Tuesday, June 26, 2018

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள் - 193 (26.06.18)


வி. ராஜேந்திரன் 
விருதுநகர்,

கேள்வி :

உள்ளதை உள்ளபடி கூறும் குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம். இதுவரை 4 கடிதம் அனுப்பியும் எனது மகள் பற்றிய கேள்விக்கு பதில் கொடுக்கவில்லை. தினமும் மாலைமலர் படிக்கும் நான் செவ்வாய்க்கிழமை எனது கேள்வி வரவில்லை என்றதும் நேரம் இன்னும் நன்றாக இல்லை என்று நினைப்பேன். தயவுசெய்து என் பெண்ணுக்கு எப்போது திருமணம் நடக்கும்? வேலை எப்போது அமையும் என்று சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன் வரும் வாரங்களில் தெய்வ வாக்கை எதிர்பார்க்கிறேன் .

பதில் :

ஜாதகத்தை பக்கம் பக்கமாக ஜெராக்ஸ் எடுத்து அனுப்பி என்ன பிரயோஜனம்? அதில் பிறந்த நேரம் இல்லையே? பிறந்த நேரம் குறிப்பிடாத ஜாதகங்களுக்கு நான் பதில் தருவதில்லை என்பதை அடிக்கடி மாலைமலரில் சொல்கிறேனே.. ஏன் அதை கவனத்தில் எடுத்துக்கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்?

உங்கள் பகுதியில் எழுதப்படும் பெரும்பாலான ஜாதகங்கள் தவறான வாக்கியப் பஞ்சாங்கத்தில் எழுதப்பட்டவை. வாக்கியப் பஞ்சாங்கங்கள் முழுக்க முழுக்க பிழையானவை. தோராயமானவை. தெய்வீகச் சாயம் பூசிக்கொண்டு தமிழகத்தில் மட்டுமே இவை ஓடிக்கொண்டு இருக்கின்றன. வாக்கியத்தில் கணிக்கும் ஜாதகங்களால்தான் பெண்களின் வாழ்க்கையில் குழப்பங்கள் ஏற்படுகின்றன.

சரி, இத்தனை பக்கங்களில் வாக்கிய முறைப்படி ஜாதகத்தை எழுதுகின்ற ஒரு ஜோதிடர் ஒரு ஓரத்தில் குழந்தையின் பிறந்த நேரத்தை எழுதுவதற்கு ஏன் மறுக்கிறார்? அப்படி எழுதுவதால் என்ன குறைந்து விடப் போகிறது? பிறந்த நேரம் இருந்தால் ஜோதிடர் ஜாதகத்தில் ஏதாவது தவறு செய்திருந்தால் கண்டுபிடிக்க முடியும். அப்படி தவறு இருந்தால் அது யாருக்கும் தெரியக் கூடாது என்றுதான் அவர் குழந்தையின் பிறந்த நேரத்தை மறைக்கிறார். நீங்களாவது குழந்தையின் பிறந்த நேரத்தை தனியாகக் குறித்து அனுப்பியிருக்கலாம். பிறந்த நேரத்தோடு கூடிய குறிப்புகளை அனுப்புங்கள். பதில் தருகிறேன்.

ஓ. கார்த்திகேயன், காட்பாடி.

கேள்வி :

ஜோதிட பேரொளிக்கு பணிவான வணக்கங்கள். இந்து லக்னம் பற்றிய தங்களின் கட்டுரை அபாரம். தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் என் ஜாதகத்தில் இந்து லக்ன மான விருச்சிக த்தை திக்பலத்துடன் உச்சமாக உள்ள குருபகவான் பார்வை செய்வதால், இதுவரை லட்சங்களை ப் பார்த்திராத நான் கோடீஸ்வரனாகும் வாய்ப்பு உள்ளதா? அல்லது குரு விரயாதிபதி சாரம் வாங்கி தசை நட த்துவதால் பலன்கள் மட்டுப்படுமா? தங்களின் விலைமதிப்பில்லா பதிலை எதிர்நோக்குகிறேன்.

பதில் :


சனி
சந்
ரா

பு

30-7-1967 காலை
7.05
ஆம்பூர்
ல, சூ,கு

சுக்
செ
கே

(கடக லக்னம், மேஷராசி. 1ல் சூரி, குரு. 2ல் சுக், 4ல் செவ், கேது. 9ல் சனி, 10ல் சந், ராகு. 12ல் புத. 30-7-1967. காலை 7.05 ஆம்பூர்)

சிம்மத்தில் சுக்கிரன் அமர்ந்து, சிம்மம் சுபவலுவாகி, அரசுக் கிரகமான சூரியன் குருவுடன் இணைந்து, குருவை அஸ்தமனம் செய்ததால் சுபத்துவமாகி, பத்தாம் வீட்டில் சந்திரன் அமர்ந்ததால் அரசுப் பணியில் இருக்கிறீர்கள். ஆனால் கோடீஸ்வரன் ஆவதற்கு 2, 9, 11ம் பாவகங்கள் வலுவுடன் இருக்க வேண்டும். கடக லக்னத்திற்கு எட்டுக்குடைய சனி ஒன்பதாம் வீட்டில் இருப்பது மிகப்பெரிய பணக்காரன் ஆவதை’ தடை செய்யும் அமைப்பு. அதே போல லக்னாதிபதி 10 டிகிரிக்குள் ராகுவுடன் இணைந்து வலு இழக்கக்கூடாது.

அனைத்து விதிகளும் பொருந்தி வரும் நேரத்தில்தான் ஒரு சாதனையாளன் பிறக்கிறான் என்பதை அடிக்கடி எழுதி வருகிறேன். இங்கே நீங்கள் இந்து லக்னத்தை குரு பார்வையிடுகிறார் என்று சொல்லியிருக்கிறீர்கள். அஸ்தமனமான கிரகத்திற்கு பார்வை பலம் குறைவு. அதிலும் குரு எட்டு டிகிரிக்குள் சூரியனுடன் இணைந்து முழுக்க பலவீனமாக இருக்கிறார். அவர் பார்வைக்கு வலுக் குறைவுதான். அஸ்தமனம் ஆனாலும் அங்கே அவர் உச்சமும், திக்பலமும் அடைந்து ஆட்சி பெற்ற புதனின் சாரத்தில் இருப்பதால் ராகு தசையை விட உங்களுக்கு நன்மைகளை தருவார்.

சு. சுரேஷ், கொடுமுடி.

கேள்வி :

காவல்துறையில் அதிகாரியாக பணிபுரியும் வாய்ப்பு உள்ளதா? மனைவியால் யோகம் உள்ளதா ?

பதில் :


கேது

சந்
சூ,
சனி

9-3-1995
இரவு
11-55 கொடுமுடி

செவ்
பு
சுக்

ல,கு

ரா

(விருச்சிக லக்னம், ரிஷப ராசி. 1ல் குரு, 3ல் புத, சுக், 4ல் சூரி, சனி, 6ல் கேது, 7ல் சந், 9ல் செவ், 12ல் ராகு. 9-3-1995. இரவு 11-55 கொடுமுடி)

லக்னாதிபதி செவ்வாய் நீசமானாலும், வீடு கொடுத்தவன் உச்சமானதால் நீச பங்கமாகி, குருவின் பார்வையோடு அம்சத்தில் உச்சம் பெற்றிருக்கிறார்., அரசு வேலைக்குரிய சூரியன் லக்னத்திற்கு பத்துக்குடையவனாகி, ராசிக்கு பத்தாம் இடத்தில் அமர்ந்து, தன் வீடான சிம்மத்தைப் பார்ப்பதால் நீங்கள் காவல்துறையில் அதிகாரியாக முடியும். இங்கே சிம்மத்தை சனி பார்க்கும் நிலை, சனியை சூரியன் அஸ்தமனம் செய்திருப்பதால் அடிபட்டுப் போகிறது.
மனைவியால் யோகம் உண்டா என்று என்ன அர்த்தத்தில் கேட்கிறீர்கள் என்று தெரியவில்லை. திருமணத்திற்கு முன்பே மனைவி வீட்டில் இருந்து அத்தனையும் கொடுத்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்களா அல்லது நல்ல வருமானம் உள்ள வேலை பார்க்கும் மனைவி வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா என்று தெரியவில்லை. ஏழாமிடத்தை குரு பார்த்து, 7க்குடையவன் ராசி, அம்சத்தில் வலுவாகி, ஏழில் ஒரு உச்ச கிரகம் அமர்ந்ததால் உங்களைவிட சகல விதத்திலும் மேம்பட்ட யோகம் உள்ள மனைவி அமைவாள்.

ஒரு வாசகி, மன்னார்குடி.

கேள்வி :

கல்லூரியில் உடன் படித்த ஒருவரைக் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தேன். இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பிறகு அவன் கணவனாகவோ, காதலனாகவோ குடும்பம் நடத்தவில்லை. வாழ்க்கையே காமம் என்பது போலக் கிடந்தான். காமம் .. காமம் .. காமம். இதுதான் வாழ்க்கை என்ற வெறியில் இருப்பவன். இரவு முழுவதும் இணையத்தில் ஆபாச படங்களை பார்த்துவிட்டு இயற்கைக்கு மாறான உறவை அனுபவிப்பது அவனுடைய கொள்கை. இதற்கு மேல் அவனைப் பற்றி எழுத முடியவில்லை. 22 வயதில் கிடைத்த மணவாழ்க்கை இரண்டு வருடம் கூட நிலை க்கவில்லை. பெற்ற மகளுடன் தாய் வீட்டில் இருக்கிறேன். 25 வயது முடியப் போகிறது விவாகரத்து பெற்று விட்டு வங்கிப் பணியில் இருக்கிறேன். வாக்கியப் பஞ்சாங்கப்படி எழுதப்பட்ட எனது ஜாதகம் என் வாழ்க்கையையே பறித்து விட்டது. இதுபோன்ற ஜாதகத்திற்கு 28 வயதிற்கு முன்னால் திருமணமானால் இரண்டு திருமணம் என்று குறிப்பிடுகிறீர்கள். தற்போது உறவினரான ஒருவரை விரும்புகிறேன். திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருக்கிறேன். இவர் நல்லவர்தான் .ஆனால் எப்போதும் ஒருவிதமான பயத்தில் இருக்கிறார். தன்னையே கோழை என்று நினைக்கிறார். ஜாதகப்படி இவர் எப்போது பயம் நீங்கி தன்னம்பிக்கை, துணிவு, வீரம் என்ற குணங்களோடு ஆண்மகனாய் மாறுவார்? இவர் வெளிநாடு சென்று சம்பாதிக்கும் அமைப்பு உள்ளதா? இதுவரை நிரந்தரமாக எந்த வேலைக்கும் செல்லாமல் ஆறுமாதத்தில் நின்றுவிடுகிறார். எப்போது நிரந்தர வேலை பார்க்கும் அமைப்பு உண்டாகிறது? திருமணத்திற்கு பிறகு ஒழுக்கமாகவும் , உண்மையாகவும் என்னையும் என் மகளையும் காப்பாற்றுவாரா? அய்யனே... தந்தையே... நல்ல பதில் தாருங்கள் .

பதில் :


செவ்

சுக்
ல,
சூ,கு

10-7-1990 அதிகாலை 4-35 மன்னார்குடி

பு,கே
சந்,
ரா

சனி

(மிதுன லக்னம், மகர ராசி. 1ல் சூரி, குரு, 2ல் புத, கேது. 7ல் சனி, 8ல் சந், ராகு. 11ல் செவ், 12ல் சுக். 10-7-1990 அதிகாலை 4-35 மன்னார்குடி)

லக்னத்தை சனி பார்த்து, லக்னாதிபதியை செவ்வாய் பார்த்த ஜாதகம். குரு வர்கோத்தமமும், திக்பலமும் பெற்று லக்னத்தில் இருந்தாலும், சூரியனுடன் மிக நெருங்கி அஸ்தமனம் அடைந்திருக்கிறார். ராசியான சந்திரனும், ராகுவுடன் மிக நெருங்கி கிரகண தோஷத்தில் அமர்ந்திருக்கும் நிலையில், தற்போது ராகு தசை நடைபெற்று வருகிறது. எட்டில் இருக்கும் ராகு என்பதால் இன்னும் இரண்டு வருடங்கள் ராகுதசை முடியும்வரை உன்னுடைய உறவினருக்கு நல்ல பலன் சொல்வதற்கு இல்லை.

லக்னம், லக்னாதிபதி, ராசி மூன்றுக்கும் பாபக் கிரகத் தொடர்பு ஏற்பட்டால் ஜாதகர் தன்னம்பிக்கையின்றி, மந்தமாக சோம்பேறித்தனத்துடன் இருப்பார். இது போன்றவர்களை தூண்டி விட்டுத்தான் காரியம் சாதிக்க முடியும். ஒன்றிருந்தால் ஒன்றில்லை என்பதுதான் உலக விதி. நல்லவர்களாக இருப்பவர்கள் அனைவரும் வல்லவர்களாக இருப்பதில்லை. குருதசை முதல் இவரது குணங்கள் ஓரளவிற்கு மாறும். அது முதல் நிரந்தர வேலையும் கிடைக்கும். இன்னும் சில வருடங்களுக்கு வெளிநாடு வாய்ப்பு இல்லை.
ஏழரைச்சனி நடப்பதால் இன்னும் நான்காண்டு காலத்திற்கு பெரிய அளவில் முன்னேற்றம் இருக்காது. குருதசை, சுயபுக்தி முடிந்தவுடன் நீ கேட்கும் அனைத்து நல்ல மாற்றங்களும் இருக்கும். அதன் பிறகு இவருடைய வாழ்க்கையும், இவரை சேர்ந்தவர்களின் வாழ்க்கையும் நன்றாக இருக்கும். ராசிக்கு 7-ல் கேதுவும், லக்னத்திற்கு 7-ல் சனியும் இருப்பதால் ஏற்கனவே திருமணமான பெண்ணை மணந்து கொள்வது பொருத்தமான ஒன்றுதான். வாழ்த்துக்கள்.

காதலிப்பதற்கு என்ன தகுதி வேண்டும்?

ரா. ராஜ்தீன், திருச்சி.

கேள்வி :

18 வயதான நான் நீண்டநாட்களாக ஒரு பெண்ணை காதலித்து வருகிறேன். நான் காதலிப்பது அந்தப் பெண்ணுக்கும் தெரியும். அவள் என்னை காதலிக்க மறுக்கிறாள்.  அவளை மறக்கலாம் என்று நினைக்கும் போது தான் அவளுடைய எண்ணம் அதிகமாக எனக்குள் தோன்றுகிறது. அவள் என்னை காதலிப்பாளா? மாட்டாளா ? என்ன செய்தால் அவள் என்னைக் காதலிப்பாள்? நிறைய ஜோதிடர்களிடம் சென்றேன். எல்லோரும் உன்னிடம் என்ன இருக்கிறது என்று கேட்கிறார்கள். காதலிப்பதற்கு தகுதி தேவையா?

பதில் :

ஒரு பெண்ணை காதலிப்பதற்கு ஒருவன் முழுமையான ஆணாக இருக்க வேண்டும். முழு ஆண்மகன் என்பவன் தன்னைத் தானும், தன்னை நம்பியவர்களையும் சேர்த்துக் காப்பாற்றும் தகுதி கொண்டவனாக இருப்பான். இப்போது நீ படித்துக் கொண்டிருக்கிறாய். உனக்கே உன் பெற்றோர்தான் சோறும் போட்டு, கல்விக் கட்டணமும் கட்ட வேண்டியிருக்கிறது. ஆணும், பெண்ணும் அல்லாத நடுப்பருவத்தில் இப்போது நீ இருக்கிறாய். மீசை முளைப்பது மட்டும் ஆணுக்கான தகுதியாகி விடுமா என்ன?

உன்னையே நீ பார்த்துக் கொள்ளும் தகுதி வரும்போது காதலித்தால். உன்னை யார் கேட்கப் போகிறார்கள்? நீயே அடுத்தவரின் தயவில் இருக்கும்போது எதிர்காலத்தை அறிவுப்பூர்வமாக யோசிக்கக் கூடிய திறமை வாய்ந்த ஒருத்தி எப்படி உன்னை விரும்புவாள்? காதலிக்கும் பெண்ணுக்கு உன் சொந்தக் காசில் பத்து ரூபாய்க்கு ஒரு காட்பரீஸ் சாக்லேட் வாங்கிக் கொடுக்க முடியுமா உன்னால்? அல்லது உன்னுடைய உழைப்பில் வந்த பணத்தில் அவளை ஒரு காப்பி ஷாப்பிற்கு கூட்டிச் செல்ல முடியுமா?

எந்த ஒன்றும் வாழ்க்கையில் அந்தந்த வயதில் வந்தால்தான் பெருமை. படிக்க வேண்டிய வயதில் காதலிக்க ஆரம்பித்தால், காதலிக்க வேண்டிய வயதில் படித்துக் கொண்டிருப்பாய். அதுதான் சங்கடம். ஜோதிடப்படி சுக்கிர தசை உனக்கு நடந்து கொண்டிருப்பதால் இப்படியெல்லாம் கேள்வி கேட்க வைக்கிறார். குட்டிச் சுக்கிரன் கொட்டிக் கவிழ்க்கும் என்பது ஜோதிடமொழி. இந்த காலகட்டத்தில் உனக்கு பெண்களை பற்றிய எண்ணங்களும், அவர்களைப் பற்றிய ஆர்வமும் மனதிற்குள் வந்து கொண்டிருக்கும்தான். அதற்குப் பெயர் காதல் அல்ல. இனக்கவர்ச்சி.

காதல் என்பது இதையும் தாண்டி எங்கோ ஒரு ஓரத்தில் இருக்கிறது. அது சரியான நேரத்தில் சரியான நபரிடம் வெளிப்படும்போது அவர் உன்னை திரும்ப காதலிக்க ஆரம்பிப்பார். அந்தத் தகுதியும், பருவமும் வராதவரை பார்க்கும் பெண்கள் அனைவரையும் நீ காதலித்துக் கொண்டுதான் இருப்பாய். இது காதல் அல்ல.

இன்றைய பெண்களை சென்ற தலைமுறையைப் போல நினைக்காதே. முப்பது ஆண்டுகளுக்கு முன்தான் ஒரு பெண், எதற்கும் ஆணை நம்பி இருக்க வேண்டியிருந்தது. ஆனால் இன்று உலகம் மெதுவாக பெண்ணை முன்னிலைப்படுத்தி அவளை நம்பிச் சென்று கொண்டிருக்கிறது. ஆணை விட சகலத்திலும் முன்னேறிக் கொண்டிருக்கும் பெண்கள், தன்னை விட படிப்பிலும், வருமானத்திலும் முன்னே இருப்பவனைத்தான் விரும்புகிறார்கள். ஏதேனும் ஒரு நம்பிக்கையில் ஒருவனைத் தேர்ந்தெடுத்து விட்டாலும் அது தவறாகிப் போனால் அவனை உதறித் தள்ளவும் பெண் தயங்குவதில்லை.

முதலில் நீ சொந்தக்காலில் நிற்கும் பருவம் வரட்டும். அப்போது உன்னுடைய தகுதியிலும், நடத்தையிலும் ஈர்க்கப்பட்டு உன் வயதையொத்த பெண்கள், இவன் நமக்கு கணவனாக அமைய மாட்டானா என்று உன்னைப் பார்க்கும் பார்வையிலேயே காதல் தெரியும். அப்போது அவர்களில் உனக்குப் பிடித்த ஒருத்தியைக் காதலித்து மனைவி ஆக்கிக் கொள்ளலாம். அதுவரை நன்றாகப் படித்து, நிறைவான வருமானம் பெறும் தகுதியை வளர்த்து முமுமையான ஆணாக மாறிக் காட்டு. வாழ்த்துக்கள்.

No comments :

Post a Comment