Tuesday, July 26, 2016

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள் - 96 (26.7.2016)

ராமதாஸ், மதுரை.

கேள்வி :

சிறுவயதில் இருந்தே கஷ்டப்படுகிறேன். மிகுந்த ஆன்மீக ஈடுபாடு உள்ளவன். எப்படியோ 60 வயது ஆகிவிட்டது. ஒரு சிறிய ஓட்டல் வைத்து நடத்துகிறேன். பெரிய விருத்தி இல்லை. புதன்தசை சூரியபுக்தியில் தாயார் மரணம். ஒரு கோவில் கட்டினேன். வெளியிலும் என் இரண்டு பெண் பிள்ளைகளிடமும் கடன்பட்டிருக்கிறேன். இந்த கடன்களை அடைக்கமுடியுமா? குறிப்பாக பெண் பிள்ளைகளின் கடன் மனதை உறுத்துகிறது. எப்போது நிம்மதி பிறக்கும்?
பதில் :

தனுசுலக்னம், துலாம்ராசியாகி பத்தாமிடத்தில் நெருப்புக்கிரகமான சூரியன் அமர்ந்து, இன்னொரு நெருப்பான செவ்வாய் எட்டாம் பார்வையாக பத்தாமிடத்தைப் பார்ப்பதால் ஓட்டல் கடை வைத்திருக்கிறீர்கள். தசாநாதன் புதன் வக்ரமாக இருப்பதால் பெரிய நன்மைகளைச் செய்ய வாய்ப்பு இல்லை. ஆனாலும் தர்மகர்மாதிபதி யோகஅமைப்பில் சூரியனுடன் புதன் இணைந்திருப்பதால் திருக்கணிதப்படி வரும் புதன்தசை சூரியபுக்தியில் 2018-ல் அனைத்துக் கடன்களையும் அடைத்து நிம்மதியாக இருப்பீர்கள்.

தற்போது ஆறுக்குடைய சுக்கிரனின் புக்தி நடப்பதால் “கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்ற பழமொழிக்கேற்ப மனக்கலக்கத்தில் இருக்கிறீர்கள். ஆறாமிடத்தை செவ்வாயும், சனியும் பார்த்துக் கெடுத்து அங்கே கேதுவும் அமர்ந்திருப்பதால் உங்களுக்கு நிரந்தமாக கடன்தொல்லை இருக்க வாய்ப்பில்லை.

. சண்முகசுந்தரம், திருச்செங்கோடு.

கேள்வி :

இத்துடன் இணைத்துள்ள எனது 42 வயது ஆண்நண்பர், 38 வயது பெண் நண்பருக்கு இதுவரை ஏன் திருமணம் ஆகவில்லை? இவர்களின் ஜாதகம் பிரம்மசாப ஜாதகமா? நவக்கிரகக்கோவில்கள், திருச்செந்தூர், தென்குடி திட்டை, பட்டீஸ்வரம், சுசீந்திரம், ராமேஸ்வரம் என இவர்கள் போகாத கோவில்கள் இல்லை. இவர்களுக்கு எப்போது திருமணம் ஆகும்?

சந்
சூரி
செவ்
சனி
கேது
புத
குரு
ராசி
சுக்
ராகு
லக்
கேது
சூ,பு
குரு
ராசி
சுக்
லக்
செவ்,
சனி
சந்
ராகு

பதில்:

(ஆண் 23.3.1974, 10.55 இரவு, திருச்செங்கோடு, பெண் 19.6.1978, 10.08 இரவு, திருச்செங்கோடு)

பிரம்மசாபமாவது, விஷ்ணுசாபமாவது. இதெல்லாம் ஜோதிடத்தில் சொல்லப் படவில்லை. ஒரு ஜாதகத்தில் ஏன் திருமணம் ஆகவில்லை என்பதை உணர முடியவில்லை என்றால் எதையாவது சொல்லி விடுவதா? இதுபோன்ற தோஷ அமைப்புகளை விளக்கித்தான் மாலைமலர் கட்டுரைகளிலும், டி.வி. நிகழ்ச்சிகளிலும் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

ஆண்நண்பரின் ஜாதகத்தில் விருச்சிக லக்னமாகி, ஏழில் செவ்வாய், எட்டில் சனி, கேது, மற்றும் இரண்டில் ராகு என்ற அமைப்பாகி குடும்ப பாவமும், மனைவி பாவமும், புத்திரபாவமும் வலுவிழந்ததால் இதுவரை திருமணம் ஆகவில்லை. பெண்நண்பருக்கும் மகரலக்னமாகி எட்டில் செவ்வாய், சனி இணைந்த நிலையில் ஏழாமிடத்தில் தனித்து சுக்கிரன் அமர்ந்து களத்திரதோஷம் உண்டானதால் இதுவரை திருமணம் ஆகவில்லை. பெண்ணிற்கு விருச்சிக ராசியாகி ஏழரைச்சனி நடப்பதும் தடங்கல்தான்.

இவர்கள் இருவரும் சென்றதாகச் சொல்லும் கோவில்களும், பரிகாரங்களும் பொதுவானவைதான். இவைகள் முறையான பரிகாரங்கள் இல்லை. ஆனால் இருவருக்குமே திருமணபாக்கியத்தைக் கொடுக்கும் சுக்கிரதசை நடப்பதால் முறையான பரிகாரங்களைச் செய்ய பரம்பொருள் அனுமதிக்கும் பட்சத்தில் நிச்சயம் திருமணம் ஆகும்.

திருமணம் எத்தனை நாட்களில் ஆகும்?

எஸ். அண்ணாதுரை, மொடச்சூர்.

கேள்வி :

முதலில் ஒருமுறை அனுப்பினேன். ஆறுமாதமாகப் பதில் இல்லை. இந்த முறையும் அனுப்புகிறேன். பதில் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். திருமணம் எத்தனை நாட்களில் ஆகும்?

லக்,
சந்
ராசி
செவ்
சுக்,
சனி
சூ,பு
ராகு
குரு

பதில்:

(மிதுனலக்னம், மிதுனராசி. இரண்டில் செவ். நான்கில் குரு. ஆறில் சூரி, புத, ராகு. எட்டில் சுக், சனி. 11.12.1992, 6.40 மாலை, கோபி)

அப்படி என்னப்பா அவசரம். எத்தனை நாட்களில் ஆகும் என்று கேட்கும் அளவிற்கு..? வீட்டில் சமைப்பதற்கு ஆள் இல்லையா..? உனக்கு இரண்டில் செவ்வாய், எட்டில் சனி என்கின்ற அமைப்பாகி லக்னாதிபதி புதன் ராகுவுடன் இணைந்து ஆறில் மறைந்துள்ளதால் 2019 பிற்பகுதியில் நடக்க இருக்கும் சனிதசை கேதுபுக்தியில்தான் திருமண அமைப்பு வருகிறது. சுக்கிரன் ராசியில் சனியுடன் இணைந்து நவாம்சத்தில் ராகுவுடன் இணைவதால் உனக்குத் தாமத திருமணம்தான் நல்லது. திருமண விஷயத்தில் அவசரப்பட வேண்டாம்.

ஒரு வாசகர், திருநெல்வேலி.

கேள்வி : 

எனக்கு காலதாமதமாக ஜாதகம் பார்க்காமலேயே தூரத்து உறவில் திருமணம் நடந்தது. மகனுடன் மனைவி பத்துமாதங்களுக்கு முன் பிரிந்து விட்டார். பலமுறை அழைத்தும் வாழ மறுத்து வயது வித்தியாசத்தை காரணம் காட்டி விவாகரத்து வழக்குத் தொடர்ந்துள்ளார். மனைவி, மகனுடன் சேர்ந்து வாழ்வேனா? அவருக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெறுகிறது. விவாகரத்திற்கு ஒப்புக்கொண்டால் என் மகனையாவது என்னிடம் தருவாரா? மனைவிக்கு எட்டில் செவ்வாய், சனி இருப்பதால் ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? மகனின் புகைப்படத்தை பார்த்தும் அவன் வயதில் உள்ள குழந்தைகளைக் கண்டும் அடிக்கடி கண்ணீர் வருகிறது. குருஜி அவர்கள் நல்ல பதில் கூறவும்.

பதில்:

உங்களுக்கு விருச்சிகராசி, மனைவிக்கு துலாம்ராசியாகி இருவருக்கும் ஏழரைச்சனி நடந்து கொண்டிருக்கிறது. மனைவியின் ஜாதகம் தவறாகக் கணிக்கப்பட்டிருக்கிறது. லக்னம் மாறுவதால் செவ்வாய், சனி அமைப்பும் மாறுகிறது. மகனின் ஜாதகப்படி தந்தையைப் பிரியும் அமைப்பு இல்லாததால் உங்களுக்குள் பிரிவினை வருவதற்கு வாய்ப்பு இல்லை.
அடுத்த வருடம் நவம்பர் மாதம் மனைவிக்கு ஏழரைச்சனி முடியும்வரை இந்த நிலை நீடிக்கும். அப்போது உங்களுக்கும் ஜென்மச்சனி விலகும். அதுவரை பொறுத்திருக்கவும். 2018-ல் நல்லவைகள் நடக்கும். சனிக்கிழமைதோறும் அருகில் உள்ள பழமையான ஈஸ்வரன்கோவிலில் இருக்கும் காலபைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றவும்.

பேரனின் எதிர்காலம் எப்படி?

எஸ். ருக்மணி, வளசரவாக்கம்.

கேள்வி :

குருஜி அவர்களுக்கு என் ஆசீர்வாதங்கள். 85 வயதான நான் உங்களை என்னுடைய இன்னொரு மகனாக நினைத்து எழுதுகிறேன். சென்ற ஜூலையில் என்னுடைய மகன் என் பேரனின் ஜாதகத்தை உங்களிடம் காண்பித்தான். நீங்கள் சொல்லியபடியே கல்லூரியில் எச். ஆர். தேர்வு பெற்று மறுநாளே ஒரு கம்பெனியில் வேலை கிடைத்தது. நீங்கள் சொன்னபடியே வண்டியும் வாங்கினான். நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அடுத்ததாக நீங்கள் சொன்னபடியே ஒன்றரை மாதத்தில் வேலையை விட்டு விட்டான். இப்போது பேட்மிட்டன் கோச்சராக போய்வருகிறான். சம்பளம் 15 ஆயிரம்தான். எங்கள் யாருக்கும் திருப்தி இல்லை. லட்சக்கணக்கில் செலவழித்துப் படிக்க வைத்து இந்த வேலைக்கா போவது என்று எனக்கும் சம்மதம் இல்லை. இந்த வேலை வாழ்நாள் முழுவதும் சரிப்பட்டு வருமா? ஒரு கல்யாணம் குழந்தை பெற்று குடும்ப நடத்த முடியுமா? கவலையாக இருக்கிறது. யார் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறான். இப்படி ஒவ்வொரு வேலையையும் விட்டு விட்டு வந்தால் என்ன செய்வது? எங்கேயாவது நிரந்தரவேலை செய்தால் பரவாயில்லை. இவனுக்கு எப்போது நிரந்தர வேலை கிடைக்கும்? ஒழுங்காக வேலை செய்வானா என்றும் பயமாக இருக்கிறது. எனக்கு நல்லபதில் அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். வயதாகி விட்டதால் காது சரியாகக் கேட்கவில்லை. நான் 12.1.1931-ல் பிறந்தேன். சுவாதி நட்சத்திரம், துலாம்ராசி. யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் எம்பெருமாளை அடைவேனா? அந்த பாக்கியம் எப்போது கிடைக்கும்?

பதில்:

அம்மா... உங்கள் காலத்தில் பத்துப் பிள்ளைகளைப் பெற்றீர்கள். அதில் இரண்டு போய் எட்டு மிஞ்சி, அதில் நான்கு வசதியாகவும், நான்கு கஷ்டப்பட்டும் வம்சம் வளர்ந்தது. ஆனால் காலமாற்றத்தினால் இன்று நாங்கள் இரண்டே குழந்தைகளை மட்டும் பெற்று வளர்க்கிறோம். அதிலும் சிலருக்கு ஒன்றே ஒன்றுதான் வாரிசு என்றாகிவிட்டது.

குறைவான குழந்தைகள் பெற்றுக் கொள்வதாலும், தனிப்பட்ட ஒருவரின் பொருளாதார நிலைமை மேம்பட்டு வருவதாலும் இங்கே எவரும் போகும் போது குழந்தைகளை நிர்க்கதியாக விட்டுச் செல்ல வாய்ப்பு இல்லை. குழந்தைகளுக்கு ஓரளவு வசதி, இருப்பதற்கு ஒரு வீடு என்ற நிலையில்தான் விட்டுச் செல்வோம். எனவே தாய்தகப்பன் விட்டுச் செல்வதை கட்டிக் காப்பாற்றி வைத்துக் கொள்ளும் அளவிற்கு படிப்பும் புத்திசாலித்தனமும் இருந்தாலே ஒருவர் வாழ்நாள் முழுக்க கஷ்டப்படாமல் இருந்து கொள்ளமுடியும். மேலும் நமது கலாச்சாரத்தின்படி தாய்தகப்பன் உயிரோடு இருக்கும் கடைசி நிமிடம் வரை குழந்தை வாழ்க்கையில் சறுக்கினால் தோள் கொடுப்பதற்கும் பெற்றோர் தயாராகவே இருக்கிறோம்.

எவர் ஒருவர் தனக்குப் பிடித்தமான துறையை தேர்ந்தெடுத்து அதில் ஈடுபாட்டுடன் வேலை செய்கிறாரோ அவர் உறுதியாக அந்தத்துறையில் முதன்மை பெறுவார் என்பது மாறாத விதி. இதற்காகவே குழந்தையை என்ன படிக்க வைக்கலாம் என்று கேட்டுவரும் பெற்றோரிடம் குழந்தையின் விருப்பத்தை அறிந்து அதன்படி செய்யுங்கள் என்று ஆலோசனை தருகிறேன். எனவே இளம்பருவத்தில் ஒருவர் தன் வாழ்க்கையில் “ரிஸ்க்” எடுக்க பெற்றோர் மனப்பூர்வமாக சம்மதியுங்கள். அந்தக் குழந்தை தோற்காது. உங்கள் விருப்பத்தை அவர் மேல் திணிக்காதீர்கள்.

பிடிக்காத ஒன்றை உங்கள் பேரனைச் செய்ய வலியுறுத்துவதை விட பிடித்ததைச் செய்ய ஆதரவு தருவதே ஒரு பாட்டியின் கடமை. இதுபோன்ற அரவணைப்பு இருந்தால் உங்கள் பேரன் எடுத்துக் கொண்ட வேலையில் தோல்வி அடையவே மாட்டார். எதிர்காலத்தில் நன்றாகவும் இருப்பார்.
பேரன் மற்றும் உங்களின் பிறந்தநாளை மட்டும் குறிப்பிட்ட நீங்கள் நேரக் குறிப்புகளை எழுதாததால் என்னால் ஜோதிடப்படி உங்களுக்கு பதில் தர முடியவில்லை. ஆனாலும் உங்கள் கேள்வியின்படியே நேரில் வந்த உங்கள் மகனிடம் பேரனைப் பற்றிச் சரியாகத்தான் சொல்லியிருக்கிறேன் போலத் தெரிகிறது. மீண்டும் ஒருமுறை முழு விவரங்களை அனுப்புங்கள். ஜோதிடப்படி பதில் தருகிறேன்.

No comments :

Post a Comment