Sunday, April 21, 2024

குருஜியின் வார ராசி பலன்கள் (22.04.2024–28.04.2024)

 

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

மேஷம்:

ராசிநாதன் செவ்வாய் 12ம் இடத்தில் இருந்தாலும் தன ஸ்தானமான இரண்டாம் இடத்தில் குரு, சூரியன் இணைவு இருப்பதாலும், சூரியன் உச்ச வலுவுடன் உள்ளதாலும் மேஷ  ராசிக்காரர்கள் சிக்கல்களில் இருந்து வெளியே வரும் வாரம் இது. அதேநேரத்தில் சனியின் பார்வை ராசிக்கு இருப்பதால் உங்களில் சிலருக்கு மனம் பதற்றப்படும் விஷயங்கள் நடக்கும். எதிலும் நிதானமாகவும் இருக்க வேண்டிய வாரமிது.  12 ல் இருக்கும் புதனால் சிலருக்கு கொடுக்கல் வாங்கல்களில் ஏமாற்றம் இருக்கும் என்பதால் பண விஷயத்தில் எச்சரிக்கை தேவை.

உதவி ஸ்தானம் வலுப்பெறுவதால் இதுவரை யாரிடமாவது நீங்கள் உதவி கேட்டு அதைச் செய்ய முடியாத நிலையில் இருந்தவர்கள் இந்த வாரம் உங்களுக்கு உதவுவார்கள். பிள்ளைகள் விஷயத்தில் ஏதேனும் மனவருத்தம் வரலாம். நிதானம் தேவைப்படும் வாரம் இது. 25  ம் தேதி இரவு 8.00 மணி முதல் 28 ம் தேதி காலை 4.28 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மனம் ஒரு நிலையில் இருக்காது. யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

ரிஷபம்:

முற்பகுதியில் ராசிநாதன் சுக்கிரன் ராகுவுடன் இருந்தாலும், பிற்பகுதியில் தன் வீட்டை தானே பார்க்கும் நிலையில் இருப்பதால் ரிஷபத்தினர் சோதனைகளை சாதனைகளாக மாற்றிக் கொள்ளும் வாரம் இது.  12 ல் உள்ள குரு, எட்டுக்குடையவன் என்பதால் உங்களில் சிலருக்கு வருமானம் நன்றாக வந்தாலும் அது முழுவதும் விரையமாகும் நிலை உண்டு. உங்களில் ரோகிணி நட்சத்திரக்காரர்கள் இந்த வாரம் தேவையின்றி செலவு செய்வீர்கள். 11 ல் ராகு இருப்பதால் அனைத்து விஷயங்களிலும் உறுதியுடன் செயல்படுவீர்கள். இது உங்களுக்கு நல்ல வாரம்தான்.

வியாபாரிகள், விவசாயிகள், சொந்தத்தொழில் செய்பவர்கள் எந்த ஒரு நிலையிலும் அடுத்தவர்களை நம்ப வேண்டாம். என்னதான் வேலை செய்தாலும் தகுந்த பிரதிபலன் கிடைப்பது கஷ்டமாக இருக்கும். உங்களில் பலர் கடந்த கால பொருளாதார பிரச்சனைகளால் துவண்டு போய் இருப்பீர்கள். 28 ம் தேதி அதிகாலை 4.28 மணி முதல் 30 ம் தேதி காலை 10.36 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

மிதுனம்:

ஐந்திற்குடைய சுக்கிரன் ராகுவுடன் இணைந்திருப்பதால் இந்த வாரம் நீங்கள் சொல்வதை பிள்ளைகள் கேட்காமல் அவர்கள் இஷ்டத்திற்கு ஏதாவது செய்து, அது சிக்கலில் முடிந்து, கடைசியில் அந்த சிக்கலையும் நீங்களே தீர்க்க வேண்டியது வரும். பிள்ளைகளின் மேல் ஒரு கண் வைக்கவும். உங்களில் திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் ஏதேனும் ஒரு விஷயத்தில் குழப்பமாகி முடிவெடுக்க முடியாத நிலையில் இருப்பீர்கள். நீண்டநாள் இருந்து வந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும்.

விலை உயர்ந்த பொருட்களை கவனமுடன் பாதுகாக்க வேண்டியது அவசியம். எவரையும் நம்பி ஜாமீன் போடுவதோ, யாருக்கும் வாக்கு கொடுப்பதோ கூடாது. போட்டி பந்தயங்கள், லாட்டரி சீட்டு, ரேஸ் போன்றவை தற்போது கை கொடுக்காது. நெருங்கியவர்களே எதிராகத் திரும்ப வாய்ப்பு இருப்பதால் அனைத்திலும் கவனமாக இருங்கள். உறவினர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்கள், சிறு சண்டைகள் வரலாம். வேலைப்பளு அதிகம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு பண விஷயத்தில் சில துரோக அனுபவங்கள் கிடைக்கும் வாரம் இது. உங்களில் ஆயில்யம் நட்சத்திரக்காரர்களுக்கு யாரையாவது நம்பி ஏமாறும் கசப்பான அனுபவம் உண்டு. தகுதி இல்லாதவரை நம்புவது உங்கள் குற்றம் என்பதால் ஏமாற்றுபவரை குறை சொல்லி பிரயோஜனம் இல்லை. எட்டில் சனி கடுமையான நிலையில் இருப்பதால் கடக ராசிக்காரர்களுக்கு பணம், உறவு, நட்பு ஆகியவைகளை பற்றி கிரகங்கள் சொல்லி கொடுக்கும் வாரம் இது. ஆயினும் எதுவும் எல்லை மீறாது. கவலை வேண்டாம்.

சனி,  பாபத்துவம் அடைந்திருப்பதால் வாழ்க்கைத் துணையுடன் சண்டை போடுவீர்கள். திடீரென மூட்அவுட் ஆவீர்கள். முகத்தை சிடுசிடுவென மாற்றிக்கொள்வீர்கள். நண்பர்கள் உங்களை புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறிப் போவார்கள். நீங்களே இந்த வாரம் மற்றவர்களுக்கு புரியாத புதிராகத்தான் இருப்பீர்கள்.  அனைத்து விஷயங்களிலும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவது நல்லது. பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு நிம்மதி தெரியும் வாரம் இது.

சிம்மம்:

யோகாதிபதி செவ்வாய் எட்டாம் இடத்தில் இருந்தாலும் ராசிநாதன் சூரியன் குரு, சுக்கிர இணைவில் இருக்கும் நல்ல வாரம் இது. கடந்த சில வாரங்களாக இருந்த சூரிய, ராகு இணைவால் ஆரோக்கியம் இழந்தவர்கள் இனிமேல் நல்ல வாழ்க்கைக்கு திரும்புவீர்கள். சிலருக்கு கடந்த சில வாரங்களாக வருமானம் இல்லை என்பதால் இந்தவாரம் செலவுகள் அதிகம் இருக்கும். குறிப்பிட்ட பலனாக எவரிடமும் கருத்து மோதல்களிலோ, வாக்குவாதங்களிலோ ஈடுபட வேண்டாம். யாரையாவது நீங்கள் கோபப்பட்டு திட்டினால் அது நீண்டநாள் மனஸ்தாபத்தில் கொண்டு போய்விடும்.

பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு இருந்து வந்த குழப்பங்கள் தீரும். ராசிநாதன் குரு, சுக்கிர  இணைவில் அதிக சுபத்துவமாக இருப்பதால் பொருளாதார சிக்கல்கள் தீரும். உங்களில் சிலருக்கு இந்த வாரம் ஆன்மீக தொடர்புகள் கிடைக்கும். எதிர்பாராத இடத்தில் இருந்து நல்ல தகவல் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். கலைஞர்கள் வளம் பெறுவார்கள். பெரும்பாலான கிரகங்கள் நல்ல நிலையில் உள்ளதால் சோதனைக்குப் பிறகு சிம்மத்தினர் சாதிக்கும் வாரம் இது.

கன்னி:

வார பிற்பகுதியில் யோகாதிபதி சுக்கிரன் எட்டில் மறைந்து, குருவோடும், சூரியனோடும் இணைந்து தொல்லைகளைக் கொடுக்கும் சவாலான வாரம் இது. உங்களில் அஸ்தத்தில் பிறந்தவருக்கு சகல விஷயத்திலும் நெருக்கடிகள் இருக்கும். குறிப்பாக இப்போது முதுகில் குத்துதல், காலை வாருதல் போன்ற நம்ப முடியாத எதிர்மறை விளைவுகளால் மனக்கலக்கம் அடைவீர்கள். ஆயினும் யோகாதிபதி சனி  வலுவாக இருப்பதால் நீங்கள் எதிரிகளை ஜெயிக்கும் வாரம் இது. குறிப்பாக பணம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளும் வாரம் இது.

மனதில் தைரியம் இருக்கும். வேலை, தொழில் விஷயங்களில் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று மனதைப் போட்டுக் குழப்பிக் கொண்டும், சஞ்சலப்பட்டுக் கொண்டும் இருந்தவர்களுக்கு இனிமேல் தெளிவு பிறக்கும். சுக்கிரன் எட்டில் இருப்பதால், வளைகாப்பு, பூப்புனித நீராட்டு விழா போன்ற பெண்கள் சம்பந்தப்பட்ட மங்கள நிகழ்ச்சிகளால் செலவு வரும். இந்த வாரம் ரேஸ், லாட்டரி, பங்குச்சந்தை, சூதாட்டம் போன்றவைகள் கை கொடுக்காது. மேற்கண்ட இனங்களில் கவனமுடன் இருக்கவும்.

துலாம்:

ராசிநாதன் சுக்கிரன் ஏழில் அமர்ந்து ராசியைப் பார்க்கும் வாரம் இது. சுக்கிர தயவால் உங்களை எதிர்த்து கொண்டிருந்தவர்கள் இப்போது அடிபணிவார்கள். உங்களின் கருத்துக்களுக்கு இதுவரை கிடைக்காத அங்கீகாரம் தற்போது கிடைக்கும். உங்களில் விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு குடும்ப விஷயங்களில் நல்ல திருப்பங்கள் உண்டு. குடும்பத்து பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். குழந்தைகளின் எதிர்கால நன்மைக்கான சில காரியங்களை இப்போது செய்ய முடியும்.

இளைய பருவத்தினர் சிலருக்கு காதல் வரும். ராகு-கேதுவால் சிலருக்கு மறைமுகமான வருமானங்கள் இருக்கும். இதுவரை எதிர்ப்பு உருவாகிக் கொண்டிருந்த விஷயங்கள் இப்போது சாதகமாக முடியும். இன்னும் இரண்டு வாரங்களில் குரு எட்டாம் வீட்டிற்கு சென்றவுடன் குடும்பத்தில் ஏற்பட்ட உறவுப் பாதிப்புகள் மெல்ல மெல்ல குறையும். இந்த வாரம் வருமானம் வரும் என்பதால் இருக்கும் பிரச்னைகளைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. நிதானமாக இருப்பதன் மூலம் சாதிக்கும் வாரம் இது.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களின் தொழில்துறை சிக்கல்கள் தீரும் வாரம் இது. ராசிநாதன் செவ்வாய் ஐந்தாமிடத்திற்கு மாற இருப்பதால் உங்களில் சிலருக்கு வெகுநாட்களுக்குப் பிறகு இந்த வாரம் வருமானம் உண்டு. சுக்கிரன் ஆறில் குருவுடன் இருப்பதால் சிலர் மறைமுகமான தொழில் வேலைகளில் ஈடுபட்டு பெயரைக் கெடுத்து கொள்ளாமல் வெற்றியும் பெறுவீர்கள். உங்களில் அனுஷம் நட்சத்திரக்காரர்கள் மேன்மை பெறுவீர்கள். சிலருக்கு வருமானமே இல்லாமல் செலவுகள் இருக்கும். கேட்டை நட்சத்தினருக்கு தொழில்ரீதியான லாபங்கள் இருக்கும்.

திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு தடைபட்ட திருமண பேச்சு இப்போது கூடிவரும். குறிப்பிட்ட சிலர் விரும்பிய வாழ்க்கையை அடைவீர்கள். வீட்டிற்குப் பயந்து காதலை மனதிற்குள் பூட்டி ஒளித்து வைத்திருந்தவர்கள் தைரியம் வந்து பெற்றோரிடம் சொல்வீர்கள். வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் இதுவரை இருந்து வந்த தடங்கல்களும் எதிர்மறை அனுபவங்களும் இனிமேல் இருக்காது. தொழில் நல்லபடியாக நடக்கும். வியாபாரம் பெருகும். 

தனுசு:

ராசிநாதன் குரு நட்பு நிலையில் உச்ச சூரியனுடன் அமர்ந்திருக்கும் நல்ல வாரம் இது. ராசியின் யோகர்களான சூரியன், சந்திரன் இருவரும் நல்ல நிலையில் இருப்பதால் தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன நிம்மதி உண்டு குறிப்பாக பூராடம் நட்சத்திரக்காரர்கள் நம்பிக்கை கிடைக்கப் பெறுவீர்கள். இளைய பருவத்தினருக்கு  எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரமாக அமையக்கூடிய சம்பவங்களும் அறிமுகங்களும் இப்போது நடக்கும். இதுவரை இல்லாத அளவிற்கு மனதில் நிம்மதி இருக்கும்.

பொதுவாக தனுசுவினர் பொறுமைசாலிகளாக இருப்பீர்கள். பள்ளிப் படிப்பை விட அனுபவத்தை வைத்தே வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். சுலபத்தில் உங்களை யாரும் ஏமாற்ற முடியாது. யாராவது உங்களை அன்பு காட்டி ஏமாற்றினால்தான் உண்டு. பெண்களுக்கு இந்த வாரம் எதிர்பார்த்த வாய்ப்புகள் வரும். சுற்றுப்புறங்களில்  பிறரால் மதிக்கப்பட்டு பாராட்டுப் பெறுவீர்கள். உங்களில் சிலருக்கு வந்து கொண்டிருந்த நிரந்தர வருமானம் போய் விட்டதே என்ற கவலை இருக்கும். ஆயினும் அது இந்த வாரம் சரி செய்யப்படும்.

மகரம்:

ராஜயோகாதிபதி சுக்கிரன், எட்டுக்குடையவனுடன் இணைந்து பத்தாம் வீட்டைப் பார்ப்பதால் மகர ராசிக்கு வெளிப்படையாக எதுவும் தெரியாமல் மறைமுக நல்லவை நடக்கும் வாரம் இது. நான்குக்குடைய செவ்வாயும் மூன்றாம் அதிபதி குருவும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். மகரத்திற்கு இப்போது வேலை, தொழிலில் லாபம் உண்டு.  சனியினால் இதுவரை நஷ்டப்பட்ட தொழில்துறையினர் இனிமேல் வாய்ப்புகளை பெறுவீர்கள். நூதனக் கருவிகளை இயக்கும் துறையினர் முன்னேற்றம் அடைவார்கள். உங்களின் திறமைகள் இப்போது வெளிப்படும். எதிரிகளை வெல்வீர்கள்.

மகர ராசிக்கு கெடுபலன்கள் எதையும் சொல்வதற்கு இல்லை. அதேநேரத்தில் எதுவும் படிப்படியாகத்தான் நடக்கும். நொந்து கொள்ளாதீர்கள். கடந்த சில வருடம் நீங்கள் அனுபவித்த தொல்லைகள் இரண்டு நிமிடத்தில் போய் விடாது. அப்படிப் போனால் அது தொல்லையாக இருக்காது. உங்களின் நம்பிக்கை திரும்பக் கிடைக்கும் வாரம் இது. அரசு, தனியார்துறை ஊழியருக்கு இந்த வாரம் நல்ல வாரமே. காவல்துறை போன்ற அதிகாரம் மிக்க துறையினர் வளம் பெறுவார்கள். கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. மாணவர்கள் இனிமேல் படிப்பீர்கள்.

கும்பம்:

பாக்கியாதிபதி சுக்கிரன் மூன்றாம் வீட்டில் அமர்ந்து, தனது வீட்டையே பார்க்கும் யோக வாரம் இது. கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால் எவ்வித தடங்கலும் இல்லாமல் நினைத்த காரியம் நன்றாகவே முடியும். உங்களில் சதயம்    நட்சத்திரக்காரர்களுக்கு இருந்து வந்த கடன் தொல்லை, உடல்நலக் கோளாறுகள் தீரும். பெண்களுக்கு நல்ல பலன்கள் இருக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கும், குடும்பத்தலைவியாக இருக்கும் பெண்களுக்கும் நன்மைகள் நடைபெறும். மனம் தெளிவாக இருக்கும். வருமானத் தொல்லைகள் இருக்காது. 

குடும்பாதிபதி குரு யோகாதிபதி சுக்கிரனுடன் இருப்பதால் குடும்ப விஷயங்களில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய நன்மைகள் இருக்கும். வார ஆரம்பத்தில் வேலை, தொழில் பற்றிய மனக்கலக்கம் உருவானாலும் நண்பர்கள் உதவியுடன் பிரச்சினையை சமாளிக்க முடியும். மருத்துவத் துறையில் இருப்பவர்கள், காய்கறி, மளிகை கடைக்காரர்கள், இறைச்சி வியாபாரிகள் போன்றவர்களுக்கு நன்மைகள் இருக்கும். சமீப கால கடன் பாதிப்பில் இருந்து சிலர் மீண்டு வரும் வாரம் இது.

மீனம்:

வார ஆரம்பத்தில் ஏழில் இருக்கும் கேதுவாலும், பனிரெண்டில் உள்ள சனியாலும் மீனத்தினருக்கு நண்பர்கள் விஷயத்தில் சண்டை, சச்சரவுகள், கருத்து வேறுபாடு தோன்றும். எதிலும் விட்டுக் கொடுத்து போவது நல்லது. மற்றவர் செய்யும் தவறையும் பொறுத்துப் போங்கள். உங்களில் சிலருக்கு இந்த வாரம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பணவரவு இருக்காது. அதே நேரத்தில் ராசிநாதன் வலுவுடன்  இருப்பதால் எத்தகைய பிரச்னைகளையும் சமாளிப்பீர்கள். இரண்டில் குரு, சுக்கிரன்  இருப்பதால் இது யோக வாரம்தான். 

மீன ராசிக்கு இந்த வாரம் பெரிய கஷ்டங்கள் எதுவும் இல்லை. ஆறாம் அதிபதி வலு பெறுவதால் எந்த ஒரு நல்லதும் கடுமையான முயற்சிகளுக்குப் பிறகே கிடைக்கும். மறைமுக எதிரிகளும், போட்டிகளும் இருக்கும். எந்த ஒரு விஷயமும் நீண்டமுயற்சிக்கு பின்பே வெற்றியைத் தரும். கடினஉழைப்பும் விடாமுயற்சியும் தேவைப்படும். 23 ம் தேதி காலை 9.18 மணி முதல் 25 ம் தேதி இரவு 8.00 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...

https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537

No comments :

Post a Comment