Monday, March 8, 2021

குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (08-03-2021 முதல் 14-03-2021 வரை)


 ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888 

மேஷம்:

எதிர்பாராத திடீர் லாபங்களை மேஷ ராசிக்காரர்கள் அடைகின்ற வாரம் இது. ராசிநாதன் செவ்வாய் இரண்டிலும், யோகாதிபதி குரு பத்திலும் இருப்பது ஒருவிதமான மறைமுக லாபம் வருகின்ற அமைப்பு. இந்த வாரம் முதல் உங்கள் நண்பரான சூரியன் குருவின் வீட்டிற்கு வருவதும் நல்ல நிலைதான்.  மேஷத்தினர் இப்போது எதிலும் வெற்றியை மட்டுமே எதிர்நோக்குவீர்கள். இந்த வாரம் மனதளவிலும் உடல்நிலையிலும் புத்துணர்ச்சியையும், சந்தோஷத்தையும் அனுபவிப்பீர்கள்.  இதுவரை நடந்து வந்த எதிர்மறை பலன்கள் எதுவும் இனிமேல் இருக்காது.

பணத்திற்கு பஞ்சம் இருக்காது. கொடுக்கும் வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். வாக்கு பலிக்கும். வீடு கட்ட வேண்டும் அல்லது வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தவர்களுக்கு வீட்டுக்கனவு நனவாகும். பெரும்பாலானவர்கள் லோன் போட்டுத்தான் வீடு கட்டவோ வாங்கவோ செய்வீர்கள். வேலை தேடி அலைந்து கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். தொழில் ஆரம்பித்து இன்னும் காலூன்ற முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு தொழில் நல்ல முன்னேற்றமாக நடக்கும்.

 

ரிஷபம்:

ராசியில் செவ்வாய், ராகு இணைவதால் ரிஷப ராசி இளைஞர்களுக்கு எதிர்காலத்தை பற்றிய மனக்குழப்பங்கள் அதிகரிக்கும் வாரம் இது. ஆயினும் யோகாதிபதி புதன் பத்தில் இருப்பதால் எதுவும் எல்லை மீறாமல் உங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். ஒன்பதில் உள்ள குருவின் பார்வை பலத்தால்  ராசியின் பலவீனங்கள் விலகி நடுத்தர வயதினருக்கு நன்மைகள் நடக்கும். இளைய பருவத்தினருக்கு முக்கியமான மாற்றங்களைத் தரும் விஷயங்கள் இப்போது உண்டு. வார ஆரம்பமே சந்திராஷ்டமம் என்பதால் எடுக்கும் முயற்சிகளில் முழுமையான ஈடுபாடு தேவைப்படும்.

தெளிவற்ற மனநிலையில் இருப்பீர்கள். மந்தநிலை இருக்கும். இனம் தெரியாத மனக் கலக்கங்கள் வரும். யோகாதிபதிகள்  வலுவாக இருப்பதால்  கெடுபலன்கள் எதுவும் வரப்போவது இல்லை. நெருங்கிய நண்பர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கும். 12,14,18 ஆகிய நாட்களில் பணம் வரும். 6-ம்தேதி இரவு  9.38 மணி முதல் 9-ம்தேதி அதிகாலை 2.38 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட தினங்களில் எந்த ஒரு விஷயத்திலும் கவனத்துடனும் நிதானத்துடனும் செயல்படுவது நன்மையை தரும்.

மிதுனம்:

ஜீவனாதிபதி குரு எட்டாம் வீட்டில் சனியுடன் இணைந்திருப்பதால் இது மிதுனத்தினரை ஒருபடி முன்னேற்றும் வாரமாக இருக்கும். வருமானத்திற்கு குறைவு இருக்காது. இதுவரை இல்லாதவகையில் இப்போது அதிர்ஷ்டம் கை கொடுக்கும். உங்களில் சிலருக்கு கடந்த சில மாதங்களாக இருந்த கஷ்டங்கள் அனைத்தும் தீரப் போகிறது. இனிமேல் நன்றாக இருக்கப் போகிறீர்கள். தேவையற்ற விவகாரங்களில் காசை விரயம் செய்வீர்கள் என்பதால் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்கும்முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசியுங்கள்.

பெண்களுக்கு சிறப்புக்கள் சேரும். பழைய கடன்களை அடைக்க புதிய கடன் வாங்க வேண்டி இருக்கலாம். இப்போது இருக்கும் பிரச்னைகள் நிரந்தரமாக தீரும் காலம் வந்து விட்டது. மிதுனம் என்றும் வீண் போகாது. கவலை வேண்டாம். 15,16,17 ஆகிய நாட்களில் பணம் வரும். 9-ம்தேதி அதிகாலை 2.38 மணி முதல் 11-ம் தேதி காலை 9.21 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் வீண் வாக்குவாதங்களோ தேவையற்ற பேச்சுக்களோ பேசாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளும் வேண்டாம்.

 

கடகம்:

ராஜகிரகங்கள் அனைத்தும் சாதக பலன்களை தரும் நிலையில் இருக்கிறார்கள். கடகத்தினருக்கு அனைத்தும் கிடைக்கின்ற வாரம் இது. அவரவர்களுடைய வயது, தகுதி, இருப்பிடத்திற்கேற்றார் போல நன்மைகள் நடக்கும் என்பதால் இந்த வாரம் நீங்கள் கவலைப்பட தேவையில்லாத வாரமாக இருக்கும்.  நீண்டநாள் நடக்காமல் இழுத்துக்கொண்டு இருந்த விஷயங்கள் நல்லபடியாக முடிவுக்கு வரும்.  சிலருக்கு வேலைமாற்றம், தொழில் மாற்றம், வீடு மாற்றம் போன்றவைகள் நடக்கும். சகோதர, சகோதரிகள் விஷயத்தில் நல்லவைகள் உண்டு.

கோட்சாரத்தில் நல்ல பலன்கள் இருந்தாலும் உங்களில் சிலர் பிறந்த ஜாதக தசா புக்தி அமைப்புப்படி கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறீர்கள். அப்படிப் பட்டவர்களுக்குக் கூட இந்த வாரம் மிக நல்ல கிரக நிலைகள் அமைவதால் இதுவரை இருந்து வந்த பிரச்சினைகளும், சிக்கல்களும் தீரும். 11-ம்தேதி காலை 9.21 மணி முதல் 13-ம் தேதி மாலை 5.56 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் வீண் வாக்குவாதங்களோ தேவையற்ற பேச்சுக்களோ பேசாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளும் வேண்டாம்.

சிம்மம்:

தொழில் வீடான பத்திலும்,  சத்ரு ஸ்தானமான ஆறாமிடத்திலும் பாபக் கிரகங்களான ராகுவும், சனியும்  இருக்கும் நிலையில் ராசிநாதன் சூரியன் ராசியைப் பார்க்கும் நிலையில் வலுவாக இருப்பது சிம்ம ராசிக்காரர்களுக்கு “பழம் நழுவி பாலில் விழுந்தது” போன்ற நிலை என்பதால் சிம்மத்தினர் தொட்டது துலங்கும் வாரம் இது. புதன் சுபத்துவமாக இருப்பதால் பணவரவுகளுக்கும் பஞ்சமில்லை.. கடந்த காலங்களில் கஷ்டப்பட்ட இளைஞர்களுக்கு இனி கெடுதல்கள் நடக்காது. உங்களில் சிலருக்கு துயரங்கள் அனைத்தும் தீரும் வாரமாக இது இருக்கும்.

ராசியின் நண்பர்கள் யோக அமைப்பில் இருப்பதால் அனைத்திலும் மறைமுகமாக நன்மைகள் நடக்கும் வாரம் இது. நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விவகாரங்கள் நல்லபடியாக முடிவுக்கு வரும். நண்பர்கள் உதவுவார்கள். குறிப்பாக வேலை செய்யும் பெண்களுக்கு நன்மைகள் கூடுதலாக இருக்கும். 14,15,16 ஆகிய நாட்களில் பணம் வரும். 13-ம் தேதி மாலை 5.56 மணி முதல் 16-ம்தேதி காலை 4.43 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் நீண்ட தூர பிரயாணங்களோ புதிய முயற்சிகளோ இந்த நாட்களில் செய்ய வேண்டாம்.

கன்னி:

கன்னியினர் செலவு செய்யும் வாரமாக இது இருக்கும். குறிப்பாக குடும்பத்தினருக்காக சுபவிரயம் செய்வீர்கள். வார ஆரம்பத்தில் ராசிநாதன் புதனும் சுக்கிரனும் ஆறாமிடத்தில் சுபத்துவமாக இருப்பதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். கன்னியினரின் உன்னத வாரம் இது. தொட்டது துலங்கும். பிள்ளைகள் விஷயத்தில் நல்ல பலன்கள் இருக்கும். குறிப்பாக பெண் குழந்தைகள் மூலமாக நல்ல செய்திகள் கிடைக்கும். மாணவர்களுக்கு இது ஜாலியான வாரம். படிப்பை தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் உற்சாகமாக ஈடுபடுவீர்கள்.

தொழில் நிலைமை சரி இல்லாமல் இருப்பவருக்கும், வேலையில் பிரச்னை உள்ளவருக்கும் பிரச்னைகள் நீங்கி அனைத்தும் நல்லபடியாக நடைபெறும். இளைஞர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு. விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். சிலர் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இப்போது சந்திப்பீர்கள். பெண்களுக்கு அலுவலகத்திலும் வீட்டிலும் மதிப்புக் கூடும்படியான சம்பவங்கள் இருக்கும். குறிப்பிட்ட பலனாக ஆரோக்கியம் குறைவு பட்டவர்கள் தெளிவு பெறுவீர்கள். மருத்துவம் கை கொடுக்கும்.

துலாம்:

இந்த வாரம் முதல் ராசிநாதன் சுக்கிரன் ஐந்தில் அமர்ந்து லாப ஸ்தானத்தோடு தொடர்பு கொள்வதால் துலாமுக்கு தொழில் மேன்மைகளையும், பொருளாதார உயர்வையும் தருகின்ற வாரம் இது. வேலை செய்யும் இடத்தில் மாதாந்திர டார்கெட், உயரதிகாரி தொந்தரவு போன்ற மன அழுத்தங்களை சந்தித்தவர்களுக்கு இந்த வாரம் முதல் அவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் உண்டு. யோகாதிபதி சனியுடன் குரு நான்கில் இணைந்திருப்பதால் தெய்வ வழிபாடு செய்வீர்கள்.

வாழ்க்கைத்துணை விஷயங்களில் விட்டுக் கொடுத்து போங்கள். துலாமுக்கு  இப்பொழுது வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் இருக்கும். இருக்கும் ஊரை விட்டு டிரான்ஸ்பர் ஆகுதல், வெளிமாநிலம், வெளிநாடு போன்றவைகளில் வேலை கிடைத்தல், வீடு மாற்றுதல் போன்ற பலன்கள் இப்போது நடக்கும். இளைய பருவத்தினர் தன்னம்பிக்கையுடன் இருக்கவேண்டிய காலம் இது. என்னதான் ஒருவரை இறைவன் கடுமையாக சோதித்தாலும் கடைசி நேரத்தில் அவரைக் கைவிட மாட்டார் என்பதை மனதில் கொள்ளுங்கள்..

 

விருச்சிகம்:

ராசிநாதன் செவ்வாய் ஏழில் அமர்ந்து ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் விருச்சிக ராசிக்காரர்களின் முயற்சிகள் அனைத்தும் ஜெயிக்கின்ற வாரம் இது. விருச்சிகத்திற்கு கெடுபலன்கள் எதுவும் நடக்காது. உங்களின் திறமைகள் இப்போது வெளிவரும். சிலருக்கு குருட்டாம் போக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கும். முக்கியமான சில பிரச்னைகள் நீங்கி நிம்மதியாக உணர்வீர்கள். சிறிய விஷயங்களால் பிரிந்து இருந்தவர்கள் அதை மறந்து ஒன்று கூடுவீர்கள். குடும்ப விஷயத்தில் மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வு கிடைக்கும்.

உங்களில் சிலருக்கு தொழிலில் கடைசிநேரம் வரை வரவேண்டிய பணம் கிடைக்குமா? கிடைக்காதா? என்று டென்ஷன் இருக்கும். இறுதியில் பணம் கிடைக்கும் என்பது நிச்சயமானாலும், அப்போதைய தேவைக்குத்தான் பணம் வருமே தவிர மிச்சம் பிடித்து சேமிக்கும் அளவிற்கு இருக்காது. சீக்கிரமாக முடிய வேண்டிய வேலைகள் கூட இழுத்துக் கொண்டே போய் எரிச்சலை ஏற்படுத்தும். குருவும், சுக்கிரனும் சுபத்துவ நிலையில் இருப்பதால் சிலருக்கு தாமதித்து வந்த விசா கிடைக்கும். விருச்சிகத்திற்கு  நல்ல வாரம் இது.

தனுசு:

வார ஆரம்பத்தில் எட்டுக்குடைய சந்திரன் ராசியில் இருப்பது உங்களில் சிலருக்கு மனக் கலக்கங்களை கொடுக்கின்ற அமைப்புதான் என்றாலும், மூன்றில் சூரியன்  இருப்பதால் எந்த ஒரு விஷயமும் உங்களுக்கு எதிராக  நடக்காமல் தனுசுவினரின் மனதிற்கேற்ற மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். ஆறில் செவ்வாய்  ராகுவுடன் இணைவதால் குடும்பத்தில் உள்ளவர்களாலும், குழந்தைகளாலும் செலவுகளும் மனவருத்தங்களும் இருக்கும். சிலருக்கு இதுவரை தடையாகி வந்தவைகள் கிடைக்கும். சிலர் வேலை விஷயமாக குழந்தைகளை பிரிவீர்கள்.

எட்டாமிடம் குரு பார்வையால் வலுப் பெறுவதால் புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. மனம் சற்று அலைபாய்ந்து, முடிவெடுக்கும் திறன் குறைவாக இருக்கும். எதிலும் நிதானமாக செயல்படுங்கள். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். வழக்குகளில் தீர்ப்புகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வார ஆரம்பத்தில் தேவையற்ற விஷயங்கள் உங்கள் கவனத்திற்கு வந்து உங்களைக் குழப்பினாலும் பிற்பகுதியில் அனைத்தையும் நல்லமுறையில் சமாளிப்பீர்கள். சிலருக்கு  டார்கெட் போன்ற இலக்கு நிர்ணையிக்கப்பட்டு அலைச்சல்கள் அதிகம் இருக்கும்.

மகரம்:

யோகாதிபதிகள் புதன், சுக்கிரன் இருவரும் இரண்டாமிடத்தில் இருப்பதால் இது நல்ல வாரம்தான். அதேநேரத்தில் ராசியில் சனி இருப்பது நல்லபலனைச் செய்யும் அமைப்பு இல்லை என்றாலும் கூட ராசிநாதன் சுபத்துவ வலுவடைந்து இருப்பது வரவிருக்கும் கெடுதல்களை தடுக்கின்ற ஒரு அமைப்பாக இருக்கும். ஜென்மச்சனியால் உறவினர்களுடன் உரசல்கள் வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது. என்ன இருந்தாலும் குருவின் இணைவு சனிக்கு இருப்பதால் மகரம் எதையும் சமாளிக்கும்.

ஏழரைச்சனியின் ஆதிக்கத்தில் மகரத்தினர் இருப்பதால் சோம்பலுக்கு இடம் கொடாமல் எதிலும் சுறுசுறுப்புடனும் தன்னம்பிக்கையுடனும் இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக வேலைமாற்றம், தொழில் விரிவாக்கம் போன்ற விஷயங்களில் அவரசப்படாமல், அடுத்தவரை நம்பாமல் நிதானமாக எதையும் சிந்தித்து செய்யுங்கள். பாக்கிய ஸ்தானத்திற்கு குருவின் பார்வை கிடைப்பதால் அனைத்து விஷயங்களிலும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவீர்கள் என்பது நிச்சயம்.

கும்பம்:

கும்பத்தினருக்கு எடுக்கும் முயற்சிகள் யாவும் முழுமையாக பலன் தரும் வாரம் இது. யோகரான சுக்கிரன் புதனுடன் இணைந்து சுபத்துவமாக ராசியில் உள்ள  நிலையில், வார இறுதியில் சூரியன் குருவின் வீட்டில் அமர்ந்து சுபத்துவ தொடர்புகளை பெறுவதால் எந்த ஒரு விஷயத்திலும் துணிந்து இறங்குவதற்கு ஏற்ற வாரம் இது. தொழில் ஸ்தானம் செவ்வாயின் பார்வையால் பலம் பெறுவதால் தொழில், வேலை, வியாபாரம் போன்ற அனைத்தும் சிறப்பாக நடைபெறும். உங்களில் சிகப்புநிறம் சம்பந்தப்பட்டவர்கள், கட்டுமானத் துறையில் இருப்பவர்கள் நன்மைகளைப் பெறுவீர்கள்.

கும்பத்தினர் நாளை நன்றாக இருக்க போவதற்கான வழிமுறைகள் இப்போதே ஆரம்பிக்கத் துவங்கும். வேலை, தொழில் விஷயங்களில் இருந்த இடைஞ்சல்கள் நீங்கும். பிள்ளைகளின் மேல் ஒரு கண் இருக்கட்டும். அவர்கள் யாருடன் பழகுகிறார்கள் என்பதை கண்காணியுங்கள். கேட்கும் இடத்தில் உதவிகள் கிடைக்கும். அரசு தனியார் துறை ஊழியர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் கெடுதல்கள் எதுவும் இருக்காது. எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள். ராசிநாதன் சுபவலுவாக இருப்பதால்  எல்லாம் நன்றாக நடக்கும்.

மீனம்:

ராசிக்கு மூன்றாமிடத்தில் செவ்வாய் ராகுவுடன் இணைந்திருப்பதால் மீனத்தினர் நண்பர்கள் விஷயத்தில் மனக்கசப்பு அடையும் வாரமாக இது இருக்கும். குறிப்பாக மிகவும் நெருங்கிய நண்பர் என்று நீங்கள் நம்பும் ஒருவரிடம் இருந்து அதற்கு மாறான செய்கைகளை பார்த்து மனவருத்தம் அடைவீர்கள். 30 வயதுகளில் இருக்கும் இளைய பருவத்தினருக்கு உண்மையான நட்பை அடையாளம் காட்டும் வாரம் இது. ராசிநாதன் குரு நீச்ச பங்க வலுவுடன் இருப்பதால் தடைகளும், தாமதங்களும் நீங்கி அனைத்திலும் நன்மைகள் இருக்கும்.

ராசியை சனி பார்ப்பதால் உங்களை வெறுப்பேற்றும் விதமான சம்பவங்கள் நடந்தாலும், யோகக் கிரகங்கள் வலுவாக இருப்பதால் அனைத்தையும் நிதானமாகவும், மன உறுதியுடனும் சமாளித்து வெற்றி கொள்வீர்கள். ஐந்தாமிடம் வலுவாக இருப்பதால் வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகளை பார்க்க முடியும். பிள்ளைகள் விரும்பும் பள்ளி, கல்லூரிகளில் சேர்க்க முடியும். இதுவரை குழந்தைகளின் பெயரில் சேமிக்க முடியாதவர்கள் அவர்களின் எதிர்காலத்திற்காக ஏதேனும் ஒரு வழியில் முதலீட்டு சேமிப்புகள் செய்ய முடியும்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 ,+91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment