ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி
கைப்பேசி: 8681 99 8888
சிம்மம்:
நவம்பர் மாத முற்பகுதியில் ராசிநாதன் சூரியன் சுபர்களான புதன், சுக்கிரனுடன் இணைந்து மூன்றாமிடத்தில் நீசமாக இருக்கிறார். அவர் நீசநிலையில் இருந்தாலும் சுக்கிரனால் நீசபங்கம் அடைவதால் கெடுபலன்கள் எதுவும் இருக்காது. அதேநேரத்தில் எந்த ஒரு காரியமும் கடும் முயற்சிக்கு பிறகுதான் நிறைவேறும். மாத பிற்பகுதியில் ராசிநாதன் சூரியன் நீச நிலை விலகி நட்பு பலம் பெறுவதும் குருவுடன் இணைவதும் நல்ல அமைப்பு என்பதால் பதினைந்தாம் தேதிக்குப் பிறகு எதிலும் வெற்றி கிடைக்கும்.
ஆறில் செவ்வாய், கேது இணைந்திருப்பதால் சிலர் வெளிநாடு, வெளிமாநிலம் செல்வீர்கள். பிறந்தநாட்டை விட்டு வேறுநாட்டில் இருப்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். பெண்களால் செலவுகள் உண்டு. அன்னிய இன, மத, மொழிக்காரர்கள் உதவுவார்கள். தொழில் அமைப்புக்களில் சிக்கல்கள் தடைகள் இருந்தாலும் வீட்டில் நிம்மதி இருக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். அத்தியாவசியப் பொருட்கள் வாங்க முடியும். செலவுகள் அதிகம் இருக்கும் என்பதால் வருமானத்தை முதலீடாக மாற்றி நல்லவிதமாக விரயம் செய்வது புத்திசாலித்தனம்.
வேலையில் பிரச்னை ஏற்பட்டு, வேலை மாற்றம் ஏற்பட்டவருக்கு மனதிற்கு பிடித்த நல்ல வேலை அமையும். மனைவி, குழந்தைகள் மூலம் நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும். தெய்வ தரிசனம் கிடைக்கும். பிள்ளைகளுக்கு சுபகாரியம் நடத்த முன்னேற்பாடுகள் உண்டு. சிலருக்கு தீர்த்த யாத்திரை, குலதெய்வ வழிபாடு, காசி, கயா போன்ற புனித ஸ்தலங்களை பார்த்தல் போன்ற ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெறும். பெண்களுக்கு இது உற்சாகமான மாதமாக இருக்கும். குடும்பத்தில் நீங்கள் சொல்லும் யோசனைகள் ஏற்கப்படும். இளைய பருவத்தினரை பெற்றோர்கள் அக்கறை எடுத்து கண்காணிக்க வேண்டியது அவசியம். அவர்கள் ஏதாவது வம்பை இழுத்து கொண்டு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. நல்ல பணவரவு இருக்கும் என்பதால் அனைத்து பிரச்சனைகளையும் சமாளித்து விடுவீர்கள். அதிலும் தொழில் ஸ்தானாதிபதி சுக்கிரன் ஆட்சி பெறுவது நல்ல அமைப்பு. வீண்செலவு செய்யாதீர்கள். தவிர்க்க முடியாத காரணங்களுக்கு மட்டுமே செலவு செய்யலாம்.
1,2,5,6,11,12,19,20 ஆகிய நாட்களில் பணம் வரும். 18-ம் தேதி காலை 10.03 முதல் 20-ம் தேதி மாலை 6.33 வரை சந்திராஷ்டமம் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் துவங்க வேண்டாம். மேற்கண்ட தினங்களில் அறிமுகமாகும் நபர்கள் பின் நாட்களில் தொந்தரவுகளை கொடுப்பவர்களாக மாறுவார்கள் என்பதால் எதிலும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம்.
No comments :
Post a Comment