Tuesday, May 29, 2018

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள் - 189 (29.05.18)

பி.எம். மீரான், சென்னை.

கேள்வி :

அறிவின் சுடர் குருஜி அவர்களே, நான் தங்களின் மாலைமலர் தீவிர ரசிகன். எனது மகன் அலாவுதீன் பி.காம் வரை படித்திருக்கிறான. இரண்டு பெண்களைக் காதலித்து இரண்டிலும் தோல்வி. அந்தக் குழப்பத்தில் மனமுடைந்து எந்த வேலைக்கும் போகாமல், செய்த வேலையையும் விட்டு விட்டு சுமார் ஐந்து ஆண்டு காலமாக வீட்டிலேயே வேதனையோடு முடங்கிக் கிடக்கிறான். அவன் நிலையைப் பார்த்து நானும் என் மனைவியும் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறோம். தற்போது சொந்தத் தொழில் வைத்துத் தாருங்கள் என்று சொல்கிறான். அவனுக்கு எந்த வியாபாரமும் தெரியாது. ஆட்டோ ஓட்டத் தெரியும். வாங்கிக் கொடுக்கலாமா? அவன் திருமணம் எப்போது நடக்கும்? எதிர்காலம் எப்படி இருக்கும்? மனவேதனையினால் இரண்டு முறை தவறான முடிவுக்கும் போய்விட்டான். நான் நிறைய எழுத விரும்பவில்லை. அவனது பிறந்த நேரத்தை வைத்து நடந்த எல்லாவற்றையும் நீங்களே தெரிந்து கொள்வீர்கள்.  மகனின் அவலநிலை எப்போது மாறும் ?


பதில்:


சூ

பு

குரு
சுக்
செவ்

13-4-1990
மதியம்
3-20
ஏரல்

கே
சனி
ரா


சந்

(சிம்மலக்னம், விருச்சிகராசி. 4-ல் சந், 6-ல் சனி, ராகு, 7-ல் சுக், செவ், 8-ல் சூரி, 9-ல் புத, 11-ல் குரு, 12-கேது, 13- 4- 1990, மதியம் 3-20, ஏரல்)

கடந்த ஐந்து வருடகாலமாக நாற்பது வயதுக்குட்பட்ட எந்த ஒரு விருச்சிக ராசிக்காரரும் நன்றாக இல்லை என்பதனை மாலைமலரிலும், வின் தொலைக்காட்சியிலும், முகநூல், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களிலும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். விருச்சிக ராசியில் பிறந்த உங்கள் மகனும் அதில் ஒருவன்தான். கூடுதலாக மகனுக்கு சிம்ம லக்னமாகி, ஆறாமிடத்தில் சனியுடன் இணைந்து பாபத்துவம் பெற்ற ராகுவின் புக்தி இரண்டரை ஆண்டுகளாக நடப்பதால் வயதிற்கேற்ற விஷயங்களில் கடுமையான மன அழுத்தங்கள் உண்டாகி பெரும் சோதனைக்கு ஆளாகி விட்டார்.  ராகு புக்தியில் சில தவறான முடிவுகளுக்கும் போயிருப்பார்.

ஒளிக்கிரகமான சூரியனின் சிம்மலக்னத்தில் பிறந்தவர்களுக்கு இருள் கிரகங்களான சனி, ராகு போன்றவைகளின் தசா, புக்திகள் நன்மைகளைச் செய்வது இல்லை. அதிலும் ஏழரைச்சனி நடக்கும்போது ஆறு, எட்டாம் பாவகங்கள் சம்பந்தப்பட்ட தசை, புக்திகள் நடக்குமாயின் கடுமையான சோதனைகள் இருக்கும். மகனுக்கு வரும் ஜூலை ஆறாம்தேதி முதல் யோகாதிபதியான குருவின் புக்தி ஆரம்பிக்க இருப்பதால், அதுமுதல் அவரது மனக்குழப்பங்கள் தீரும். புத்துணர்ச்சி பிறக்கும். ஜூலைக்குப் பிறகு அவரிடம் நல்ல மாற்றங்களை காண முடியும்.

சுக்கிரன் செவ்வாய் இணைந்து தர்மகர்மாதிபதி யோகம் மகனின் ஜாதகத்தில் நல்லவிதத்தில் குரு பார்வையுடன் அமைந்திருப்பதால், இனிமேல் எந்தத்தொழில் செய்தாலும் நல்லபடியாக முன்னுக்கு வருவார். அவர் விரும்பும் தொழிலுக்கு ஒரு பாதை அமைத்துக் கொடுங்கள். அடுத்த வருட ஆரம்பத்தில் திருமணம் நடக்கும். திருமணத்திற்குப் பிறகு சகல சங்கடங்களும் விலகி மிகவும் நன்றாக இருப்பார்.

பி . பாண்டியராஜன், சிவகாசி.

கேள்வி :

குருவே சரணம்.  தங்களை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு ஜோதிடம் கற்று வருகிறேன். ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன். இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம்.  ங்களின் ஜாதகத்தில் புத்திர ஸ்தானாதிபதி, புத்திர காரகன் வலுவிழந்து இருப்பதால் எங்களுக்கு குழந்தைப் பேறு இருக்காது என்று தோன்றுகிறது. இதனால் எங்கள் இருவருக்கும் மன வேதனையாக உள்ளது. தாங்கள்தான் எங்களுக்கு புத்திரபாக்கியம் உண்டா இல்லையா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் .

பதில்:

ஜோதிடத்தை ஒரு நான்கு மாதம் கற்றுக் கொண்டவுடன் எல்லோரும் வராகமிகிரர் ஆகி விடுகிறீர்கள். உங்களின் மானசீக குருவாகிய நான் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு ஜாதகத்திலும் ஏதேனும் ஒன்றைக் கற்றுக் கொள்ளும் மாணவனாகத்தான் இன்னும் இருக்கிறேன்.

ஒரு பாக்கியம் முழுமையாக தடைபடுவதற்கு அந்த பாவகம், பாவகத்தின் அதிபதி, காரகன் மூவருமே முழுவதுமாக வலுவிழந்து, சூன்யபலம் என்று சொல்லக் கூடிய அளவில் திறனற்று இருக்க வேண்டும். லக்னப்படியும், ராசிப்படியும் இதைப் பார்க்க வேண்டும். அதன்படி ஐந்தாம் பாவகம், 5-ஆம் பாவகாதிபதி, புத்திரகாரகன் குரு, இந்த மூன்றும், சனி, செவ்வாய், ராகு-கேது போன்ற பாபக் கிரகங்களின் ஆளுமையைப் பெற்று, முழுக்க முழுக்க வலுவிழந்து இருந்தால் மட்டுமே ஒருவருக்கு குழந்தைப் பேறு கிடைக்காமல் போகும். நீ கொடுத்துள்ள இரண்டு ஜாதகத்திலும் இந்த அமைப்பு இல்லை.

உன்னுடைய ஜாதகத்தில் காரகனாகிய குரு, நவாம்சத்தில் நீசமடைந்து இருந்தாலும். ராசியில் ஒன்பதாம் வீட்டில் இருக்கிறார். சுபக்கிரகமான குருவிற்கு திரிகோண பாவகமான 9-மிடம் நல்ல இடமாகும். அவர் பகை வீட்டில் இருக்கிறார் என்பது அடுத்த நிலைதான். அதேபோல ஐந்தாமிடத்தை செவ்வாய் பார்த்தாலும், அவர் வளர்பிறை சந்திரனோடு சேர்ந்து சுபத்துவமாகிப் பார்ப்பதால் கெடுதல் இல்லை. மேம்போக்காகப் பார்க்கும் போது ஐந்தாம் அதிபதியான புதன், ராகுவுடன் இணைந்திருப்பதாக தோன்றினாலும், இருவருக்கும் இடைவெளி எட்டு டிகிரிக்கு மேல் இருப்பதால் புத்திர ஸ்தானாதிபதி கெடவில்லை.

அதேபோல பெண்ணின் ஜாதகத்தில், ஐந்தாமிடத்தில் ராகு இருந்தாலும், அவரை சுபரான சுக்கிரன் பார்ப்பதும், ஐந்தாம் அதிபதி செவ்வாய் வளர்பிறைச் சந்திரனுடன் சுபத்துவமாக இருப்பதும், காரகன் குரு வலிமையாக நன்றாக இருப்பதும், புத்திர பாக்கியத்திற்கு தடை இல்லை என்பதைக் குறிக்கிறது.

ஆர் . மதுரவல்லி , மதுரை.

கேள்வி :

அப்பா ... என் பெற்றோர் கஷ்டப்பட்டு என்னை பி.இ’ வரை படிக்க வைத்து கல்யாணம் செய்து கொடுத்தார்கள். திருமணம்வரை நன்றாக இருந்தேன். கல்யாணமான இரண்டு மாதங்களிலேயே கணவர் வாரம் ஒருமுறை குடிப்பவர், எவ்வளவு பணம் வந்தாலும் செலவழித்து விடுபவர், தேவையில்லாமல் கடன் வாங்குபவர் என்பது புரிந்து விட்டது. அவருடைய அம்மாவும் அப்படித்தான். கடன் வாங்கி ஆடம்பரமாக செலவழிப்பவர். என் சம்பளப் த்தையாவது சேர்த்து வைக்கலாம் என்று சொன்னதற்கு, வேண்டாம் விடு, இருக்கும்வரை வசதியாக இருப்போம் என்று சொன்னார்கள். ஒன்பது வயதாகும் என் பையன் ஆட்டிசம் குறைபாடுடன் இருக்கிறான்.  இன்னும் பேசவில்லை.  அவனைப் பார்த்துக் கொள்ள வேலையை விட்டு விட்டேன். எனக்கும் எலும்பு வளைவு நோய் இருக்கிறது. ஆட்டிச நோயுள்ள பையனையும், குடிப்பழக்கமும், ஊதாரித்தனமான செலவுடன், எப்பொழுதும் கடனில் இருக்கும் கணவனையும் வைத்துக்கொண்டு, நானும் உடல்நிலை சரியில்லாத நிலையில் என்ன செய்வது என்றே தெரியவில்லை. என்னுடைய மனவேதனை நீண்டு கொண்டே போகிறது. பையனும் நார்மலாக இல்லை, உனக்கும் உடம்பு சரியில்லை இன்னொரு கல்யாணம் செய்து கொள்ளவா என்று கேட்டு, பிறகு விளையாட்டுக்குச் சொன்னேன் என்று என் கணவர் இப்போது அடிக்கடி சொல்கிறார் . ஃபாரின் போகவும் முயற்சி செய்கிறார். கணவரின் வற்புறுத்தலால் இருந்த வேலையையும் விட்டுவிட்டு, நோயாளி பையனை வைத்துக் கொண்டு கஷ்டப்படும் எனக்கு எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது. என் பையன் எல்லா குழந்தைகளையும் போல சரியா வானா? கணவர் என்னை பிரியாமல் இருப்பாரா? மீண்டும் வேலைக்குச் செல்ல முயற்சி செய்யலாமா ?

பதில்:



மனைவி
22-10-1981
இரவு-10-02 மதுரை

ரா

கே
சந்
செவ்

சுக்

சூ
பு கு
சனி

சந் சு
செவ்

சூ பு

மகன்
23-4-2009 மதியம் 3-33 சென்னை

கே
கு
ரா
சனி

(மனைவி. 22-10-1981. இரவு 10-02 மதுரை, மகன் 23-4-2009 மதியம் 3-33 சென்னை)

அம்மா.. கும்ப லக்னமாகி, லக்னாதிபதி சனி ஆறாம் வீட்டில் எவ்வித சுபர் பார்வையும், தொடர்பும் இன்றி இருப்பதால், உன் கணவன் கடன் வாங்குவதற்கு அஞ்சாதவனாக இருப்பான். உனக்கும் தற்போது எட்டாமிடத்தில் இருக்கும் பாபத்துவ கேதுவின் நட்சத்திரத்தில் அமர்ந்த சந்திரனின் தசை நடந்து கொண்டிருக்கிறது. இது இன்னும் 3 வருடங்களுக்கு நீடிக்கும் என்பதால் இன்னும் சிலகாலத்திற்கு உனக்கு நல்ல பதில் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன். கணவனை நம்பாமல் உன்னுடைய சொந்தக்காலில் நிற்பதற்கான முயற்சிகளை செய். வேலைக்கு போ.

மகனின் ஜாதகப்படி சிம்ம லக்னமாகி, நேர்வலு அடையக்கூடாத லக்னாதிபதி சூரியன், தனித்து ஒன்பதாமிடத்தில் உச்சம் பெற்று, லக்னத்தில் ஆறுக்குடைய சனி அமர்ந்திருப்பதால், நோய் உடனடியாக தீர்வதற்கு வாய்ப்பில்லை. குறைந்தபட்சம் அவனுடைய 14 வயதுவரை முன்னேற்றம் தெரியாது. அதன்பிறகு படிப்படியாக ஓரளவிற்கு முன்னேற்றம் தெரியும். நடப்பவை அனைத்தும் நம்முடைய கர்மாவின்படியே நடப்பதால் கடவுளை வேண்டுவதைத் தவிர நமக்கு வேறுவழியில்லை. இன்னும் இரண்டு ஆண்டுகள் பொறுமையாக இரு. கணவர் உன்னை விட்டு பிரிவதற்கு வாய்ப்பில்லை. கவலைப்படாதே.

மூவரின் ஜாதகத்திலும் ராகு-கேதுக்களின் ஆதிக்கம் மேலோங்கி இருப்பதால், ஒருமுறை காஞ்சிபுரம் பஸ்நிலையத்திற்கு அருகிலுள்ள சித்திரகுப்தன் கோவிலுக்கும், ராகுவிற்கு என அமைந்துள்ள பரிகாரத்தலமான ஸ்ரீ காளஹஸ்திக்கும், கணவன், குழந்தையோடு சென்று வழிபட்டு வா. நல்லவைகள் நடக்கும். நன்றாக இருப்பாய். வாழ்த்துக்கள் அம்மா.

பேரன் நன்றாகப் படிப்பானா?

ஒரு அபலைக் குடும்பம் , சென்னை.

கேள்வி :

எல்லோருக்கும் தைரியம் சொல்லி வாழ வைக்கும் மனித தெய்வம் நீங்கள். ஒரு தகப்பன் இல்லாத பிள்ளைக்காக இந்த லெட்டரை எழுதுகிறேன். நானும் என் கணவரும் தெருவோரத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்கிறோம். இந்த நிலையிலும் மகளின் குடும்பத்தை விட்டுவிடாமல் கவனித்துக் கொண்டிருக்கிறோம்.  இவன் ஒன்றரை வயது குழந்தையாக இருந்தபோது இவன் தகப்பன் விபத்தில் இறந்து விட்டான். தாய்வழி தாத்தா, பாட்டியான நாங்கள்தான் இவனையும், தாயையும் காப்பாற்றி வருகிறோம். தகப்பன் வீட்டில் எந்த உதவியும் செய்யாமல் ஏமாற்றி நடுத்தெருவில் விட்டு விட்டார்கள். இவன் தாய் படிப்பறிவு இல்லாதவர்.  கஷ்டப்பட்டு வீட்டுவேலை செய்து மகனை படிக்க வைக்கிறார்.  ஒவ்வொரு வீட்டிலும் சொல்ல முடியாத அளவிற்கு வேலைகளைச் செய்து பிள்ளையை படிக்கவைக்கிறாள். புருஷன்தான் இல்லை பிள்ளையாவது நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறாள். ஆனால் இந்தப் பையன் தாய் பேச்சை கேட்க மாட்டேங்கிறான்.  படிக்கச் சொன்னால் அப்புறம் படிக்கிறேன் என்கிறான். சொல்பேச்சை கேட்காமல் அடம் பிடிக்கிறான். படிக்கச் சொன்னாலே தலையில் தண்ணீர் ஊற்றிக் கொள்கிறான். வயிறு வலிக்கிறது, வாந்தி வருகிறது, காய்ச்சல் வருகிறது என்று பயமுறுத்துகிறான். இவன் படிப்பானா? இவனது எதிர்காலம் எப்படி இருக்கும் என்று குருவாகிய நீங்கள்தான் சொல்ல வேண்டும் .

பதில்: 

சூ
சந்
செவ்
பு சு
ரா

15-3-2008 இரவு-11-23 சென்னை
சனி
கே
குரு

(விருச்சிக லக்னம், மிதுனராசி. 2-ல் குரு, 4-ல் புத, சுக், ராகு, 5-ல் சூரி, 8-ல் சந், செவ், 10-ல் சனி, கேது. 15-3-2008 இரவு 11-23 சென்னை)

அம்மா... கல்வி மட்டுமே ஒருவரின் எதிர்காலத்தை நிர்ணயித்து விடுவதில்லை. படித்தால் மட்டுமே ஒருவர் நன்றாக இருப்பார் என்றால் கல்லூரியில் படித்து பட்டம் பெற்று வெளிவருகின்ற அத்தனை பேரும் வாழ்க்கையில் நன்றாகத்தான் இருக்க வேண்டும்? ஆனால் நிஜத்தில் இங்கே அனைத்தும் தலைகீழாகத்தானே இருக்கிறது? கல்வி என்பது வாழ்க்கைக்கு ஒரு அடையாளம்தானே தவிர,  அது ஒன்றே வாழ்க்கை அல்ல.

உண்மையைச் சொல்லப் போனால் எடுத்துக்கொண்ட லட்சியத்தில் முன்னேறியவர்களில் பெரும்பாலானோர் பள்ளிப்படிப்பைக் கூடத் தாண்டாதவர்கள். வாழத் தேவையான அனைத்தையும் ஏட்டுக்கல்வி கொடுத்து விடுவதில்லை. தகுந்த வயதில் கிடைக்கும் அனுபவங்களும், நம்முடைய ஒருமுகப்பட்ட உத்வேகமும்தான் வாழ்க்கையை தீர்மானிக்கின்றன. உலகின் பெரிய பணக்காரர்கள் மற்றும் சாதனையாளர்களில் பெரும்பாலானவர்கள் பள்ளிப் படிப்பைத் தாண்டாதவர்கள்தான்.

பேரனின் ஜாதகத்தில் கல்வி ஸ்தானமான நான்காம் பாவகமும், அந்த பாவகத்தின் அதிபதியான சனியும், வித்யாக்காரகனான புதனும் ராகு, கேதுகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதிலும் புதன், ராகுவுடன் ஐந்து டிகிரிக்குள் கிரகணம் ஆகியிருக்கிறார். சனியும் ஏழுடிகிரிக்குள் கேதுவுடன் இருக்கிறார். இதுபோன்ற நிலையில் அவனுக்கு படிப்பு என்பது எட்டிக்காய் போன்று கசப்பாகத்தான் இருக்கும்

அதேநேரத்தில் இதுபோன்று பத்தாமிடத்தில் சனி சூட்சுமவலுப்பெற்று குருவின் பார்வையில் இருப்பவர்கள் ஏதேனும் ஒரு நுணுக்கமான வேலையில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். உங்கள் பேரன் எந்தவகையில் கெட்டிக்காரன் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டியது உங்களுடைய பொறுப்பு. தவிர தற்போது 10 வயதுதான் ஆகும் ஒரு சிறுவனின் எதிர்காலத்தைப் பற்றி இப்போதே கவலைப்பட அவசியம் இல்லை.

ஜாதகப்படி லக்னாதிபதி செவ்வாய் எட்டில் மறைந்து,  வளர்பிறை சந்திரனுடன் இணைந்து குருவின் பார்வையைப் பெற்றிருப்பதாலும், சூரியனும், சந்திரனும் ஒருவருக்கொருவர் கேந்திரங்களில் இருப்பதாலும், குரு ஆட்சியாக இருப்பதாலும், தொழில்துறையில் பேரன் சிறந்த அளவில் வருவான். தனகாரகனாகிய குரு வலுத்திருப்பதால் எதிர்காலத்தில் நன்கு சம்பாதிப்பான். எனவே பேரன் படிக்கவில்லையே என்கிற கவலையை விடுத்து அவனுக்கு எந்தத் துறையில் ஆர்வம் இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டு அதன்படி அவனை செலுத்தினால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். வாழ்த்துக்கள்.

No comments :

Post a Comment