Thursday, October 29, 2020

மீனம்: 2020 குருப்பெயர்ச்சி பலன்கள் – MEENAM: 2020 GURUPEYARCHI PALANGAL

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888 

மீனம்:

மீன ராசிக்கு பணவரவையும், அந்தஸ்தையும் தரக்கூடிய லாபஸ்தானம் எனப்படும் பதினோராம் இடத்திற்கு குருபகவான் மாற இருக்கிறார். இந்தப் பெயர்ச்சியின் மூலம் உங்களின் தொழில் அமைப்புகளில்  சாதகமான பலன்கள் நடக்கும்.

லாப ஸ்தானத்தில் இருக்கும் குரு தனது விசேஷ பார்வைகளால் உங்கள் ராசிக்கு மூன்று, ஐந்து, ஏழாமிடங்களைப் பார்ப்பார் என்பதால் அந்த இடங்கள் வலுப் பெற்று உங்களுக்கு நல்ல பலன்களை செய்யும்.

குருவின் மூன்றாமிடப் பார்வையால் எதையும் சமாளிக்கும் மனதைரியம் வரும். உண்மையில் எப்பேர்ப்பட்ட பிரச்னையையும் மன உறுதியுடன்  சமாளிப்பீர்கள். ஒரு சிலர் ஏதேனும் ஒரு செயலால் புகழ் அடைவீர்கள். சகோதர உறவு மேம்படும். இளைய சகோதரத்தால் நன்மை உண்டு. தம்பி தங்கையர்களுக்கு நல்லது செய்ய முடியும். மூத்த சகோதர, சகோதரிகள் உதவுவார்கள். சகோதர வழியில் உங்களுக்கும் உதவிகளும், நன்மைகளும் இருக்கும். உடன் பிறந்தவர்கள் உங்களைப் பாராட்டுவார்கள். உங்களிடம் காரியம் சாதித்து கொள்வார்கள். அவர்களுக்கு உதவ முடியும்.

பெண்களுக்கு தங்கம் மற்றும் வைரத்திலான கழுத்துநகை வாங்கும் யோகம் இருக்கிறது. மூன்றாம் இடம் கழுத்துப் பகுதியை குறிக்கும் என்பதால் இளம் பெண்களுக்கு தாலி பாக்கியமும், திருமணமானவர்களுக்கு நகைகள் சேருதலும் இந்த குருப்பெயர்ச்சியால் நடக்கும்.

கீர்த்தி ஸ்தானம் சுபத்துவம் பெறுவதாலும், ஏற்கனவே அங்கே நல்ல பலனைத் தரக்கூடிய நிலையில் ராகு இருப்பதாலும் மீன ராசிக்காரர்கள் சிலர் புகழடைவீர்கள். அவரவர் துறைகளில் அவரவர் வயதிற்கேற்ப சாதனைகள் செய்வீர்கள். ஜோதிடத்தில் மூன்றாமிடம் பிரபலமடைவதைக் குறிக்கும் என்பதால் நவீன யுகத்தில் டி.வி. போன்ற காட்சி ஊடகங்களிலும், பத்திரிகை போன்ற எழுத்து ஊடகங்களிலும் மீனத்தினரால் சாதிக்க முடியும்.

கணவன், மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் இருக்கும். குழந்தைகளின் எதிர்காலத்துக்கு சேமிப்பு மற்றும் முதலீடு செய்ய முடியும். பிள்ளைகள் விரும்பிய பள்ளி, கல்லூரிகளில் அவர்களை சேர்க்க முடியும். தந்தை வழியில் நல்ல செய்திகள் இருக்கும். பூர்வீக சொத்து கிடைக்கும். ஒரு சிலர் வெளிநாடு செல்வீர்கள்.

குரு தனது பார்வையால் ஐந்தாமிடத்தைப் பார்த்து புனிதப் படுத்துவதால் வயதானவர்களில் இதுவரை தீர்த்த யாத்திரை செல்லாதவர்கள் புனிதத் தலங்களுக்கு சென்று வருவீர்கள். காசி, கயா, பத்ரிநாத், கேதார்நாத், கயிலை போன்ற வடமாநில புனித யாத்திரை செல்லும் பாக்கியம் சிலருக்கு கிடைக்கும்.

பூர்வ புண்ணிய ஸ்தானம் குருவின் பார்வையால் வலுப் பெறுவதால் மகன் மகள்களால் பெருமைப்படக் கூடிய செய்திகள் இருக்கும். வெளிநாட்டில் வேலை செய்யும் பிள்ளைகளை தற்போது பார்க்க முடியும். தள்ளிப் போயிருந்த குலதெய்வ வழிபாடு சிறப்பாகச் செய்ய முடியும். நேர்த்திகடன்கள் செலுத்துவீர்கள். குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்களுக்கு இறையருளால் இவர்தான் தெய்வம் என்று தெரிய சந்தர்ப்பம் வரும்.

குரு, சனி இருவரும் பதினொன்றில் இணைவதால் ஷீரடி மகான், ராகவேந்திரர், மகாபெரியவர், பகவான் ரமணர், சத்யசாய் போன்ற ஆன்மிகத் திருவுருக்கள் அவதரித்து அருளாட்சி செய்த திருத்தலங்களை தரிசிப்பீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகமாகும். அறப்பணிகளில் ஆர்வம் அதிகரித்து ஈடுபாடு காட்டுவீர்கள். கும்பாபிஷேகம் போன்ற ஆலயத் திருப்பணிகளில் பங்கேற்கும் பாக்கியம் கிடைக்கும்.

கூட்டுக்குடும்பத்தில் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பீர்கள். வயதில் பெரியவர்கள் மூத்தவர்கள் மூலம் லாபம் உண்டு. குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். இதுவரை திருமணம் ஆகாமல் இருந்த இளைய பருவத்தினர்களுக்கு மளமள வென்று வரன்கள் நிச்சயிக்கப்பட்டு திருமண மண்டபம் புக்கிங் போன்ற விஷயங்கள் சட்என்று நடந்து திருமணம் கூடி வரும். குழந்தை இல்லாத தம்பதியினருக்கு குழந்தை பிறக்கும்.

குரு சாதகமான இடத்தில் இருந்தாலும், அவர் நீச்ச நிலை அடைந்து பின்னர் சனியினால் நீச்ச பங்கம் அடைகிறார். என்ன இருந்தாலும் உங்களின் ராசி நாதனான குரு நீச்சம் எனப்படும் பலவீன நிலையை அடைவது நல்லதல்ல. இது போன்ற நிலைகளில் கிரகங்கள் முதலில் சாதகமற்ற பலனைத் தந்து அதன்பின்னர் நல்ல பலன்களைத் தரும்.

இந்த குருப்பெயர்ச்சி காலம் முழுவதும் உங்களின் பொருளாதார நிலை மிகவும் மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும். தொட்டது துலங்கும். இதுவரை வருமானம் இன்றி பணப் பற்றாக்குறையால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பணப் பிரச்னை இல்லாத அளவுக்கு நல்ல வருமானம் இருக்கும்.

லாபஸ்தான குருவால் தனம் வந்து சேரும் என்பதால் பண வரவிற்கு தடையாக இருந்த விஷயங்கள் மாறி உங்களுடைய தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் வலுப் பெற்று பொருளாதார மேன்மை அடைவீர்கள். உங்கள் சொல்லும் பலித்து, கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். நாளைக்கு வா பணம் தருகிறேன் என்று ஒருவருக்கு வாக்குறுதி அளித்தால் இன்றைக்கு இரவே அவருக்கென்று பணத்தை ஒதுக்கி வைக்கமுடியும்.

குருவைப் போன்றே வருடக் கிரகங்களான சனியும், ராகுவும் மிகவும் சாதகமான நிலையில் இருப்பதால் மீனத்தினர் இப்போது எந்த ஒரு விஷயத்திலும் தயக்கத்தினை விட்டொழித்து முன்னேற்றத்திற்கான ஆக்கப்பூர்வ விஷயங்களில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம்.

மீன ராசிக்காரர்கள் இயற்கையாகவே நல்ல புத்திசாலிகள் என்பதாலும், உருவாக்கும் வேலை எனப்படும் கிரியேட்டிவ் பணிகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்யக் கூடியவர்கள் என்பதாலும், எதையுமே சட்டென கிரகித்துக் கொள்வீர்கள் என்பதாலும் இந்த மாற்றத்தை நல்லமுறையில் உபயோகப்படுத்தி வாழ்க்கையில் செட்டில் ஆவீர்கள்.

பொதுவாக மீன ராசியினர் நடுநிலை தவறாதவர்களாகவும், நீதிமான்களாகவும் இருப்பீர்கள். யார் தவறு செய்தாலும் பொறுத்துக் கொள்ள மாட்டீகள். எதற்கும் விலை போக மாட்டீர்கள். உண்மையான அன்புக்கும், நட்புக்கும் மதிப்பு கொடுப்பீர்கள். பணம் வேண்டுமா புகழ் வேண்டுமா எனக் கேட்டால் புகழைத் தேர்ந்தெடுக்கக் கூடியவர்கள் நீங்கள். பிறந்த ஜாதகத்தில் யோகமான தசா புக்திகள் நடந்து கொண்டிருப்பவர்களுக்கு  இப்போது இரட்டிப்பு பலன்கள் நடக்கும்.

நல்ல வேலை கிடைக்காமல் சோர்ந்து போயிருந்தவர்களுக்கு மனதுக்கு பிடித்த வகையில் நல்ல சம்பளத்துடன்  வேலை கிடைக்கும். பொது வாழ்க்கையில் இருப்பவர்கள், ஊடகம், பத்திரிக்கை போன்ற துறையில் இருப்பவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது வசந்த காலமாகும். கலைத்துறையினர் நல்ல திருப்பங்களைக் காண்பீர்கள். வாய்ப்புகள் வந்து கதவைத் தட்டும்.

பொருத்தமில்லாத வேலையில் இஷ்டமில்லாமல் இருந்த இளைஞர்களுக்கு உடனடியாக மாற்றங்கள் உருவாகி நினைத்த மாதிரியான வேலை கிடைக்கும். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் மறையும். தொழில் ஆரம்பித்து இன்னும் காலூன்ற முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு தொழில் முன்னேற்றமாக நடக்கும்.

அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு இதர வருமானங்கள்சொல்லிக் கொள்ளும்படி இருக்கும். தொழிலாளர்களுக்கு வேலைப் பளு குறைந்து சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும். தொழிற்சங்கங்களில் பதவியில் இருப்பவர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமான நிலைமையும் மாறும். நண்பர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள். தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள் நன்றாக இருக்கும். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள்.

சுயதொழில், வியாபாரம் போன்றவைகளில் இதுவரை இருந்து வந்த மந்தநிலை விலகி அனைத்தும் இனிமேல் சுறுசுறுப்பாக நடக்கும். சுயதொழில் செய்வர்கள் சிறப்பான தொழில் வளர்ச்சியை காண்பார்கள். வியாபாரிகளுக்கு அற்புதமான காலகட்டம் இது. புதிய தொழில் ஆரம்பிக்கவோ, கிளைகள் ஆரம்பிக்கவோ, இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்யவோ ஏற்ற நேரம்.

விவசாயிகளுக்கு இந்த குருப்பெயர்ச்சி மிகுந்த நன்மையை அளிக்கும். விளைந்த பயிர் சிந்தாமல் சிதறாமல் வீட்டிற்கு பொன்னாக வரும். குடியானவனின் வீட்டில் குதூகலமும், சுப நிகழ்ச்சிகளும் இருக்கும். குறிப்பாக பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு மேன்மை உண்டு.

பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும் கௌரவமும் கிடைக்கும். பெண்களின் ஆலோசனை குடும்பத்தில் இருக்கும் ஆண்களால் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற நல்ல பலன்கள் இருக்கும். அதிகாரிகளால் பாராட்டப் படுவீர்கள். உடன் பணிபுரியும் ஆண்களின் ஒத்துழைப்பும்  உங்களுக்கு கிடைக்கும்.

குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்களை இப்போது செய்ய முடியும். இதுவரை சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டும் வாய்ப்போ அல்லது கட்டிய பழைய வீடோ வாங்கும் யோகம் வருகிறது. மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் இனிய சம்பவங்கள் நிகழும். படிப்பது மனதில் பதியும். தேர்வுகளை நன்றாக எழுத முடியும்.

பரிகாரங்கள்:

மீனத்தினர் ஸ்ரீதட்சிணாமூர்த்திப் பெருமானுக்கு வியாழக்கிழமை தோறும் விரதமிருப்பதும், வியாழன் தோறும் அவரை பூஜித்து வழிபடுவதும், ஜன்ம நட்சத்திரம் அன்று ஒருமுறை ஆலங்குடி, சென்னை பாடி திருவலிதாயம், வட ஆலங்குடி என அழைக்கப்படும் போரூர் ஈஸ்வரன் கோவில், திருச்செந்தூர் போன்ற குரு ஸ்தலங்களுக்கு சென்று குருபகவானை ஆராதிப்பதும் அதிர்ஷ்டங்களைத் தரும்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment