ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜிகைப்பேசி : 9768 99 8888
வாரம் முழுவதும் ராசிநாதன் செவ்வாய் ஆட்சி நிலையில் இருக்கிறார். மேஷ ராசிக்காரர்களுக்கு ஒருவிதமான டென்ஷனைக் கொடுக்கும் வாரம் இது. காரணம் தெரியாத அலைபாய்தலில் மனம் இருக்கும். இந்த நிலைமை இன்னும் சில வாரங்களுக்கு நீடிக்கும். வேலை செய்யும் இடங்களில் உங்களை எரிச்சல் படுத்தும் நிகழ்வுகள் நடக்கும். தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் மற்றும் டீம் லீடர்கள் தங்களின் கீழ் வேலை செய்பவர்களை நம்ப வேண்டாம். நம்பிக்கைத் துரோகம் நடக்க வாய்ப்பிருக்கிறது. அரசாங்க உதவிகள் கிடைப்பதற்கு தடைகள் உண்டு.
சகாய ஸ்தானத்தில் ராகு இருப்பதால் கேட்கும் இடங்களில் உதவிகள் கிடைக்கும்.
எந்த ஒரு சிக்கலையும் தைரியமாக சமாளிப்பீர்கள். மேஷ ராசிக்காரர்கள் கடுமையான
உழைப்பாளிகள் மற்றும் புத்திசாலிகள் என்பதால் உங்களுக்கு யாரும் சொல்லித் தர
வேண்டியிருக்காது. ஒரு முக்கிய பலனாக உங்களில் சிலருக்கு இந்த வாரம் கடன் வாங்கி
செலவு செய்யவேண்டி வரும்.. வாங்கும் கடனை என்ன நோக்கத்திற்காக வாங்குகிறீர்களோ
அதற்கு மட்டும் செலவு செய்வது நல்லது. ஏற்கனவே இருக்கின்ற பழைய கடனை புதுக்கடன்
வாங்கி அடைக்க நேரிடலாம்.
ரிஷபம்:
எட்டாமிடத்தில் இருக்கும் குரு இன்னும் சில வாரங்களில் மாறப் போவதால் ரிஷப ராசிக்காரர்கள் எதிலும் துடிப்புடன் செயலாற்றி
வெற்றி பெறுவீர்கள். முக்கியமாக இளைஞர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய கவலைகள் இனி
இருக்காது. வேலை செய்யும் இடத்தில் பிரச்னைகளை சுலபமாக சமாளிக்க முடியும். வீண்
விரையங்கள் இருக்காது என்பதால் பாக்கெட்டில் பணம் தங்கும். பெண்களால் செலவுகள்
இருக்கும். குறிப்பாக மகள் சகோதரி போன்றவர்களின் சுபகாரியங்களுக்கு செலவுகள் செய்ய
வேண்டி இருக்கலாம்.
இந்தவாரம் குறிப்பிட்ட ஒருபலனாக பணம் வருவதற்கு நீங்கள் பொய் சொல்ல வேண்டி
இருக்கும். வக்கீல், மார்க்கெட்டிங் போன்ற
துறைகளில் இருக்கும் ரிஷபத்தினருக்கு பணவரவு இருக்கும். அலுவலகங்களில் எந்த ஒரு
விஷயத்தைப் பற்றி பேசும் பொழுதும் வார்த்தைகளில் கவனமாக இருங்கள். தொழில் விரிவாக்கம், வியாபாரம், புதுத்தொழில்
போன்றவற்றிற்காக கடன் வாங்க நேரிடலாம். பெண்களுக்கு இந்த வாரம் நல்ல பலன்களைத்தான்
தரும். பணி புரியும் இடங்களில் யாரையும் நம்பி எதையும் செய்ய வேண்டாம்.
மிதுனம்:
மிதுனநாதன் புதன் உச்சபலம் பெற்ற நிலையில், சந்திரனும் நல்ல இடங்களில் இருப்பதால்
இது மிதுனத்திற்கு சிறப்பான வாரமாக இருக்கும். ராசிநாதன் வலுவால் எதிலும் சந்தோஷம்
இருக்கும். அதேநேரம் ஆறாம் அதிபதி செவ்வாய் ஆட்சியாக இருப்பது நண்பர்களை
விரோதியாக்கும் என்பதால் இந்த வாரம் வீண்பகை வரலாம். எவரிடமும் வீண் வாக்குவாதம்
செய்வது பகைமையில் கொண்டு போய் விட்டு விடும். உங்களில் சிலர் கோர்ட்,கேஸ், வழக்கு
விவகாரங்களில் சிக்கி அலைவதற்கும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. அனைத்திலும் கவனம்
தேவை.
அஷ்டமச் சனி நடப்பதால் எதையும் நேர்வழியில் சென்று சாதிப்பதே நல்லது. குறுக்கு
வழியில் செல்லாதீர்கள். சிக்கல்கள் வரும். வேலைமாற்றம், வீடுமாறுதல், அலுவலகம் மாறுதல், வெளியூருக்கு டிரான்ஸ்பர் ஆகுதல் போன்றவைகள் நடந்து
அலைச்சல்கள் இருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. உங்களில் சிலர் ஆரோக்கியத்தில்
அக்கறை செலுத்த வேண்டியது இருக்கும். எக்காரணம் கொண்டும் அதிக வட்டிக்கு கடன்
வாங்காதீர்கள். பொதுவாக மன அழுத்தம் தீரும் வாரம் இது.
கடகம்:
வார ஆரம்பத்தில் ராசிநாதன் சந்திரன் ராசியிலேயே இருக்கிறார். தனாதிபதி சூரியன்
மூன்றில் உச்ச புதனுடன் இருக்கிறார். உங்களுடைய தனித்திறமைகள் மற்றவர்களால்
அடையாளம் காணப்படும் வாரம் இது. வேலையில் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.
வியாபாரம் செழிப்பாக நடக்கும். சொந்தத்தொழில் செய்பவர்களுக்கு வருமானம் கூடும். எந்த
ஒரு செயலும் அதிகமுயற்சி இன்றி வெற்றியாக முடிந்து சந்தோஷம் தரும். கணவன் மனைவி
இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து பேசி எதிர்கால வாழ்க்கையை திருப்திகரமாக
அமைத்துக் கொள்வீர்கள்.
சுயதொழில்,
வியாபாரம் போன்றவைகளில் மந்தநிலை விலகி அனைத்தும்
சுறுசுறுப்பாக நடக்கும். பெண்கள் நீண்டநாட்களாக நினைத்திருந்த காரியம் நிறைவேறும்.
அனைவரிடமும் பாராட்டுப் பெறுவீர்கள். கேட்டது கேட்ட இடத்தில் கிடைக்கும். குடும்பத்திலும் அலுவலகத்திலும் கடக
ராசியினர் கௌரவமாக நடத்தப்படுவீர்கள். சிலருக்கு நிலுவையில் இருந்த கடன் தொகையோ
சம்பள தொகையோ நல்லபடியாக செட்டில் ஆகி
கைக்கு கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுத்த கடன் சிக்கல் இல்லாமல் திரும்பி
வரும்.
சிம்மம்:
ராசிநாதன் சூரியனின் வலுவாலும், ராசிக்கு கிடைக்கும்
குருபார்வையாலும் தொழிலிலும், அலுவலகத்திலும்
இருக்கும் பிரச்னைகளை சுலபமாக சமாளிப்பீர்கள். தொல்லைகள் இல்லாத வாரம் இது.
சிலருக்கு சொத்து சம்பந்தமான வில்லங்கம் விலகும். குடும்பநல வழக்கு உள்ளவர்களுக்கு
தீர்ப்பு சாதகமாக வரும். பங்காளிச் சண்டை தீரும். தந்தைவழி ஆதரவு கிடைக்கும்.
தந்தையிடம் இருந்து உதவிகளோ பொருள் வரவுகளோ இருக்கும். வேலையில் பாராட்டப்
படுவீர்கள். கூட்டுத்தொழில் செய்பவர்கள் பங்குதாரர்கள் விஷயத்தில் கவனமாக
இருங்கள்.
இதுவரை வாகனம் அமையாதவர்களுக்கு நல்ல வாகனம் அமையும். ஏற்கனவே இருக்கும்
வாகனத்தை விற்றுவிட்டு அதை விட நல்ல வாகனம் வாங்க முடியும். வாகன யோகம் வந்து
விட்டதால் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த அதே மாடலில் புதிய வாகனம்
வாங்குவீர்கள். சொகுசு வாகனம் வாங்குவதற்கும் அமைப்பு இருக்கிறது. அரசுத் துறையில்
இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகம் இருக்கும் என்பதால் அனைத்திலும் அக்கறையுடன் இருப்பது நல்லது. பொதுவில்
சிறப்பான வாரம் இது.
கன்னி:
ராசிநாதன் புதன் உச்சம் பெறும் யோக வாரம் இது. நீங்கள் முன்னேறும் வாரம் இது.
சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். நண்பர்களால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள்
இருக்கும். இதுவரை வீடு கட்டுவது போன்ற சுப காரியங்களுக்கு இருந்த தடை விலகி புதிய
வீடு கட்டுவதோ மனைவாங்குவதோ இனிமேல் செய்ய முடியும். செய்யும் முயற்சிகள் வெற்றி
பெறும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். எந்த ஒரு நிலையிலும் கன்னிக்கு
சந்தோசம் மட்டுமே இப்போது இருக்கும்.
எட்டில் செவ்வாய் ஆட்சியாக இருப்பதால் மறைமுக எதிரிகள் உருவாவார்கள். எவரிடமும் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது.
பிள்ளைகளால் பிரச்னைகளும் செலவுகளும் இருக்கலாம். இளைய பருவத்தினத்தினர் சிலருக்கு
மாற்றங்களுக்கான ஆரம்பம் ஆரம்பிக்கிறது. சிலருக்கு வெளியூர் அல்லது வெளிநாடு
போவதற்கான நிகழ்வுகள் இப்போது இருக்கும். வாழ்க்கைத்துணை உங்களுக்கு உதவும் வாரம்
இது. குருபகவான் உங்களின் தொழில், வேலை விஷயங்களில்
நல்ல மாற்றங்களை தருவார்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களின் வேலை, தொழில் நிலைகளில் வேதனைதான் மிச்சம் என்ற
நிலைமை இன்னும் சில வாரங்களில் முடியப் போகிறது. அனைத்து துலாத்தினரும் நன்றாக
இருக்கப் போகிறீர்கள். எல்லாத் துன்பங்களும் இன்னும் சில வாரங்களில் ஒழியப்
போகிறது. இனி வரும் காலங்கள் உங்களுக்கு அனைத்துவித நன்மைகளையும், மேன்மைகளையும் செய்யும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
ஒரு சிறப்பு பலனாக சிலருக்கு இப்போது வீடு, வாகன விஷயங்களில் மாறுதல்களும், புதியவைகளும்
இருக்கும்.
இந்த வாரம் குறை சொல்ல எதுவும் இல்லை. அதேநேரத்தில் நீங்களே புரிந்து கொள்ள
முடியாத புதிராக இருப்பீர்கள். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் தோன்றும்
என்பதால் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. குடும்பத்தில் ஒருவர் கோபத்தைக்
காட்டினாலும் இன்னொருவர் பணிந்து போவது ஒன்றும் கௌரவக்குறைச்சல் அல்ல என்பதைப்
புரிந்து கொள்ளுங்கள். பங்குச்சந்தை யூகவணிகம் ரேஸ் லாட்டரி போன்றவைகள் இந்த வாரம்
கை கொடுக்காது. இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்பட வேண்டாம்.
விருச்சிகம்:
விருச்சிகத்திற்கு திருப்பு முனையான வாரமிது. நீண்ட நாட்களாக நினைத்திருந்த
ஒரு காரியம் இப்போது உங்கள் மனம் போல் நடக்கும். பணவரவுக்கு இருந்த தடைகள் நீங்கி
இனிமேல் சரளமாக பணம் கிடைக்கத் துவங்கும். கடன் தொல்லைகள் இருந்தவருக்கு கடனை
அடைக்க வழி பிறக்கும். குடும்பத்தில் சச்சரவுகள் இருந்தவருக்கு நல்ல வழி
பிறக்கும். இதுவரை வேலை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு பொருத்தமான வேலை அமையும். கலைத்துறையினருக்கு
கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். பாக்கித் தொகைகள் வசூலாகும்.
குறிப்பிட்ட சில விருச்சிக ராசி பெண்களுக்கு இந்த வாரம் வயிறு சம்பந்தப்பட்ட
பிரச்னைகள் வரலாம். பனிரெண்டாமிடம் வலுப்பெறுவதால் வெளிநாடு போக
முயற்சித்தவர்களுக்கு இப்போது வெற்றி கிடைக்கும். வயதானவர்களுக்கு வெளிநாட்டில்
இருக்கும் பேரக்குழந்தைகளை போய்ப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.
இளம்பருவத்தினர் வேலைவிஷயமாக வெளிநாடு செல்வீர்கள். முக்கியமான விஷயங்களில்
முடிவெடுப்பதை சிறிதுகாலம் ஒத்திப் போடுங்கள். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில்
அவசரப்படக் கூடாது.
தனுசு:
தனுசு ராசி இளையவர்கள் என்னை மட்டும் ஏன் கடவுள் இப்படி சோதனை செய்கிறார்
என்று நினைக்கின்ற நேரம் இது. இளையவர்களுக்கு வேலையில் மன அழுத்தம் உண்டு. மதிப்பு
மரியாதை கெடாது என்றாலும் சிக்கல்கள் இருக்கும். எல்லாவற்றிலும் விழிப்புணர்ச்சியோடு
இருங்கள். உங்களில் பலருக்கு வருமானம் இருக்காது. அதேநேரம் செலவுகள் விழி பிதுங்க
வைக்கும். பங்குச்சந்தை, சூதாட்டம் போன்ற
ஸ்பெகுலேஷன் துறைகளில் ஆசைப்பட வேண்டாம். எதிலும் நேர்மையாக இருங்கள். குறுக்குவழி
விஷயங்கள் கை கொடுக்காது.
சிலருக்கு மட்டும் சுப நிகழ்ச்சிகளும் சுற்றுலா செல்வது போன்ற மனதிற்கு இனிமை
தரும் நிகழ்வுகள் நடக்கும். வழக்கு, கோர்ட், காவல்துறை போன்றவற்றில் சிக்கித் திண்டாடிக்
கொண்டிருந்தவர்களுக்கு அனைத்தும் நல்லபடியாக முடிவுக்கு வரும். 17,18,19 ஆகிய நாட்களில் பணம் வரும்.13-ந்தேதி காலை 10.36 மணி முதல் 15-ந்தேதி மாலை 2.25 மணி வரை சந்திராஷ்டம தினங்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய
முதலீடுகளோ, முயற்சிகளோ செய்வதை தள்ளி
வைப்பது நல்லது. மனம் ஒரு நிலையில்
இருக்காது என்பதால் யாரிடமும் சண்டையோ, வீண் வாக்கு வாதமோ செய்ய வேண்டாம்.
மகரம்:
மகர ராசியினர் இந்த வாரம் உயிர் நண்பன் என்றாலும் யாரையும் நம்ப வேண்டாம்.
ஏழரைச்சனி நடப்பதால் எந்த ஒரு விஷயமும் நீண்டமுயற்சிக்கு பின்பே வெற்றியைத் தரும்.
சில நேரங்களில் விரக்தி ஏற்படலாம் என்பதால் அனைத்து விஷயங்களிலும் ஒரு முறைக்கு
நான்கு முறை யோசித்து செயல்படுவது நல்லது. எல்லா விஷயங்களும் முடிவது போல தோற்றம்
தந்து முடியாத நிலை இருக்கும். ஏமாற்றங்கள் இருக்கும் என்பதால் அனைத்திலும் ஆசை
காட்டி மோசம் செய்யும் வாரம் இது.
அநியாய வட்டிக்கு கடன் வாங்கி அதிலிருந்து மீள முடியாமல் அவஸ்தைப் பட்டுக்
கொண்டிருந்தவர்களுக்கு கடனை அடைப்பதற்கு வழி பிறக்கும். மதிப்பு, மரியாதை கெடாது. உங்களில் சிலருக்கு எப்படி வருமானம் வந்தது
என்று சொல்ல முடியாத சில வகைகளில் பனிரெண்டாமிட குருபகவான் வருமானங்களைத் தருவார்.
20,21,22
ஆகிய நாட்களில் பணம் வரும். 15-ந்தேதி மதியம் 2.25 மணி முதல் 17-ந்தேதி மாலை 3.07 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் கெடுதல்கள் எதுவும்
நிச்சயமாக நடைபெறாது. ஆயினும் புதிய
முயற்சிகள் எதுவும் இந்த நாட்களில் வேண்டாம்.
கும்பம்:
வாரத்தின் இரண்டு நாட்கள் சந்திரன் எட்டில் மறைவதால், இது கும்ப ராசிக்காரர்களுக்கு நிதானமான பலன்கள் நடக்கின்ற
வாரமாக இருக்கும். கையில் இருந்த சேமிப்பு கரையும் வாரம் இது. பணவரவும்
சுமாராகத்தான் இருக்கும். அதேநேரத்தில் வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களில்தான்
செலவுகள் இருக்கும். எதிர்கால நல்வாழ்விற்கு தேவையான அடிப்படைக் கட்டமைப்புக்கள்
இந்த வாரம் நடக்கும். சிலருக்கு மனதில் ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும்.
மருத்துவம்,
ஆன்மிகம், எலக்டிரிகல்
எலக்ட்ரானிக்ஸ்,
அன்றாடம் அழியும் பொருட்கள் போன்ற துறைகளில் இருப்பவர்கள்
லாபம் அடைவீர்கள். சிலருக்கு புதிய
நண்பர்கள் கிடைப்பார்கள். ஒரு சிலர் தங்கள் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை
சந்திப்பார்கள். உங்களைப் புரிந்து கொள்ளாமல் விலகி இருந்தவர்கள் உங்களைப்
புரிந்து கொண்டு பக்கத்தில் வருவார்கள். 17-ந்தேதி மாலை 3.07 மணி முதல் 19-ந்தேதி மாலை 2.42 மணி வரை
சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் கெடுதல்கள் எதுவும் நிச்சயமாக நடைபெறாது. ஆயினும் புதிய முயற்சிகள் எதுவும் இந்த நாட்களில் வேண்டாம்.
மீனம்:
மீனத்திற்கு தொட்டது துலங்கும் நல்லகாலம் இன்னும் சில வாரங்களில் ஆரம்பிக்க
இருக்கிறது. “எடுத்த காரியம் யாவிலும் வெற்றி” என்ற மகாகவி பாரதியின் கவிதை வரிகள் இப்பொழுது உங்களுக்கு
பொருந்தும். எடுத்துக் கொண்ட காரியங்கள் அனைத்தும் இனிமேல் உங்களுக்கு சாதகமாக
அமையும். உங்களின் நல்ல உள்ளத்தை இதுவரை புரிந்து கொள்ளாதவர்கள் இனிமேல் புரிந்து
கொள்வார்கள். தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் நன்றாக இருக்கும். எதிலும்
லாபம் வரும். அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
பொருளாதார வசதிகளில் குறைகள் இருக்காது. மனைவிக்கு நகை, பெண் குழந்தைகளின் திருமணத்திற்கென்று நகைசேமிப்பு போன்றவைகளை செய்ய முடியும். இதுவரை தாமதித்து வந்த வேலை வாய்ப்புக்கள் நல்லபடியாக கிடைக்கும். 19,20 ஆகிய நாட்களில் பணம் வரும். 19-ந்தேதி மதியம் 2.42 மணி முதல் 21-ந்தேதி மாலை 3.16 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எதிலும் கவனமும் எச்சரிக்கையுமாக இருப்பது நல்லது. இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம்.
No comments :
Post a Comment