Saturday, April 18, 2020

ரிஷபம்: 2020 - சார்வரி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்


ரிஷபம்:

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888


(கார்த்திகை, 2, 3, 4ம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள் மற்றும் இ, , , , , வா, , வி, , லோ ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.)

ரிஷபத்தினருக்கு பிறக்க இருக்கின்ற தமிழ்ப் புத்தாண்டு கடந்த இரண்டு  வருடங்களாக இருந்து வந்த சோதனைகளையும், வேதனைகளையும் அகற்றி நிம்மதியையும், பொருளாதார மேன்மைகளையும் தருகின்ற வருடமாக இருக்கும்.


கடந்த காலத்தில் உங்களுக்கு நடந்து வந்த அஷ்டமச்சனியின் ஆதிக்கத்தினால் பெரும்பாலான ரிஷப ராசிக்காரர்கள் சற்றுத் துவண்டுதான் போனீர்கள். முப்பது வயதுகளில் இருக்கும் இளைய பருவத்தினரை அஷ்டமச்சனி ஆட்டிப் படைத்ததோடு, வாட்டியும் எடுத்துவிட்டது.

ரிஷபத்தினரின் வீட்டில் வேறு யாருக்காவது விருச்சிகம், தனுசு போன்ற ஏழரைச் சனி நடக்கும் ராசிகள்  இருந்தால், ஒரு வீட்டில் இரண்டு சனி அமைப்பு உண்டாகி அந்தக் குடும்பம் மிகவும் தடுமாறித்தான் போனது. பிறந்த ஜாதக வலு உள்ள சிலர் மட்டும்தான் துன்பங்கள் இல்லாமல் இருந்தீர்கள். மற்றவர்கள் பாடு திண்டாட்டம்தான். 

இந்த தமிழ்ப் புத்தாண்டின் சிறப்பு பலனாக இளைய பருவத்தினருக்கு வேலை, தொழில், வியாபாரம் போன்ற விஷயங்களில் இருந்து வந்த சாதகமற்ற நிலைமைகள் அனைத்தும் மாற்றம் அடைய ஆரம்பிக்கும். இந்த வருடம் உங்களுக்கு அனைத்து நல்லவைகளும் நடக்கின்ற ஒரு வருடமாக இருக்கும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த அஷ்டமச்சனி அமைப்பினால் வேலையில் சங்கடங்கள், வேலை இழப்பு, வேலை பிடிக்காத நிலை, தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள், மனதிற்கு பிடித்தமான வேலை கிடைக்காதவர்கள் அனைவரும் இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்தே வேலை சம்பந்தப்பட்ட குறை நீங்கப் பெற்று மனநிம்மதி அடைவார்கள்.

இன்னும் சிலருக்கு இருந்து வந்த நெருங்கிய உறவினர் மரணத்தால் ஏற்பட்ட மன அழுத்தம், கணவர் - மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேற்றுமை, பிரிவு, வழக்கு, கடன்தொல்லைகள், ஆரோக்கிய குறைவு, தொழில் நஷ்டம், பணம் கொடுத்து ஏமாந்தவை போன்றவைகளும் இனிமேல் நீங்கி, வாழ்க்கை நல்ல வழியில் செல்லத் துவங்கும்.

கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வந்த சாதகமற்ற பலன்களால் கடுமையான மனஅழுத்தத்திலும், வேதனைகளிலும், எதிர்காலம் பற்றிய குழப்பத்திலும் இருந்து வந்த ரிஷப ராசிக்காரர்கள் வருட ஆரம்பத்திலேயே குறைகள் அனைத்தும் விலகி புத்துணர்ச்சியுடன் கூடிய மனநிலை கிடைக்கப் பெறுவீர்கள்.

ஆண்டின் ஆரம்பத்தில் அதிசார முறையில் குரு பகவான் ஒன்பதாமிடத்தில் இருப்பது உங்களை எந்த விதத்திலும் தொல்லைப் படுத்தாத ஒரு சாதகமான அமைப்பு. அதேநேரத்தில் ஜூன் மாதத்திற்கு பிறகு சில மாதங்கள் மறுபடியும் எட்டாமிடத்திற்கு மாறி அஷ்டம குரு அமைப்பு பெறுவார் என்றாலும் அவருக்கு கெடுபலன்களை தரும் வலிமை இருக்காது.

பிறந்த ஜாதகத்தில் யோகமான தசாபுக்திகள் நடந்து கொண்டிருப்பவர்களுக்கு இரட்டிப்பு நல்ல பலன்கள் நடக்கும். குறிப்பிட்ட சிலர் ஏதேனும் ஒரு விஷயத்தில் புகழ் அடைவீர்கள். பொதுவாழ்வில் உள்ள அரசியல்வாதிகளுக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். வரும் தேர்தலில் வெற்றி உண்டு.

கிரகநிலைமைகள் ரிஷபத்திற்கு சாதகமாக அமைவதால் இனிமேல் படிப்படியாக வாழ்க்கை அனைத்து விதங்களிலும் முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும். இதுவரை எதில் உங்களுக்கு தடைகள் இருந்ததோ அவை அனைத்தும் இப்போது நீக்கப்படும். எது கிடைக்காமல் இருந்ததோ அது இப்போது கொடுக்கப்படும். எது நடக்காமல் இருந்ததோ அது இப்போது நடக்கும். எனவே இந்த தமிழ்ப்புத்தாண்டில் முயற்சியுடன் அனைத்தையும் எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம்.

சொந்தத்தொழில் செய்பவர்கள் தொழில்அதிபர்கள் வியாபாரிகள் ஆகியவர்களுக்கு  நல்ல நேரம் இது. சில தொழில்முனைவோர்கள் நல்ல சந்தர்ப்பங்கள் கிடைத்து பணக்காரர்கள் ஆவதற்கு தற்போது வாய்ப்பு இருக்கிறது. விடாமுயற்சியுடன் எதையும் செய்வதன் மூலம் கடவுள்அருள் உங்கள் பக்கம் இருக்கும்.

வியாபாரிகள், விவசாயிகள் போன்றவர்களுக்கு இதுவரை இருந்து வந்த மந்த நிலைமை முற்றிலும் மாறி அனைத்தும் நல்லபலன்களைத் தரும். பூர்வீக சொத்து விஷயத்தில் பாகப்பிரிவினை செய்வதற்கு இருந்து வந்த தடைகள் மாறி சொத்து விஷயங்களில் அனைத்தும் நல்ல படியாக நடைபெறும்.

நல்லவேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு பொருத்தமான சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். தொழிலில் முதலீடு செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தவர்களுக்கு முதலீடு செய்வதற்கு பணம் கிடைத்து நினைத்தபடி தொழிலை விரிவாக்கம் செய்ய முடியும்.

வேலையில் இருப்பவர்களுக்கு தள்ளிப் போயிருந்த பதவிஉயர்வு சம்பள உயர்வு ஆகியவை தாமதமின்றி கிடைக்கும். எல்லாவகையிலும் வருமானம் நன்றாக இருக்கும். எட்டில் குரு இருப்பதால் தேவையற்ற விவகாரங்களில் தலையிடுவதும் அடுத்தவர்களுக்காக பரிந்து பேசி வீண்வம்பை விலைக்கு வாங்குவதும் இந்த காலகட்டங்களில் நடைபெற்று தேவையற்ற விரோதங்களை சம்பாதித்து கொள்வீர்கள் என்பதால் எச்சரிக்கை தேவை.

எட்டாமிடம் சுபத்துவம் அடைவதால் மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு மேல் நாடுகளுக்கு செல்ல முடியும். வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு உடனடியாக அந்த வேலை கிடைக்கும். பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் குறுகிய கால பயணமாக வெளிநாடு சென்று திரும்புவார்கள்.

என்னதான் பணவரவு நிறைவாக இருந்தாலும் எல்லாவற்றிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. ஆனாலும் பணவரவும் பொருளாதார நிலைமையும் நன்றாகவே இருக்கும். எனவே நிதிநிலைமையைப் பற்றி கவலைப்பட வேண்டியது இருக்காது. ஆனால் வீண் செலவு செய்வதை தவிருங்கள்.

செப்டம்பருக்குப் பிறகு இளைய பருவத்தினருக்கு திருமண அமைப்புகள் கூடி வந்து ஜாம்ஜாம் என்று திருமணம் நடக்கும். காதலித்துக் கொண்டிருப்பவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமண பந்தத்தில் நுழைவீர்கள். ஏற்கனவே முதல் வாழ்க்கை கோணலாகிப் போய் இரண்டாவது வாழ்க்கையை எதிர்பார்ப்பவர்களுக்கு அது நல்லபடியாக நடந்து நீடித்தும் இருக்கும்.

தொலைக்காட்சி சினிமாத்துறை போன்ற ஊடகங்களில் இருக்கும் கலைஞர்கள், பத்திரிகைத்துறையினர், காவல்துறையினர், நீதித்துறையினர்,  அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள், கணிப்பொறி சம்பந்தப்பட்டோர், சொல்லிக்கொடுப்போர் போன்ற அனைத்துத் தரப்பினருக்கும்  இந்த ஆண்டு  மேன்மைகளைத் தரும். மேற்கண்டவர்களுக்கு எதிர்கால நல்வாழ்விற்கு தேவையான அடிப்படைக் கட்டமைப்புக்கள் இந்தவருடம் நடக்கும். 

சிலருக்கு இந்த வருடம் வாழ்க்கைத் துணையின் பங்காக ஏதேனும் ஒரு சொத்தோ, அல்லது நல்ல ஒரு தொகையோ சரியான சந்தர்ப்பத்தில் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. சிலர் கோவில் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். ஞானிகளின் திருத்தலங்களுக்கு பயணம் செல்வீர்கள். மகாபெரியவரின் அதிஷ்டானத்திற்கு சென்று அவரின் அருளைப் பெறும் பெரிய பாக்கியம் கிடைக்கும். ஷீரடி மந்திராலயம், பகவான் சத்யசாயியின் திருவிடம் போன்ற புனிதத்தலங்களுக்குப் போக முடியும்.

மத்திய மாநில நிர்வாகப் பதவிகளுக்கான ஐ. ஏ. எஸ், குரூப்ஒன் தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கும் ஏற்கனவே எழுதி முடிவுகளுக்கு காத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்திகள் கிடைக்கும். இதுவரை வெளிமாநில வேலைக்குச் செல்ல இருந்த தடைகள் விலகும்.

இந்த வருடம் அனைத்து ரிஷபத்தினருக்கும் பொருளாதார மேன்மைகளும், பணத்தட்டுப்பாடு இல்லாத நிலைமையும் இருக்கும் என்பது உறுதி. உங்களில் சிலருக்கு மறைமுகமான வகைகளில் பணவரவு இருக்கும். வாக்குறுதிகளை காப்பாற்ற இயலும். கடனைத் திருப்பித் தருவதாக உறுதி அளித்திருந்த நாளுக்கு முன்னதாகவே அதை செலுத்த முடியும். யாரேனும் ஒருவருக்கு உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தால் நிறைவேற்றுவீர்கள்.

நீண்டநாட்களாக திருமணமாகாமலோ அல்லது திருமணத்தை எடுத்துச் செய்ய குடும்பத்தில் சரியான நபர்கள் இல்லாமல் இருப்பவர்களுக்கும் குடும்பத்தில் மூத்தவர்களாக பிறந்தவர்களுக்கும் நல்லசெய்திகள் இருக்கும். குழந்தை பிறக்காமல் தாமதமாகி வரும் தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

நீண்ட நாட்களாக மனதில் உருப்போட்டு வந்திருந்த எண்ணங்கள் திட்டங்கள் கனவுகள் ஆகியவை நீங்கள் நினைத்தபடியே நடக்கும். உடல்நிலையும் மனநிலையும் மிகவும் தெளிவாகவும் உற்சாகத்துடன் இருக்கும். கடந்த காலங்களில் நோய்வாய்ப்பட்டிருந்தவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

கணவன் மனைவி உறவில் இதுவரை  இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் நீங்கும். வாழ்க்கைத் துணைவரின் மூலம் பொருளாதார வசதிகள், ஆதரவானபோக்கு மற்றும் அனுசரணையான பேச்சு இருக்கும். இதுவரை கோர்ட்கேஸ் போன்ற வழக்குகளில் சிக்கி அவதிப்பட்டவர்களுக்கு திருப்புமுனையான நிகழ்ச்சிகள் நடந்து அனைத்தும் சாதகமாகும்.

பெண்களுக்கு நகை வாங்கும் யோகம் வந்திருக்கிறது. இளம்பெண்களுக்கு தாலி பாக்கியமும் திருமணமானவர்களுக்கு நகைகள் சேருதலும் நடக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மிகவும் அருமையான வாய்ப்புகள் வரக்கூடிய காலகட்டம் இது. அலுவலகத்தில் பிறரால் மதிக்கப்பட்டு பாராட்டுப் பெறுவீர்கள்.

யூகவணிகம், பங்குச்சந்தை முதலீடு, வட்டிக்கு பணம் கொடுத்தல் போன்ற ரிஸ்க் எடுக்கும் தொழில்களில் கவனமுடன் இருப்பது நல்லது. ஆரம்பத்தில் சிறிது லாபம் வருவது போல காட்டி பிறகு மொத்த முதலீடும் சிக்கலுக்கு ஆளாகும் நிலை வரலாம். இதுவரை சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டும் வாய்ப்போ அல்லது கட்டிய பழைய வீடோ வாங்கும் யோகம் வருகிறது. மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் இனிய சம்பவங்கள் நிகழும். படிப்பது மனதில் பதியும். தேர்வுகளை நன்றாக எழுத முடியும்.

எப்படிப் பார்த்தாலும் பிறக்க இருக்கின்ற தமிழ்ப் புத்தாண்டு ரிஷப ராசிக்கு கெடுதல்களைச் செய்யக் கூடிய அமைப்பில் இல்லை. எதிர்கால நன்மைக்குரிய சில மாற்றங்கள் இந்த வருடம் நடக்கும்.


அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment