Tuesday, September 3, 2019

குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (02.09.19 முதல் 08.09.19 வரை)



ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி



கைப்பேசி : +91 9768 99 8888

மேஷம்:

ராசிநாதன் செவ்வாய் அதிநட்பு வலு, யோகாதிபதி சூரியன் ஆட்சி என கிரக நிலைகள்  மேஷ ராசிக்கு நல்லவிதத்தில் இருப்பதால் நன்மைகள் உள்ள வாரம் இது. ஐந்துக்குடையவன் ஆட்சியாக இருப்பதால் சிலருக்கு அதிர்ஷ்டமான சம்பவங்கள் நடக்கும். சூரிய வலுவால் இந்தவாரம் யோகமாக இருக்கும். மேஷத்தின் முன்னேற்றத்திற்கு அடித்தளம் போடும் வாரம் இது. இப்போது ஏற்படும் சில அறிமுகங்களால் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்வீர்கள். கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால் கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை.


வேலை, தொழில் விஷயங்களில் உங்களுடைய திறமைகள் வெளிப்படும். பெண்கள் விஷயத்தில் செலவு இருக்கும். சிலருக்கு தூரப் பயணங்கள் அமையும். அலுவலகங்களில் பாராட்டுக்களும் உயர்நிலையில் இருப்பவரின் அறிமுகமும் அவரால் கவனிக்கப்படுதலும் நடக்கும். 7,8,9 ஆகிய நாட்களில் பணம் வரும். 4-ந்தேதி இரவு 10.14 மணி முதல் 7-ந்தேதி அதிகாலை 4.57 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதியவர்களை அறிமுகம் செய்து கொள்வதோ, முக்கிய முடிவுகள் எடுப்பதோ வேண்டாம். குறிப்பாக பெண்களிடம் விலகி இருக்கவும்.

ரிஷபம்:

வாரம் முழுவதும் ராசிநாதன் சுக்கிரன் எதிரிகளான சூரியன், செவ்வாயுடன் இணைந்து நான்காம் வீட்டில் இருக்கிறார். இந்த நிலை உங்களுக்கு தன்னம்பிக்கை இழப்பைக் கொடுத்தாலும் யோகாதிபதி புதன் வலுவாக இருப்பதால் ரிஷபத்தினர் முடிவில் வெற்றியடையும் வாரம் இது. சனி எட்டில்  இருப்பதால் எதையும் முனைப்புடன் செய்ய வேண்டியது அவசியம். மனம் ஒரு நிலையில் இல்லாமல் பரபரப்பாக கோபத்துடன் இருக்கும். சாதாரண விஷயத்திற்காக சண்டை போடுவீர்கள். சிறிய விஷயத்தைப் பெரிதாக்குவீர்கள் என்பதால் யாரிடமும் வாக்குவாதம் வேண்டாம்.

இளைஞர்களுக்கு எதிர்ப்புகள் இருக்கும். நண்பனைப் போல உங்களுடன் சிரித்துப் பழகிய ஒருவர் துரோகியாக மாறலாம். செய்யாத குற்றத்திற்கு வீண்பழி வரும் வாய்ப்பு இருக்கிறது. வம்பு வழக்கு ஏதேனும் வரலாம் என்பதால் யோசித்து செயல்படுவது நல்லது. 4,5,6,9 ஆகிய நாட்களில் பணம் வரும். 7-ந்தேதி அதிகாலை 4.57 மணி முதல் 9-ந்தேதி மதியம் 3.12 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட நாட்களில் உங்களின் புதிய முயற்சிகள், ஆரம்பங்கள் எதையும் செய்ய வேண்டாம். விரிவாக்கங்கள், கிளைகள் ஆரம்பித்தல் போன்றவைகளையும் செய்யக்கூடாது.

மிதுனம்:

ராசிநாதன் புதன் மூன்றாமிடமான முயற்சி ஸ்தானத்தில் அதிநட்பு வலுவுடன் இருந்தாலும் ஆறுக்குடைய செவ்வாயின் சேர்க்கையில் இருப்பதால் இந்த வாரம் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக நடப்பது போல தோன்றினாலும் பிறகு வேகமிழந்து ஏமாற்றங்களை தரும். சிலருக்கு ஆரோக்கிய குறைபாடு வரும். மருத்துவச் செலவுகள் உண்டு. தந்தைவழி பெண் உறவினர்கள் வகையில் விரயங்கள் உண்டு. தந்தை வழியில் சங்கடமான சம்பவங்கள் இருக்கலாம். குடும்பப் பிரச்னைகளை சற்று நிதானத்துடன் கையாள்வது நல்லது.

ராகு ராசியில் இருப்பதால் குழப்ப மனது இருக்கும். ராகு என்பது ஒரு நிழல் கிரகம். இருள் உங்கள் ராசியில் இருக்கிறது என்றால் நீங்கள் இருட்டில் நிற்கிறீர்கள் என்று அர்த்தம்.  அதனால் உங்களையும், உங்கள் திறமைகளையும் யாரும் பார்க்க முடியாது என்பதுதான் உண்மை. இந்த அமைப்பின் மூலம் உங்கள் திறமைகளை நீங்களே வெளிக் கொணர மறுப்பீர்கள். எனவே இந்த காலகட்டத்தில் உங்களின் செயல்திறனைக் காட்ட ஒரு சிறு சந்தர்ப்பம் கிடைத்தாலும் அதை நழுவ விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு முன்னேற வேண்டியது மிதுனத்தினரின் சாமர்த்தியம்.

கடகம்:

இரண்டாமிடத்தில் ஒன்று கூடும் சூரியனும், புதனும் இந்த வாரம் உங்களுடைய மன உறுதியையும், தைரியத்தையும் அதிகப்படுத்தி எதையும் சாதிக்கும் திறனை அளிக்கும் என்பதால் இது கடகத்திற்கு கவலை இல்லாத வாரம்தான். இரண்டுக்குடைய சூரியன் வலுத்து, பனிரெண்டில் ராகு  இருப்பதால் சிலருக்கு அன்னிய, மத, மொழிக்காரர்கள் மூலம் பண வரவு இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி மற்றும் மாநிலங்களுக்கு  இடையே தொழில் செய்பவர்களுக்கு இந்த வாரம் யோகத்தை தரும். தொல்லைகள் இல்லாத வாரம் இது.

வாரத்தின் ஆரம்ப நாட்கள் நல்லவிதமாகவே ஆரம்பிக்கின்றன. செவ்வாய், புதன்  இணைவால் அடிக்கடி மூட் அவுட் ஆவீர்கள். காரணம் இல்லாமலேயே எரிச்சல் படுவீர்கள். முணுக்கென்றவுடன் மூக்குக்கு மேல் கோபமும் எரிச்சலும் எட்டிப் பார்க்கும். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். கடக ராசிக்காரர்கள்  பொறுமைசாலிகள் என்பதாலும், எதையுமே சட்டென கிரகித்துக்கொள்வீர்கள் என்பதாலும் உங்களால் எதையும் எந்த சூழ்நிலையிலும் சாதகமாக மாற்றிக் கொள்ள முடியும் என்பதை இந்த வாரம் நிரூபிப்பீர்கள்.

சிம்மம்:

ராசிநாதன் சூரியன் ராசியிலேயே ஆட்சியாக இருப்பது நன்மைதான் என்றாலும்,  செவ்வாயும் ராசியில் இருப்பதால் எந்த ஒரு நல்ல விஷயத்தையும் முழுமையாக அனுபவிக்க முடியாமல் நன்மைகளும், எரிச்சல் தரும் விஷயங்களும் கலந்து நடக்கும் வாரம் இது. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் வரும். நண்பர்களால் உதவிகள் இருக்காது. மூத்த சகோதரஸ்தானம் சுபவலுப் பெறுவதால் அண்ணன், அக்காக்களிடமிருந்து உதவிகள் உண்டு. முயற்சிகள் வெற்றியடையும் வாரம் இது.

ஐந்தில் சனி இருப்பதால் சிலருக்கு குழந்தைகளால் சங்கடங்கள் இருக்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்காது. அதற்காக கோபப்பட வேண்டம். நொந்து கொள்ள வேண்டம். இது உங்கள் தகப்பனாரிடம் நீங்கள் கட்டுப்பெட்டியாக வாழ்ந்த காலம் போல இல்லை. இது இளைஞர்களின் காலம். செல்போன் யுகம். குழந்தைகளின் விஷயத்தை பக்குவமாக கையாள்வதன் மூலம் இந்தவாரம் நிம்மதி கிடைக்கும். அலுவலகத்தில் வீண் வாக்குவாதங்களைத் தவிருங்கள். இளைஞர்களுக்கு பிரச்னைகள் விலகி நிம்மதி இருக்கும்.

கன்னி:

ராசிநாதன் புதன் பனிரெண்டாமிடத்தில் இருப்பதால் கன்னிக்கு மனமகிழ்ச்சி இருந்தாலும் வீண் செலவுகளே பிரதானமாக இருக்கும். உங்களை சங்கடங்களுக்கு உள்ளாக்கும் வாரம் இது. விரயாதிபதி சூரியனும் வலுவாக உள்ளதால் விரயங்களும் இருக்கும். வருமானம் வந்தாலும் சேமிப்பது கடினம். வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். சிக்கனமாக இருப்பது நல்லது. ராசிநாதன் நட்பு வலுவுடன் இருப்பதால் எதிலும் வெற்றியைச் சந்திப்பீர்கள். அதேநேரத்தில் வெற்றியை அடைவதற்கு போராட வேண்டியிருக்கும். 

சிலருக்கு புனித யாத்திரையோ, திருக்கோவில்களுக்கோ செல்லும் வாய்ப்பு கிடைக்கும். சுக்கிரன் செவ்வாயுடன் இணைந்திப்பதால் பெண்களால் எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சியான திடீர் சுகங்கள் உண்டு.  சிலருக்கு வெளிநாடு அல்லது வெளி மாநில பயணங்கள் இருக்கும். ரேஸ் லாட்டரி பங்குச்சந்தை சூதாட்டம் போன்றவைகள் கை கொடுக்கும். அதற்காக தேவையின்றி ரிஸ்க் எடுக்க வேண்டாம். தாயாரின் நன்மைகளுக்காக செலவுகள் செய்வீர்கள். வெளி மாநிலத்தவர்கள், வேற்று மதத்தினர் நண்பர்களாகக் கிடைப்பார்கள்.

துலாம்:

ராசிநாதன் சுக்கிரன் லாப வீட்டில் இருந்தாலும், அவருக்கு எதிர்த்தன்மையுள்ள சூரியன், செவ்வாயுடன் இணைந்திருக்கும் வாரம் இது. துலாம் ராசிக்காரர்களுக்கு தொழில் சிக்கல்கள் அனைத்தும் இனி தீரும். நல்லவைகள் நடக்கும்.  சிலருக்கு அரசு வேலை, அல்லது அரசு உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் தொல்லைகள் இருக்காது. வீண்செலவுகள் இருக்கும். சிக்கனமாக இருப்பது நல்லது. சனி வலுவாக இருப்பதால், தவிர்க்க இயலாத விஷயத்திற்காக பொய் சொல்வீர்கள். துலாமிற்கு சந்தோசம் தரும் வாரம் இது.

வியாபாரம், வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி, சிகப்பு மற்றும் வெள்ளை நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு பட்ஜெட்டை மீறி செலவுகளும் விரயங்களும் இருக்கும் என்றாலும் நல்ல வருமானம் வந்து அனைத்தையும் ஈடு கட்டும்.. வெளிநாடு சென்று வேலை செய்வதற்கான முயற்சிகள் செய்வீர்கள். வாழ்க்கைத் துணைவர் உதவியாக இருப்பார். ஜீவன அமைப்புகள் சுமுகமாக நடைபெறும். பெண்களை விட்டு சற்றுத் தள்ளியே இருங்கள். யாரிடமாவது அகப்பட்டு திண்டாடும் நிலை உண்டு. குறைகள் இல்லாத வாரம் இது.

விருச்சிகம்:

பத்தில் ஆட்சி பெற்றுள்ள ஜீவனாதிபதியும், அவருடன் இணைந்துள்ள ராசி நாதனும் இந்த வாரம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நிம்மதியைத் தருவார்கள். குறிப்பாக தொழில்ரீதியாக சிக்கல்களில் இருக்கும் கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு இனி சிரமங்கள் இருக்காது. மனதில் இருக்கும் இனம் புரியாத கலக்கத்தையும், பயத்தையும் உதறித் தள்ளுங்கள். உங்களை மீறி யாரும் உங்களை ஒன்றும் செய்துவிட முடியாது. ராசிநாதன் செவ்வாய் உங்கள் ஆற்றலை வெளிப்படுத்த துணை புரிவார். வேதனைகள் இனி சாதனை ஆகும் வாரம் இது.

ஏழரைச்சனி இன்னும் சில வாரங்களில் முடியப் போவதால் இனிமேல் வாழ்க்கை நல்லவிதமாக செட்டில் ஆகும். விருச்சிகத்திற்கு விடிவு எனும் கதவு திறந்து விட்டது. முயற்சிகள் பலிக்கும். எதிலும் நம்பிக்கையோடும் அக்கறையோடும் உழைப்பீர்கள். பெண்களால் மனச்சங்கடங்கள் வரலாம். சிலருக்கு சொந்தவீடு அமைவதற்கான ஆரம்பங்கள்  நடக்கும். சகோதர சகோதரிகளின் விஷயங்களில் நல்ல சம்பவங்களும் ஒருவருக்கொருவர் ஆதரவான நிகழ்வுகளும் இருக்கும். கலைத்துறையினர் நல்ல திருப்பங்களைக் காண்பீர்கள்.

தனுசு:

ஒன்பது, பத்துக்குடைய சூரியனும், புதனும் வலுவாக ஒன்பதாமிடத்தில் இருப்பதால் தனுசுக்கு பெரிய பின்னடைவுகள் இல்லாத வாரம் இது. கெடுதல் செய்யும் கிரகங்கள் வலுவிழந்து இருக்கிறார்கள். ராசியில் சனி இருப்பதால்  வாழ்க்கைத் துணை வழியில் கோபம் வரக்கூடிய சம்பவங்கள் சிலருக்கு நடைபெறும். பொறுமை தேவை. சொந்தவீடு இல்லாத சிலருக்கு கடன் வாங்கி வீடு அமைவதற்கான ஆரம்பங்கள் இருக்கும். சிலருக்கு ஆன்மிகம் சம்பந்தப்பட்ட அனுபவங்கள் கிடைக்கும். வாகனம் வாங்குவீர்கள்.

வியாழன், வெள்ளி இரண்டு நாட்கள் பணம் வரும். வாகன மாற்றம் வீடு மாற்றம் சிலருக்கு உண்டு. அனைத்து ஜீவன அமைப்புக்களும் நல்ல லாபத்துடன் இயங்கும். பணவரவு இருக்கும். வெளியூர் மாறுதல், செக்சன் மாறுதல் உண்டு. தாயார் வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும் வரும். ஜென்மச் சனி நடப்பதால் சோம்பலாக எதிலும் ஒரு பிடிப்பின்றி இருப்பீர்கள். அருகில் உள்ள தக்ஷ்ணாமூர்த்தி கோவிலுக்கு சென்று அவரை வேண்டுங்கள். அவர் ஒருபோதும் உங்களைக் கைவிட மாட்டார்.

மகரம்:

ஒன்பதுக்குடைய புதன் எட்டாமிடத்தில் அமர்வதால், இந்த வாரம் மகரத்தினர் தந்தையின் ஆரோக்கியம் மற்றும் தந்தையுடனான உறவில் கவனம் கொள்ள வேண்டியதாக இருக்கும். ராசிநாதன் சனி, கேது இணைவிளால் சிலருக்கு கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். இன்னும் சிலருக்கு ஞானிகள் தரிசனமோ, தெய்வ தரிசனமோ கிடைக்கும். நீண்டநாட்களாக போக முடியாத புனிதத் தலங்களுக்கு போக முடியும். ராகு-கேதுக்களின் பிடியில் ராசிநாதன் இருப்பதால் அன்னிய, மத, இன மொழிக்காரர்களால் வீண் விரையங்களும், மனஸ்தாபங்களும் இருக்கும்.

இளைஞர்களுக்கு வேலை அமைப்புகளில் ஏமாற்றங்கள் இருக்கும் என்பதால் அலுவலகங்களில் கவனம் தேவை. வேலை வாங்கி தருவதாக யாராவது பணம் கேட்டால் கண்டிப்பாக கொடுக்க வேண்டாம். ஏமாற்றப்படுவீர்கள். தேவையற்ற விஷயத்திற்கு கடன் வாங்கக் கூடிய சூழல்கள் உருவாகும். இளைஞர்கள் சிலர் இந்த வாரம் பெங்களூர் அல்லது வடக்கே உள்ள நகரங்களில் வேலை கிடைத்துச் செல்வீர்கள். வெளிநாடு யோகம் உண்டு. இளைய பருவத்தினருக்கு  முக்கியமான திருப்பு முனைகள் இருக்கும். யாரையும் நம்ப வேண்டாம்.

கும்பம்:

ராசிநாதன் சனி ராசியை பார்ப்பதோடு அவர் கேதுவுடன் இணைந்திருப்பது சிறப்பான நிலை என்பதால் கும்பத்திற்கு இது தொல்லைகள் இல்லாத வாரமாக இருக்கும். கோட்சார ரீதியில் கிரகங்கள் உங்களுக்கு சாதகமான நிலையில் இருக்கின்றன. பதினொன்றில் இருக்கும் கேது உங்களின் ஆற்றலை அதிகப்படுத்துவார். ஞாயிறு, திங்கள் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். பிள்ளைகளால் நல்ல செய்தி வரும். எதிர்ப்புகள் அனைத்தும் அடிபணியும் வாரம் இது. தாயார் வழியில் நல்ல விஷயங்கள் நடக்கும். அம்மாவின் ஆசியைப் பெறுவீர்கள்.

சூரிய, செவ்வாய் சேர்க்கை ஏழில் அமைவது செய்யும் வேலையில் சிறிய பிரச்னைகளை உண்டு பண்ணினாலும் எதுவும் கைமீறி போகாது. மேலதிகாரி நீங்கள் சொல்வதை முணுமுணுப்புடன் ஏற்றுக் கொள்வார். சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், தூரப் பிரயாணம் போன்றவைகள் இருக்கும்.  3,4,6,8 ஆகிய நாட்களில் பணம் வரும். 31-ம் தேதி இரவு 7.22 முதல் 2-ம் தேதி இரவு 7.24 வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் கெடுதல்கள் எதுவும்  நடக்காது. அதே நேரத்தில் புதிய முயற்சிகள் ஆரம்பங்கள் எதுவும் இந்த நாட்களில் வேண்டாம்.

மீனம்:

இறைவனின் அருளால் எந்த பிரச்சினை இருந்தாலும் நல்லபடியாக, சாதகமாக முடியும் வாரம் இது. தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு துறைரீதியான நெருக்கடிகள் இருக்கும். ஆறில் சூரியன், செவ்வாய் இணைவதால் செய்வது தவறாகவே இருந்தாலும் அதை ஒத்துக்கொள்ள மாட்டீர்கள். உங்களின் பிடிவாத குணம் அதிகரிக்கும். பணிபுரியும் இடங்களில் உங்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த சிலர் முயற்சிப்பார்கள். வாரம் முழுவதும் ராசிநாதன் குரு நன்மைகளை தரும் அமைப்பில் இருப்பதால்  குறைகள் சொல்ல எதுவும் இல்லை.

வாக்குறுதியை தற்பொழுது நிறைவேற்றுவது கடினம் என்பதால் யாருக்கும் அவசரப்பட்டு வாக்குத் தர வேண்டாம். நான்காமிடத்தில் ராகு இருப்பதால் வீட்டைக் கவனியுங்கள். வீட்டிற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை சரியாக செய்து விடுங்கள். 5,7,8,9 ஆகிய நாட்களில் பணம் வரும். 2-ந்தேதி இரவு 7.24 மணி முதல் 4-ந்தேதி இரவு 10.14 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட நாட்களில் கவனமாக இருப்பது நல்லது. எவருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். சண்டை வந்தாலும் ஒதுங்கி போவது நல்லது.

(02.09.2019 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 


தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.


No comments :

Post a Comment