Monday, December 2, 2019

குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (02-12-19 முதல் 08-12-2019 வரை)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களின் உடலும், மனமும் உற்சாகமடையும் வாரம் இது. உங்களில் சிலர் வேலை, தொழில் விஷயங்களில் இதுவரை சாதிக்க முடியாது என்று நினைத்திருந்த விஷயத்தை இப்போது சாதித்து காட்டுவீர்கள். குறிப்பிட்ட பலனாக முதல் திருமணம் கோணலாகி வழக்கு, நீதிமன்றம் என்று அலைந்து திரிந்தவர்களுக்கு இப்போது நல்லபடியாக ஒரு முடிவு வரும். இரண்டாவது வாழ்க்கைக்கான அமைப்புகள் உருவாகும். இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாகவும் இருக்கும். மேஷத்திற்கு பொருள் வரவைத் தரும் வாரம் இது.


உங்களில் பரணி நட்சத்திரக்காரர்களுக்கு குறிப்பிடத்தக்க நற்பலன்கள் இருக்கும். கல்லூரி, பள்ளி செல்லும் பிள்ளைகளை வைத்திருப்பவர்களுக்கு தேவையற்ற விரயங்கள் உண்டு. நீண்டநாட்கள் சந்திக்காமல் இருந்த நண்பரையோ, மனைவி வழி தூரத்து உறவினரையோ சந்திப்பீர்கள். மாணவர்கள், கலைஞர்கள், அரசு, தனியார்துறை ஊழியர்கள், தொழிலதிபர்கள், மக்கள் பிரதிநிதிகள் போன்ற அனைத்து தரப்பினருக்கும்  சிறப்பான வாரம் இது. பெண்களுக்கு மிக நல்ல பலன்கள் நடக்கும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்கு நன்மைகள் கிடைக்கின்ற வாரம் இது. நான்குக்குடைய சூரியன்  வலுப் பெறுவதால் உங்களில் சிலருக்கு அம்மாவின் மூலம் ஆதாயங்களும், உங்களின் பணத்தையும் மனைவியின் வருமானத்தையும் இணைத்து வீடு, வாகனம் வாங்குதல் போன்ற பலன்கள் இருக்கும். குரு எட்டில் அமர்ந்து இரண்டைப் பார்ப்பதால் தனலாபம் உண்டு. புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். ராசிநாதன் சுக்கிரன் குருவுடன் இணைவதால் பிரச்னைகளை சமாளிக்கும் தைரியம் உண்டாகும். அறிவால் எதையும் சாதிக்க முடியும்.

உங்களில் சிலருக்கு எந்த ஒரு விஷயத்திலும் பின்னடைவுகளையும், கடன் தொல்லைகளையும், ஆரோக்கியக் குறைவையும், எட்டில் இருக்கும் சனி கொடுத்துக் கொண்டிருந்தாலும், ராசிநாதன் சுக்கிரன் வலுவாக இருப்பதால் நீங்கள் தொல்லைகளை சமாளித்து வெற்றி கொள்ளும் வாரம் இது. சொந்தபந்த  பிரச்சனைகளை தீர்க்கும் சந்திப்புகளை இந்த வாரம் தள்ளி வையுங்கள். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். எதிர்பார்க்கும் இடத்தில் இருந்து பணம் கிடைப்பதில் தடைகள் இருக்கலாம்.

மிதுனம்:

ஐந்து பத்துக்கு அதிபதிகள் சுக்கிரனும், குருவும் ஏழில் இணைந்திருக்கும் யோக வாரம் இது. அதேபோல அங்கே சனி,கேது இணைவதும் உங்களுக்கு சாதகமான அமைப்பு என்பதால் மிதுனத்தை இதுவரை கஷ்டத்தில் ஆழ்த்தி வந்த விஷயங்கள் அனைத்தும் தீர்வு நிலைக்கு வந்து உங்கள் மனக் கலக்கங்கள் மாறும் வாரம் இது. தடங்கலாகி வந்த சில விஷயங்கள் எண்ணம் போல் இப்போது நிறைவேறும். முயற்சி செய்தும் நடக்காத சில விஷயங்கள் இனிமேல் முயற்சி இல்லாமலே வெற்றி பெறும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும்.

ஐ.ஏ.எஸ், குரூப் ஒன் தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கும், ஏற்கனவே எழுதி முடிவுகளுக்கு காத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்திகள் கிடைக்கும். வெளிமாநில வேலைக்குச் செல்ல இருந்த தடைகள் விலகும். மகன் மகள் விஷயத்தில் இருந்து வந்த கவலைகள் நீங்கும். வருமானம் குறைவதற்கு வாய்ப்பு இல்லை. இதுவரை உங்களை எதிரியாக நினைத்தவர்கள் உங்களின் உண்மைநிலை புரிந்து நண்பராக மாறுவார்கள். சிலருக்கு நீண்ட பயணங்களோ அல்லது அதிகமான பயணங்களோ இருக்கும். பெண்களுக்கு குறைகள் ஏதும் இல்லை.

கடகம்:

கடகத்திற்கு ஒரு முக்கிய பலனாக வார ஆரம்பத்தில் உடன் பிறந்தவர்கள் உங்களை புரிந்து கொள்ளாமல் குறை சொல்வதோடு உங்களை கஷ்டத்திற்கும் ஆளாக்குவார்கள். தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும். இளைய பருவத்தினருக்கு முக்கியமான திருப்பு முனைகள் இருக்கும். வார பிற்பகுதியில் எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். அவசரப்பட்டு தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம். கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வீண்வாக்குவாதங்களை தவிருங்கள்.

ஆறாமிடம் வலுப்பெறுவதால் மறைமுக எதிர்ப்புகள் உங்களுக்கு இருக்கும். நண்பனைப் போல சிரித்துப் பழகிய ஒருவர் துரோகியாக மாறலாம். வீண்பழி, வம்பு, வழக்கு ஏதேனும் வரலாம். அனைத்து விஷயங்களிலும் யோசித்து செயல்படுவது நல்லது. 3-ம் தேதி அதிகாலை 12.56 மணி முதல் 5-ம் தேதி மதியம் 1.23 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட நாட்களில் உடல் நலத்தில் அக்கறை வைக்கவும். மனதை பாதிக்கும் செயல்கள் நடக்கும் என்பதால் உணர்ச்சி வசப்படாமல் எதையும் பொறுமையுடன் கையாள்வது நல்லது.

சிம்மம்:

குருவும், சுக்கிரனும் ஐந்தில் இணைந்து, மூன்றாமிடத்தில் செவ்வாய் வலுவாக இருப்பதால் சிம்ம ராசிக்காரர்களுக்கு சகோதர விஷயத்திலும், சிகப்பு நிறம் சம்பந்தபட்டவைகளிலும் நன்மைகள் நடக்கும் வாரம் இது. தனிப்பட்ட வாழ்க்கை விஷயங்களிலோ, பணப்பரிவர்த்தனை எனும் செக் ரிட்டர்ன் வழக்குகளிலோ சிக்கி அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த வாரம் சாதகமான விஷயங்கள் நடக்கும். ஒரு சிலர் தங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவக்கூடிய அடிப்படை அறிமுகமான நபர்களை சந்திப்பீர்கள். வேறு சிலருக்கு கம்பெனி சார்பில் வெளிநாடு பயணங்கள் இருக்கும். அதனால் நன்மைகளும் இருக்கும்.

ஒரு சிலர் தங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவக்கூடிய அடிப்படை அறிமுகமான நபர்களை சந்திப்பீர்கள். பெண்களுக்கு இது உற்சாகமான வாரம். வேலை செய்யும் இடத்தில் மதிக்கப் பெறுவீர்கள். 5-ம் தேதி மதியம் 1.23 மணி முதல் 8-ம் தேதி அதிகாலை 1.27 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் நீண்ட தூர பிரயாணங்களை இந்த நாட்களில் தவிர்க்கவும். உங்களின் மனம் இப்போது ஒரு நிலையில் இருக்காது என்பதால் முக்கிய முடிவுகள் எதையும் மேற்கண்ட நாட்களில் எடுக்காமல் இருப்பது நல்லது.

கன்னி:

வார ஆரம்பத்தில் ராசிநாதன் புதன் நல்ல முறையில் இருப்பது கன்னிக்கு மேன்மையை தரும். நீங்கள் மகிழ்ச்சிக்குள்ளாகும் வாரம் இது. ராசி வலுவடைவதால் வேலை பார்க்கும் இடங்களில் டார்கெட்டை முடிக்க முடியாமல் இருந்தவர்கள், இந்த அளவு பணியை செய்தே ஆக வேண்டும் என்ற மன அழுத்தத்துடன் வேலை செய்பவர்கள் இப்போது அனைத்தையும் சரி செய்வீர்கள். பணிபுரியும் இடங்களில் நல்ல சம்பவங்களும் பாராட்டுக்களும் சம்பள உயர்வு போன்ற வருமானம் உள்ள நிகழ்ச்சிகளும் இருக்கும்.

குறிப்பிட்ட ஒரு பலனாக இந்த வாரம் வரவுக்கு மீறிய செலவு இருக்கும். அதற்காக கடன் வாங்க மாட்டீர்கள். ஏதாவது ஒரு ரூபத்தில் பண வரவு இருக்கும் என்பதால் எதையும் சமாளிக்க உங்களால் முடியும். கிரெடிட் கார்டு இருக்கிறது என்பதால் தேவையற்ற இடங்களில் தேய்க்காதீர்கள். 8-ம் தேதி அதிகாலை 1.27 மணி முதல் 10-ம் தேதி காலை 11.17 மணிவரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் தொழில் விரிவாக்கம், புதிய முதலீடுகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது.

துலாம்:

மூன்றாமிடத்தில் குரு, சனி,சுக்கிரன், கேது இணைவு துலாம் ராசிக்கு சில வித்தியாசமான அனுபவங்களை தரும் என்பதால் இந்த வாரம் இளைய பருவத்தினரின் இன்ப வாரமாக இருக்கும். இதுவரை தோழமையுடன் பழகியவர்கள் வாழ்க்கைத் துணை என்ற அமைப்பிற்கு மாறுவது இப்போது நடக்கும். நட்புடன் பழகியவர்கள் உள்ளம் திறந்து காதலை சொல்லும் வாரம் இது. நடுத்தர வயதினருக்கு நல்ல மாற்றங்கள் உண்டு. பொருளாதார சிக்கல்கள் எதுவும் வரப்போவது இல்லை. இளைய சகோதர சகோதரிகள் உதவுவார்கள். தாயார் வழியில் நன்மைகள் உண்டு.

நல்ல மாற்றங்கள், பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவைகள் இருக்கும். பங்குத்துறையில் லாபமும், நீண்டநாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விஷயம் சாதகமாக முடிவதும், திரும்பவராது என்று கைவிட்ட பணம் கிடைத்து சந்தோஷப்படுதலும் உண்டு. கணவன்-மனைவிக்குள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் கருத்துவேற்றுமை தீவிரமடையும் என்பதால் மூன்றாம் மனிதரை எதிலும் நம்பாமல் உங்களை மட்டுமே நீங்கள் நம்பவேண்டிய வாரம் இது. அம்மா வழியில் ஆதாயங்கள் உண்டு. 

விருச்சிகம்:

இதுவரை வாழ்க்கையில் நிலை கொள்ளாமல் இருக்கும் விருச்சிக ராசி இளைய பருவத்தினருக்கு எதிர்காலம் பற்றிய நம்பிக்கையான விஷயங்கள் நடக்கும் வாரம் இது. குறிப்பாக வாழ்க்கையில் நல்ல விஷயங்களை ஏற்படுத்தப் போகும் ஒருவரை இப்போது சந்திப்பீர்கள். அதன் மூலம் நல்லவைகள் நடக்கும். சிலருக்கு இதுவரை இருந்து வந்த வேலை, தொழில் போன்ற அமைப்புகளில் சாதகமான மாற்றம் நடந்து முன்னேற்றத்திற்கான விதைகள் ஊன்றப்படும். எதிர்கால நல்லவைகளுக்கு வழிவகுக்கும் வாரம் இது.

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருப்பீர்கள். வாழ்க்கைத் துணையால்  லாபம் உண்டு. இளையபருவத்தினர் சிலருக்கு காதல் அனுபவங்கள் ஏற்படும். இரண்டில் குரு, சுக்கிரன் இருப்பதால் பணவரவு இருக்கும். எதிர்பார்த்திருந்த ஒரு பெரிய தொகை வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. எதிலும் லாபம் வரும். அனைத்திலும் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நினைத்திருந்த ஒரு காரியம் இந்த வாரம் உங்கள் மனம் போல் நடக்கும். அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவார்கள். எந்த விஷயத்தையும் நேர்மையான முறையில் சந்திப்பது

தனுசு:

ராசிநாதன் குரு ராசியில் அமர்ந்து, அவருடன் இன்னொரு சுபரான சுக்கிரனும் இருக்கின்ற நல்ல வாரம் இது. மேற்சொன்ன கிரக இணைவின் குறிப்பிட்ட பலனாக கடந்த ஐந்து வருடங்களாக உங்களுக்குள் ஒளிந்து கொண்டிருந்த தைரியமும், வீரியமும் தக்க சமயத்தில், வெளிப்பட்டு உங்களின் திறமைகள் உங்களுக்கே இப்போது அடையாளம் காட்டப்படும். இந்த வாரம் உங்களை நீங்களே உணருவீர்கள். இளைஞர்களின் செயல்திறமை இப்போது வெளிப்படும். கிரகநிலைகள் சாதகமாக இருப்பதால் உங்களில் மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு சிறப்பு நற்பலன்கள் உண்டு.

வெளிநாடு செல்ல விண்ணப்பித்தவர்களுக்கு நல்ல தகவல்கள் வரும். சிலருக்கு வேற்றுமொழி கற்றுக்கொள்ளும் வாய்ப்பு உண்டு. ஏதேனும் ஒரு நல்ல காரியத்துக்கு கடன் வாங்க வேண்டியிருக்கும். ஆறுக்குடையவன் வலுப் பெறுவதால் பிடிக்காத ஒருவரிடம் பேசியாக வேண்டி இருக்கும். இளையோர்களுக்கு புதிய அனுபவங்கள் கிடைக்கும். கோபத்தைக் குறைத்து கொள்வது நல்லது. எந்த ஒரு வார்த்தையையும் பேசும் முன் யோசித்து பேசுவது நன்மை தரும். வேலை செய்யும் இடங்களில் நிதானமும் எச்சரிக்கையும் தேவை.

மகரம்:

வார ஆரம்பத்தில் ராசியில் சந்திரன் இருப்பதால் மகர ராசி இளைஞர்களுக்கு கைக்கெட்டியும் வாய்க்கு எட்டாத நிகழ்ச்சிகள் நடக்கின்ற வாரம் இது. ஒரு சிலர் உங்களின் மெத்தனப் போக்கால் நல்லதொரு சந்தர்ப்பத்தை நழுவ விடுவீர்கள். சோம்பலை தவிர்த்து துடிப்புடன் செயலாற்ற வேண்டிய வாரம் இது. எதிர்பார்ப்புகள் அனைத்தும் தடைகள் மற்றும் தாமதங்களுடன்தான் நிறைவேறும். கோர்ட், கேஸ், நிலம் சம்பந்தமான வழக்குகள். போலீஸ் விவகாரங்கள் கிரிமினல் வழக்குகள் உள்ளவர்கள் வழக்கை முடிப்பதற்கு அவசரப்பட வேண்டாம்.

அலுவலகங்களில் யாரையும் நம்ப வேண்டாம். மனதில் உள்ளதை எவ்வளவு தெரிந்தவராக இருந்தாலும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். நம்பிக்கைத் துரோகம் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் எந்த ஒரு விஷயத்தைப் பற்றி பேசும் பொழுதும் வார்த்தைகளில் கவனமாக இருங்கள். பனிரெண்டில் சனி வலுப் பெற்று இருப்பதாலும். எட்டாமிட அதிபதி சூரியன் பதினொன்றில் இருப்பதாலும் இந்த வாரம் நீங்களே உங்களுக்கு எதிரான செயல்களை செய்வீர்கள். எதிலும் கவனமுடன் இருக்க வேண்டும். வாழ்க்கை அனுபவங்களை கற்றுக்கொடுக்கும் வாரம் இது.

கும்பம்:

கடந்த சில மாதங்களாக சாதகமற்ற கிரக நிலைகளால் கஷ்டங்களை சந்தித்து வரும் உங்களில் சிலருக்கு, மறைமுகமான வழியில், எப்படி இந்தப் பணம் கிடைத்தது என்று வெளியில் சொல்ல முடியாத வகையில் ஓரளவு வருமானம்  இப்போது கிடைக்கும். உங்களுடைய பொருளாதார கஷ்டம் தீரும் வாரம் இது. அதே நேரத்தில் வரவை விட செலவு அதிகமாக இருக்கும் என்பதால் ஒரு சிலருக்கு கடனுக்கு தவணை செலுத்த முடியாத அனுபவங்களும் ஏற்படும். சிலருக்கு வீடு வாங்குவதற்கான ஆரம்பங்கள் இருக்கும்.

டிரான்ஸ்பர் ஆகுதல், வெளிமாநிலம், வெளிநாடு போன்றவைகளில் வேலை கிடைத்தல், வீடு மாற்றுதல் போன்ற பலன்கள் இப்போது நடக்கும். பொருளாதாரம் நன்றாகவே இருக்கும். பழைய வாகனத்தை மாற்றி நல்ல வாகனம் வாங்குவீர்கள். தாயார் வழியில் நன்மைகளும், சில ஆதரவான விஷயங்களும் நடக்கும். பெண் குழந்தைகளை அக்கறையுடன் பார்த்து கொள்வது நல்லது. சுக்கிரன் வலுவாக  இருப்பதால் சிறு சிறு பிரச்னைகள் வந்தாலும் அனைத்துக் கஷ்டங்களும் சூரியனைக் கண்ட பனிபோல விலகி ஓடி விடும் என்பது உறுதி.

மீனம்:

ராசிநாதன் குரு இரண்டாம் வீட்டைப் பார்க்கின்ற யோக வாரம் இது. ராசிநாதன் சுக்கிரனுடன் இணைந்து அதிக சுபத்துவமாக இருப்பதால் இதுவரை இல்லாத அளவிற்கு அனைத்திலும் தைரியமாகவும், தெளிவான மனதுடனும் முடிவெடுப்பீர்கள். அதே நேரத்தில் வாக்கு ஸ்தானத்தை  செவ்வாய் பார்ப்பதால் சிலருக்கு கட்டுக் கடங்காதப்படி கோபம் வரும் என்பதால் எதிலும் நிதானமாகவும் பேசும் போது கவனமாகவும்  இருக்க வேண்டியது அவசியம். சிலருக்கு வேலை விஷயமாக தூரப்பயணங்கள் அமையும். காவல் துறையினருக்கு இந்த வாரம் டென்ஷன் இருக்கும்.

ராகு நான்கில் குரு பார்வையுடன் வலுவாக இருப்பதால் வேற்றுமத, மொழி, இனக்காரர்கள் தொடர்புகள் கிடைக்கும். முகம் தெரியாதவர்கள் உதவுவார்கள். வெளிநாட்டில் இருந்து நன்மைகள் உண்டு. இரும்பை கையில் கொண்டு தொழில் செய்யும் டெயிலர்கள், மெக்கானிக்குகள் ஆலைத் தொழிலாளிகள் போன்றவர்களுக்கு நன்மைகள் இருக்கும். அந்தஸ்து, கௌரவம், பணவரவு ஆகியவற்றில் குறைகள் இருக்காது. தொழில், வியாபாரம் விறுவிறுப்புடன் நடக்கும். புத்திர பாக்கியம் இல்லாதவருக்கு கருவுறுதல் இருக்கும்.

(02.12.2019 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment