Thursday, October 29, 2020

மேஷம்: 2020 குருப்பெயர்ச்சி பலன்கள் – MESHAM: 2020 GURUPEYARCHI PALANGAL

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888 

மேஷம்:

மேஷ ராசிக்கு இதுவரை ஒன்பதாமிடத்தில் இருந்து வந்த குரு தற்போது பத்தாம் இடத்திற்கு மாறுகிறார். நமது மூலநூல்களில் ஒன்பதாமிடம் குருவுக்கு சிறப்பான இடமாகவும், பத்தாம் இடம் கேந்திர வீடு என்பதால் சுமாரான இடமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்தக் குருப்பெயர்ச்சி ஒருவகையில் வித்தியாசமானதுதான். உங்களுக்கு சகலத்தையும் தரும் யோகரான குரு, பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அடையும் பலவீன நிலையான நீச்சத்தை இம்முறை அடைகிறார். ஆனால் வேத ஜோதிடம் இந்நிலைக்கு விதிவிலக்காக சொல்லும் நீச்சன் இருக்கும் வீட்டு அதிபதி ஆட்சி பெற்றால் நீச்ச பங்கம் எனும் இழந்த வலுவை திரும்பப் பெறும் நிலையை அடைகிறார்.

எனவே இந்த குருப்பெயர்ச்சி உங்கள் வேலை, வியாபாரம், தொழில் போன்றவைகளில் சில நிலைகளில் தேக்கம், தடைகளை ஏற்படுத்தினாலும், ஏற்கனவே பத்தாமிடத்தில் ஆட்சி நிலையில் இருக்கும் தொழில் ஸ்தானாதிபதி சனியை குரு தனது இணைவால் சுபத்துவப்படுத்தப் போவதால் உங்களுக்கு தொழிலில் லாபமும் பணவரவும் இருக்கும். முக்கியமாக குருவே உங்கள் பாக்கியாதிபதி என்பதால் ஒன்பதுக்குடையவன் பத்தில் அமரும் நிலை நிச்சயமாக உங்களுக்கு கெடுபலன்கள் இருக்காது. 

ஒன்பது, பத்துக்குடையவர்கள் இணைவு மேஷத்திற்கு மிகுந்த நன்மைகளை தரக் கூடிய ஒரு நிகழ்வாகும். ஆகவே இந்தக் குருப்பெயர்ச்சியால் உங்களுக்கு நன்மைகள் அதிகம் இருக்கும். எனவே இதுவரை அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு இருந்து வந்த சங்கடங்கள் நீங்கி எல்லாவற்றிலும் சந்தோஷம் கிடைக்கும் ஒரு காலம் ஆரம்பமாக இருக்கிறது.

2021 ம் ஆண்டு மேஷ ராசியினர் உழைப்பை நம்ப வேண்டிய காலமாக இருக்கும். உழைப்பும் முயற்சியும் உங்களுக்கு வெற்றியைத் தரும் என்பதால், உண்மையாக கடுமையாக உழைத்தால் வெற்றி கிடைக்கும். நீங்கள் உழைப்பிற்கு அஞ்சாதவர்கள் என்பதால் உங்களால் எதுவும் செய்ய முடியும் என்பதும் நிஜம்.

தொழில் சம்மந்தமான பிரச்னைகள் அனைத்தும் இந்தக் குருப்பெயர்ச்சியின் மூலம் உங்களுக்கு சாதகமாக திரும்பி நிம்மதியாக இருக்கக்கூடிய அளவிற்கு பொருளாதார நிலைமைகள் இப்போது முன்னேற்றமாக இருக்கும். மனதிற்கு பிடித்த வேலை கிடைக்காமல் அலைந்து கொண்டிருந்த இளைய பருவத்தினருக்கு அவர்கள் படிப்புக்குத் தகுந்த நல்ல வேலை கிடைக்கும். ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு இதுவரை கிடைக்காத பதவி உயர்வு, சம்பள உயர்வு, நிலுவையில் இருந்த தொகை இப்போது கைக்கு வரும்.

சுயதொழில் செய்வர்கள் சிறப்பான தொழில் வளர்ச்சியை காண்பார்கள். வியாபாரிகளுக்கு அற்புதமான காலகட்டம் இது. புதிய தொழில் ஆரம்பிக்கவோ, கிளைகள் ஆரம்பிக்கவோ, இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்யவோ ஏற்ற நேரம். எனவே, தயக்கத்தையும், யோசனைகளையும் உதறித் தள்ளி சுறுசுறுப்பாக வேலைகளை கவனிக்க ஆரம்பித்தால் வெற்றிக்கொடி நாட்டலாம்.

தொழிலில் சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் அது முன்னேற்றப் பாதையில் செல்வதைக் காண்பீர்கள். தொழில் அதிபர்களுக்கு அரசு உதவி கிடைக்கும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருந்து உற்பத்தியை மேலும் பெருக்கித் தருவார்கள். மந்தமாக இருந்த வந்த கூட்டுத் தொழில் இனி சிறப்பாக நடைபெறும். பங்குதாரர்கள் உதவியாக இருப்பார்கள். சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இனிமேல் நிலையான ஒரு தொழில் அமைப்பு உருவாகி மாதாமாதம் நிரந்தர வருமானம் வரும்.

பொது வாழ்க்கையில் இருக்கக் கூடியவர்களுக்கு இது மிகவும் மேன்மையை தரக் கூடிய காலமாக அமையும். அதிகாரப் பதவிகள் தேடி வரும். அரசு, தனியார் துறை பணியாளர்களுக்கு சம்பளத்தை தவிர்த்த மறைமுக வருமானம்  இருக்கும். விவசாயிகளுக்கும் கலைத்துறையினருக்கும் இது மிகவும் அதிர்ஷ்டமான கால கட்டம் என்பதால் நீங்கள் ஏற்கனவே மனதில் நினைத்திருந்த முன்னேற்றத் திட்டங்களைச் செயல்படுத்த அதிர்ஷ்டம் இனி கை கொடுக்கும்.

குரு தான் இருக்கும் வீட்டை விட, பார்க்கும் வீட்டையே பலப்படுத்தி நன்மைகளைத் தருவார் என்பது ஜோதிட விதி. அதன்படி பத்தில் அமரும் குரு தனது புனிதப் பார்வையால் இரண்டு, நான்கு, ஆறு  ஆகிய இடங்களைப் பார்த்து பலப்படுத்துவார் என்பதால் மேற்கண்ட பாவங்களின் தன்மைகள் வலுப் பெறும் .

குருவின் பார்வை இரண்டாமிடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் விழுவதால் குடும்பத்தில் சந்தோஷமும், மங்கள நிகழ்ச்சிகளும் இருக்கும். தன காரகனான குரு தன ஸ்தானத்தை பார்ப்பதால் அந்த பாவம் வலுப் பெறுகிறது. இதனால் தனலாபம் உண்டாகும். பணத்திற்கு பஞ்சம் இருக்காது.

குருவின் நான்காமிடப் பார்வையால் நீண்ட நாட்களாக வீடு கட்ட வேண்டும் அல்லது வீடு வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தவர்களுக்கு எல்லா அமைப்புகளும் கூடி வந்து உங்களின் வீட்டுக்கனவு நனவாகும்.  ஆனாலும்  சனி குரு இணைந்திருப்பதால் பெரும்பாலானவர்கள் லோன் போட்டுத்தான் வீடு கட்டவோ, வாங்கவோ செய்வீர்கள். இந்தக் குருப் பெயர்ச்சி உங்களை கடன்காரராக்கி அதன் மூலம் ஒரு சொத்து சேர்க்க வைக்கும்.

அம்மா வழி உறவினர்களுடன் சுமுகமான உறவு இருக்கும். அவர்களால் ஆதாயம் வரும். பூர்வீக தாயார் வழி சொத்துகள் தற்போது கிடைக்கும். பழைய வாகனத்தை மாற்றி புதியதாக வாங்குவீர்கள். வாகனம் இல்லாதவர்களுக்கு வாகனயோகம் இப்போது உண்டு.

குரு நான்காமிடத்தை பார்க்கப் போவதால் மாணவர்களுக்கு படிப்பு நன்கு வரும். தெரிந்த கேள்விதான் கேட்பார்கள் என்பதால் பரீட்சை எழுதுவற்கு சுலபமாக இருக்கும். அல்லது படிக்காமலேயே பாஸ் ஆகிவிடுவீர்கள். உயர்கல்வி கற்பதற்கு இருந்து வந்த தடைகள் நீங்கி மேல்படிப்பு படிக்க முடியும்.

குருவின் பார்வை ஆறாமிடத்தில் பதிவதால் தொழில் விரிவாக்கத்திற்காகவோ அல்லது குடும்பத்தில் நடக்க இருக்கும் சுப காரியங்களுக்காகவோ கடன் வாங்க நேரிடும். ஏற்கனவே இருக்கும் கடனை அடைக்க புதிய கடன் வாங்குவீர்கள். ஹவுசிங் லோன், பெர்சனல் லோன் ஏற்படலாம். எந்த சூழ்நிலையிலும் மீட்டர் வட்டி போன்ற கந்து வட்டி வாங்க வேண்டாம். பின்னால் சிக்கல்கள் வரும்.

மகன், மகளுக்கு திருமணம் நடக்கும். வளைகாப்பு, பூப்புனித நீராட்டு விழா போன்ற பெண்கள் சம்பந்தப்பட்ட மங்கள நிகழ்ச்சிகளால் நீங்கள் சகோதரிகளுக்கோ, மகள்களுக்கோ, பேத்திகளுக்கோ கடன் வாங்கி சுபச் செலவு செய்ய வேண்டி இருக்கும். சிலருக்கு வீடு மாற்றம் அல்லது தொழில் இடமாற்றம் போன்றவைகள்  நடக்கும்.

உங்களின் கவனக்குறைவான செயல்களால் மறைமுக எதிரிகள் உருவாகக் கூடும். நெருங்கியவர்களே உங்களுக்கு எதிராகத் திரும்ப வாய்ப்பு இருப்பதால் அனைத்திலும் கவனமாக இருங்கள். உறவினர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்கள், சிறு சண்டைகள் வரலாம்.

நண்பர்களால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் இருக்கும். வீடு கட்டுவது போன்ற சுப காரியங்களுக்கு இருந்த தடை விலகி புதிய வீடு கட்டுவதோ மனைவாங்குவதோ இனிமேல் செய்ய முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் சுற்றுலா செல்வது போன்ற மனதிற்கு இனிமை தரும் நிகழ்வுகளும் நடக்கும்.

தள்ளிப் போய் இருந்த வெளிநாடு தொடர்பான வேலை விஷயங்களும் வெளிநாட்டு பயணங்களும் வெற்றிகரமாக கூடி வரும். வாழ்க்கைத் துணைவர் உறவு வழியில் ஆதரவுகளும் லாபங்களும் இருக்கும்.  பெற்றோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். பங்காளிச் சண்டை தீரும். பூர்வீக சொத்து பிரச்னை சுமுகமாக ஒரு முடிவுக்கு வரும்.

சனி சுபத்துவமாகி நல்ல அமைப்பில் இருப்பதால் உங்களில் சிலருக்கு அதிக முயற்சி இல்லாமலேயே தொழில் முயற்சிகளில் லாபங்கள் கிடைக்கும். கமிஷன், தரகு போன்றவைகளின் மூலமாக நல்ல தொகை ஒரேநேரத்தில் லம்ப்பாக கிடைக்கும். மூத்த சகோதரர்களிடம் நல்ல உறவும் நன்மைகளும் இருக்கும். சகோதர, சகோதரிகள் உதவிகரமாக இருப்பார்கள். வருகின்ற வருமானத்தை முதலீடாக்குவது நல்லது. வீட்டுமனை, நிலம் போன்றவைகள் இப்போது வாங்கிப் போடுவீர்கள். குழந்தைகளின் பேரில் டெபொசிட் செய்யலாம்.

குருவின் நீச்ச பங்க வலுவால் எந்த ஒரு காரியத்தையும் சாதித்தே ஆகவேண்டும் என்றும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்புடனும் நிறைவேற்றிக் காட்டுவீர்கள். உங்களுடைய மனதைரியம் கூடும். எதையும் சந்திக்கும் ஆற்றல் பெறுவீர்கள். நாளைக்குப் பார்க்கலாம் எனற ஒத்திப்போடுதல் இருக்காது. இதுவரை நீங்கள் பயந்து கொண்டிருந்த செயல்கள் விஷயங்களில் தலைகீழ் மாற்றங்கள் இருக்கும்.

அதிகமான அலைச்சல்களாலும் வேலைப்பளுவாலும் உடல்நலம் பாதிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்ற உடல்நலக் கோளாறுகள் இப்போது வரலாம்.

வயதானவர்கள் உடல் நலத்தில் கண்டிப்பாக அக்கறை வைக்க வேண்டும். இந்த வருடம் உங்களுக்கு மறதியும், யாருக்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்வதாக வாக்குக் கொடுத்தோம் என்பதும் மறந்து போய், வேறு எதையாவது செய்து அதனால் பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

வீட்டில் குழந்தைகளில் உடல் நலத்தில் அக்கறையும், கவனமும் தேவைப்படும். சிறு குழந்தைகளுக்கு சாதாரண உடல்நலக் குறைவு என்றால் கூட அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்வது நல்லது. யூகவணிகம், பங்குச்சந்தை, ரேஸ், லாட்டரி போன்றவைகளில் ஈடுபாடு காட்டாமல் இருப்பது நல்லது. இந்த குருப் பெயர்ச்சியால் மேற்படி இனங்களில் வருமானம் வராமல் விரயங்களும் நஷ்டங்களும்தான் இருக்கும்.

குரு பத்தில் அமர்வதால் யாருக்காவது பரிதாபப்பட்டு உதவி செய்து அதனால் நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் அமைப்பு இருப்பதால் யாருக்கும் எதற்காகவும் ஜாமீன் போட வேண்டாம். யாருக்கும் எதுவும் செய்து தருவதாக தேவையில்லாத வாக்குறுதி கொடுக்க வேண்டாம். மொத்தத்தில் நல்லபலன்கள் அதிகம் உள்ள பெயர்ச்சியாக இது இருக்கும்.

பரிகாரங்கள்:

குரு நீச்சபங்க நிலையில் இருப்பதால் அருகில் இருக்கும் பழமையான ஈஸ்வரன் கோவிலில் வியாழக்கிழமையன்று தக்ஷிணாமூர்த்தி வழிபாடு செய்யலாம். வியாழக்கிழமை குரு ஹோரையில் குருவை நிகர்த்த பெரியோர்களை சாஷ்டாங்கமாக வணங்கி ஆசி பெறுங்கள். 

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment