Thursday, December 31, 2015

மகரம்: 2016 ராகு – கேது பெயர்ச்சிப் பலன்கள்

மகரம்

மகரராசிக்கு இதுவரை ஒன்பதாமிடத்தில் இருந்து வந்த ராகுபகவான் எட்டாமிடத்திற்கும், மூன்றாமிடத்தில் இருந்து வந்த கேதுபகவான் இரண்டாமிடத்திற்கும் மாற இருக்கிறார்கள்.

மேற்கண்ட இரண்டு, எட்டு எனும் இடங்களில் ராகு-கேதுக்கள் இருப்பது நன்மைகளைத் தரும் அமைப்பாக நமது மூலநூல்களில் சொல்லப்படவில்லை. அதேநேரத்தில் ஒரு கிரகம் கெட்ட இடத்தில் அமர்வதால் மட்டுமே கெடுபலன்களைத் தந்துவிட முடியாது. அந்த இடத்தில் யாருடன் அந்தக் கிரகம் தொடர்பு கொள்கிறார் என்பதை வைத்தே அது செய்யும் நல்ல, கெட்ட பலன்களை முடிவு செய்ய முடியும்.

அதன்படி இந்தப் பெயர்ச்சியின் ஆரம்பத்தில் எட்டாமிடத்திற்கு ராகு மாறினாலும் ஏற்கனவே அங்கு நிலை கொண்டிருக்கும் குருபகவானுடன் இணைவதால் உங்களுக்கு அஷ்டம ஸ்தானத்தின் கெடுபலன்களை ராகு செய்யமாட்டார்.

அதேபோல இரண்டாமிடத்திற்கு மாறும் கேதுபகவானுக்கும் குருவின் பார்வை கிடைப்பதாலும் தற்போது அவர் மாற இருக்கும் கும்பவீடு கேதுவிற்கு பிடித்த வீடு என்பதாலும் இந்த இரண்டையும் விட கேது தான் இருக்கும் வீட்டின் அதிபதியைப் போல செயல்படுவார் என்பதால் கும்பவீட்டின் நாயகனான உங்கள் ராசிநாதன் சனியின் பலன்களைத் தருவார் என்பதால் தன் கையே தன் கண்ணைக் குத்தாது என்பதன்படி இரண்டாமிடத்து கேதுவும் உங்களுக்கு கெடுபலன்களை செய்யாது என்பது உறுதி.

அதே நேரத்தில் ஏற்கனவே எட்டாமிடத்தில் குருபகவான் இருப்பதாலும் எட்டாமிடம் என்பது மாற்றங்களைக் குறிக்கும் இடம் என்பதாலும் ராகுபகவான் எதையும் தலைகீழாக மாற்றும் கிரகம் என்பதாலும் உதாரணமாக கிழவனைக் குமரனாகவும், பிச்சைக்காரனை குபேரனாகவும் ராகு மாற்றுபவர் என்பதாலும் அடுத்து வரும் ஒன்றரை ஆண்டுகள் மகரராசிக்கு மாற்றங்களும் தூர இடங்களுக்கு செல்வதையும் தரும் என்பது உங்களுக்கு ராகுவின் எட்டாமிடத்து பலனாக இருக்கும்.

இதுவரை ஒரே இடத்தில் நிலையாக இருப்பவர்களை இந்த ராகு-கேது பெயர்ச்சி மாற்றியமைக்கும் என்பதோடு இருக்கும் இடத்தை விட்டு வெகுதூரத்திற்கும் அனுப்பும் என்பதால் மகரராசிக்காரர்கள் எல்லா நிலைகளுக்கும் தயாராக இருப்பது நல்லது.

எப்போதுமே கோட்சார பலன்களை எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்ற ரீதியில் தொலைநோக்குப் பார்வையோடு நான் எழுதுபவன் என்பதால் இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி குறிப்பிட்ட சில நிலைகளை மகரராசிக்காரர்களுக்கு தரும் என்பதைச் சொல்ல விரும்புகிறேன்.

ஏனென்றால் ராகு-கேது பெயர்ச்சி முடிந்த சில மாதங்களில் மகர ராசிக்கு ஏழரைச்சனி அமைப்பு ஆரம்பிக்க இருக்கிறது. எதிர்வரப்போகும் இந்த ஏழரைச்சனி அமைப்பால் 30, 40 வயதுகளில் இருக்கும் மகர ராசிக்காரர்கள் தடுமாற ஆரம்பிக்க வேண்டும் என்பதால் அவர்கள் ஏழரைச்சனிக்காலத்தில் சிக்கலுக்கு உள்ளாக வேண்டிய அமைப்புகளின் ஆரம்பங்களை ராகு இந்த நேரத்தில் ஆரம்பித்து வைப்பார் என்பதால் மகரத்தினர் இப்போதே அனைத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது.

மேலும் இந்தக் காலகட்டத்தில் எதிலும் சற்றுக் கவனமாக இருப்பது நல்லது. புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம். முதலீடு செய்து தொழில் செய்ய வேண்டாம். தொழில் விரிவாக்கங்களும் கூடாது. அடுத்தவர்களையோ, வேலைக்காரர்களையோ, பங்குதாரர்களையோ முழுக்க நம்ப வேண்டாம். அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை.

எல்லா விஷயங்களிலும் மிகுந்த எச்சரிக்கை உணர்வும் நிதானமும் அடக்கமும் கொண்டு செயலாற்றினால் நிச்சயம் சனியின் தாக்கத்திலிருந்து விடுபடலாம். குறிப்பாக மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் சிறிது காலம் அதைக் கை விடலாம். இயலாவிடில் அந்த நேரத்தில் மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்.

யாரையும் நம்ப வேண்டாம். குறிப்பாக வேலைக்காரர்கள் மேல் ஒரு கண் எப்போதும் இருக்கட்டும். பொருட்கள் திருட்டு போவதற்கோ நீங்கள் கை மறதியாக எங்காவது வைத்த பிறகு தொலைந்து போவதற்கோ வாய்ப்பிருக்கிறது. கைப்பொருளை எப்போதும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுவது நல்லது. வங்கியிலிருந்து பணம் எடுக்கும் போதோ அல்லது பெரிய தொகைகளை கையாளும்போதோ மிகவும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

வேலையில் இருப்பவர்கள் தங்களின் மேலதிகாரிகளிடம் அனுசரித்துப் போவது நல்லது. வேலையில் மாற்றம் ஏற்படும் காலம்தான் இது என்றாலும் தேவையில்லாமல் வேலையை விட வேண்டாம். பிறகு அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

செலவுகளைச் சுருக்க வேண்டியது அவசியம். வீண் செலவுகள் செய்யாதீர்கள். எவருக்கும் உதவி செய்வதாக வாக்கு கொடுத்தால் அதை நிறைவேற்றுவது கடினமாக இருக்கும். போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். அவைகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பது கடினம்.

தேவை இல்லாமல் யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம். கூடுமானவரை எல்லோரையும் அனுசரித்து போவது நல்லது. என்னதான் பிரச்னைகள் இருந்தாலும் பணவரவிற்கு கண்டிப்பாக குறைவு இருக்காது. எனவே எதையும் நீங்கள் சமாளித்து விடுவீர்கள்.

ரேஸ் லாட்டரி பங்குச்சந்தை சூதாட்டம் போன்றவைகள் இப்போது கை கொடுக்காது. சிறிது லாபம் வருவது போல் ஆசைகாட்டி பிறகு மொத்தமாக இருப்பதையும் இழக்க வைக்கும் என்பதால் மேற்கண்ட இனங்களில் கவனமுடன் இருக்கவும்.

ஜனன கால தசாபுக்தி அமைப்புகள் சரியாக இல்லாத மகர ராசிக்காரர்களுக்கு பங்குச்சந்தையில் சரிவுகள் வரலாம் என்பதால் இதில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது

எட்டாமிடம் வெளிநாட்டுத் தொடர்புகளைக் குறிக்கும் என்பதால் வெளிநாட்டுக்குப் போக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஏற்கனவே வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருப்பவர்கள் நன்மைகளை அடைவீர்கள். வயதானவர்கள் தங்கள் பிள்ளைகளை பார்ப்பதற்கோ, பேரன், பேத்தி பிரசவத்திற்கோ வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

நீண்ட தூர புனித யாத்திரைகள் இப்போது செல்ல முடியும். வயதானவர்கள் காசி கயா போன்ற புனித யாத்திரைகள் செல்வீர்கள். இஸ்லாமியர்களுக்கு புனித ஹஜ் பயணம் செல்லும் வாய்ப்பை இறைவன் அருளுவார். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஞானிகளின் ஜீவ சமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறும் பாக்கியம் கிடைக்கும்.

குலதெய்வத்தின் அருளைப் பெற வேண்டிய நேரம் இது என்பதால் முறையாக குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். தள்ளிப் போயிருந்த குலதெய்வ வழிபாட்டினை உடனடியாக நேர்த்திக்கடன்களுடன் நிறைவேற்ற முடியும்.

வயதானவர்கள் உடல்நலத்தில் எப்போதும் கவனம் வையுங்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதும் அவசியம். நீண்டகால குறைபாடுகளான சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகள் இப்போது வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

ஏற்கனவே இருக்கின்ற பழைய கடனை புதுக்கடன் வாங்கி அடைக்க நேரிடலாம். அல்லது தொழில் விரிவாக்கம், வியாபாரம், புதுத்தொழில் போன்றவற்றிற்காகவோ கடன் வாங்க நேரிடலாம். கடன் வாங்கும் முன் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவது நல்லது. எக்காரணத்தை முன்னிட்டும் மீட்டர் வட்டி போன்ற அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம்.

வம்பு வழக்கு வரும் நேரம் இது. தேவையில்லாமல் எவரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். யாரிடமும் அனாவசியமாக பேசி சிக்கலை உண்டாக்கிக் கொள்ள வேண்டாம். ஏதேனும் கோர்ட் போலிஸ் ஸ்டேஷன் வழக்கு போன்றவைகளில் சிக்கி அலையக் கூடிய வாய்ப்பு இருப்பதால் எல்லாவற்றிலும் உஷாராக இருங்கள்.

நிலம் வீடு போன்றவைகளை வாங்கும்போது பொறுமை தேவை. அவசரம் வேண்டாம். வில்லங்கம் சரியாகப் பார்க்கவும். வில்லங்கம் உள்ள இடத்தை தெரியாமல் வாங்கிவிட்டு பின்னால் கோர்ட் கேஸ் என்று அலைய வாய்ப்பிருப்பதால் ஆரம்பத்திலேயே அனைத்திலும் உஷாராக இருங்கள்.

அரசு தனியார் துறை ஊழியர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். விருப்பம் இல்லாத ஊருக்கு மாற்றம் அல்லது துறைரீதியான தேவையில்லாத மாற்றங்கள் நடந்து உங்களை சங்கடப்படுத்தலாம். அனைத்தையும் பொறுமையாக எதிர்கொள்வதன் மூலம் சிக்கல்களில் இருந்து நல்லபடியாக வெளிவர முடியும்.

கிரகங்கள் தரும் சில மாற்றங்கள் எதற்காக நடந்தது என்று அந்த சமயத்தில் நமக்குப் புரியாவிட்டாலும் சில கஷ்டங்களுக்குப் பின் நன்மைகள் நடக்கும்போது நமக்குத் தெளிவாகும் என்பதால் மகர ராசிக்காரர்கள் நாளை நன்றாக இருக்கப் போவதற்கான அடிப்படை மாற்றங்களைத் தர இருக்கும் இந்தப் பெயர்ச்சியை வரவேற்கலாம்.

உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு:

நண்பர்கள் மூலம் பொருளாதார உதவிகள் ஆதரவான போக்கு மற்றும் அனுசரணையான பேச்சு இருக்கும். கோர்ட்கேஸ் போன்ற வழக்குகளில் சிக்கி அவதிப்பட்டவர்களுக்கு நல்ல திருப்புமுனையான நிகழ்ச்சிகள் நடந்து உங்கள் பக்கம் அனைத்தும் சாதகமாகும். இந்த பெயர்ச்சியால் உங்களுக்கு நல்ல பலன்களே அதிகம் நடக்கும். பெயர்ச்சியின் பிற்பகுதி உங்களுக்கு மிகவும் நல்ல பணவரவைத் தரும். குறிப்பாக எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் இருப்பாவர்கள் மிகுந்த முன்னேற்றம் அடைவீர்கள். எனவே அதற்கேற்ப திட்டங்களைத் தீட்டி வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளுங்கள்.

திருவோணம் நட்சத்திரக்கார்களுக்கு:

வெளிநாட்டு தொடர்பால் நன்மை அடைவீர்கள். வெளிநாடு போகவும் வாய்ப்பு இருக்கிறது. வேற்று மதத்தினர் உதவுவார்கள். தந்தைவழி உறவில் மிகவும் நல்ல பலன்கள் இருக்கும். இதுவரை போகாத ஊர்களுக்கு செல்வீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். பிள்ளைகள் விஷயத்தில் செலவுகள் இருக்கும். பிள்ளைகளின் படிப்பு செலவு அவர்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கான அடித்தளச் செலவுகள் போன்றவைகளுக்காக இருக்கும் சேமிப்பை எடுத்து செலவிட வேண்டியது இருக்கும். இதுவரை உங்களை விரோதியாக நினைத்தவர்கள் மனம் மாறி நட்பு பாராட்டுவார்கள்.

அவிட்டம் நட்சத்திரக்கார்களுக்கு:

ஏற்றுமதி இறக்குமதி போன்ற தொழில் தொடர்புடையவர்கள் வெளிநாடுகளில் வர்த்தக அமைப்புகளை வைத்திருப்பவர்கள், மாநிலங்களுக்கு இடையே தொழில் செய்பவர்கள் போன்றவர்களுக்கு தொழில்ரீதியான பயணங்கள் இருக்கும். நீண்டதூரப் பயணங்களால் லாபங்கள் இருக்கும். வெளிநாட்டுப் பயணங்களும் உண்டு. யூகவணிகம் பங்குச்சந்தை ரேஸ் லாட்டரி போன்றவைகளில் ஈடுபாடு காட்டாமல் இருப்பது நல்லது. கடன்தொல்லையில் அவதிப்பட்டுக் கொண்டு இருப்பவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும். கடனை அடைக்க வழிகள் தெரியும்.

பரிகாரங்கள்

ஒரு சனிக்கிழமை ராகுகாலத்தில் கருப்பு நிறமுள்ள விதவைப் பெண்மணி ஒருவரை மேற்கு நோக்கி நிறுத்தி வைத்து ஒரு கருப்புநிற பிளாஸ்டிக் தட்டில் ஒரு கருப்புப்புடவை ரவிக்கை நான்குகிலோ கருப்பு உளுந்து ஒரு கருப்பு பென்சில் பாக்கெட் ஒரு கண்மை டப்பா வைத்து தானம் செய்யுங்கள்.

1 comment :

  1. Uthiram alla uththidadam entru vasakarkalakiya nam thiruththi padippom

    ReplyDelete