Thursday, February 28, 2019

விருச்சிகம் - 2019 மார்ச் மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி:8681 99 8888

விருச்சிகம்: 

மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் ராசிநாதன் செவ்வாய் ஆறாமிடத்தில் ஆட்சியாக இருப்பது விருச்சிக ராசிக்கு நிம்மதியைத் தரும் அமைப்பு. அதைவிட மேலாக வேலை மற்றும் தொழிலுக்கு அதிபதியான சூரியன் மாத பிற்பகுதியில் குரு பார்வையில் அமர்வதால் இதுவரை தொழிலிடங்களில் கடுமையான சிக்கல்களை சந்தித்தவர்களுக்கு நல்ல பலன்கள் நடக்கின்ற மாதம் இது. குறிப்பாக விருப்பமில்லாத பணியில் அனைத்தையும் சகித்துக் கொண்டு வேலை செய்யும் இளைஞர்களுக்கு இப்போது மாற்றங்கள் வரும். 

விருச்சிகத்திற்கு இனிமேல் வாழ்க்கை முன்னேற்றப் பாதையில் செல்லத் துவங்கும். இதுவரை முயற்சி செய்தும் நடைபெறாத பல விஷயங்கள் இனிமேல் தெய்வத்தின் அருளால் முயற்சி இல்லாமலேயே வெற்றி பெறும். வேலை, தொழில்துறையில் இதுவரை இருந்து வந்த போட்டிகளையும், எதிர்ப்புகளையும் ஜெயிக்கப் போகிறீர்கள். இதுவரை நல்லது நடக்க ஆரம்பிக்காத சிலருக்கு கஷ்டங்கள் முடிவுக்கு வரும். வாழ்க்கையே இனிமேல் புதிய பாதையில் நல்ல விதமாக செல்லத் துவங்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். புதிய அறிமுகங்கள் கிடைக்கும். ஒரு சிலர் தங்கள் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை சந்திப்பார்கள். உங்களைப் புரிந்து கொள்ளாமல் உங்களிடமிருந்து விலகி இருந்தவர்கள் உங்களைப் புரிந்து கொண்டு தற்போது பக்கத்தில் வருவார்கள். 

பிள்ளைகள் வழியில் இருந்து வந்த மனக் கஷ்டங்களும், பிள்ளைகளுக்கு கல்யாணம் போன்ற சுப காரியங்களை நடத்தி பார்க்க முடியாமல் இருந்து வந்த வேதனைகளும் விலகி குழந்தைகள் மூலம் சந்தோஷமான விஷயங்கள் இருக்கும். கொடுக்கும் வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். பழைய வாகனத்தை மாற்றி புதியதாக வாங்குவீர்கள். வாகனம் இல்லாதவர்களுக்கு வாகனயோகம் இப்போது உண்டு. மாணவர்களுக்கு படிப்பு நன்கு வரும். உயர்கல்வி கற்பதற்கு இருந்து வந்த தடைகள் நீங்கி மேல்படிப்பு படிக்க முடியும். ராசி வலுப்பெறுவதால் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்திருந்தவர்கள் மீண்டும் சேருவீர்கள். தொழில் சிக்கல்கள் சரியாகும். சஸ்பெண்டு ஆனவர்கள் மறுபடியும் வேலையில் சேருவீர்கள். பாக்கெட்டில் பணம் வைக்க முடியும். அது காலியாகாமல் பாக்கெட்டிலேயே இருக்கும்.. தந்தைவழி உறவினர்கள் உதவுவார்கள். 

1,2,3,6,7,15,17,20,22,24 ஆகிய நாட்களில் பணம் வரும். 14-ம்தேதி மாலை 4.57 மணி முதல் 16-ம்தேதி இரவு 8.38 மணி வரை சந்திரன் எட்டில் மறையும் சந்திராஷ்டம நாட்கள் என்பதால் உங்களுக்கு தெளிவற்ற மனநிலை இருக்கும். இந்த நாட்களில் எவ்வித புதிய ஆரம்பங்களும், முயற்சிகளும் செய்ய வேண்டாம்.

No comments :

Post a Comment