மாசிமாதம் முழுவதும் ராசிநாதன் செவ்வாய் எட்டாம் வீட்டில் மறைந்தாலும் ஆட்சி
நிலை பெறுவதால் இது மேஷராசிக்கு சந்தோஷங்களைத் தரக் கூடிய மாதம்தான்.
குருபகவான் ராசியைப் பார்த்து சுபப்படுத்துவதால் கடந்த மூன்று வருடங்களாக
மேஷத்திற்கு அஷ்டமச் சனியினால் இருந்த கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி விட்டன.
பிரச்னைகள் எதுவும் இனி இருக்காது. எல்லாவற்றிலும் தடைகள் நீங்கி நல்ல
செயல்கள் நடைபெறத் துவங்கும்.
குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை இருக்கும்.
பிரிந்திருக்கும் தம்பதிகள் ஒன்று சேர முடியும். வழக்குகளுக்கு நல்ல முடிவு
இருக்கும். சண்டை சச்சரவுகள் நீங்கி சுமுகநிலை பிறக்கும். வியாபாரிகளுக்கு
மந்த நிலைமை மாறி தொழில் சூடு பிடிக்கும். கலைஞர்கள் வாய்ப்புக்கள் கிடைக்கப்
பெறுவீர்கள். வராமல் இருந்த சம்பளப்பாக்கி வரும். நிர்வாகத்துடன் இருந்து வந்த
கசப்புகள் நீங்கி புது வழி பிறக்கும். வெளிநாட்டில் இருந்து பணம் வரும்.
லாபஸ்தானத்தில் சுக்கிரன் வலுவுடன் இருப்பதால் சிலருக்கு பெண்கள் விஷயத்தில்
நன்மை நடக்கும். பெண்கள் உதவுவார்கள். பெண்கள் சம்பந்தப்பட்ட தொழில்
செய்பவர்களுக்கு இந்த மாதம் நல்ல லாபம் உண்டு. சுயதொழில் செய்பவருக்கு
முன்னேற்றம் உண்டு. இளைஞர்களின் மனம் சந்தோஷப் படும்படியான நிகழ்ச்சிகள்
இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு கல்யாணம் உறுதியாகும். சிரமங்கள்
அனைத்தும் தீரும் மாதம் இது.
ரிஷபம்:
மாசிமாதம் முழுவதும் ராசிநாதன் சுக்கிரன் நட்பு மற்றும் உச்ச வலுவுடன்
இருப்பதும் பத்தில் சூரியன் அமர்ந்து தன் நான்காம் வீட்டை பலப்படுத்துவதும்
ரிஷப ராசிக்கு நன்மைகளைத் தரும் அமைப்பு என்பதால் இந்த மாதம் உங்களுக்கு வேலை,
தொழில், வியாபார அமைப்புகளில் நன்மைகள் நடக்கும். ஏழாமிடத்தில் செவ்வாய்
வலுவுடன் அமர்ந்து அஷ்டமச் சனியும் நடப்பதால் சிலருக்கு பெண்கள் விஷயத்தில்
மனக்கசப்புக்கள் வரும். கவனமாக இருங்கள்.
ராசிநாதன் சுக்கிரன் மாத பிற்பகுதியில் உச்சநிலை பெறுவது உங்களுக்கு “பருத்தி
புடைவையாய்க் காய்த்தது” என்ற பழமொழிக்கேற்ப அனைத்து நல்லவைகளும் அதிக முயற்சி
இன்றி நடக்கக் கூடிய ஒரு மாதமாக மாசியை அமைத்து தரும். சிலருக்கு
பணியிடங்களில் நெருக்கடி வரும் என்பதால் அனுசரித்து போவது நல்லது. ரோகிணி
நட்சத்திரக்காரர்களுக்கு நல்ல எதிர்காலத்திற்கு அஸ்திவாரம் இடும் வேலை தொழில்
அமைப்புகளும் இப்போது அமையும்.
அஷ்டமச்சனி நடந்து வருவதால் அருகில் இருக்கும் பழமையான சிவன் கோவிலில் உள்ள
காலபைரவருக்கு சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது சிரமங்களை
குறைக்கும். சிலருக்கு எதிர்கால நல்வாழ்விற்கான சிலரின் அறிமுகங்கள் மற்றும்
அடிப்படையான நிகழ்ச்சிகள் இப்போது உண்டு. கணிதம், அக்கௌன்ட், மென்பொருள்
துறையினர்கள் மேன்மை அடைவார்கள். முறைகேடான வழிகளில் வரும் வருமானத்தின் போது
கவனம் தேவை.
மிதுனம்:
ராசிநாதன் புதன் திரிகோணத்திலும், பாக்யாதிபதி சனி கேந்திரத்திலும் இருக்கும்
நல்ல மாதம் இது. கிரகநிலைகள் சாதகமாக இருப்பதால் மாசிமாதம் முழுவதும் மிதுன
ராசிக்கு நல்ல பலன்கள் நடக்கும். மாத பிற்பகுதியில் அமையும் யோகாதிபதி
சுக்கிரனின் உச்சபலம் நல்ல பலன்களைத் தரும். யோகக்கிரகங்கள் அனைத்தும் வலுவாக
இருப்பதால் அதிகமுயற்சி இல்லாமலே வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களும்
இந்த மாதம் நல்லபடியாக நடக்கும்.
குருபகவான் உங்களின் ஜீவனாதிபதியாகவும் இருந்து ராசியைப் பார்த்து வலுப்
படுத்துவதால் இதுவரை நல்லவேலை கிடைக்காமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்த இளைய
பருவத்தினருக்கு இப்போது நல்ல இடத்தில் வேலை கிடைத்து செட்டில் ஆவீர்கள். இந்த
அமைப்பு ஜீவன அமைப்புகளை வலுப்படுத்தும் என்பதால் சுயதொழில் புரிவோருக்கும்,
வியாபாரிகளுக்கும் வருமானம் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர்
லாபங்களை பெறுவார்கள்.
மாதம் முழுவதும் சகாய ஸ்தானாதிபதி சூரியன் பலத்துடன் இருக்கிறார் என்பதால்
எதிர்பார்க்கும் இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். குழந்தைகளால் சந்தோஷமான
செய்திகள் இருக்கும். வெளிநாட்டில் இருக்கும் மகன், மகளிடமிருந்து நல்ல செய்தி
வரும். சிலர் பேரன், பேத்திகளை பார்க்க வெளிநாடு சென்று வருவீர்கள்.
விளையாட்டு துறையினர், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் போன்ற துறையினருக்கு இந்த
மாதம் திருப்புமுனையாக அமையும்.
கடகம்:
மாசி மாதம் சூரியன் எட்டில் இருப்பது. கடக ராசிக்கு பொருளாதார விஷயத்தில்
சாதகமற்ற நிலைதான் என்றாலும் ராஜயோகாதிபதி செவ்வாய் ஐந்தில் ஆட்சியாக
இருப்பதால் இது சிக்கலைத் தராமல் நன்மைகளைத் தரும் மாதமாகவே அமையும். அதே
நேரத்தில் சகல விஷயங்களும் முயற்சிகளுக்கு பின்பே வெற்றி அடையும். சுக்கிரனின்
உச்ச வலுவால் சிலருக்கு பெண்கள் விஷயத்தில் மனக்கசப்புக்கள் வரும் என்பதால்
எச்சரிக்கையாக இருங்கள். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஊக்கத்துடன் செயல்படுவீர்கள்.
வெளிநாட்டு
வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும். உங்களில் பூசம்
நட்சத்திரத்தினருக்கு லட்சியத்தை அடைவதற்கான ஆரம்பக் கட்ட முயற்சிகள் இந்த
மாதம் இருக்கும். அதிர்ஷ்டத்தினால் சில காரியங்கள் நடந்து உங்களை
மகிழ்ச்சியில் ஆழ்த்தும். சிலருக்கு எதிர்கால முன்னேற்றத்திற்கான மாற்றங்கள்
நடைபெறும். நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த முடிவுக்கு வரும்.
அனைத்து கடக ராசிக்காரர்களுக்கும் இது ஏதேனும் ஒரு வகையில் நன்மைகளை தரும்
மாதமாக இருக்கும். இதுவரை திருமணம் ஆகாதவருக்கு அது உறுதி ஆகும். கணவன் மனைவி
உறவு சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் சந்தோஷத்தை தருவார்கள். வெகு சிலருக்கு
புத்திர பாக்கியம் உண்டு. தொட்டது துலங்கும் காலம் என்பதால் இந்த நல்ல
வாய்ப்பை பயன்படுத்தி கடகத்தினர் எதிர்கால நல்வாழ்க்கைக்கான அடிப்படைகளை
இப்போது அமைத்துக் கொள்ளுங்கள்.
சிம்மம்:
ராசிநாதன் சூரியன் மாசிமாதம் முழுவதும் ராசியைப் பார்க்கும் அமைப்பில்
உள்ளதாலும், தொழில் ஸ்தானாதிபதி சுக்கிரன் மாத பிற்பகுதியில் உச்சநிலை
அடைவதாலும் இந்த மாதம் சிம்மத்தின் வேலை, தொழில், வியாபாரம் போன்றவைகளில்
உயர்வுகள் உள்ள மாதமாக இருக்கும். பெண்கள் வழியில் லாபங்கள் உண்டு. வேலைக்கு
செல்லும் மனைவியால் தேவைகள் நிறைவேறுதல் இருக்கும். வீடு வாங்குவதற்கு தடைகள்
நீங்குகிறது.
இருக்கும் வாகனத்தை மாற்றிவிட்டு நல்ல வாகனம் வாங்க முடியும். வாகனம்
இல்லாதவர்களுக்கு புதிய வாகனம் வாங்குவதற்கான யோகம் இருக்கிறது. எதிர்பாராத
தனலாபங்கள் இருக்கும். இழுத்துக் கொண்டிருந்த ரியல் எஸ்டேட் போன்ற விஷயங்கள்
‘சட்’ என்று முடிவுக்கு வந்து ஒரு தொகை கைக்கு கிடைக்கும். ஐந்தில் சனி
இருப்பதால் படிக்கும் பிள்ளைகளின் மேல் ஒரு கண் இருக்கட்டும். அவர்கள் யாருடன்
பழகுகிறார்கள் என்பதை கண்காணியுங்கள்.
கடந்த சில மாதங்களாக கோட்சாரரீதியாக சிம்மத்திற்கு இருந்து வந்த சாதகமற்ற
நிலைமை சனிப் பெயர்ச்சிக்குப் பிறகு இல்லை. ராசிநாதன் சூரியன் குருபகவான்
பார்வையில் இருந்து ராசியைப் பார்ப்பதால் மனம் உற்சாகமாக இருக்கும். எந்தச்
சிக்கலையும் எளிதாக தீர்ப்பீர்கள். எதையும், யாரையும் சமாளிப்பீர்கள்.
வெளியிடங்களில் கௌரவத்தோடு நடத்தப்படுவீர்கள். அந்தஸ்து உயரும்படியான
சம்பவங்கள் நடக்கும். உடல்நலமும் மனநலமும் சீராக இருக்கும்.
கன்னி:
மாசி முழுவதும் ராசிநாதன் புதன் நட்பு வலுவுடன் இருப்பது சிறப்பான ஒரு நிலை
என்பதால் கன்னியின் பொருளாதார உயர்வுக்கு தேவையான வழிமுறைகளை சுட்டிக்
காட்டும் மாதமாக மாசி அமையும். புதனும் சுக்கிரனும் நல்ல வீடுகளில் இருப்பதால்
வெளியிடங்களில் மதிப்புடன் நடத்தப் படுவீர்கள். சுக்கிரனின் உச்சவலுவால்
பெண்களால் லாபம் இருக்கும். சகோதரிகள் உதவுவார்கள். அம்மாவின் ஆசி கிடைக்கும்.
குடும்பத்தில் சுபிட்ஷம் நிலவும்.
எதிர்பார்க்கும் இடத்தில் உதவிகள் கிடைக்கும். சகோதர சகோதரிகளினால் நல்ல
சம்பவங்களும், ஆதரவான நிகழ்வுகளும் இருக்கும். மனைவிக்கு நகை வாங்கித்
தருவீர்கள். வியாபாரிகளுக்கு இது நல்ல காலகட்டம்தான். ஆனால் சரியான
வேலைக்காரர்கள் கிடைப்பது கஷ்டமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள்
நடைபெறும் என்பதால் செலவுகள் அதிகமாக இருக்கும். எனவே குடும்பத்தில் சேமிப்பு
இருக்க வேண்டியது அவசியம்.
சுக்கிரன் உச்சநிலையில் அமைந்து, பதினொன்றில் ராகு இருப்பது என்பது எப்பொழுதோ
ஒருமுறை அமையும் விசேஷ அமைப்பு என்பதால் கிரகங்களால் தற்போது ஏற்பட்டிருக்கும்
சாதக நிலையை உபயோகப்படுத்திக் கொண்டு கன்னி ராசிக்காரர்கள் தங்களது
லட்சியங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள்.
மகான்களின் தரிசனம் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிறைவேற்றாமல் இருந்த
நேர்த்திக் கடன்களை செலுத்த முடியும்.
துலாம்:
துலாம்நாதன் சுக்கிரன் மாத பிற்பகுதியில் உச்சவீட்டில் இருப்பதால்
தடைப்பட்டுக் கொண்டிருந்த அனைத்து முயற்சிகளும் மாசிமாதம் முதல் தடைகள்
நீங்கும். பணவரவு தாராளமாக இருக்கும். கொடுத்த கடன் சிக்கல் இல்லாமல் திரும்பி
வரும். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். மாதம் முழுவதும் செவ்வாய் இரண்டாம்
வீட்டில் வலுவாக இருப்பதால் பேச்சில் கவனமாக இருங்கள். நிதானம் இழந்து
எவரையும் பேசிவிட வேண்டாம். தேவையற்ற வாக்குவாதம் வேண்டாம்.
துலாம் ராசிக்காரர்களின் பின்னடைவுகளை தீர்க்கும் மாதம் இது. சிலருக்கு
வாழ்க்கைத் துணையின் மூலம் ஏதேனும் ஒரு சொத்தோ, அல்லது நல்ல தொகையோ
கிடைக்கும். ரியல்எஸ்டேட், வீடு கட்டிக் கொடுக்கும் புரமோட்டர்கள், செம்மண்
பூமி, ஆறு, மலைப்பாங்கான இடங்களில் தொழில் வைத்திருப்பவர்கள் மேன்மைகளை
அடைவீர்கள். கடன்தொல்லையில் இருப்பவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும். மகன்
மகள் விஷயத்தில் கவலைகள் தீரும்.
முகம் தெரியாத ஒருவரால் இந்த மாதம் தேவையற்ற விரயங்கள் வரும் என்பதால் புதிதாக
அறிமுகமாகும் நட்புகளுடன் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். என்னதான் ராசிநாதன்
சுக்கிரன் உச்சமானாலும் அவர் ஆறாமிடத்தை வலுப்படுத்துவதால் வீட்டிலும்
வெளியிலும் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.
நீங்கள் நேர்மையான வழிகளையே கடைப்பிடிப்பவர் என்பதால் எதையும் சமாளிப்பீர்கள்.
இந்த மாதம் தாயாருக்காக ஏதேனும் வாங்கிக் கொடுப்பீர்கள்.
விருச்சிகம்:
ராசிநாதன் செவ்வாய் ஆட்சி பெறுவதால் விருச்சிகராசிக்கு மாசி மாதம் நன்மைகளை
மட்டுமே தரும் மாதமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. செவ்வாயின்
வலுவினாலும், சனி அடுத்த ராசிக்குப் போய் விட்டதாலும் சனியின் தாக்கம்
குறையும். இனிமேல் விருச்சிக ராசிக்காரர்கள் ஏழரைச் சனியைப் பற்றி கலங்கத்
தேவையில்லை. உங்களின் வேலை, வியாபாரம், தொழில் போன்ற ஜீவன அமைப்புகள் எந்தவித
சிக்கலும் இன்றி நல்லபடியாக நடக்கும்.
போலீஸ், கோர்ட், கேஸ் உள்ளவருக்கு சாதகமான திருப்பங்கள் உண்டாகும். வேலை
செய்யும் இடத்தில் இருந்து வந்த மனகசப்புகள் விலகும். இளைஞர்களுக்கு இதுவரை
நடந்து வந்த எதிர்மறையான பலன்கள் நீங்கி, நல்ல பலன்கள் நடக்கும். சிறிய
விஷயங்களால் பிரிந்து இருந்தவர்கள் அதை மறந்து ஒன்று கூடுவீர்கள். வெளிநாடு
சம்பந்தப்பட்ட இனங்களில் வேலை செய்பவர்களுக்கு உயர்வுகள் இருக்கும். குலதெய்வ
வழிபாடு செய்ய முடியும்.
கடந்த ஐந்து வருடங்களாக ஏழரைச்சனி காரணமாக முடக்கமான ஒருநிலையை சந்தித்துக்
கொண்டிருக்கும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நல்ல மாற்றம் வந்து விட்டது.
இனிமேல் அனைத்து விஷயங்களிலும் நீங்கள் பொருளாதார மேன்மையுடன், நல்ல பணவரவு
மற்றும் அந்தஸ்துடன் இருக்க வேண்டிய சூழல்கள் உருவாகி நல்ல எதிர்காலத்தை
தரக்கூடிய அமைப்பிற்கு மாறுவீர்கள். எதையும் சமாளிக்கும் ஆற்றல் உள்ள
உங்களுக்கு மாசி நல்ல மாதமே.
தனுசு:
ராசிநாதன் குருபகவான் லாபஸ்தானமான பதினொன்றில் இருக்கிறார். சூரியனின் சுப
பார்வையால் பாக்கியஸ்தானம் வலுப்பெறுவதால் தனுசுராசிக்கு மாசிமாதம்
நல்லவைகளைத் தரும் மாதமாக இருக்கும். சுயதொழில் செய்வோர் அகலக்கால்
வைக்காதீர்கள். இளைய பருவத்தினர் புதிய தொழில் ஆரம்பிக்க வேண்டாம். ஐம்பது
வயதிற்கு மேற்பட்டவர்கள் தொழில் ஆரம்பிக்கலாம். வியாபாரிகளுக்கு வருமானக்
குறைவு இருக்காது. பணவிஷயத்தில் கவனம் தேவை.
இந்த மாதம் உங்களில் சிலர் புலிவாலை பிடிப்பீர்கள். கவனமாக இருங்கள். ராசியில்
சனி இருப்பதால் மனம் அலைபாயும். குறிப்பாக மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு மன
அழுத்தம் தரும் நிகழ்வுகள் நடக்கும். எனவே எவரிடமும் வாக்குவாதம் செய்ய
வேண்டாம். எவரையும் நம்ப வேண்டாம். இளைஞர்கள் பெண்கள் விஷயத்தில்
எச்சரிக்கையாக இருக்கவும். எந்த ஒரு விஷயத்தைப் பற்றி பேசும் பொழுதும்
வார்த்தைகளில் கவனமாக இருங்கள்.
தேவைக்கு அதிகமாக கடன் வாங்க வேண்டாம். யாரையும் நம்பி எதையும் செய்து தருவதாக
வாக்குறுதி கொடுக்க வேண்டாம். கிரெடிட்கார்டு இருக்கிறது என்று தேவையில்லாததை
வாங்கிவிட்டு சிக்கலில் மாட்டாதீர்கள். பிற்பகுதியில் ராசி சுபத்துவம்
பெறுவதால் நல்ல பலன்கள் நடைபெற ஆரம்பிக்கும். நீண்ட நாள் நிலுவையில் இருந்து
வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் சட்டத்தை
மீறி யாருக்கும் சலுகைகள் காட்டாதீர்கள்.
மகரம்:
எட்டிற்குடைய சூரியன் இரண்டாம் வீட்டில் இருந்தாலும் அவருடன் புதன்
சுபத்துவமாக இருக்கிறார். மாத பிற்பகுதியில் யோகாதிபதி சுக்கிரன் உச்சமாக
இருப்பது நல்ல யோகம். மாசி மகரராசிக்கு நன்மைகளை மட்டுமே தரும் மாதமாக
இருக்கும். எதிர்மறை பலன்கள் எதுவும் இருக்காது. மதிப்பு, மரியாதை, அந்தஸ்து,
கௌரவம், தொழில்மேன்மை, தனலாபங்கள், குடும்பத்தில் மகிழ்ச்சி போன்றவைகள் உண்டு.
சிலருக்கு தொழில்ரீதியான பயணங்கள் இருக்கும்.
கலைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள் போன்ற துறையினருக்கு கொடுக்கும்
வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போகும் என்பதல் யாருக்கும் எதுவும் தருவதாக
ப்ராமிஸ் செய்யும் முன் யோசிப்பது நல்லது. பணவரவுகள் தாராளமாக இருந்தாலும்
சிக்கனத்தை கடைபிடியுங்கள். தேவையற்ற பொருட்கள் வாங்குவதால் விரயங்கள்
வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. வேலைக்காரர்களை நம்ப வேண்டாம். திருட்டு போன்ற
சம்பவங்கள் நடைபெறும். செல்போன் பத்திரம்.
இயந்திரங்களில் வேலை செய்வது போன்ற நுணுக்கமான துறைகளில் இருப்பவர்கள்
கவனமுடன் இருப்பது நல்லது. அலுவலகங்களில் உங்களைப் பிடிக்காதவர்கள் கை ஓங்கும்
சூழ்நிலை வரும். சில நேரங்களில் சுவர்களுக்கு கூட கண்களும் காதுகளும்
இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். வீண் அரட்டை, மேலதிகாரியின் செயல்
பற்றிய விமரிசனங்களை தவிருங்கள். யாரையும் நம்பி கையெழுத்து போடுவதோ
எவருக்கும் ஜாமீன் கொடுப்பதோ கூடாது.
கும்பம்:
ராசியில் யோகாதிபதி புதன் அமர்ந்த நிலையில் மாசி பிறப்பதால் கும்ப ராசிக்கு
பொருளாதார மேன்மைகளையும், வேலை, தொழில், வியாபாரம் போன்றவைகளில் நன்மைகளையும்
செய்யும் மாதம் இது. குருவின் பார்வையால் வீட்டில் பொன் பொருள் சேர்க்கை
உண்டாகும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்க முடியும். செலவுகள் அதிகம்
இருக்கும் என்பதால் வரும் வருமானத்தை முதலீடாக மாற்றி நல்ல விதமாக விரயம்
செய்வது புத்திசாலித்தனம்.
‘வருமானத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்’ என்ற பழமொழியை இந்த மாதம்
நினைவு படுத்திக் கொள்ளுங்கள். சுக்கிரன் சுபபலத்துடன் இருப்பதால் மனைவி,
நண்பர்கள் போன்ற வழியில் சந்தோஷமான நிகழ்சிகளும், சுப காரியங்களும் இருக்கும்.
உல்லாசமாக இருப்பீர்கள். கேளிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள்.
சுபநிகழ்ச்சிகள் குடும்பத்தில் உண்டு. வீடுமாற்றம் தொழில்மாற்றம் போன்றவைகள்
நடக்கும்.
செவ்வாய் ஜலராசியான பத்தாமிடத்தில் வலுப் பெற்று யோகத்தை தரக்கூடிய நிலையில்
இருப்பதால் காய்கறி, பழம், ஜூஸ், விவசாயம், பால், வாட்டர்கேன் போன்ற
தொழில்களைச் செய்பவர்களுக்கு இது சிறப்பான மாதமாக இருக்கும். தொழிலில் இருந்து
வந்த சிக்கல்கள் விலக துவங்கும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் கவனமாக இருங்கள்.
வங்கியிலிருந்து பணம் எடுத்து வரும்போது எச்சரிக்கை தேவை. குடும்பத்தில்
ஏற்படும் பிரச்னைகளை ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசி தீர்த்துக் கொள்வது
நல்லது.
மீனம்:
மாசிமாதம் முழுவதும் ஆறுக்குடைய சூரியன் ஆறாமிடத்தைப் பார்த்து கெடுதல் தரும்
நிலையில் இருந்தாலும் அவரை ராசிநாதன் குரு பார்ப்பதால் மீனத்திற்கு நல்லவை
மட்டுமே நடக்கும் மாதம் இது. எட்டாமிடம் வலுப்பெறுவதால் சிலருக்கு உயரமான
இடங்களுக்கு போகும் அமைப்பு உண்டாகும். மலையும் மலைசார்ந்த இடங்களில் சுரங்கம்
கிரஷர் ஜல்லி கிரானைட் போன்ற தொழில் வைத்திருப்பவர்களுக்கும் அங்கே வேலை
செய்பவர்களுக்கும் நன்மைகளைத் தரும் விஷயங்கள் நடக்கும்.
இளைஞர்களுக்கு சிலமாதங்களாக இருந்து வந்த கலக்கமான விஷயங்கள் இனிமேல்
இருக்காது. சிலருக்கு மும்பை, டெல்லி என வடமாநில பயணம் இருக்கும். விலை
உயர்ந்த பொருட்களை கவனமுடன் பாதுகாக்க வேண்டியது அவசியம். வீடு வாகன
விஷயங்களில் மாற்றங்கள் இருக்கும். புதிய வாகனம் அமையும். மனைவியால் நன்மைகள்
இருக்கும். இதுவரை அடுத்தவரை எதிர்பார்த்திருந்தவர்கள் நிலைமை மாறி நீங்கள்
மற்றவர்களுக்கு உதவுவீர்கள்.
இஸ்லாமிய நண்பர்கள் மூலமாக சிலர் எதிர்பாராத நல்ல விஷயங்களை சந்திப்பீர்கள்.
நீண்ட நாட்களாக பார்க்காமல் இருந்த ஒருவரை இந்த மாதம் பார்ப்பீர்கள். அவர்
மூலம் நன்மைகளும் இருக்கும். வழக்குகளில் சிக்கி இருப்பவர்களுக்கு ஆறுதல்
தரும் சம்பவங்கள் உண்டு. இதுவரை கிணற்றில் போட்ட கல்லாகவோ அல்லது உங்களுக்கு
சாதகமில்லாமல் சென்று கொண்டிருந்த வழக்கு விவகாரங்கள் தலைகீழாக மாறி சாதகமான
சம்பவங்கள் நடக்கும்.
No comments :
Post a Comment