பிரச்சினைகளும் தீரும். குறிப்பிட்ட சிலருக்கு வேண்டாத நபர்களாலும், பொறாமை கொண்டவர்களாலும் இருந்து வந்த சங்கடங்களும், உடல் நலக்குறைவுகளும் நீங்கும்.

பொதுவிஷயங்களிலும், குடும்பத்திலும், அலுவலகத்திலும் உங்களைப் பிடிக்காதவர்களின் கை தாழ்ந்து உங்களின் கை ஓங்கும். குடும்பத்தில் உங்களைப் புரிந்து கொள்ளாமல் உங்கள் மேல் கோபம் கொண்டிருந்தவர்கள் தங்கள் தவறை உணர்ந்து இனிமேல் நீங்கள் சொல்வதைக் கேட்பார்கள்.

ஆறாமிடத்துக் கேதுவால் இதுவரை உங்களுக்கு தடங்கலாகி வந்த அனைத்துக் காரியங்களிலும் வெற்றி உண்டாகும். உங்களின் லட்சியங்கள் நிறைவேறும் காலம் இது. கடந்த காலங்களில் பெரிய முயற்சி எடுத்து கஷ்டப்பட்டும் நினைத்த காரியம் நிறைவேறாதவர்கள் இப்போது அதிக சிரமம் இல்லாமல் அதிர்ஷ்டத்தினால் அனைத்தும் நடப்பதைப் பார்ப்பீர்கள்.

ஜென்மராசியில் இருந்து ராகு விலகுவதால் எந்த ஒரு விஷயத்திலும் இதுவரை உங்களுக்கு இருந்து வந்த மனக்கவலைகள் குழப்பங்கள், மற்றும் எதிர்மறை எண்ணங்கள், தொழில்தேக்கம், அதிர்ஷ்டக்குறைவு, தடைகள், தாமதங்கள் போன்ற அனைத்தும் இனித் தீரும். உடலிலும் மனதிலும் புதுத்தெம்பு பிறக்கும். எங்கும் எதிலும் உற்சாகமாக இருப்பீர்கள்.

இதுவரை இல்லாத வகையில் வாக்குப் பலிதம் ஏற்படும். தாமதமாகிப் போனவைகள் நல்லபடியாக நடந்து உங்களுக்கு மகிழ்ச்சியையும், வருமானத்தையும், புகழையும் தரும். உங்களுடைய சிந்தனை, செயல்திறன் கூடும், முகத்தில் பொலிவு வரும். தன்னம்பிக்கை உங்களைத் தேடி வந்து மனதில் குடி கொள்ளும். தலைநிமிர்ந்து நடப்பீர்கள்.

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இதுவரை வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். பதவி உயர்வு உண்டு. இடமாற்றம், கேட்டபடியே கேட்கும் இடத்தில் கிடைக்கும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் தனிக்குடித்தனம் போக வேண்டிய சூழ்நிலை வரலாம். மாமியார் மாமனாருடன் கருத்து வேறுபாடுகளும் தந்தையுடன் உடன் பிறந்த அத்தைகளுடன் சிறிய பிரச்னைகளும் வரலாம்.

குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த சிறுசிறு சண்டை, சச்சரவுகள் கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள், கூட்டுக் குடும்பத்தில் தொடர்ந்த முரண்பாடுகள் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாததால் ஏற்பட்டிருந்த பிணக்குகள் அனைத்தும் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதுகலமும் இருக்கும்.

கணவன் ஓரிடம் மனைவி வேறிடம் என்று பிரிந்து இருந்தவர்கள், வேலை விஷயமாக வெளியூரில் பிரிந்து வேலை பார்த்தவர்கள் உடனடியாக ஒன்று சேருவீர்கள். பிள்ளைகள் விஷயத்தில் செலவுகள் இருக்கும். படிப்புச்செலவு மற்றும் அவர்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கான அடித்தளச் செலவுகளுக்காக கையில் இருக்கும் சேமிப்பை நீங்கள் செலவிட வேண்டியதிருக்கும்.

இந்த காலகட்டத்தில் விரயங்கள் இருக்கும் என்பதால் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்குமுன் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து செலவு செய்யுங்கள். கோர்ட், கேஸ், நிலம் சம்பந்தமான வழக்குகள். போலீஸ் விவகாரங்கள் கிரிமினல் வழக்குகள் உள்ளவர்கள் இந்த சாதகமான காலத்தில் வழக்கை முடிக்கப் பாருங்கள்.

கேதுவிற்கு குருவின் பார்வை இருப்பதால் கோவில் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். ஞானிகளின் திருத்தலங்களுக்கு பயணம் செல்வீர்கள். மகாபெரியவரின் அதிஷ்டானத்திற்கு சென்று அவரின் அருளைப் பெறும் பெரிய பாக்கியம் கிடைக்கும். ஷீரடி மந்திராலயம், பகவான் சத்யசாயியின் திரு இடம் போன்ற புனிதத் தலங்களுக்கு போக முடியும்.

திருமணமாகாத இளையவர்களுக்கு வரும் வருடம் திருமணம் நல்லபடியாக முடியும். ஒரு சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பித்து தங்களுடைய வாழ்க்கைத்துணையை அடையாளம் காண்பீர்கள். கூட்டு வியாபாரத்தில் குறைகளை கண்டவர்கள் இனிமேல் அவை நீங்கி மன ஒற்றுமை ஏற்பட்டு தொழில் முன்னேற்றம் காண்பார்கள்.

தகப்பனாரின் ஆரோக்கியம் மேம்படும். தந்தை மகனுக்கு இடையே இருந்து வந்த சண்டை, சச்சரவுகள், பிணக்குகள் நீங்கி தந்தையுடன் இணைவீர்கள். நீண்ட நாட்களாக நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் கோரிக்கைகளை அப்பா நிறைவேற்றித் தருவார். நீங்களே ஒரு நல்ல தகப்பனாக உங்கள் குழந்தைகளுக்கு கேட்பதை செய்து தர முடியும்.

சமூகத்தில் உயர்நிலையில் உள்ள பெரியவர்கள், மதிப்புமிக்கவர்கள், அந்தஸ்தும், அதிகாரமும் கொண்டவர்களின் அறிமுகமும் ஆதரவும் கிடைக்கும். குறிப்பிட்ட சிலருக்கு அந்தஸ்து உயரும். அதிகாரமிக்க பதவிகள் கிடைக்கும். அரசியலில் ஏற்றங்கள் உண்டு. 2016ல் வரும் தேர்தலில் ஜெயிக்க முடியும்.

ஒரு சிலர் தொழில் சம்பந்தமாக கடல் தாண்டி வெளிநாடு செல்வீர்கள். குறிப்பாக ஆன்மிகம் சம்பந்தப்பட்டவர்களுக்கு வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் ஏற்படும். வெளிநாடு சம்பந்தமான முயற்சிகள் வெற்றியாகும். பாகப்பிரிவினை சம்பந்தமான முக்கியமான முடிவுகள் எடுப்பதை தற்போது தள்ளிப் போடுவது நல்லது.

மதுபானத் தொழில் சம்பந்தப்பட்டோர், விவசாயிகள், நிலத்தரகர்கள், காலிமனை விற்கும் ரியல் எஸ்டேட்காரர்கள், மருத்துவமனையினர், கடைநிலை ஊழியர்கள், காவல்பணி செய்வோர், துப்புரவு தொழிலாளர்கள், ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சித் தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்டவர்கள் மிகவும் வளம் பெறுவார்கள். வருமானமும் சிறப்பாக இருக்கும்.

அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு ‘இதர வருமானங்கள்’ சிறப்பாக சொல்லிக் கொள்ளும்படி இருக்கும். தொழிலாளர்களுக்கு வேலைப்பளு குறைந்து சம்பளஉயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும். தொழிற்சங்கங்களில் பதவியில் இருப்பவர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் இனிய சம்பவங்கள் நிகழும். படிப்பது மனதில் பதியும். தேர்வுகளை நன்றாக எழுத முடியும்.

சொந்தத்தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், இயக்கும் வேலையில் உள்ளவர்கள் போன்ற துறையினர் தங்களது தொழிலை விரிவாக்கம் செய்வதற்கோ புதிய கிளைகள் ஆரம்பிப்பதற்கோ இது மிகவும் நல்ல நேரம். சுயதொழில், வியாபாரம் போன்றவைகளில் இதுவரை இருந்து வந்த மந்தநிலை விலகி அனைத்தும் இனிமேல் சுறுசுறுப்பாக நடக்கும்.

தொழிலதிபர்களுக்கு இதுவரை இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். அரசாங்கஆதரவு உண்டு. இடைத்தரகர்களை நீக்கி நேரடியாக அமைச்சர்களையோ அதிகாரிகளையோ பார்த்து காரியங்களை வெற்றியாக்க முடியும். எந்த ஒரு காரியத்திலும் எடுக்கும் முயற்சிகள் இப்போது பலிதமாகும். தொழிலை விரிவுபடுத்தலாம். புதிய சோதனை முயற்சிகளை இப்போது செய்யலாம்.

பொதுவாக கன்னி ராசிக்கு இது எதிர்கால முன்னேற்றத்திற்கு அடித்தளம் போடும் காலகட்டமாக அமையும். இப்போது ஏற்படும் அனுபவங்களால் உங்கள் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்வீர்கள் என்பதால் இந்தக் ராகு கேதுப்பெயர்ச்சியில் நல்ல மாற்றங்கள் உங்களுக்கு உண்டு.

உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு:

கையில் இருந்த சேமிப்பு கரையும் வருடமாக உங்களுக்கு இது இருக்கும். அதேநேரத்தில் வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களில்தான் செலவுகள் இருக்கும். எதிர்கால நல்வாழ்விற்கு தேவையான அடிப்படைக் கட்டமைப்புக்கள் இந்தக் ராகுகேதுப் பெயர்ச்சி மூலம் உங்களுக்கு நடக்கும். நீங்கள் நேர்மையான வழிகளையே கடைப்பிடிப்பவர் என்பதால் தனயோகம் முழுமையாக உண்டு. இந்த வருடம் அறிமுகமாகும் ஒருவர் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு தொடரும் உறவாக மாறுவார்.

ஹஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு:

பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும் என்பதால் நஷ்டங்கள் ஏற்படலாம். கவனத்துடன் இருங்கள். கடன் பெற்று வீடு வாங்கும் அமைப்பு உள்ளது. புதிய வாகனம் அமையும். 2016ம் வருடத்தின் பிற்பகுதி உங்களுக்கு மிகவும் நல்ல பணவரவைத் தரும். அதேநேரத்தில் செலவுகள் அதிகமாகத்தான் இருக்கும். நீண்ட நாள் கனவு ஒன்று இந்த வருடம் நனவாகும். உங்கள் மனது போலவே எல்லா நிகழ்ச்சிகளும் நடக்கும். லட்சியங்களை இப்போது நிறைவேற்றிக் கொள்ள முடியும். ஆன்மிகம் சம்பந்தப்பட்ட துறையினர் சிறப்படைவார்கள். ஞானிகள் தரிசனம் கிடைக்கும்.

சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு:

தொழில் வேலை வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் இருந்து வந்த மந்தநிலை விலகி மிகவும் யோகமான காலகட்டம் ஆரம்பமாக போகிறது. இந்தப் பெயர்ச்சி உங்களுக்கு நல்ல யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் தரும். உங்களின் அனைத்துத் திறமைகளையும் மற்றவர்கள் அடையாளம் கண்டுகொள்ளும் நேரம் இது. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் எனும் பழமொழி இப்போது உங்களுக்குப் பொருந்தும். தோல்விகள் அனைத்தும் வெற்றியின் படிக்கட்டுகளாக மாறும் என்பதால் உற்சாகத்துடன் செயலாற்றுவீர்கள். கேட்கும் இடத்திலிருந்து உதவிகள் தாராளமாகக் கிடைக்கும்.

பரிகாரங்கள்.

கேதுபகவானிடம் இருந்து பெறப்போகும் நன்மைகளைக் கூட்டிக்கொள்ள ஞானிகளின் ஜீவசமாதிகளுக்குச் சென்று அவர்களின் ஆசிகளைப் பெற்று வாருங்கள். தென்மாவட்டத்தவர்கள் மதுரை திருப்பரங்குன்றத்தில் அருள்பாலிக்கும் சோமப்பசாமிகளின் ஜீவசமாதியில் வழிபடலாம்.

No comments :

Post a Comment