Tuesday, September 5, 2017

2017 GURU PEYARCHI Natchathira Palangal - 2017 குருப்பெயர்ச்சி நட்சத்திரப் பலன்கள்

அசுவினி:

அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு குருப்பெயர்ச்சியும், அடுத்து வர இருக்கும் சனிப் பெயர்ச்சியும் மிகவும் நல்ல பலன்களைத் தரும். இந்த வருடம் நல்ல பணவரவு இருக்கும். நீண்டநாள் கனவு நனவாகும். உங்கள் மனது போலவே எல்லா நிகழ்ச்சிகளும் நடக்கும் வெளிநாட்டு தொடர்பால் நன்மை அடைவீர்கள். வெளிநாடு போகவும் வாய்ப்பு இருக்கிறது. வேற்று மதத்தினர் உதவுவார்கள். தந்தைவழி உறவில் நல்ல பலன்கள் இருக்கும். கணிதம் சாப்ட்வேர் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு ஏதேனும் பரிசு அல்லது விருது கிடைக்கும். பூமி லாபம் கிடைக்கும். வீடு, காலிமனை வாங்க முடியும்.

பரணி:

பரணிக்கு இந்தக் குருப் பெயர்ச்சி நல்ல வாய்ப்புகளைத் தரும். தாமதித்து வந்த பதவிஉயர்வு கூடுதல் சம்பளத்துடன் இருக்கும். சிலருக்கு கம்பெனி சார்பில் வெளிநாடு பயணங்கள் இருக்கும். இளைய பருவத்தினருக்கு இதுவரை இழுத்தடித்த வேலை கிடைக்கும். தாயார் வழியில் நன்மைகளும், அம்மாவின் ஆசிர்வாதங்களும் உண்டு. குறிப்பிட்ட சிலருக்கு தாய்வழி சீதனம் போன்று ஏதேனும் கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. யாருக்காவது பரிதாபப்பட்டு உதவி செய்து அதனால் நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் அமைப்பு இருப்பதால் யாருக்கும் எதற்காகவும் ஜாமீன் போட வேண்டாம்.

கிருத்திகை:

கிருத்திகை நட்சத்திரத்தைச் சேர்ந்த பெண்களுக்கு அதிக நன்மை தரும் குருப்பெயர்ச்சி இது. எதிர்காலத்தில் நீங்கள் வளமான வாழ்க்கை வாழக்கூடிய அமைப்புக்கு அஸ்திவாரம் இப்போது அமையும். புதிய அறிமுகங்கள் இப்போது உண்டு. அதனால் நன்மைகளும் உண்டு. சிலருக்கு தந்தைவழி உறவினர்களால் லாபம் கிடைக்கும். அப்பாவின் ஆசிர்வாதத்தால் சில நன்மைகளைப் பெறுவீர்கள். சொத்தில் வில்லங்கம் இருந்தவர்களுக்கு தீர்வு கிடைக்கும். வழக்குகள் இனிமேல் உங்களுக்கு சாதகமாக திரும்பும். சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்யும்படி இருக்கும். சகோதரிகளால் செலவு உண்டு.

ரோஹிணி:

ரோகிணிக்கு வேலையில் மாற்றம் ஏற்படும் காலம் இது. இளைஞர்கள் மேலதிகாரிகளிடம் அனுசரித்துப் போவது நல்லது. தேவையில்லாமல் வேலையை விட வேண்டாம். வேலை விஷயம் அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. உங்களில் அதிகாரம் செய்யும் துறைகளில் இருப்போருக்கு நல்ல பலன்கள் உண்டு. எதிர்கால முன்னேற்றத்திற்கான திருப்புமுனைகள் இப்போது இருக்கும். யாருக்கும் எதுவும் செய்து தருவதாக வாக்குறுதி கொடுக்க வேண்டாம். செய்தாலும் ஒன்றுமே செய்யவில்லை என்று உதவி பெற்றவர்கள் சொல்வார்கள்.

மிருகசீரிடம்:

உங்களில் ரிஷப ராசிக்காரர்கள் யூகவணிகம், பங்குச்சந்தை, ரேஸ், லாட்டரி போன்றவைகளில் அதிகமாக ஈடுபாடு காட்டாமல் இருப்பது நல்லது. மேற்படி இனங்களில் வருமானம் வராமல் விரயங்களும் நஷ்டங்களும்தான் இருக்கும். அதேநேரம் மிதுன ராசியினருக்கு லாபங்கள் இருக்கும். ஒரு சிலர் தொழில் சம்பந்தமாக கடல் தாண்டி வெளிநாடு செல்வீர்கள். குறிப்பாக ஆன்மிகம் சம்பந்தப்பட்டவர்களுக்கு வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் ஏற்படும். வெளிநாடு சம்பந்தமான முயற்சிகள் வெற்றியாகும். வெகுநாட்களாக எதிர்பார்க்கும் குடியுரிமை கிடைக்கும். இருக்கும் நாட்டில் சுமுக நிலை இருக்கும்.

திருவாதிரை:

உங்களின் அனைத்துத் திறமைகளையும் மற்றவர்கள் அடையாளம் கண்டு கொள்ளும் நேரம் இது. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் எனும் பழமொழி இப்போது உங்களுக்குப் பொருந்தும். தோல்விகள் அனைத்தும் வெற்றியின் படிக்கட்டுகளாக மாறும் என்பதால் உற்சாகத்துடன் செயலாற்றுவீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், தனது அறிவையும் புத்திசாலித்தனத்தையும் முதலீடாக வைத்து சுயதொழில் செய்பவர்கள் அனைவருக்கும் இது முன்னேற்றமான காலம். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். நீண்டகால லட்சியங்களை இப்போது நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

புனர்பூசம்:

இந்தக் குருப்பெயர்ச்சி உங்களுக்கு நல்ல பலன்களைக் கொடுக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும். எதிர்கால நல்வாழ்விற்கு சேமிப்பது நல்லது. வீண் செலவுகளை முடிந்தவரை குறைத்துக் கொண்டால் வளமான வாழ்க்கை உண்டு. சிலருக்கு காசி, கயா, ரிஷிகேஷ் போன்ற வடமாநில தீர்த்த யாத்திரைகளும் ஆன்மிக சுற்றுலாக்களும் உண்டாகும். தெய்வ தரிசனம் கிடைக்கும். பணப் பிரச்னைகள் தீரும். கடன் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. உங்களில் கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்டவர்கள் டிரெயினிங்கிற்காக வெளிநாடு போவீர்கள். நான்கு பேர் மத்தியில் அந்தஸ்துடன் நடத்தப்படுவீர்கள்.

பூசம்:

இந்தப் பெயர்ச்சியின் மூலம் குருபகவான் தொழில், வேலை, வியாபாரம் போன்றவைகளில் மாற்றத்தை ஏற்படுத்தித் தருவார். என்றைக்கோ ஒருநாள் பிரதிபலன் பாராமல் நீங்கள் ஒருவருக்கு செய்த உதவியால் அவர் மூலமாக இப்போது நல்ல பலன்கள் கிடைக்கும். ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு அதிகமாகும். மகான்களின் கருணைப் பார்வை உங்கள் மீது விழும். வருமானம் மிகவும் நன்றாக இருக்கும். வீடு வாங்குவதற்கு இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கி கட்டிய வீடோ அல்லது காலிமனையோ, குறைந்தபட்சம் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பிளாட்டோ வாங்குவீர்கள்.

ஆயில்யம்:

உங்களில் பொதுவாழ்க்கையில் உள்ளவர்களுக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். சிலருக்கு புதிய வேலை மாற்றங்களும், பன்னாட்டு கம்பெனியில் பணிபுரியும் வாய்ப்பும் கிடைக்கும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு திருப்புமுனையான நல்ல சம்பவங்கள் நடக்க இருக்கிறது. தொழிலை விரிவு படுத்தும் எண்ணங்கள் ஈடேறும் உங்களின் மதிப்பு, மரியாதை, கௌரவம் ஆகியவை மிகவும் நன்றாக இருக்கும். நேரடி எதிரிகள் உங்களைக் கண்டாலே ஒளியும்படி இருக்கும். மறைமுக எதிரிகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. குறிப்பிட்ட சிலர் புகழ் பெறுவதற்கான அமைப்பு இருக்கிறது.

மகம்:

உங்களின் தொழில்ரீதியிலான பிரச்னைகள் அனைத்தும் இந்தக் குருப் பெயர்ச்சியின் மூலம் தீரும். பணவரவு சரளமாக இருக்கும். நீண்டகால லட்சியங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும். பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பணியில் இருக்கும் அரசியல்வாதிகள் போன்றவர்களுக்கு மதிப்பு வாய்ந்த பதவி, அல்லது அதிகாரம் தரும் பதவி மற்றும் அந்தஸ்து உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதி போன்றவைகளிலும், திரவம் சம்பந்தப்பட்ட தொழில் வகைகளிலும் இருப்பவர்களுக்கு நல்ல வருமானம் இருக்கும். சினிமா, தொலைக்காட்சி போன்ற துறைகளில் இருப்போர் இந்த சாதகமான நேரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பூரம்:

உங்களுக்கு நற்பலன்களும் லாபங்களும் இந்தக் குருப்பெயர்ச்சியால் உண்டு. மிகுந்த நன்மைகளை இப்போது பெறுவீர்கள். எல்லாவற்றிற்கும் அடுத்தவர்களை எதிர்பார்த்திருந்த நிலைமை மாறி இப்போது நீங்கள் மற்றவர்களுக்கு உதவுவீர்கள். வியாபாரம் நல்லபடியாக நடக்கும். போட்டியாளர்களால் தொந்தரவு இருக்காது. கடன் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும். விவசாயிகளுக்கு இம்முறை இயற்கை ஒத்துழைக்கும். இளைஞர்களில் ஒரு சிலர் வெளிநாட்டில் வேலை செய்யப் போக வேண்டியிருக்கும். வெரிபிகேசன் துறை, தபால் மற்றும் கூரியர் துறையில் இருப்பவர்கள் நல்ல பலன்களை பெறுவீர்கள்.

உத்திரம்:

உங்களில் அரசுத் துறையினருக்கு அனைத்துப் பிரச்னைகளும் விலகி நிம்மதி இருக்கும். சகோதர சகோதரிகளின் விஷயங்களில் நல்ல சம்பவங்களும் ஒருவருக்கொருவர் ஆதரவான நிகழ்வுகளும் இருக்கும். அடுத்தவர்களை எதிர்பார்த்திருந்த நிலைமை மாறி நீங்கள் மற்றவர்களுக்கு உதவுவீர்கள். இதுவரை உங்களைப் புரிந்து கொள்ளாமல் விலகி இருந்தவர்கள் உங்களைப் புரிந்து கொண்டு பக்கத்தில் வருவார்கள். ஆசிரியர் பணி, மார்கெட்டிங், விற்பனைப் பிரிவில் உள்ளவர்கள், ஆலோசனை சொல்பவர்கள், ஊராட்சி நகராட்சி மாநகராட்சி சம்பந்தப்பட்டவர்கள் நல்ல பலன்களை பெறுவீர்கள்.

அஸ்தம்:

இந்தக் குருப்பெயர்ச்சியின் மூலம் வாழ்க்கை முன்னேற்றப் பாதையில் செல்லத் துவங்கும். வேலையில் நிம்மதியற்ற நிலைமையையும், தொந்தரவுகளையும் சந்தித்தவர்கள் அது நீங்கி அலுவலகங்களில் நிம்மதியான சூழல் அமையப் பெறுவீர்கள். மனைவிக்கு நகை வாங்கித் தருவீர்கள். உங்களில் கலைத் துறையினர் இதுவரை இல்லாத நல்ல திருப்பங்களைக் காண்பீர்கள். நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விஷயம் சட்டென்று முடிவுக்கு வந்து ஒரு தொகை கைக்கு கிடைக்கும். தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், தந்தையின் தொழிலைச் செய்பவர்கள் லாபம் அடைவீர்கள்.

சித்திரை:

சித்திரைக்கு அதிர்ஷ்டம் தரும் குருப்பெயர்ச்சி இது. தொழில் அதிபர்கள், உயரதிகாரிகள், அரசியல்வாதிகள், கலைஞர்கள் உள்ளிட்ட எல்லாத் துறையினருக்கும் இது மிகவும் நல்ல நேரம். எந்தக் காரியமும் அதிக முயற்சி இல்லாமலேயே வெற்றி பெறும். வெளியிடங்களில் மதிப்பு, மரியாதை கௌரவம் நல்லபடியாக இருக்கும். சிலருக்கு வெளிநாட்டுப் பயணம் அமையும். உங்களில் கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல பலன்கள் உண்டு. ஊர் மெச்சும்படி மகன் மகளுக்கு சுப விஷயங்களை நடத்துவீர்கள். வெளி மாநிலத்தவர்கள் இந்த வருடம் நண்பர்களாகக் கிடைப்பார்கள். அவர்களால் நன்மைகள் உண்டாகும்.

சுவாதி:

இந்தக் குருப்பெயர்ச்சியின் மூலம் மேன்மையான பலன்கள் உங்களுக்கு உண்டு. கலைத் துறையிலும், பெண்கள் தொடர்பான துறைகளிலும், அழகு, ஆடம்பரம் சொகுசுவாகனம் அலங்காரம் போன்ற துறைகளிலும் இருப்பவர்களுக்கு சுப பலன்கள் நடக்கும். அதிகாரம் செய்யும் துறைகளில் இருப்போருக்கும் நல்ல பலன்கள் உண்டு. நீண்டதூரப் பயணங்களால் லாபங்கள் இருக்கும். உங்களை எதிர்த்துக் கொண்டிருந்தவர்கள் உங்களைப் பார்த்து பயப்படும்படி நிலைமை மாறும். சிலருக்கு வேலை மாற்றங்களும், பன்னாட்டு கம்பெனியில் பணிபுரியும் வாய்ப்பும் கிடைக்கும். டிரெயினிங்கிற்காக வெளிநாடு போவீர்கள்.

விசாகம்:

உங்களில் ஆன்மிகம் சம்பந்தப்பட்ட துறையினர் இந்தக் குருப்பெயர்ச்சியின் மூலம் சிறப்படைவார்கள். உங்களில் துலாம் ராசியினர் விடாமுயற்சி மற்றும் தைரியத்தால் அனைத்து பிரச்னைகளையும் தனியொருவராகவே சமாளித்து தீர்க்கப் போகிறீர்கள். தொழிலதிபர்களுக்கு அரசு உதவி கிடைக்கும். தொழிலாளர்கள் ஆதரவாக இருந்து உற்பத்தியை பெருக்கித் தருவார்கள். மகன் மகள்களால் இருந்து வந்த சங்கடங்கள் விலகி அவர்களால் இனிமேல் சந்தோஷம் இருக்கும். அவர்களுக்குத் தேவையான விஷயங்களை தாமதம் இன்றி இனிமேல் செய்து கொடுக்க முடியும். எதிர்பாராத தனலாபங்கள் இருக்கும்.

அனுஷம்:

ஜென்மச்சனி இன்னும் சில வாரங்களில் முடியப் போவதால் அனுஷத்திற்கு அனைத்துப் பிரச்னைகளில் இருந்தும் விடுதலை உண்டு. இனிமேல் நன்றாக இருக்கப் போகிறீர்கள். அதிகாரம் செய்யும் துறைகளில் இருப்போருக்கு இந்தக் குருப்பெயர்ச்சி நல்ல மாற்றங்களைத் தரும். கடன் பிரச்னைகளிலும் வழக்கு விவகாரங்களிலும் சிக்கித் தவித்து தூக்கத்தை இழந்திருந்தவர்களுக்கு அவைகள் நல்லபடியாக ஒரு முடிவுக்கு வந்து நிம்மதியைத் தரும். காணாமல் போயிருந்த உங்களின் விடாமுயற்சியும், தைரியமும் மீண்டும் உங்களிடம் தலையெடுக்கும். ஒரு பிரச்னையும் இல்லை உங்களுக்கு. எதையும் சாதிப்பீர்கள்.

கேட்டை:

இந்தக் குருப்பெயர்ச்சியின் ஆரம்பத்தில் சிறிது சுணக்கமான பலன்கள் இருந்தாலும் ஜென்மச் சனி விலகப் போவதால் இனி நல்ல பலன்கள் நடக்கத் துவங்கி படிப்படியாக உங்களின் தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புக்கள் முன்னேற்றமாக இருக்கும். குறைகள் எதுவும் இனி இருக்காது. தாயார் வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதுவரை தாமதித்து வந்த வேலைவாய்ப்புக்கள் இனிமேல் நல்லபடியாக கிடைக்கும். பணியில் இருப்போருக்கு இருந்து வரும் சிக்கல்கள் தீரத் தொடங்கும். கேட்டைக்கு இனி கேடு எதுவும் இல்லை.

மூலம்:

உங்களில் முப்பது வயதைக் கடந்தும் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் உறுதியாகும். பூப்புனித நீராட்டு விழா, வளைகாப்பு போன்ற பெண்களின் வைபவங்கள் இல்லத்தில் உண்டு. சம்பள உயர்வு, இதரபடிகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்வோர் சோம்பலை உதறித் தள்ளி சுறுசுறுப்பாக காரியம் ஆற்ற வேண்டியது அவசியம். பணத்திற்கு பஞ்சம் இருக்காது. கொடுக்கும் வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். வாக்கு பலிக்கும். கற்றுத் தருபவர்கள், நீதித்துறை, சட்டம், வங்கி சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இந்த மாதம் மிகுந்த நன்மைகளைத் தரும்.

பூராடம்:

இந்த குருப்பெயர்ச்சியின் மூலம் தொல்லை கொடுத்த அனைத்துப் பிரச்னைகளும் தீரப்போகின்றன. புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். புதிய அறிமுகங்கள் கிடைக்கும். இளைய பருவத்தினரில் ஒரு சிலர் தங்கள் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை சந்திப்பீர்கள். ரேஸ், லாட்டரி பங்குச்சந்தை சூதாட்டம் போன்றவைகள் இப்போது கை கொடுக்காது. ஆசைகாட்டி மோசம் செய்யும் என்பதால் மேற்கண்ட இனங்களில் கவனமுடன் இருக்கவும். குருபகவான் ராசிக்குப் பதினொன்றில் இருப்பதால் பணவரவு திருப்தியாக இருக்கும். நீண்ட நாள் கனவு ஒன்று இப்போது நனவாகும். உங்கள் மனது போலவே எல்லா நிகழ்ச்சிகளும் நடக்கும்.

உத்திராடம்:

உங்களில் வீடு கட்டிக் கொடுக்கும் புரமோட்டர்கள், செம்மண் பூமி, ஆறு, மலைப்பாங்கான இடங்களில் தொழில் வைத்திருப்பவர்கள் இந்தக் குருப்பெயர்ச்சியின் மூலம் மேன்மைகளை அடைவீர்கள். தொழில், வியாபாரம் போன்றவைகள் விறுவிறுப்புடன் நடக்கும். கடன் தொல்லைகளால் அவதிப்பட்டவர்களுக்கு பிரச்னைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். சின்னத்திரைக் கலைஞர்கள் சிறப்பு பெறுவார்கள். சிலருக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டமாக ஒரு நல்ல பணவரவு உண்டு. குடும்பத்தில் எதிர்ப்புகள் விலகும்.

திருவோணம்:

திருவோணத்திற்கு எல்லா விஷயங்களிலும் தடைகள் ஏற்பட்டு சுலபமான விஷயங்கள் கூட கிணற்றில் போட்ட கல்லாக கிடக்கும். புதிதாக எது செய்வதாக இருந்தாலும் யோசித்து செய்யவும். இந்தக் குருப் பெயர்ச்சியின் மூலம் கெடுபலன்கள் எதுவும் நடக்காவிட்டாலும் ஏதேனும் தவறாக நடந்துவிடுமோ என்ற மனக்கலக்கம் இருக்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு வராமல் இருக்கக்கூடிய முயற்சிகளை தம்பதிகள் எடுத்துக் கொள்வது நல்லது. மனைவியின் பேச்சை கேட்பதனால் ஒன்றும் குறைந்து விடாது என்பதால் முக்கியமான விஷயங்களில் இருவரும் சேர்ந்து முடிவெடுப்பது நல்லது.

அவிட்டம்:

உங்களில் மகர ராசிக்கு இந்தக் குருப்பெயர்ச்சியால் மற்றவர்களுடன் ஒத்துப்போக முடியாத சூழ்நிலை இருக்கும். கும்பத்தினருக்கு மேன்மையான பலன்கள் உண்டு. ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். தாயார் வழி உறவினர்கள் உதவுவார்கள். உயர் கல்வி கற்க விரும்புபவருக்கு அதற்கான ஆரம்பங்கள் இருக்கும். கும்பத்தினருக்கு சொந்த வீடு அமையும். வெளிநாடு யோகம் உண்டு. அன்னிய இன, மத, மொழிக்காரர்கள் உதவுவார்கள். வாழ்க்கைத் துணையால் வரவுகளும் ஆதாயங்களும் இருக்கும்.

சதயம்:

சதயத்திற்கு சகலத்தையும் கொடுக்கும் குருப் பெயர்ச்சி இது. யூனிபாரம் அணிந்து வேலை செய்யும் துறைகளில் இருப்போருக்கு மிக நல்ல பலன்கள் இப்போது நடக்கும். பெண்களுக்கு அலுவலகத்திலும் வீட்டிலும் மதிப்புக் கூடும்படியான சம்பவங்கள் இருக்கும். தொழில், வேலை, வியாபாரம் போன்றவைகளில் நல்லவைகள் நடக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு சாதகமான மாற்றங்கள் இருக்கும். அரசு ஊழியர்களுக்கு இதர வருமானங்கள் சிறப்பாக இருக்கும். தனியார் துறையினருக்கு கூடுதல் வருமானம் உண்டு. முப்பது வயதுக்குட்பட்டவர்களுக்கு வேலை விஷயத்தில் நல்ல தகவல்கள் உண்டு.

பூரட்டாதி:

வெகுநாட்களுக்கு பிறகு பூரட்டாதி நட்சத்திரத்தைச் சேர்ந்த இளைய பருவத்தினருக்கு பொருளாதார நிலைமை மேம்படும். கையில் பணம் இல்லாமல் இருந்த நிலை மாறி பணம் வரும். செலவிற்கு அடுத்தவர் கையை நம்பியிருந்த நிலைமை மாறி சொந்தமாக சம்பாதிப்பீர்கள். மன அழுத்தத்திலிருந்தும் விடுபடுவீர்கள். திறமையை முதலீடாக வைத்து சம்பாதிப்பவர்களுக்கு நல்ல பணவரவு இருக்கும். வேலை நெருக்கடிகள் பணிச்சுமை போன்றவைகள் விலகும். அறிவால் எதையும் சாதிப்பீர்கள். மற்றவர்கள் பொறாமையாக பார்க்கும் அளவிற்கு ஊக்கத்துடன் செயல்படுவீர்கள்.

உத்திராட்டாதி:

உத்திராட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு இது எவ்விதமான பிரச்னைகளும் இல்லாத நல்ல குருப்பெயர்ச்சியாகத்தான் இருக்கும். சிலருக்கு வாழ்க்கைத் துணை மூலம் லாபங்களும் வரவுகளும் இருக்கும். எதிர்பார்க்கும் இடத்தில் இருந்து பணம் கிடைப்பதில் தடைகள் இருக்கலாம். சிலருக்கு கடன் வாங்க வேண்டிய நெருக்கடிகள் இருக்கும். கடன்காரர்களுக்கு சொல்லும் தேதியில் பணம் தர முடியாமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த வருடம் செலவுகளும், அலைச்சல்களும் இருக்கும். என்னதான் தடைகள் என்றாலும் பிரச்னைகளை சமாளிக்கும் தைரியம் உங்களுக்கு உண்டாகும். எதையும் சமாளிப்பீர்கள்.

ரேவதி:

உங்களில் சிலர் இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக வெளிநாடு செல்வீர்கள். பிறந்த நாட்டை விட்டு வேறு நாட்டில் இருப்பவர்களுக்கு நன்மைகள் உண்டு. சிலருக்கு வீடு விஷயமான கடன்கள் ஏற்படும். இளைய பருவத்தினருக்கு வேலை, திருமண விஷயங்களில் முக்கியமான திருப்புமுனைகள் இருக்கும். அதிகாரம் செய்யக்கூடிய பதவியில் இருப்பவர்களுக்கு இரண்டுங்கெட்டான் நிலை இருக்கும். சிலர் இரண்டு அதிகார மையத்துடன் போராடுவீர்கள். உங்களைப் புரிந்து கொள்ளாமல் சிலர் உங்களை விட்டு விலகுவார்கள். நம் பணம் இல்லையென்றாலும் ஏதாவது ஒருவகையில் பணம் பாக்கெட்டில் இருக்கும்.

No comments :

Post a Comment