Tuesday, October 30, 2018

Astro Answer Guruji Pathilkal குருஜியின் மாலைமலர் பதில்கள்-211-(30.10.2018)

ஆர். ஜெயக்குமார். வேலூர்.

கேள்வி. 

43 வயதாகியும் இன்னும் திருமணம் ஆகவில்லை. நிலையான வேலை, தொழில் அமையவில்லை. தனுசு ராசியில் பிறந்த நான் ஜென்மச் சனியால் சித்ரவதை, நரக வேதனை பட்டுக்கொண்டிருக்கிறேன். தற்கொலை எண்ணம் அடிக்கடி வந்தாலும் தாய்க்காக நடைபிணமாக வாழ்கிறேன். எனக்கு திருமணம் உண்டா, இல்லையா? எனது ஜாதகம் யோக ஜாதகமா? ஒருவேளை என் வாழ்க்கை தற்கொலையில்தான் முடியுமா? நடக்கும் குரு தசையில் எந்த புக்தியில் என் வாழ்க்கை பிரகாசிக்கும்? ராகு தசை எனக்கு பரதேசவாசத்தை கொடுத்து குடிகாரனாக மாற்றியது. குருதசையாவது வேலை செய்யுமா? ஜாதகப்படி இத்தனை வயதாகியும் எனக்கு ஏன் திருமணம் ஆகவில்லை? 
பதில். 

(கும்ப லக்னம், தனுசு ராசி, 2ல் குரு, 4ல் கேது, 5ல் செவ், 6ல் சனி, 7ல் சுக், 8ல் சூரி, புத, 10ல் ராகு, 11ல் சந், 12-10-1975 மதியம் 2-55 வேலூர்) 

ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் முதலில் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். முயற்சி உள்ளவனுக்குத்தான் ஜோதிடம் கை கொடுக்கும். முயற்சி செய்யாதவனுக்கு அல்ல. எனக்கு நல்லநேரம் வந்துவிட்டது, இனி நான் கோடீஸ்வரனாகி விடுவேன் என்று சொல்லிக் கொண்டு வீட்டைப் பூட்டிக்கொண்டு உள்ளேயே இருந்தால் எந்த தெய்வமும், சாமியும் கூரையைப் பிய்த்துக்கொண்டு 2000 ரூபாய் நோட்டுக்கட்டுகளை கொட்டிக்கொண்டே இருக்காது. 

ஜோதிடம் என்பது நீ இந்த நேரத்தில் இப்படிச் செய்தால், இப்படி இருக்கலாம் என்று ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கையூட்டி வழிகாட்டும் ஒரு கலைதான். ஜோதிடம் இருளில் இருப்பவனுக்கு வழியைக் காட்டும் ஒரு தீபம்தான். ஜோதிடம் எனும் ஒளியின் துணை கொண்டு நீங்கள்தான் பாதையைக் கண்டுபிடித்து முன்னே நடக்க வேண்டும். சுற்றிலும் இருளாக இருக்கிறது விடியட்டும், நான் இங்கேயே உட்கார்ந்து விட்டு, விடிந்த பிறகு போகிறேன் என்று நீங்கள் சோம்பலாக ஒரே இடத்தில் அமர்ந்து விட்டால் அங்கே ஜோதிடம் பலன் தராது. 

ஜோதிடத்தில் அனைத்தும் முன்பே நிச்சயிக்கப்பட்டது என்று சொல்லும்போது ஒருவன் சோம்பலாக இருந்து விடுவதும் நிச்சயிக்கப்பட்டதுதானே என்று நீங்கள் கேட்பீர்களேயானால், ஜாதகப்படி லக்னாதிபதி வலுவிழந்த நிலையில் இருக்கும் ஒருவருக்கு இதுபோன்ற முயற்சிகள் செய்யாமல் சோம்பலாக அமரும் நிலை அமையும். 

லக்னாதிபதியும், மற்ற அமைப்புகளும் அதிக வலுவாக இருக்கின்ற ஒருவர் ஜோதிடம் பார்க்க மாட்டார். அவருக்கு ஜோதிட நம்பிக்கையும் இருக்காது. அவர் கிட்டத்தட்ட பகுத்தறிவாளராக இருப்பார். என்னுடைய முயற்சியால் நான் நன்றாக இருக்கிறேன். இதில் சாமி பூதம் எங்கே உள்ளே வந்தது என்கின்ற சிந்தனை அவரிடம் இருக்கும். மிகவும் முக்கியமாக குடிப்பழக்கத்திற்கு அடிமையானவனுக்கு ஜோதிடம் பலன் தராது. தன்னுடைய மனதை ஓரளவிற்கேனும் கட்டுப்படுத்த முடிந்தவனுக்கு மட்டும்தான் ஜோதிடம் பலன் தரும். அவனால் மனதைக் கட்டுப்படுத்த முடியுமா, முடியாதா என்பதையும் ஜோதிடத்தில் அறிய முடியும்.

உங்களுக்கு கும்ப லக்னமாகி, லக்னாதிபதி சனி ஆறாம் வீட்டில் பகை நிலையில் இருப்பது குற்றம். அதே நேரத்தில் சனியை ஆட்சி பெற்ற குரு பார்ப்பது நிவர்த்தி. லக்னத்தை ஏழாம் வீட்டில் இருக்கும் சுக்கிரன் பார்ப்பதும் ஓரளவுக்கு நல்ல நிலைதான். ஆனால் லக்னாதிபதி வலுவிழந்தாலே ஒருவருக்கு இளமைக்கால வாழ்க்கை நிறைவாக இருக்காது. 

லக்னாதிபதி பலவீனமாகி வேறு ஒரு அமைப்பின் மூலம் ஓரளவு வலுவானால் வாழ்க்கையின் இரண்டாம் பகுதியில் இருந்து நன்றாக இருக்க முடியும். உங்கள் ஜாதகமும் அப்படிப்பட்டதுதான். அதற்கேற்றார் போலத்தான் இதுவரை நடந்த தசா, புக்தி அமைப்புகள் எதுவும் உங்களுக்கு ஒத்துழைக்கவில்லை 

பிறந்ததிலிருந்தே கும்ப லக்னத்திற்கு அவ யோக தசைகளான சூரிய, சந்திர, செவ்வாய் தசைகள் 21 வயது வரை நடந்ததாலும், அதன்பிறகு சுப தொடர்புகள் இல்லாத பாபத்துவ விருச்சிக ராகு தசை 40 வயது வரை நடந்ததாலும் நீங்கள் வாழ்வின் முற்பகுதியில் எவ்வித சுகத்தையும் அனுபவிக்க இயலாமல் போய்விட்டது. 

ராசிக்கு ஏழில் செவ்வாய், எட்டில் சனி என்ற அமைப்பு இருந்து, லக்னத்திற்கு ஏழில் தனித்த சுக்கிரன் அமர்ந்து களத்திர தோஷம் உண்டாகி, லக்னத்திற்கு 7-க்குடைய சூரியன் 8-ல் மறைந்ததால் இதுவரை உங்களுக்கு திருமணம் நடக்கவில்லை. நான் முன்பே சொன்னபடி லக்னாதிபதி வலுவிழந்தால் ஒரு மனிதனுக்கு வாழ்வின் முற்பகுதியில் எந்தவித சந்தோஷங்களும் கிடைப்பதற்கு தடை இருக்கும். 

தற்போது இரண்டில் ஆட்சி வக்ரம், பெற்று அதி வக்ர அமைப்பில் உள்ள குருவின் தசை நடக்கிறது. எட்டாமிடத்தில் உச்சம் பெற்றுள்ள புதனின் சாரத்தில் குரு இருக்கிறார். 6- 8 சம்பந்தம் வந்தாலே ஜாதகத்தில் நன்மைகள் நடப்பதற்கு தடை இருக்கும். இந்த அமைப்பின்படி குரு தசை முதல் எட்டு வருடங்கள் உங்களுக்கு எட்டாமிடத்தின் பலன்களைத்தான் தரும். பின் எட்டு வருடங்கள் நல்ல பலன்கள் உண்டு. 

குருதசை ஆரம்பித்ததும் உங்களுக்கு திருமணம், வேலை போன்ற சில விஷயங்களிலாவது நன்மைகள் நடந்திருக்கவேண்டும்தான் ஆனால் அதே நேரத்தில் உங்களுக்கு ஏழரைச்சனியும் ஆரம்பித்துவிட்டது. கடுமையான ஜென்மச்சனி நடக்கும்போது ஜாதகம் செயலற்றுப் போகும். நல்ல தசா, புக்திகளாக இருந்தாலும் பலன் தராது 

ஜோதிடம் என்பது இப்படித்தான். சகல நிலைமைகளிலும் எல்லாம் சரியாக பொருந்தி வருபவனே அதிர்ஷ்டசாலியாக இருக்கிறான். அப்படி அனைத்தும் பொருந்தி வருவது சிலருக்கு மட்டும்தான். இங்கே பெரும்பாலானவர்கள் உங்களைப் போல முறையான வயதில் சரியாக எதுவும் கிடைக்காமல் கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்கள்தான். 

ஜாதகப்படி இன்னும் ஒரு வருடத்திற்கு நன்மைகள் நடப்பதற்கு தடை இருக்கிறது. 2020 ஆரம்பித்தவுடன் வாழ்க்கையில் நல்ல பலன்கள் நடக்கத் துவங்கும். முதலில் குடிப்பழக்கத்தை கைவிட்டு மனிதனாக மாறுங்கள். ஜாதகம் பலன் தர ஆரம்பிக்கும். அதன் பிறகு என் ஜாதகம் யோக ஜாதகம் தானா? குருதசை எனக்கு வேலை செய்யுமா என்ற ஆராய்ச்சியில் இறங்கலாம். ஆனால் உங்களால் இப்போது குடியை விட முடியாது. 2020 ஜூலை மாதம் வரை குடிகாரனாகத்தான் இருப்பீர்கள்.

No comments :

Post a Comment