Thursday, February 28, 2019

மீனம் - 2019 மார்ச் மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி:8681 99 8888

மீனம்: 

மார்ச் மாதம் மீன ராசிக்காரர்களுக்கு யோக மாதமாக இருக்கும். ராசிநாதன் குரு ராசியைப் பார்க்கும் நிலையில் சூரியனும், செவ்வாயும் நன்மை தரும் நிலையில் இருக்கிறார்கள். உங்களின் பல நாள் எதிர்பார்ப்புகளை இந்த மாதம் நிறைவேற்றிக் கொள்வீர்கள். உங்களில் சிலர் புதிய வாய்ப்புகளை அடைவீர்கள். சிலருக்கு வெளிநாட்டுப் பயணம் அமையும். அதிகாரம் செய்யும் துறைகளில் இருப்போருக்கு நல்ல பலன்கள் உண்டு. வாழ்க்கைத்துணை மூலம் சந்தோஷம் உண்டு. சிலருக்கு கோவில் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். சிதிலமடைந்து ஊருக்கு வெளியே கவனிப்பாரின்றி கிடக்கும் சிவன் கோவிலை புனருத்தானம் செய்யும் பாக்கியமும் அதன் மூலம் புண்ணியமும் கிடைக்கும். சிவன் அருள் கிடைக்க பெறுவீர்கள். 

திருமணமாகாத இளையவர்களுக்கு இந்த வருடக் கடைசியில் திருமணம் முடியும். சிலர் காதலிக்க ஆரம்பித்து தங்களுடைய வாழ்க்கைத்துணையை அடையாளம் காண்பீர்கள். கூட்டு வியாபாரத்தில் குறைகளை கண்டவர்கள் அவை நீங்கி தொழில் முன்னேற்றம் காண்பார்கள். குறிப்பிட்ட ஒரு பலனாக தகப்பனாரின் ஆரோக்கியம் மேம்படும். தந்தை மகனுக்கு இடையே இருந்து வந்த சண்டை, சச்சரவுகள், பிணக்குகள் நீங்கி தந்தையுடன் இணைவீர்கள். நீண்ட நாட்களாக நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் கோரிக்கைகளை அப்பா நிறைவேற்றித் தருவார். நீங்களே ஒரு நல்ல தகப்பனாக உங்கள் குழந்தைகளுக்கு கேட்பதை செய்து தர முடியும். 

பாக்கிய ஸ்தானத்தில் குரு வலுவாக இருப்பதால் சமூகத்தில் உயர்நிலையில் உள்ள பெரியவர்கள், மதிப்புமிக்கவர்கள், அந்தஸ்தும், அதிகாரமும் கொண்டவர்களின் அறிமுகம் கிடைக்கும். சிலருக்கு அந்தஸ்து உயரும். அதிகார மிக்க பதவிகள் கிடைக்கும். அரசியலில் ஏற்றங்கள் உண்டு. வரும் தேர்தலில் ஜெயிக்க முடியும். தொழிலில் ஏற்றமும், லாபமும் திருப்திகரமாக இருக்கும். பொருளாதார நெருக்கடிகள் இருக்காது. குறைந்த வியாபாரம் நிறைந்த லாபம் என்ற முறையில் கடையை மூடி வீட்டுக்கு திரும்பும் பொழுது மனநிறைவுடன் வீட்டிற்கு செல்ல முடியும். பெண்களுக்கு இது நல்ல மாதம். உங்களை புரிந்து கொள்ளாத கணவர் இனிமேல் உங்களை புரிந்து கொள்வார். 

1,3,7,8,9,14,15,17,29,31 ஆகிய நாட்களில் பணம் வரும். 22-ம் தேதி இரவு 10.01 மணி முதல் 25-ம்தேதி அதிகாலை 1.08 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் நீண்ட தூர பிரயாணங்களோ யாரையும் நம்பி முடிவெடுப்பதோ இந்த நாட்களில் கூடாது. கூடுமானவரை எதையும் இந்த நாட்களில் ஒத்தி வைப்பது நல்லது.

No comments :

Post a Comment