Monday, March 1, 2021

குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (01-03-2021 முதல் 07-03-2021 வரை)

 

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888 

மேஷம்:

மேஷநாதன் செவ்வாய், இரண்டில் ராகுவுடன் இணைந்திருப்பதால் இந்த வாரம் உங்களுடைய செயல்கள் சிந்தனைகள் அனைத்திலும் ஒரு தேக்கநிலை இருக்கும். எதிலும் தைரியமாக அடியெடுத்து வைக்க நீங்கள் யோசிக்கும் வாரம் இது. சுக்கிரன் வலுப் பெறுவதால் சிலருக்கு பணவரவு சொல்லிக் கொள்ளும்படியாக இருக்கும். அதேநேரத்தில் சேமிக்க முடியாத அளவுக்கு விரயங்களும் வீண் செலவுகளும் உண்டு. வருமானத்தை மனைவியின் கையில் கொடுத்து பத்திரப் படுத்தினால் மட்டுமே செலவிலிருந்து தப்பிக்க முடியும்.

நீண்டநாட்களாக போக்கு காட்டிக் கொண்டிருந்த ஒரு வாய்ப்பு இப்போது தேடி வரும். சீருடை அணியும் பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகம் இருக்கும். அதிகாரிகளால் அடிக்கடி விரட்டப்படுவீர்கள் 7,8,9 ஆகிய நாட்களில் பணம் வரும். 4-ம் தேதி மாலை 6.20 மணி முதல் 6-ம்தேதி இரவு 9.38 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் நீண்ட தூர பிரயாணங்களோ யாரையும் நம்பி முடிவெடுப்பதோ இந்த நாட்களில் கூடாது. கூடுமானவரை எதையும் இந்த நாட்களில் ஒத்தி வைப்பது நல்லது.

ரிஷபம்:

ராசியில் குருவின் பார்வையில் உள்ள ராகுவால் உங்களில் சிலருக்கு மறைமுகமான வருமானங்கள் இருக்கும். பொதுவாக ராகு எப்படி சம்பாதித்தோம் என்று வெளியில் சொல்ல முடியாத வகையில் பணம் தரும் கிரகம் என்பதால் இந்த வாரம் ரிஷபத்தினருக்கு மறைமுக வழிகளில் வருமானம் வரும். சாப்ட்வேர், கணக்கு, ஊடகம், கலைத்துறை சம்மந்தப்பட்டவருக்கு வெளிநாடு வெளிமாநிலம் போன்ற மாற்றங்கள் இருக்கும். வெளிநாட்டில் இருந்து பணம் வரும். சகோதரர்களால் நன்மை உண்டு. நண்பர்கள் உதவுவார்கள்.

சிலருக்கு வீடு விஷயமான கடன்கள் ஏற்பட வாய்ப்பு  இருக்கிறது. தேவையற்ற விஷயத்திற்கு கடன் வாங்கக் கூடிய சூழல்கள் உருவாகலாம். இதுவரை செட்டிலாகாத இளைய பருவத்தினருக்கு இது ஆறுதல் தரும் வாரம். சோதனைகளை மட்டுமே சந்தித்த சிலருக்கு இந்த வாரம் நல்லவேலை, திருமண முயற்சி வெற்றி என நற்பலன்கள் உண்டு. உங்களில் சிலர் ரகசியமான வேலைகளை செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். அம்மாவின் வழியில் நல்ல விஷயங்கள் நடக்கும்.

மிதுனம்:

ஆறுக்குடைய செவ்வாய் ஆறாமிடத்தையே பார்ப்பதாலும், யோகாதிபதி சுக்கிரன் வலுவாக இருப்பதாலும் மிதுனத்தினருக்கு இது வருமானம் வரும் வாரமாக இருக்கும். ராசிநாதன் எட்டில் சுபத்துவமாக இருப்பதால் உங்களில் சிலருக்கு இரட்டிப்பு நன்மைகள் கிடைக்கும். பணப்பிரச்னைகள் தீரும். கடன் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. சிலர் வெளிநாட்டில் வேலை செய்யப் போக வேண்டியிருக்கும்.  பூமி லாபம் கிடைக்கும். வீடு, காலிமனை கண்டிப்பாக வாங்க முடியும். அதிகாரம் செய்யும் துறைகளில் இருப்போருக்கு நல்ல பலன்கள் உண்டு.

எதிர்கால முன்னேற்றத்திற்கான திருப்புமுனைகள் இப்போது இருக்கும். நீண்ட நாட்களாக மனதில் உருப்போட்டு வந்திருந்த எண்ணங்கள் திட்டங்கள் கனவுகள் ஆகியவை நினைத்தபடியே நடக்கப் போகும் காலம் இது. தந்தைவழி உறவில் நன்மைகள் உண்டு. அத்தைகள் உதவுவார்கள். வீண் விரையங்கள் தவிர்க்கப்பட்டு வரும் வருமானத்தை சேமிக்க முடியும். கெடுதல்கள் எதுவும் வராது. வேலை இடங்களில் மாறுதல்கள் இருக்கும். வெளிநாடு சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள் லாபம் கிடைக்கப் பெறுவார்கள்.

கடகம்:

ராசியை இரண்டு சுப கிரகங்கள் பார்ப்பதால் நல்லவை நடக்கும் வாரமாக இது அமையும். அதேநேரத்தில் ஏழில் சனி உள்ளதால் அனைத்தும் இழுபறியாக நடந்துதான் சாதகமாக முடியும். உங்களில் சிலர் கிழக்கு நாடுகளுக்கு வேலை விஷயமாகச் செல்வீர்கள். குழந்தைகளால் படிப்புச் செலவுகள் போன்றவைகள் இருந்தாலும் அவர்களைப் பற்றிய கவலை இருக்காது. குடும்பத்தில் பொருட் சேர்க்கை இருக்கும். சிலருக்கு தந்தை வழியில் விரயங்களும் மருத்துவ செலவுகளும் அப்பாவினால் மனக்கஷ்டங்களும் உண்டு.

ஏழில் இணையும் சனி, குருவால் வாழ்க்கைத் துணையுடன் சண்டை, சச்சரவுகள், கருத்து வேறுபாடு தோன்றும் என்பதால் விட்டுக் கொடுத்துப் போவதோடு மற்றவர் செய்யும் தவறை பொறுத்து போவதும் நல்லது. அதேநேரத்தில் சுக்கிரனின் வலுவால் எதையும் சமாளிப்பீர்கள். இளைஞர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும். பெண்களுக்கு இது நல்ல வாரம். பெரிய பிரச்சினைகள் எதுவும் வருவதற்கு வாய்ப்பில்லை. மனதில் உள்ளதை வெளிப்படையாக எவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சிலருக்கு அலைச்சல்கள் அதிகமாக இருக்கும்.

சிம்மம்:

உங்களுக்கு நல்லது செய்யக்கூடிய குரு ஆறாமிடத்தில் இருப்பது குழப்பங்களை ஏற்படுத்தி பின்னர் யோகங்களைத் தரும் அமைப்பு. அதே நேரத்தில் ராசிநாதன் சூரியன் ஏழில் அமர்ந்து தனது வீட்டையே பார்ப்பதால் கவலைப்பட எதுவுமில்லை. உங்களில் பிறந்த ஜாதக வலுப்பெற்றவர்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். இதுவரை தன்னம்பிக்கை இன்றி இருந்து வந்த சிலருக்கு உற்சாகம் தரக்கூடிய சம்பவங்கள் நடக்கும். வேலைசெய்யும் இடங்களில் சுமுக சூழ்நிலை இருக்கும். வேலை, தொழில் விஷயங்களில் நன்மைகள் சிம்மத்திற்கு அதிகம் உண்டு.

உங்களில் சிலருக்கு கூட்டுத்தொழில் விஷயங்களிலும் கொடுக்கல் வாங்கல்களிலும் ஏமாற்றம் இருக்கும். பணவிஷயத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மருத்துவத் துறையில் இருப்பவர்கள், ரியல் எஸ்டேட்காரர்கள், வீடு கட்டித்தரும் புரோமோட்டர்கள், இறைச்சி வியாபாரிகள் போன்றவர்களுக்கு இந்த வாரம் நன்மைகள் இருக்கும். பணவரவுக்கு இது ஏற்ற வாரம்தான். கடன் தொல்லை எல்லை மீறாது. சிலருக்கு ஆன்மீக எண்ணங்கள் தூக்கலாக இருக்கும். உடல் நலத்தில் அக்கறை தேவை.

கன்னி:

ராசிநாதன் புதன் சனியுடன் இருப்பதால் இந்த வாரம் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். எதிலும் ஒரு மந்தநிலை இருக்கும். செயல்திறன் குறைவுபடும். இனம் தெரியாத கலக்கங்கள் வரும். சில விஷயங்களில் முடிவெடுக்க முடியாமல் குழம்புவீர்கள். ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் மனநிலை இருக்கும். சுக்கிரன் ஆறில் இருப்பதால் பெண்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. அவர்களால் வீண்பழி ஏதாவது வரலாம். மகன் மகள்களால் பெருமைப்படக் கூடிய செய்திகள் இருக்கும்.

ஐந்தில் உள்ள சனி கவனத்தை சிதற வைப்பார். வலியப் போய் பிரச்னைகளில் மாட்டுவீர்கள் என்பதால்  நிதானமும் எச்சரிக்கையும்  தேவைப்படும் வாரம் இது. குரு வலுப்பெற்று லாப ஸ்தானத்தைப் பார்ப்பதால் சிலருக்கு வங்கி, சிட்பண்டு போன்ற பணம் புரளும் துறைகளிலோ அல்லது பணத்தை எண்ணும் கேஷியர் போன்ற வேலையோ கிடைக்கும். அலுவலகங்களில் நல்ல சூழ்நிலை இருக்கும். வியாபாரிகளுக்கு தொழில் போட்டிகள் மறைந்து இன்னும் கொஞ்ச காலத்திற்கு தனிக்காட்டு ராஜாவாக இருப்பீர்கள்.

துலாம்:

துலாத்திற்கு இப்போது எதிர்காலத்திற்கான மாற்றங்கள் நடைபெறும் காலம். முப்பது வயதுகளில் இருப்பவர்கள் வேலை, தொழில் விஷயங்களில் சில முக்கியமான மாற்றங்களை சந்திப்பீர்கள். வியாபாரிகள், தொழில் செய்பவர்கள் அகலக்கால் வைக்க வேண்டாம். சந்திரன் ராசியில் நீச்சமாக இருப்பதால் தேவையற்ற மனக்கலக்கம் உருவானாலும் குருவும், சனியும் வலுவான நிலைமையில் இருப்பதால் எந்த ஒரு பிரச்சினையையும் உங்களால் சமாளிக்க முடியும். பொதுவில் இது நல்ல வாரம்தான்.

உங்களில் சிலருக்கு வீண்விரயங்கள் தடுக்கப்பட்டு இனி நல்ல விஷயத்திற்காக மட்டுமே செலவு செய்ய வேண்டியிருக்கும். தேவையற்ற ஈகோ பிரச்னையால் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமைகள் வரலாம் என்பதால் எதிலும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. நூதனக் கருவிகளை இயக்கும் துறையினர் முன்னேற்றம் அடைவார்கள். இளைய பருவத்தினருக்கு முக்கியமான திருப்பு முனைகள் இருக்கும்.  ராசிநாதன் ஐந்தில்  உள்ளதால் எதையும் சமாளிப்பீர்கள்.  

விருச்சிகம்:

களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், ராகு இணைந்து பாபத்துவ செவ்வாய் வாக்கு ஸ்தானத்தை பார்ப்பதால் தேவையில்லாமல் எதையாவது பேசி வேண்டப்பட்டவர்கள் மனங்களை நீங்கள் நோக அடிக்கும் வாரம் இது.  குறிப்பிட்ட பலனாக விருச்சிகத்தினர் இந்த வாரம் பேச்சில் கவனமாக இருக்க வேண்டியது இருக்கும். உங்களில் சிலருக்கு மருத்துவ விஷயங்களுக்கு பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும். கலைஞர்களுக்கு சுமாரான நன்மைகள் உண்டு. முயற்சிகளுக்கு பின்புதான் நல்லவை நடக்கும். இளைய சகோதர, சகோதரிகள் விஷயத்தில் நல்லவைகள் நடக்கும்.

ராசிநாதன் ராசியை பார்ப்பதால் ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். சுயதொழில் செய்பவர்கள் வளம் பெறுவார்கள். பத்திரிக்கை துறையினருக்கு இது நல்ல வாரம். முயற்சி ஸ்தானத்தில் சனி வலுவாக உள்ளதால் எதையும் தயங்காமல் எதிர் கொண்டு வெற்றி அடைவீர்கள். கடன் தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிக்கப் பெறுவீர்கள். டெக்ஸ்டைல், கார்மெண்ட் போன்ற ஆடை சம்மந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டு. அரசு, தனியார்துறை ஊழியருக்கும் காவல் துறையினருக்கும் நன்மைகள் உண்டு.

தனுசு:

ராசிநாதன் குரு நீச்ச பங்க நிலையில் இரண்டாமிடத்தில் அமர்ந்து ஆறாமிடத்தைப் பார்க்கும் அமைப்பில் இந்த வாரம் ஆரம்பிக்கிறது. தனுசு ராசிக்காரர்களின் திறமைகள் வெளிப்படும் வாரம் இது. போட்டி இருந்தால்தானே ஜெயிக்க முடியும் என்பதற்கு இணங்க உங்களின் திறமையை சோதிக்கும் விஷயங்களும் இந்த வாரம் உண்டு. சிலர்  உங்களுக்கு பிடிக்காதவர்களை மறைமுகமாக நோஸ்கட் செய்து ஜெயிப்பீர்கள். இளைய பருவத்தினர் மனதிற்கு பிடித்த நல்லவைகள் நடக்கும். உயர்கல்வி கற்பதற்கு இருந்து வந்த தடைகள் நீங்கும். தனுசுக்கு சிறப்பான வாரம் இது.

குடும்பத்தில் குறைகள் எதுவும் இருக்காது என்பதால் மனைவியின் பேச்சை கேட்டால் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். உத்திராடம் நட்சத்திர இளைஞர்கள் சிலர் மட்டும் சில விஷயங்களில் இது பாம்பா கயிறா என்று தெரியாமல் குழம்பித் தவிப்பீர்கள். நடுத்தர வயதினருக்கு பிள்ளைகள் விஷயத்தில் ஏதேனும் மனவருத்தம் இருக்கும். நீங்கள் சொல்வதை பிள்ளைகள் கேட்காமல் அவர்கள் இஷ்டத்திற்கு ஏதாவது செய்து அது சிக்கலில் முடிந்து கடைசியில் அந்த சிக்கலையும் நீங்களே தீர்க்க வேண்டிய வரும்.

மகரம்:

ராசியில் சனி ஜென்மச்சனி அமைப்பில் இருப்பதால் உங்கள் எண்ணங்களில் மாறுதல்கள் உள்ள வாரம் இது. திடீரென முகத்தை சிடுசிடுவென மாற்றிக் கொள்வீர்கள். நெருங்கிய நண்பர்களே உங்களை புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறிப் போவார்கள். நீங்களே இந்த வாரம் மற்றவர்களுக்கு புரியாத புதிராகத்தான் இருப்பீர்கள். ஜென்மச்சனி நடப்பதால் மனதில் உள்ளதை எவ்வளவு தெரிந்தவராக இருந்தாலும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். எந்த ஒரு விஷயத்தைப் பற்றி பேசும் பொழுதும் வார்த்தைகளில் கவனமாக இருங்கள்.

வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்த தாய்வழி சீதனங்கள் சொத்துக்கள் கிடைப்பதற்கான வழி பிறக்கும். வேலை விஷயமான பயணங்கள் இருக்கும். பெண்களுக்கு பணிச்சுமை அதிகரித்து காணப்படும். அலுவலகத்தில் அடுத்தவர் வேலையையும் நீங்களே செய்ய வேண்டியிருக்கும். பணவரவு இருக்கும். அதேநேரத்தில் ஐந்தில் செவ்வாய், ராகு வலுவுடன் இருப்பதால் செலவு வைக்கக்கூடிய சம்பவங்களும் நடக்கும். செய்யாத குற்றத்திற்கு வீண்பழியோ, வம்பு வழக்கோ வரலாம் என்பதால் எதிலும் யோசித்து செயல்படுவது நல்லது.

கும்பம்:

ராசிநாதன் சனி சுபத்துவ வலுவுடன் இருப்பதால் எதிரிகளையும் எதிர்ப்புகளையும் நீங்கள் வெல்லும் வாரம் இது. எந்த ஒரு விஷயத்திலும் தைரியம், தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவீர்கள்.  கும்பத்தினரை சுலபமாக வீழ்த்த முடியாது என்பதை உங்களை வெறுப்பவர்களுக்கு உணர்த்துவீர்கள். நேரம் நன்றாக இருக்கிறது என்று அனாவசியமாக எவரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எல்லா விஷயத்திலும் பொறுமை அவசியம். சுக்கிரன் ராசியில் வலுப் பெறுவதால் வாழ்க்கைத் துணைவர் மூலம் உதவிகள் இருக்கும்.

கும்ப ராசிக்கு நிறைவான அமைப்புகளை கிரகங்கள் கொடுக்கும் நிலையில்  இருப்பதால் அனைத்து பாக்கியங்களும் கிடைத்தே தீர வேண்டிய வாரம் இது. சிலருக்கு நண்பர்கள், பங்குதாரர்கள் உதவுவார்கள். கூட்டுத் தொழில் தற்போது லாபம் தரும். தொட்டது துலங்கும் வாரம் இது. 7,10, ஆகிய நாட்களில் பணம் வரும். 28-ம்தேதி பகல் 3.07 மணி முதல் 2-ம் தேதி மாலை 4.29 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் நீண்டதூர பிரயணங்கள், புதிய முயற்சிகளை இந்த நாட்களில் தள்ளி வைப்பது நல்லது.

மீனம்:

பதினொன்றாமிடத்தில் குரு, சனி, புதன் இணைவதால்  மீனத்திற்கு மறைமுக நன்மைகள் கிடைக்கும் வாரம் இது. சூரியன் தன் வீட்டைப் பார்ப்பதும் இதை உறுதி செய்கிறது. குரு, சனி சேர்க்கையால் நீண்ட காலமாக வராமல் இருந்த விபத்து காப்பீட்டுத் தொகை, வழக்கில் இருந்த பணம், சம்பள நிலுவைத் தொகை, வராக்கடன் இப்போது மீன ராசியினருக்கு கிடைக்கும். சுபவிடங்களில் பாபர்கள் அமர்ந்திருப்பதால் மீன ராசிக்கு குறிப்பிட்டு சொல்லக் கூடிய நல்ல திருப்பங்கள் இருக்கும். எதிரியை ஜெயிப்பீர்கள்.

அரசியலில் இருப்போருக்கும் கலைஞர்களுக்கும் நல்ல விஷயங்கள் நடக்கும். இதுவரை நிறைவேறாமல் எதிர்ப்பு உருவாகிக் கொண்டிருந்த விஷயங்கள் இப்போது சாதகமாக முடியும். மீனத்திற்கு மிக நல்ல வாரம் இது. 8,10 ஆகிய நாட்களில் பணம் வரும். 2-ம்தேதி மாலை 4.29 முதல் 4-ம்தேதி மாலை 6.20 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் வெகுதூர பிரயாணங்களோ புதியமுயற்சிகளோ இந்த நாட்களில் செய்ய வேண்டாம். இந்த நாட்களில் எதையும் செய்யும் முன் ஒன்றுக்கு இரண்டாக யோசிப்பது நல்லது.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 ,+91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment