Saturday, January 27, 2024

குருஜியின் வார ராசி பலன்கள் (29-01-2024 – 04-02-2024)#adityaguruji


ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

மேஷம்:

பதினொன்றில் சனி, ராசியில் குரு இருப்பது சிறப்பான நிலை என்பதால் மேஷ ராசிக்கு இது தொல்லைகள் இல்லாத வாரமாக இருக்கும். கோட்சார ரீதியில் கிரகங்கள் உங்களுக்கு சாதகமான நிலையில் இருக்கின்றன. ஆறில் இருக்கும் கேதுவும் உங்களின் ஆற்றலை அதிகப்படுத்துவார். ஞாயிறு, திங்கள் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். பிள்ளைகளால் நல்ல செய்தி வரும். எதிர்ப்புகள் அனைத்தும் அடிபணியும் வாரம் இது. தாயார் வழியில் நல்ல விஷயங்கள் நடக்கும். அம்மாவின் ஆசியைப் பெறுவீர்கள். மேஷத்திற்கு இப்போது கெடுதல்கள் எதுவும் இல்லை.

இந்த வாரம் ஆரம்பிக்கும் பத்தாமிட சூரியன், புதன் இணைவு வேலையில் சிறிய பிரச்னைகளை உண்டு பண்ணினாலும் எதுவும் கைமீறி போகாது. மேலதிகாரி நீங்கள் சொல்வதை முணுமுணுப்புடன் ஏற்றுக் கொள்வார். சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், தூரப் பிரயாணம் போன்றவைகள் இருக்கும். 4-ந்தேதி அதிகாலை 1.04 மணி முதல் 6-ந்தேதி காலை 7.35 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதியவர்களை அறிமுகம் செய்து கொள்வதோ, முக்கிய முடிவுகள் எடுப்பதோ வேண்டாம். குறிப்பாக பெண்களிடம் விலகி இருக்கவும்.

ரிஷபம்:

சிம்மத்தை சனி பார்க்க, சூரியன் சனியின் வீட்டில் இருப்பதால் இன்னும் சில வாரங்களுக்கு ரிஷப ராசிக்காரர்கள் தந்தையின் ஆரோக்கியம் மற்றும் தந்தையுடனான உறவில் கவனம் கொள்ள வேண்டியதாக இருக்கும். உங்களில் சிலருக்கு கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். இன்னும் சிலருக்கு ஞானிகள் தரிசனமோ, தெய்வ தரிசனமோ கிடைக்கும். நீண்டநாட்களாக போக முடியாத புனிதத் தலங்களுக்கு போக முடியும். 11 ஆம் இடத்தில் ராகு இருப்பதால் அன்னிய, மத, இன மொழிக்காரர்களால் உதவிகளும், வழிகாட்டுதலும் இருக்கும்.

என்னதான் இருந்தாலும் பெரிய பின்னடைவுகள் இல்லாத வாரம் இது. கெடுதல் செய்யும் கிரகங்கள் வலுவிழந்து இருக்கிறார்கள். சுக்கிரன், செவ்வாய் இணைவதால் வாழ்க்கைத் துணை வழியில் கோபம் வரக்கூடிய சம்பவங்கள் சிலருக்கு நடைபெறும். பொறுமை தேவை. சொந்தவீடு இல்லாத சிலருக்கு கடன் வாங்கி வீடு அமைவதற்கான ஆரம்பங்கள் இருக்கும். சிலருக்கு பெண்கள் சம்பந்தப்பட்ட அனுபவங்கள் கிடைக்கும். வாகனம் வாங்குவீர்கள். அனைத்து ஜீவன அமைப்புக்களும் நல்ல லாபத்துடன் இயங்கும். பணவரவு இருக்கும்.

மிதுனம்:

இந்த வாரம் முதல் ராசிநாதன் புதன் எட்டில் மறைந்து பலவீனமாகிறார். இந்த நிலை உங்களுக்கு எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு மட்டும் தன்னம்பிக்கை இழப்பைக் கொடுத்தாலும் சுக்கிரன் ராசியைப் பார்ப்பதால் நீங்கள் மனஉறுதி பெறும் வாரம் இது. யோகாதிபதி சுக்கிரன், சனி வலுவாக இருப்பதால் மிதுனத்தினர் முடிவில் எதிலும் வெற்றியடைவீர்கள். கடந்த காலங்களை போல அல்லாமல் இப்போது கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால் எதற்கும் இனிமேல் கவலைப் படத் தேவையில்லை. மிதுனத்திற்கு பெரிய கஷ்டங்கள் எதுவும் இல்லை.

தூர இடங்களில் இருக்கும் குழந்தைகளிடமிருந்து நல்ல தகவல் வரும். எட்டில் இருக்கும் புதன் சில நிலைகளில் பொருளாதார பாதிப்பினைக் கொடுத்து மன அழுத்தத்தை ஏற்படுத்தினாலும் மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பணத் தட்டுப்பாடு இருக்காது. அதே நேரத்தில் கடந்த காலத்தில் அஷ்டமச்சனியினால் பாதிக்கப்பட்ட வேலை தொழில் வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் இனிமேல் மிகவும் நன்றாகவே இருக்கும். ஆகவே எதிலும் உற்சாகத்தை மட்டுமே மிதுனத்தின் வாரம் இது.

கடகம்:


கடக ராசி இளைஞர்களுக்கு வேலை அமைப்புகளில் ஏமாற்றங்கள் இருக்கும் என்பதால் அலுவலகங்களில் கவனம் தேவை. வேலை வாங்கி தருவதாக யாராவது பணம் கேட்டால் கண்டிப்பாக கொடுக்க வேண்டாம். ஏமாற்றப்படுவீர்கள். தேவையற்ற விஷயத்திற்கு கடன் வாங்கக் கூடிய சூழல்கள் உருவாகும். இளைஞர்கள் சிலர் இந்த வாரம் பெங்களூர் அல்லது வடக்கே உள்ள நகரங்களில் வேலை கிடைத்துச் செல்வீர்கள். வெளிநாடு யோகம் உண்டு. இளைய பருவத்தினருக்கு முக்கியமான திருப்பு முனைகள் இருக்கும். யாரையும் நம்ப வேண்டாம்.

அஷ்டமச் சனி நடப்பதால் சோம்பலாக எதிலும் ஒரு பிடிப்பின்றி இருப்பீர்கள். அருகில் உள்ள பழமையான ஈஸ்வரன் கோவிலுக்கு சென்று காலபைரவரை வேண்டுங்கள். அவர் ஒருபோதும் உங்களைக் கைவிட மாட்டார். இளைஞர்களுக்கு எதிர்ப்புகள் இருக்கும். நண்பனைப் போல உங்களுடன் சிரித்துப் பழகிய ஒருவர் துரோகியாக மாறலாம். புதிய முயற்சிகள், ஆரம்பங்கள் எதையும் செய்ய வேண்டாம். விரிவாக்கங்கள், கிளைகள் ஆரம்பித்தல் போன்றவைகளையும் செய்யக்கூடாது.

சிம்மம்:

ராசிநாதன் சூரியன் ஆறில் இருந்தாலும், ராசியை சனி பார்ப்பதால் இந்த வாரம் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக நடப்பது போல தோன்றினாலும் பிறகு வேகமிழந்து ஏமாற்றங்களை தரும். சிலருக்கு ஆரோக்கிய குறைபாடு வரும். மருத்துவச் செலவுகள் உண்டு. தந்தைவழி பெண் உறவினர்கள் வகையில் விரயங்கள் உண்டு. எட்டில் ராகு இருப்பதால் பண விவகாரங்களில் சங்கடமான சம்பவங்கள் இருக்கலாம். குடும்பப் பிரச்னைகளை சற்று நிதானத்துடன் கையாள்வது நல்லது. இந்த வாரம் ஒருவரையும் நம்ப வேண்டாம்.

கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால் கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ராசிக்கு குரு பார்வை இருப்பது எந்த நிலையிலும் கை கொடுக்கும். உங்களுடைய திறமைகள் வெளிப்படும். பெண்கள் விஷயத்தில் செலவு இருக்கும். அலுவலகங்களில் பாராட்டுக்களும் உயர்நிலையில் இருப்பவரின் அறிமுகமும் அவரால் கவனிக்கப்படுதலும் நடக்கும். தொழில் வேலை வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் நல்ல பலன்கள் நடக்கும். பொருளாதார முன்னேற்றம் இருப்பதற்கு அச்சாரம் போடுகின்ற வாரமிது.

கன்னி:


கன்னி ராசிக்கு எல்லா பிரச்சினைகளும் இறைவனின் அருளால் நல்லபடியாக, சாதகமாக முடியும் வாரம் இது. உங்களில் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு துறை ரீதியான நெருக்கடிகள் இருக்கும். ஐந்தில் சூரியன், நான்கில் செவ்வாய் இருப்பதால் செய்வது தவறாகவே இருந்தாலும் அதை ஒத்துக்கொள்ள மாட்டீர்கள். உங்களின் பிடிவாத குணம் அதிகரிக்கும். பணிபுரியும் இடங்களில் உங்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த சிலர் முயற்சிப்பார்கள். வாரம் முழுவதும் சந்திரன் நன்மைகளை தரும் அமைப்பில் இருப்பதால் குறைகள் சொல்ல எதுவும் இல்லை.

சுக்கிரன் செவ்வாயுடன் இணைவதால் வாக்குறுதியை நிறைவேற்றுவது கடினம். யாருக்கும் அவசரப்பட்டு வாக்குத் தர வேண்டாம். ராசியில் கேது இருப்பதால் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள். ஒரு சிறிய உடல் நலக் குறைவு என்றாலும் உடனே கவனியுங்கள். 1,2,4 ஆகிய நாட்களில் பணம் வரும். ஏற்றுமதி இறக்குமதி மற்றும் மாநிலங்களுக்கு இடையே தொழில் செய்பவர்களுக்கு இந்த வாரம் யோகத்தை தரும். நட்புக் கிரகங்கள் சுபத்துவமாக இருப்பதால் தொல்லைகள் இல்லாத வாரம் இது.

துலாம்:

ராசிநாதன் சுக்கிரன் மூன்றாம் வீட்டில் செவ்வாயுடன் இணைந்திருந்தாலும் நல்லவை நடக்கும் வாரம் இது. துலாம் ராசிக்காரர்களுக்கு தொழில் சிக்கல்கள் அனைத்தும் இனி தீரும். இதுவரை இருந்து வந்த தடைகள் அகலும். சிலருக்கு அரசு வேலை, அல்லது அரசு உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் தொல்லைகள் இருக்காது. டார்கெட்டை முடிக்க முடியும். வீண்செலவுகள் இருக்கும். சிக்கனமாக இருப்பது நல்லது. சனி வலுவாக இருப்பதால், தவிர்க்க இயலாத விஷயத்திற்காக பொய் சொல்வீர்கள்.
துலாத்திற்கு சந்தோசம் தரும் வாரம் இது.

வியாபாரம், வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி, சிகப்பு மற்றும் வெள்ளை நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு விரயங்கள் இருக்கும் என்றாலும் வருமானம் வந்து அனைத்தையும் ஈடு கட்டும்.. வெளிநாடு சென்று வேலை செய்வதற்கான முயற்சிகள் செய்வீர்கள். வாழ்க்கைத் துணைவர் உதவியாக இருப்பார். ஜீவன அமைப்புகள் சுமுகமாக நடைபெறும். பெண்களை விட்டு சற்றுத் தள்ளியே இருங்கள். யாரிடமாவது அகப்பட்டு திண்டாடும் நிலை உண்டு. குறைகள் இல்லாத வாரம் இது.

விருச்சிகம்:


ராசிநாதன் செவ்வாயின் பரிவர்த்தனை, சுக்கிர இணைவு, குருவின் பார்வை என, கிரக நிலைகள் இந்த வாரம் விருச்சிக ராசிக்கு மிகவும் நல்லவிதத்தில் இருப்பதால் நன்மைகள் உள்ள வாரம் இது. வார ஆரம்பத்தில் லாப ஸ்தானத்தில். கேது இருப்பதால் சிலருக்கு அதிர்ஷ்டமான சம்பவங்கள் நடக்கும். சூரிய வலுவால் இந்தவாரம் யோகமாக இருக்கும். விருச்சிகத்தின் முன்னேற்றத்திற்கு அடித்தளம் போடும் வாரம் இது. இப்போது ஏற்படும் சில அறிமுகங்களால் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்வீர்கள்.

ஐந்தாமிட ராகுவால் சிலருக்கு இந்த வாரம் குழந்தைகளால் சங்கடங்கள் இருக்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்காது. அதற்காக கோபப்பட வேண்டம். நொந்து கொள்ள வேண்டம். இது உங்கள் தகப்பனாரிடம் நீங்கள் கட்டுப்பெட்டியாக வாழ்ந்த காலம் போல இல்லை. இது இளைஞர்களின் காலம். செல்போன் யுகம். குழந்தைகளின் விஷயத்தை பக்குவமாக கையாள்வதன் மூலம் இந்தவாரம் நிம்மதி கிடைக்கும். அலுவலகத்தில் வீண் வாக்குவாதங்களைத் தவிருங்கள். இளைஞர்களுக்கு பிரச்னைகள் விலகி நிம்மதி இருக்கும்.

தனுசு:

ராசிநாதன், குரு ராசியைப் பார்ப்பதோடு பரிவர்த்தனையும் ஆவதால், இந்த வாரம் தனுசு ராசிக்காரர்களுக்கு நிம்மதியைத் தரும். குறிப்பாக தொழில்ரீதியாக சிக்கல்களில் இருக்கும் பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு இனி சிரமங்கள் இருக்காது. மனதில் இருக்கும் இனம் புரியாத கலக்கத்தையும், பயத்தையும் உதறித் தள்ளுங்கள். உங்களை மீறி யாரும் உங்களை ஒன்றும் செய்துவிட முடியாது. ராசிநாதன் குரு இனிமேல் உங்கள் ஆற்றலை வெளிப்படுத்த துணை புரிவார். வேதனைகள் இனி சாதனை ஆகும் வாரம் இது.

ஏழரைச் சனி முடிந்து விட்டதால் இனிமேல் வாழ்க்கை நல்லவிதமாக செட்டில் ஆகும். தனுசுக்கு விடிவு எனும் கதவு திறந்து விட்டது. முயற்சிகள் பலிக்கும். எதிலும் நம்பிக்கையோடும் அக்கறையோடும் உழைப்பீர்கள். பெண்களால் மனச்சங்கடங்கள் வரலாம். சிலருக்கு சொந்தவீடு அமைவதற்கான ஆரம்பங்கள் நடக்கும். சகோதர சகோதரிகளின் விஷயங்களில் நல்ல சம்பவங்களும் ஒருவருக்கொருவர் ஆதரவான நிகழ்வுகளும் இருக்கும். கலைத்துறையினர் நல்ல திருப்பங்களைக் காண்பீர்கள்.

மகரம்:

வார ஆரம்பத்தில் சுக்கிரன் விரையத்தில் இருப்பதால் மகரத்திற்கு மனமகிழ்ச்சி இருந்தாலும் செலவுகள் இருக்கும் வாரம் இது. விரயாதிபதி குரு வலுவாக உள்ளதால் வீண் விரயங்களும் இருக்கும். வருமானம் வந்தாலும் சேமிப்பது கடினம். வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். சிக்கனமாக இருப்பது நல்லது. ராசிநாதன் வலுவுடன் இருப்பதால் எதிலும் வெற்றியைச் சந்திப்பீர்கள். இந்த காலகட்டத்தில் உங்களின் செயல்திறனைக் காட்ட ஒரு சிறு சந்தர்ப்பம் கிடைத்தாலும் அதை நழுவ விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு முன்னேற வேண்டியது மகரத்தினரின் சாமர்த்தியம்.

சனி இரண்டில் இருப்பதால் எதையும் முனைப்புடன் செய்ய வேண்டியது அவசியம். உங்களில் சிலருக்கு மனம் ஒரு நிலையில் இல்லாமல் பரபரப்பாக இருக்கும். சாதாரண விஷயத்திற்காக சண்டை போடுவீர்கள். சிறிய விஷயத்தைப் பெரிதாக்குவீர்கள் என்பதால் யாரிடமும் வாக்குவாதம் வேண்டாம். ரேஸ் லாட்டரி பங்குச்சந்தை சூதாட்டம் போன்றவைகள் கை கொடுக்கும். அதற்காக தேவையின்றி ரிஸ்க் எடுக்க வேண்டாம். தாயாரின் நன்மைகளுக்காக செலவுகள் செய்வீர்கள். வெளி மாநிலத்தவர்கள், வேற்று மதத்தினர் நண்பர்களாகக் கிடைப்பார்கள்.

கும்பம்:

ராசிநாதன் சனி ராசியில் இருப்பது ஒரு வகையில் நன்மைதான் என்றாலும், செவ்வாய், சுக்கிரன் இணைவதால் எந்த ஒரு நல்ல விஷயத்தையும் முழுமையாக அனுபவிக்க முடியாமல் நன்மைகளும், எரிச்சல் தரும் விஷயங்களும் கலந்து நடக்கும் வாரம் இது. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் வரும். நண்பர்களால் உதவிகள் இருக்காது. மூத்த சகோதரஸ்தானம் சுபவலுப் பெறுவதால் அண்ணன், அக்காக்களிடமிருந்து உதவிகள் உண்டு. முயற்சிகள் வெற்றியடையும் வாரம் இது.

சுக்கிரனுக்கு இருக்கும் குருபார்வை இந்த வாரம் உங்களுடைய மன உறுதியையும், தைரியத்தையும் அதிகப்படுத்தி எதையும் சாதிக்கும் திறனை அளிக்கும் என்பதால் இது கவலை இல்லாத வாரம்தான். சிலருக்கு அன்னிய, மத, மொழிக்காரர்கள் மூலம் பண வரவு இருக்கும். 30 -ந்தேதி அதிகாலை 1.44 மணி முதல் 1-ந்தேதி பகல் 2.32 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட நாட்களில் கவனமாக இருப்பது நல்லது. எவருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.

மீனம்:

வாரத்தின் ஆரம்ப நாட்கள் நல்லவிதமாகவே ஆரம்பிக்கின்றன. செவ்வாய், சுக்கிரன் இணைவால் அடிக்கடி மூட் அவுட் ஆவீர்கள். காரணம் இல்லாமலேயே எரிச்சல் படுவீர்கள். ‘முணுக்‘கென்றவுடன் மூக்குக்கு மேல் கோபமும் எரிச்சலும் எட்டிப் பார்க்கும். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். மீன ராசிக்காரர்கள் பொறுமைசாலிகள் என்பதாலும், எதையுமே சட்டென கிரகித்துக்கொள்வீர்கள் என்பதாலும் உங்களால் எதையும் எந்த சூழ்நிலையிலும் சாதகமாக மாற்றிக் கொள்ள முடியும் என்பதை இந்த வாரம் நிரூபிப்பீர்கள்.

சிலருக்கு புனித யாத்திரையோ, திருக்கோவில்களுக்கோ செல்லும் வாய்ப்பு கிடைக்கும். உங்களில் சிலருக்கு பெண்களால் எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சியான திடீர் சுகங்கள் உண்டு. சிலருக்கு வெளிநாடு அல்லது வெளி மாநில பயணங்கள் இருக்கும். 30,31 ஆகிய நாட்களில் பணம் வரும். 1-ம் தேதி பகல் 2.32 முதல் 4-ம் தேதி அதிகாலை 1.04 வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் கெடுதல்கள் எதுவும் நடக்காது. அதே நேரத்தில் புதிய முயற்சிகள் ஆரம்பங்கள் எதுவும் இந்த நாட்களில் வேண்டாம்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...


https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537

No comments :

Post a Comment