Friday, September 1, 2017

2017 September Month Natchathira Palangal - 2017 செப்டம்பர் மாத நட்சத்திரப் பலன்கள்

அசுவினி:

சமீபத்தில் தொழில் ஆரம்பித்து இன்னும் காலூன்ற முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு தொழில் நல்ல முன்னேற்றமாக நடக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிரிகள் குழி பறிப்பார்கள் என்பதால் பேசும் போது வார்த்தைகளில் கவனமாக இருங்கள். சிலருக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். பத்திரிக்கை, ஊடகங்கள் போன்ற துறையில் இருப்பவருக்கு அலைச்சலும், வேலைப்பளுவும் இருக்கும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்க சிரமங்கள் இருக்கும் என்றாலும் பணவரவு தடைபடாது. இன்னும் அஷ்டமச் சனியின் ஆதிக்கத்தில் இருக்கும் உங்களுக்கு இந்த மாதம் நல்ல பலன்கள்தான்.

பரணி:

மந்தமாக இருந்த கூட்டுத் தொழில் சிறப்பாக நடைபெறும். பங்குதாரர்கள் உதவியாக இருப்பார்கள். சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இனிமேல் நிலையான ஒரு தொழில் அமைப்பு உருவாகி மாதா மாதம் நிரந்தர வருமானம் வரும். பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்வோருக்கு இந்த மாதம் நல்ல பலன்களைத் தரும். எனவே சோம்பலை உதறித் தள்ளி சுறுசுறுப்பாக காரியம் ஆற்ற வேண்டியது அவசியம். பணத்திற்கு பஞ்சம் இருக்காது. கொடுக்கும் வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். வாக்கு பலிக்கும். பொதுவில் நல்ல மாதம் இது.

கிருத்திகை:

உங்களில் ரிஷப ராசிக்காரர்கள் சுறுசுறுப்பாக இருக்க வேண்டியது அவசியம். மேஷ ராசிக்காரர்களுக்கு நன்மைகள் இருக்கும். பணத்திற்கு பஞ்சம் இருக்காது. கொடுக்கும் வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். வாக்குப் பலிக்கும். புதிய வாகனம் அமையும். மாதத்தின் பிற்பகுதி நல்ல பணவரவைத் தரும். அதேநேரத்தில் செலவுகள் அதிகமாகத்தான் இருக்கும். நீண்ட நாள் கனவு ஒன்று நனவாகும். எதையும் சமாளிக்கும் ஆற்றல் உள்ள உங்களுக்கு ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். சித்தர்களின் ஆசிகள் இப்போது உண்டு. கூடுமானவரை நேர்வழியிலேயே செல்ல முயற்சி செய்யுங்கள். குறுக்குவழி வேண்டாம்.

ரோஹிணி:

உங்களில் சீருடை அணிந்து வேலை செய்யும் துறையினருக்கு நல்லபலன்கள் உண்டு. சிலருக்கு தந்தையைப் பெற்ற பாட்டன் வழியில் பூர்வீகச் சொத்து ஒன்று கிடைக்கும். அதிகாரம் செய்யும் துறைகளில் இருப்போருக்கு வேலைப்பளு இருக்கும். இளையபருவத்தினர் தொழிலை அக்கறையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். வேலை செய்பவர்கள் மேல்வருமானத்திற்கு ஆசைப்பட்டு விதிகளை மீறி யாருக்கும் சலுகை காட்ட வேண்டாம். புதிய கிளைகள் ஆரம்பிக்கவோ, தொழிலை விரிவாக்கம் செய்யவோ, அதிகமான முதலீடு செய்து தொழில் ஆரம்பிக்கவோ வேண்டாம்.

மிருகசீரிடம்:

உங்களில் மிதுன ராசியினர் அடுத்தவர்களை எதிர்பார்த்திருந்த நிலைமை மாறி மற்றவர்களுக்கு உதவுவீர்கள். ஆன்மிகம் சம்பந்தப்பட்ட துறையினர் சிறப்படைவார்கள். உங்களில் ரிஷப ராசிக் காரர்களுக்கு கடன் வாங்க வேண்டிய சூழல்கள் உருவாகும். சற்றுக் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். எதிலும் ஒரு மந்தநிலை இருக்கும். செயல்திறன் குறைவுபடும். இனம் தெரியாத மனக்கலக்கங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டியது இருக்கும். சிலருக்கு தொழில்மாற்றம், ஊர்மாற்றம், வீடுமாற்றம் ஏற்படும்.

திருவாதிரை:

இந்த மாதம் ஆசிரியர்பணி, மார்கெட்டிங், விற்பனைப் பிரிவில் உள்ளவர்கள், ஆலோசனை சொல்பவர்கள், ஊராட்சி நகராட்சி மாநகராட்சி சம்பந்தப்பட்டவர்கள், இன்சூரன்ஸ், வெரிபிகேசன் துறை, தபால் மற்றும் கூரியர்துறையில் இருப்பவர்கள் நல்ல பலன்களை பெறுவீர்கள். நீண்டதூரப் பயணங்களால் லாபங்கள் இருக்கும் இதுவரை உங்களை எதிர்த்துக் கொண்டிருந்தவர்கள் உங்களைப் பார்த்து பயப்படும்படி நிலைமை மாறும். சிலருக்கு வேலை மாற்றங்களும், பன்னாட்டு கம்பெனியில் பணிபுரியும் வாய்ப்பும் கிடைக்கும். டிரெயினிங்கிற்காக வெளிநாடு போவீர்கள். வேலைப்பளு அதிகம் இருப்பதால் மன அழுத்தம் இருக்கும்.

புனர்பூசம்:

இந்த மாதம் பணவரவு நன்றாக இருக்கும். வருமானத்திற்குக் குறை இருக்காது. கொஞ்சமாவது சேமியுங்கள். உடல் உழைப்பை பிரதானமாகக் கொண்டவர்கள், கறுப்புநிறப் பொருட்கள் சம்பந்தப்பட்டவர்கள், தொழிலாளர்கள், கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு சந்தோஷ நிகழ்ச்சிகள் நடைபெறும். கடன் பிரச்னைகள் தலை தூக்காது. புதிய கடன்கள் வாங்கும்படி நேரிட்டாலும் பழைய கடன்களை அடைத்துவிட்டு நிம்மதியாக இருக்க முடியும். தொழில்ரீதியான பயணங்கள் இருக்கும். இதுவரை குலதெய்வ வழிபாடு செய்யாதவர்கள் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தாதவர்கள் இப்போது அவற்றை முடிப்பீர்கள்.

பூசம்:

பூசத்திற்கு அதிர்ஷ்டம் தரும் மாதம் இது. தொழில்அதிபர்கள், உயரதிகாரிகள், அரசியல்வாதிகள், கலைஞர்கள் உள்ளிட்ட எல்லாத் துறையினருக்கும் இது நல்ல நேரம். எந்தக் காரியமும் அதிக முயற்சி இல்லாமலேயே வெற்றி பெறும். வெளியிடங்களில் மதிப்பு, மரியாதை கௌரவம் நல்லபடியாக இருக்கும். மனதில் ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். சித்தர்களின் ஆசிகள் எப்போதுமே உங்களுக்கு உண்டு. தரிசிக்க விரும்பும் புனிதத்தலங்கள் அனைத்திற்கும் செல்லும் பாக்கியம் கிடைக்கும். நீண்டகால லட்சியங்களை இப்போது நிறைவேற்றிக் கொள்வீர்கள். சிலர் புகழ் அடையும்படியான சம்பவங்கள் நடக்கும்.

ஆயில்யம்:

அதிர்ஷ்டம் கை கொடுக்கும். மாதம் முழுவதுமே நல்ல பலன்கள் நடக்கும். பணவரவு திருப்தியாக இருக்கும். கலைத்துறையிலும் பெண்கள் தொடர்பான துறைகளிலும், அழகு, ஆடம்பரம் சொகுசு வாகனம் அலங்காரம் போன்ற துறைகளிலும் இருப்பவர்களுக்கு விசேஷமான பலன்கள் உண்டு. அதிகாரம் செய்யும் துறைகளில் இருப்போருக்கும் நல்ல பலன்கள் உண்டு. தொழில், வியாபாரம் போன்றவைகள் லாபகரமாக நடக்கும். எதிர்காலத்தில் நீங்கள் வளமான வாழ்க்கை வாழக்கூடிய அமைப்புக்கு அஸ்திவாரம் இப்போது அமையும். புதிய அறிமுகங்கள் இப்போது உண்டு. அதனால் நன்மைகளும் உண்டு.

மகம்:

பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும் என்பதால் நஷ்டங்கள் ஏற்படலாம். கவனத்துடன் இருங்கள். சொந்தத்தொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் இது லாபம் தரும் மாதம்தான். தாராளமான பணவரவு உண்டு. எதிர்பார்த்திருந்த ஒரு பெரியதொகை கிடைக்கும். குழந்தைகள் விஷயத்தில் செலவுகளோ, விரயங்களோ வரும். வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் தொழில் வைத்திருப்பவர்கள். வேலை செய்பவர்களுக்கு இந்த மாதம் நன்மைகளைத் தரும். உற்சாகமாக இருப்பீர்கள். நண்பர்கள் உதவி கிடைக்கும். பெண்களால் செலவுகள் உண்டு.

பூரம்:

பூரத்திற்கு இந்தமாதம் நல்ல லாபங்கள், பணவரவுகள் கிடைக்கும். வீடு வாகன விஷயங்களில் புதிய மாற்றங்கள் இருக்கும். சொந்தவீடு, புதிய வாகனம் அமையும். மனைவியால் நன்மைகள் இருக்கும். எதற்கும் அடுத்தவரை எதிர்பார்த்திருந்த நிலைமை மாறி இனி மற்றவர்களுக்கு உதவுவீர்கள். வாழ்க்கைத் துணை வழியில் நல்ல சம்பவங்கள் இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். அக்கவுண்டண்டுகள், கணிப்பொறித்துறையினர், எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் விற்போர் காண்ட்ராக்டர்கள், நிர்வாகப்பணி சம்பந்தப்பட்டவர்கள், நெருப்பு சம்பந்தப்பட்டவர்கள் போன்றோருக்கு இது நல்ல மாதம்.

உத்திரம்:

உத்தரத்தின் வாழ்க்கை முன்னேற்றப் பாதையில் செல்லத் துவங்கும் மாதம் இது. மனைவிக்கு நகை வாங்கித் தருவீர்கள். வீட்டில் ஆபரணச் சேர்க்கையும் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குதலும் நடக்கும். தந்தைவழி உறவினர்களிடம் இருந்து உதவிகள் இருக்கும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை பெறுவார்கள். விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள், மாணவர்கள் போன்றவருக்கும் நல்ல பலன்கள் உண்டு. தாய்வழி உறவினர்களால் சங்கடங்கள் உண்டு. சிலருக்கு பெண்களால் பிரச்சினைகள் இருக்கும். வருமானத்தை விட அதிக செலவு வரும். எதிலும் சிக்கனமாக இருங்கள்.

அஸ்தம்:

அஸ்தத்திற்கு இந்த மாதம் ஆனந்தம்தான். நல்ல பணவரவு உண்டு. குறிப்பாக எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் இருப்பவர்கள் மிகுந்த முன்னேற்றம் அடைவீர்கள். குழந்தைப்பேறு தள்ளிப் போன தம்பதிகளுக்கு இப்போது குழந்தை பாக்கியம் உண்டு. முப்பது வயதைக் கடந்தும் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் உறுதியாகும். பூப்புனித நீராட்டு விழா, வளைகாப்பு போன்ற வைபவங்கள் இல்லத்தில் உண்டு. சிலருக்கு தாயைப் பற்றிய கவலைகள் வரும். வயதான தாயை கொண்டவர்கள் அவருடைய ஆரோக்கியத்தில் அக்கறை வைக்க வேண்டும். வழக்குகள் சாதகமாக திரும்பும்.

சித்திரை:

இந்த மாதம் நல்ல வருமானங்களும், லட்சியங்கள் நிறைவேறுதலும், திருமணம், குழந்தை பிறப்பு, வீடு வாங்குதல் போன்ற சுபநிகழ்ச்சிகளும் நடைபெறும். சிலருக்கு வீடுமாற்றம் அல்லது தொழில் இடமாற்றம் போன்றவைகள் நடக்கும். நல்லவேலை கிடைக்காமல் சோர்ந்து போயிருந்தவர்களுக்கு மனதுக்கு பிடித்த வகையில் வேலை கிடைக்கும். பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள், ஊடகம் பத்திரிக்கை போன்ற துறையில் இருப்பவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது நல்ல மாதம். இதுவரை உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் கிடைக்கப் பெறுவார்கள். குழந்தைகள் வழியில் செலவு உண்டு.

சுவாதி:

மாத ஆரம்பத்தில் சிறிது சுணக்கமான பலன்கள் இருந்தாலும் நடுப்பகுதியில் இருந்து நல்ல பலன்கள் நடக்கத் துவங்கி தொழில், வேலை, வியாபாரம் போன்றவைகள் முன்னேற்றமாக இருக்கும். நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விஷயம் சட்டென்று முடிவுக்கு வரும். ஏழரைச்சனி முடியப் போவதால் தொல்லை கொடுத்த அனைத்துப் பிரச்னைகளும் தீரப் போகின்றன. புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். புதிய அறிமுகங்கள் கிடைக்கும். ஒரு சிலர் தங்கள் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை சந்திப்பார்கள். உங்களைப் புரிந்து கொள்ளாமல் விலகி இருந்தவர்கள் தற்போது பக்கத்தில் வருவார்கள்.

விசாகம்:

உங்களில் கணிதம், சாப்ட்வேர் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு இந்த மாதம் ஏதேனும் பரிசு அல்லது விருது கிடைக்கும். நீண்ட நாட்களாக வீடு கட்ட வேண்டும் அல்லது வீடு வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தவர்களுக்கு வீட்டுக்கனவு நனவாகும். பெரும்பாலானவர்கள் லோன் போட்டுத்தான் வீடு கட்டவோ வாங்கவோ செய்வீர்கள். பேசும் பொழுது வார்த்தைகளில் கவனமாக இருங்கள். எதிர்பார்க்கும் இடத்தில் இருந்து பணம் கிடைப்பதில் தடைகள் இருக்கலாம். சிலருக்கு கடன் வாங்க வேண்டிய நெருக்கடிகள் இருக்கும். சொல்லும் தேதியில் பணம் தரமுடியாமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது

அனுஷம்:

அனுஷத்திற்கு இனிமேல் எதிலும் கெடுதல்கள் இல்லை. ஜென்மச் சனி முடியப் போவதால் இனிமேல் எல்லா விஷயத்திலும் நன்மைதான். இதுவரை முயற்சி செய்தும் நடைபெறாத பல விஷயங்கள் இனிமேல் தெய்வத்தின் அருளால் முயற்சி இல்லாமலேயே வெற்றி பெறப் போகின்றன. இதுவரை விழிப்புடனும், மனக் கட்டுப்பாடுடனும் இருந்ததன் மூலம் கஷ்டமான ஏழரைச்சனி காலத்தை சமாளித்து வருகிறீர்கள். கஷ்டங்கள் இன்னும் சில வாரங்கள்தான். அதன்பிறகு திகட்ட திகட்ட சந்தோஷம்தான். இளைய பருவத்தினருக்கு இதுவரை இழுத்தடித்த அனைத்தும் கிடைக்கும். அனுஷம் இனி ஆனந்தப்படும்.

கேட்டை:

அனைத்திலும் எதிர்மறை பலன்களை சந்தித்து குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். கவலை வேண்டாம். இந்த நிலை இன்னும் சிறிது நாட்கள்தான். சனி அடுத்த மாதம் உங்கள் நட்சத்திரத்திலிருந்து வெளியேறப் போகிறார். அதன்பிறகு கேட்டைக்கு எந்தக் கெடுதலும் உறுதியாக நடக்காது. சிலருக்கு வெளிநாட்டுப் பயணம் அமையும். அதிகாரம் செய்யும் துறைகளில் இருப்போருக்கு சாதக பலன்கள் உண்டு. யூனிபாரம் அணிந்து வேலை செய்யும் துறையினருக்கு கடும் வேலை நெருக்கடியிலும் சில நல்ல பலன்கள் நடக்கும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து பேசி வாழ்க்கைச் சிக்கல்களை தீர்க்க முயற்சிப்பீர்கள்.

மூலம்:

உங்களுடைய கள்ளங் கபடமற்ற பேச்சால் இந்தமாதம் தேவையற்ற விரோதங்கள் வரலாம். எவரையும் நம்பி மனதில் உள்ளதை வெளிப்படையாக பேச வேண்டாம். அலுவலகங்களில் பொறுப்பில் இருப்பவர்கள் உங்களின் மேலதிகாரிகளுக்கு தெரியாமல், அவர்களின் எழுத்துப்பூர்வமான அனுமதி இல்லாமல் எதுவும் செய்யாதீர்கள். பின்னால் தொந்தரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. வேலையில் மாற்றம் ஏற்படும் காலம்தான் இது என்றாலும் தேவையில்லாமல் வேலையை விட வேண்டாம். அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. முன் எச்சரிக்கை தேவைப்படும் மாதம் இது.

பூராடம்:

ரேஸ் லாட்டரி பங்குச்சந்தை சூதாட்டம் போன்றவைகள் இப்போது கை கொடுக்காது. சிறிது லாபம் வருவது போல் ஆசைகாட்டி பிறகு மொத்தமாக இருப்பதையும் இழக்க வைக்கும் என்பதால் மேற்கண்ட இனங்களில் கவனமுடன் இருக்கவும். தாயாரின் நன்மைகளுக்காக வரும் வருமானத்தில் செலவுகள் செய்வீர்கள். தாயாருக்காக ஏதேனும் வாங்கிக் கொடுப்பீர்கள். வரும் வருமானத்தை எதிர்காலத்திற்காக சேமிக்க முயற்சி செய்யுங்கள். கடனை அடைப்பதற்கான வழிகள் தெரியும். கடன் தீர்ந்தே ஆகவேண்டும் என்பதால் வருமானமும் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

உத்திராடம்:

பணம் சம்பாதிப்பதில் இந்த மாதம் உங்களுக்கு நல்ல மாதமாக இருக்கும். புனிதத்தலங்கள் அனைத்திற்கும் செல்லும் பாக்கியம் கிடைக்கும். வேலையில் பாராட்டப் படுவீர்கள். பொருத்தமான வேலை தேடிக் கொண்டிருந்த இளைய பருவத்தினருக்கு அவர்கள் தகுதிகேற்ற வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு இதுவரை வேலையில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். தொழில் வியாபார அமைப்புக்கள் சிறப்பாக நடைபெறும். கலைத்துறையிலும் பெண்கள் தொடர்பான துறைகளிலும், அழகு, ஆடம்பரம் அலங்காரம் போன்ற துறைகளிலும் இருப்பவர்களுக்கு மிக விசேஷமான நல்ல பலன்கள் நடக்கும்.

திருவோணம்:

அலுவலகங்களிலும், தொழில் அமைப்புகளிலும் எதிர்ப்புகள் அகலும். போட்டியாளர்கள் விலகுவார்கள். மேலதிகாரிகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீரும். கடன் பிரச்னைகளிலும் வழக்கு விவகாரங்களிலும் சிக்கித் தவித்து தூக்கத்தை இழந்திருந்தவர்களுக்கு அவைகள் நல்லபடியாக ஒரு முடிவுக்கு வந்து நிம்மதியைத் தரும். இதுவரை காணாமல் போயிருந்த உங்களின் விடாமுயற்சியும் தைரியமும் மீண்டும் உங்களிடம் தலையெடுத்து அனைத்து பிரச்னைகளையும் நீங்கள் தனியொருவராகவே சமாளித்து தீர்க்கப் போகிறீர்கள். திருவோணம் நட்சத்திரக் காரர்களுக்கு நல்ல மாதம் இது.

அவிட்டம்:

வேலையில் நிம்மதியற்ற நிலைமையையும், தொந்தரவுகளையும் சந்தித்தவர்கள் அது நீங்கி அலுவலகங்களில் நிம்மதியான சூழல் அமையப் பெறுவீர்கள். நமது பாரம்பரியம் பண்பாடு சம்பந்தப்பட்ட கலைகளை கற்றுத் தருபவர்கள், சட்ட வல்லுனர்கள், பணம் புரளும் துறைகளான வங்கி சிட்பண்ட் சம்பந்தப்பட்ட அனைத்து அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கும் இந்த மாதம் நன்மைகளைத் தரும். வேறு இன மொழி மதக்காரர்கள் நேசமாக இருப்பார்கள். வெளி மாநிலத்தவர்கள் நண்பர்களாகக் கிடைப்பார்கள். அவர்களால் நன்மைகள் உண்டாகும். தூரத்தில் பணியிடம் அமையும். பிரயாணங்களால் உற்சாகமாக இருப்பீர்கள்.

சதயம்:

மாதத்தின் பிற்பகுதியில் மிகவும் நல்ல பலன்கள் நடக்கும். பண வரவிற்கு குறை இருக்காது. எதையும் சமாளித்து விடுவீர்கள். தாமதித்து வந்த வேலைவாய்ப்புக்கள் நல்லபடியாக கிடைக்கும். பணியில் இருப்போருக்கு இருக்கும் சிக்கல்கள் தீரும். வியாபாரிகளுக்கு கொடுத்த கடன் சிக்கல் இல்லாமல் திரும்பி வரும். கடன் தொல்லை எல்லை மீறாது. சிலருக்கு உஷ்ணம் சம்பந்தமான பிரச்னைகள் இருக்கும். ஆன்மீக எண்ணங்கள் தூக்கலாக இருக்கும். கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வாக்குவாதங்களை தவிருங்கள். உறவினர்களிடம் கருத்து வேறுபாடு இருக்கும்.

பூரட்டாதி:

பூரட்டாதிக்கு பூரிப்புத் தரும் மாதம் இது. உங்களை விரோதியாக நினைத்தவர்கள் மனம் மாறி நட்பு பாராட்டுவார்கள். அரசு ஊழியர்களுக்கு தடைப்பட்டுக் கொண்டிருந்த பதவிஉயர்வு, சம்பளஉயர்வு உண்டு. பொருத்தமில்லாத வேலையில் இஷ்டமில்லாமல் இருந்த இளைஞர்களுக்கு உடனடியாக மாற்றங்கள் உருவாகி நினைத்த மாதிரியான வேலை கிடைக்கும். இதுவரை வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் இளைய பருவத்தினர் மனதிற்கு பிடித்தமான விரும்பிய வேலை கிடைக்கப் பெறுவீர்கள். கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். இதுவரை இருந்து வந்த அனைத்து தடைகளும் விலகும்.

உத்திராட்டாதி:

கையில் இருந்த சேமிப்பு கரையும் மாதமாக இது இருக்கும். அதேநேரத்தில் வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களில்தான் செலவுகள் இருக்கும். எதிர்கால நல்வாழ்விற்கு தேவையான அடிப்படைக் கட்டமைப்புக்கள் இப்போது நடக்கும். கடன் தொல்லையில் அவதிப் பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும். உங்கள் செயல்கள் அனைத்திலும் பதற்றமும், படபடப்பும் காணப்பட்டாலும் மனோதைரியம் கூடுதலாகும். சிலருக்கு சூதாட்டம், பங்குச் சந்தை, லாட்டரி போன்றவைகளில் திடீர் ஆர்வம் வரும். அதனால் லாபங்கள் இருக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும்.

ரேவதி:

ரேவதியினர் இந்தமாதம் நன்மைகளை அடைவீர்கள். அரசுத் துறையினருக்கு இருந்து வந்த பிரச்னைகள் விலகும். சகோதர சகோதரிகளின் விஷயங்களில் நல்ல சம்பவங்களும் ஒருவருக்கொருவர் ஆதரவான நிகழ்வுகளும் இருக்கும். கலைத்துறையினர் நல்ல திருப்பங்களைக் காண்பீர்கள். வெளிநாட்டு தொடர்பால் நன்மைகள் உண்டு. வெளிநாடு போகவும் வாய்ப்பு இருக்கிறது. வேற்று மதத்தினர் உதவுவார்கள். தந்தைவழி உறவில் மிகவும் நல்ல பலன்கள் இருக்கும். மூத்த அண்ணன், அக்காக்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். இதுவரை நல்லவேலை கிடைக்காத இளையவர்களுக்கு இந்தமாதம் அந்தக்குறை நீங்கும்.

No comments :

Post a Comment