Friday, March 22, 2019

ரிஷபம்: 2019 - விகாரி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

ரிஷபம்: 

(கார்த்திகை, 2, 3, 4ம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள் மற்றும் இ, உ, எ, ஏ, ஒ, வா, வ, வி, ஆ, லோ ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.) 

ரிஷப ராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கும் புது தமிழ் வருடமான விகாரி ஆண்டு ஏற்கனவே உங்களுக்கு நடந்து கொண்டிருக்கும் சாதகமற்ற பலன்களை மாற்றியமைத்து நல்ல பலன்களை தருகின்ற ஒரு வருடமாக இருக்கும். 

ரிஷபத்திற்கு தற்போது கோட்சார நிலைமையில் எதையும் தடை செய்யும் அஷ்டமச் சனி அமைப்பு நடந்து கொண்டிருக்கிறது. இதனால் கைக்கெட்டியது வாய்க் கெட்டாத சில விஷயங்களை ரிஷபத்தினர் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். 

குறிப்பாக இளைய பருவத்தினர் வாழ்க்கையில் செட்டில் ஆகாமல் செய்யக்கூடிய விஷயங்களை சனி செய்து கொண்டிருக்கிறார். பணம் என்றால் என்ன, உறவுகள், நட்புகள் எப்படிப்பட்டது, வேலை மற்றும் தொழிலில் இருக்கும் சிக்கல்கள் என்ன, வேலை கிடைப்பது எவ்வளவு கடினம், கிடைக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது எப்படி என்பது போன்ற விஷயங்களையும், ஆணுக்குப் பெண்ணையும், பெண்ணுக்கு ஆணையும் புரிய வைக்கும் சில விஷயங்களையும் எட்டில் இருக்கும் சனி தற்போது ரிஷப ராசிக்கு செய்து கொண்டிருக்கிறார். 

அதேநேரத்தில் ஏறத்தாழ இரண்டரை ஆண்டு காலம் கொண்ட அஷ்டமச்சனி அமைப்பில் கிட்டத்தட்ட 70 சதவிகித பகுதியை நீங்கள் கடந்து விட்டதால் இனிமேல் சாதகமற்ற பலன்கள் எதுவும் ரிஷபத்திற்கு இருக்கப் போவதில்லை. 

குறிப்பாக எட்டில் இருக்கும் சனிபகவான் கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்த ராகு-கேது பெயர்ச்சியால் கேதுவுடன் இணைந்து சூட்சும வலு அடைந்திருப்பதால் இனிமேல் உங்களுக்கு கெடுதல்களைச் செய்ய இயலாத நிலை மாறி நன்மைகள் தரும் நிலைக்கு மாறுவார். 

எனவே கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்து வந்த கெடுதலான நிலைமைகளும், எந்த ஒரு விஷயமும் முன்னேற்றமாக இல்லாமல் கிணற்றுக்குள் போட்ட கல்லாக இருந்த அமைப்பும் மாறி, பிறக்க இருக்கும் புதிய தமிழ் வருடமான விகாரி வருடத்தில் முன்னேற்றத்திற்கான பாதையில் ரிஷப ராசிக்காரர்கள் அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள். 

நடக்கும் அஷ்டமச் சனியால் மணவாழ்வில் சிக்கலுக்குள்ளானவர்கள், மண வாழ்க்கை அமையாதவர்கள் மற்றும் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள், சொத்துப்பிரச்சினை, பங்காளி தகராறு, வழக்கு, கோர்ட்டு பிரச்சினை போன்றவைகள் இருந்தவர்களுக்கு இனிமேல் சாதகமான முடிவுகள் கிடைக்கும். 

புத்தாண்டின் ஆரம்பத்தில் ராகு-கேதுக்கள் சுபத்துவமாக இரண்டில் அமர்வதால் வேற்று மன, இன, மொழிக்காரர்களுடன் நெருக்கம் உண்டாகும். அவர்கள் மூலமாக நன்மைகள் இருக்கும். இஸ்லாமிய, கிறிஸ்தவ நண்பர்கள் உதவுவார்கள். சிலருக்கு அன்னிய மத, வேறு மாநில வாழ்க்கைத்துணை அமையும். 

குருபகவான் தற்போது மிகவும் நல்ல பலன்களை கொடுக்க கூடிய ஏழாமிடத்தில் அமர்ந்து ராசியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இதனால் இதுவரை இருந்து வந்த பொருளாதார சிக்கல்கள் நீங்கி தனலாபம், நிரந்தரமான வருமானம், நீடித்த பணவரவு ஆகிய பலன்கள் நடந்து இதுவரை இருந்த கஷ்டங்கள் அனைத்தும் சீராகப் போகிறது. 

வர இருக்கும் விகாரி வருடத்தில் உங்கள் உடல், மனம், பொருளாதார நிலைமைகள் அனைத்தும் சிறப்பாக இருக்கும் என்றால் அது மிகையாகாது. வருடத்தின் நடுப்பகுதியில் இருந்து கெடுபலன்கள் அனைத்தும் மாறி நல்ல நிலைமைக்கு செல்வீர்கள். புதுவருடம் உங்களுக்கு புத்துணர்ச்சியைத் தரும் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. 

பிறந்த ஜாதகப்படி கூடுதலான நல்ல அமைப்புகளையும் கொண்டிருந்தீர்களேயானால் மிகப்பெரிய முன்னேற்றம் இப்போது உங்களுக்கு இருக்கும். இந்த புத்தாண்டில் இருந்து உங்களின் அனைத்துப் பிரச்னைகளும் நல்லபடியாக முடிவுக்கு வந்து அதிர்ஷ்டம் தேடிவந்து உங்களிடம் ஒட்டிக் கொள்ளப் போகிறது. 

இதுவரை இருந்து வந்த தேவையற்ற பயஉணர்வுகளும், கலக்கமான மனநிலையும் விலகி மனதில் ஒரு புத்துணர்ச்சி பிறந்து புதுமனிதராக மாறப் போகிறீர்கள். இதுவரை முயற்சி செய்தும் நடைபெறாத பல விஷயங்கள் இனிமேல் தெய்வத்தின் அருளால் முயற்சி இல்லாமலேயே வெற்றி பெறும். பண வரவுகள் சரளமாகி குடும்பத்தில் பணப் பிரச்னைகள் எதுவும் இல்லாமல் நிம்மதி இருக்கும். 

எந்த ஒரு விஷயத்திலும் இதுவரை உங்களுக்கு இருந்து வந்த கவலைகள் குழப்பங்கள், உடல்நலக் குறைவு, கடன்தொல்லை மற்றும் எதிர்மறை எண்ணங்கள், தொழில்தேக்கம், அதிர்ஷ்டக்குறைவு, தடைகள், தாமதங்கள் போன்ற அனைத்தும் இனித் தீர்ந்து மிகவும் மேன்மையான காலம் ஆரம்பிக்கிறது. 

ரிஷ்பத்தினர் உடலிலும் மனதிலும் புதுத் தெம்பு பிறக்கும். எங்கும் எதிலும் உற்சாகமாக இருப்பீர்கள். நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும். எந்த ஒரு செயலையும் உடனுக்கு உடன் நிறைவேற்ற முடியும். வாக்குப் பலிதம் ஏற்படும். உங்களுடைய பேச்சை அனைவரும் கேட்பார்கள். எதிரிகள் உங்களைக் கண்டாலே ஒளியும்படி இருக்கும். மறைமுக எதிரிகளைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. 

சென்ற காலங்களில் வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த அதிருப்திகளும் சஞ்சலங்களும் விரக்தியும் இனிமேல் இருக்காது. பதவிஉயர்வு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த சம்பள உயர்வும் பாக்கித்தொகையும் பெறுவீர்கள். பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றங்கள் உண்டு. 

பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள், ஊடகம் பத்திரிக்கை போன்ற துறையில் இருப்பவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இனி நன்மைகள் நடக்கும். பொருத்தமில்லாத வேலையில் இஷ்டமில்லாமல் இருந்த இளைஞர்களுக்கு மாற்றங்கள் உருவாகி நினைத்த மாதிரியான வேலை இனிமேல் கிடைக்கும். 

உங்களைப் பிடிக்காத மேலதிகாரி மாறுதலாகி உங்களுக்கு அனுசரணையானவர் அந்த இடத்திற்கு வருவார். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் மறையும். ஏற்கனவே தொழில் ஆரம்பித்து இன்னும் காலூன்ற முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த வருடம் தொழில் நல்ல முன்னேற்றமாக நடக்கும். 

அந்தஸ்து, மதிப்பு உயரும் நேரம் இது. அடுத்தவர்களால் கௌரவமாக நடத்தப்படுவீர்கள். சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இனிமேல் நிலையான ஒரு தொழில் அமைப்பு உருவாகி மாதாமாதம் நிரந்தர வருமானம் வரும். 

பொருளாதார நிலை மிகவும் மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும். தொட்டது துலங்கும். இதுவரை வருமானம் இன்றி பணப்பற்றாக்குறையால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பணப்பிரச்னை இல்லாத அளவுக்கு நல்ல வருமானம் இருக்கும். 

தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், இயக்கும் வேலையில் உள்ளவர்கள் போன்ற துறையினர் தங்களது தொழில் வளர்ச்சியுறுவதைக் காண்பார்கள். கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமான நிலைமையும் மாறி தொழில் நல்லபடியாக நடக்கும். 

நண்பர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள். ஏற்கனவே தொழில் ஆரம்பித்து இன்னும் காலூன்ற முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த வருடம் முதல் தொழில் முன்னேற்றமாக நடக்கும். கூட்டுத்தொழில் செய்யலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தவர்கள் தங்கள் தொழிலில் பங்குதாரர்களை சேர்த்துக் கொள்வதற்கு நல்ல நேரம் இது. அவர்கள் மூலம் முன்னேற்றங்கள் இருக்கும். 

சில தொழில் முனைவோர்கள் நல்ல சந்தர்ப்பங்கள் கிடைத்து அமோகமான தொழில் வெற்றியைப் பெற்று பணக்காரர்கள் ஆவதற்கு தற்போது வாய்ப்பு இருக்கிறது. விடாமுயற்சியுடன் எதையும் செய்வதன் மூலம் கடவுள்அருள் உங்கள் பக்கம் இருக்கும் என்பது நிச்சயம். 

அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு வருமானங்கள் சொல்லிக் கொள்ளும்படி இருக்கும். தொழிலாளர்களுக்கு வேலைப்பளு குறைந்து சம்பளஉயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும். தொழிற்சங்கங்களில் பதவியில் இருப்பவர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள். 

வீட்டில் மங்களநிகழ்ச்சிகள் நடைபெறும். இதுவரை திருமணம் ஆகாத இளைய பருவத்தினருக்கு திருமணம் நடைபெறும். நீண்ட காலமாக மகன், மகளுக்கு திருமணம் கூடி வரவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அந்தக்கவலை இப்போது நீங்கும். 

காதலிப்பவர்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் நினைத்தவரை மணமுடிப்பீர்கள். முதல் வாழ்க்கை கோணலாகிப் போய் போலிஸ் கோர்ட் என்று திரிந்தவர்களுக்கு அனைத்துப் பிரச்னைகளும் நல்லபடியாக முடிந்து இரண்டாவது வாழ்க்கை அமைப்பு நல்லபடியாக உருவாகும். 

வெளிநாட்டில் படிக்கவோ வேலை செய்யவோ முயற்சி செய்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும். இந்த புத்தாண்டில் இடமாற்றங்கள் ஊர்மாற்றங்கள் வீடுமாற்றம் தொழில்மாற்றம் போன்றவைகள் நடக்கும். அந்த மாற்றங்கள் உங்கள் எதிர்காலத்திற்கு நல்லவைகளாகத்தான் இருக்கும் என்பதால் தயங்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள். 

பெண்களுக்கு இது மிகச் சிறப்பான நன்மைகளைத் தரும் புத்தாண்டாகும். உங்களின் மதிப்பு உயரும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் இதுவரை இருந்த வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். 

தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள் நன்றாக இருக்கும். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். சகோதரர்கள் உதவுவார்கள். 

இந்த தமிழ்ப் புத்தாண்டு ரிஷபத்திற்கு திருப்புமுனையைத் தந்து முன்னேற்ற பாதையில் செல்ல வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

தொடர்பு எண்கள்செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.


குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment