Tuesday, October 11, 2016

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள் - 107 (11.10.2016)

வி. வி. சம்பத்குமார், கன்னங்குறிச்சி.

கேள்வி :

வாழ்க்கையில் அதிகம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவன் நான். அதிகமாக தாக்குதலுக்கு உள்ளானவனும் கூட. சாய்ந்து அழுவதற்கு ஆதரவான தோள் கூட கிடைக்காமல் தவித்திருக்கிறேன். என் மனதிலும் அன்பு, பாசம், பிரியம் நிரம்பியுள்ளது. ஆனால் இவற்றை ஏற்றுக்கொள்ள எனக்காக யாருமே இல்லை. குடும்பத்திற்கும் குழந்தைகளுக்கும் என் கடமையை சிறப்பாக இல்லாவிட்டாலும் மிகவும் திருத்தமாக செய்து முடித்து விட்டேன். இனி என் உதவி அவர்களுக்கு தேவையில்லை. பாவப்பிணி நீங்கி பிறவிப்பிணி ஓய்ந்து பரமபதத்தை அடைய தங்களின் அனுகிரகம் வேண்டும். அது சித்திக்கும் காலம் எப்போது? அதற்கு முன்பாக நான்கு பேருக்கு நல்லதும், உதவியும் செய்ய இறுதி விருப்பம் உள்ளது. நிறைவேறுமா?


குரு
ராசி

சூ,பு 
சு,ரா
சந்

செவ், 
சனி

பதில் :

(மேஷலக்னம், சிம்மராசி. 2-ல் குரு. 7-ல் செவ், சனி. 10-ல் சூரி, புத, சுக், ராகு. 22.1.1954, 12.30 பகல், சேலம்.)

இதுபோன்ற ஜாதக அமைப்புள்ளவர்கள் மற்றவர்களை மட்டும்தான் குறை சொல்வீர்கள். உங்கள் மேல் உள்ள தவறை நீங்கள் என்றுமே உணர்வதில்லை. மேஷலக்னமாகி, லக்னத்தை செவ்வாயும், உச்சச்சனியும் மட்டும் பார்த்து ராசிக்கோ, லக்னத்திற்கோ சுபக்கிரக பார்வையோ, தொடர்போ இல்லாததால் நீங்கள் பிறரால் புரிந்து கொள்ள முடியாத, கடினமனம் கொண்ட ஆளாக, அன்பு செலுத்தத் தெரியாத நபராக இருப்பீர்கள். உங்களைப் போன்றவர்களால் உலகத்தோடு ஒருநாளும் ஒத்துப் போக முடியாது.

பாசம் என்பது எப்போதும் ஒருவழிப்பாதையாக இருப்பது இல்லை. அன்பு செலுத்துவதும் ஒருவகையில் வட்டிக்கு விடுவதைப் போன்றதுதான். எவ்வளவுக்கு எவ்வளவு பாசம் காட்டுகிறீர்களோ அதைவிட அதிகமாக உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும்.

பத்துக்குடையவன் உச்சமாகி, பரிவர்த்தனை அடைந்து, பத்தாமிடத்தைக் குரு பார்த்து, பத்தில் சூரியனும் உள்ளதால் காசுக்கு பழுதில்லாத நிரந்தரப்பணியில் இருந்திருப்பீர்கள். எனவே காசுதான் முக்கியம் என்று வாழ்ந்துவிட்டீர்கள். இப்போது வயதானவுடன் ஆதரவு தேவைப்படுகிறது. ஆனால் உங்களைப் புரிந்து கொள்ள ஆள் இல்லை. ஜாதகம் யோகமாக இருப்பதால் கடைசிவரை உணவு, உடை, உறைவிடத்திற்கு பஞ்சமோ, பணப்பற்றாக்குறையோ வருவதற்கு வாய்ப்பு இல்லை.

2012-ம் ஆண்டிலிருந்து நடந்து கொண்டிருக்கும் குருதசை உங்களுக்குள் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கும். லக்னாதிபதி லக்னத்தை பார்த்து, ஆயுள் ஸ்தானத்தை குரு பார்த்து, ஆயுள்காரகன் சனி உச்சம் என்பதால் இன்னும் நீண்ட காலம் இருப்பீர்கள். குருதசை முழுக்க ஆன்மிக எண்ணங்களில் மனம் செல்லும். ஜாதகப்படி உங்களுக்கு அடுத்துப் பிறவி இல்லை என்பதால் இப்பிறப்பிலேயே அனைத்துப் பிணிகளும் ஓயும்.

சி . ராஜேஷ்குமார் , மணப்பாறை .

கேள்வி :

கடந்த சில வருடங்களாக நானும் ஒரு பெண்ணும் காதலித்து வருகிறோம். பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய வேண்டும் என முடிவு எடுத்து இருக்கிறேம். அதன்படி திருமணம் நடக்குமா? அல்லது பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் நடக்குமா? எங்களுடைய ஜாதக அமைப்புப்படி எப்போது திருமணம் செய்தால் நல்லது ?

பதில் :

காரணமில்லாமல் கடவுள் யாரையும் அறிமுகப்படுத்துவதில்லை என்பதால் இருமனம் ஒத்துச் செய்யும் திருமணத்திற்கு பொருத்தம் பார்க்க தேவையில்லை. உனக்கு விருச்சிகராசி. அந்த பெண்ணிற்கு ரிஷபராசியாகி, இருவருக்கும் நேரெதிர் ராசி என்பதாலும், இருவருக்கும் சுக்கிரனுடன் சம்பந்தப்பட்ட ராகுதசை நடப்பதாலும் நீங்கள் காதலிக்கிறீர்கள்.

உனது விருச்சிகராசிக்கு ஏழரைச்சனி நடப்பதால் உன் விருப்பங்கள் எதுவும் பெற்றோர் சம்மதத்துடன் நிறைவேறுவதற்கு இன்னும் ஒரு வருடத்திற்குத் தடை இருக்கிறது. பெண்ணின் ஜாதகஅமைப்புப்படி அவளது ரிஷபராசிக்கு ஏழில் குரு வரும் போது ராகுதசை சுக்கிரபுக்தியில் பெற்றோர் சம்மத்துடன் திருமணம் நடக்கும்.

கே. இசக்கிதுரை, தூத்துக்குடி.

கேள்வி :

திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகிறது. ஒரு பெண், ஒரு ஆண் குழந்தைகள் உள்ளன. கடினமான கஷ்டத்துடன் வாழ்ந்து வருகிறோம். நான்கு லட்சம் வரை நகைக்கடன் உள்ளது. நகைகளை எல்லாம் திருப்புவேனா? டிரைவராக இருக்கிறேன். சொந்தக்கார் வாங்க முடியுமா ? கஷ்டங்கள் எப்போது தீரும்?

பதில் :

விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரத்திற்கு கடுமையான ஜென்மச்சனி நடப்பில் உள்ளதால் கஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும். அடுத்த வருட இறுதியில் துன்பங்கள் விலகும். மிதுனலக்னமாகி பத்தில் ராகு இருப்பதால் டிரைவர் தொழில் பொருத்தமானதுதான். நடக்கும் சுக்கிரதசை புதன்புக்தியில் 2018-ம் ஆண்டு பிற்பகுதியில் சொந்தக்கார் வாங்குவீர்கள். அதன்பிறகு கஷ்டம் என்றால் என்னவென்று கேட்பீர்கள்.

கி . ரவி , குரோம்பேட்டை .

கேள்வி :

எனது அண்ணன் மகன் ஜாதகத்தை அனுப்பி உள்ளேன். அவன் . டி. யில் நல்ல சம்பளத்தில் வேலை செய்கிறான். அவனுக்கு எப்போது திருமணம்? சுக்கிர தசையில் அவன் மனைவி அவனை விட்டு ஓடி விடுவாள் என்று ஒரு ஜோதிடர் சொல்லியுள்ளார். அது உண்மையா?


பதில் :

பிறந்தநேரம் இல்லாமல், பிறந்தநாளும் வெறும் ராசிக்கட்டமும், தசை இருப்பு மட்டும் எழுதி அனுப்பப்படும் கேள்விகளுக்கு நான் பதில் சொல்வது இல்லை. எந்த ஒரு பலனையும் கூடுமானவரை துல்லியமாகச் சொல்ல நினைக்கும் எனக்கு பிறந்தநாள், நேரம், இடம் மூன்றையும் ஜாதகத்துடன் அனுப்பினால் மட்டுமே சரியான பதிலைச் சொல்ல முடியும்.


எம் . கே . எஸ் ., பழனி .

கேள்வி :

தங்களின் மாலைமலர் கேள்வி-பதில் கட்டுரைகளின் தீவிர வாசகன் நான். மகள் ஜாதகத்தில் ஏழில் சூரியன் வீட்டில் குரு. எட்டில் சுக்கிரன் நீசமாகி உள்ளது தோஷமா? திருமணம் தாமதமாகி வருகிறது. மணவாழ்க்கை சிறப்பாக இருக்குமா? எப்போது திருமணம்? எம். பி. . படித்திருந்தும் வேலைக்கான முயற்சிகளும் தோல்வி அடைகின்றன. தங்களின் மேலான பதில் மட்டுமே எனக்கு ஆறுதல் தரும்.

சந்
கே
ராசி
சனி
குரு
சூ,பு
செவ்
சுக்

பதில் :

(கும்பலக்னம். மீனராசி. 5-ல் கேது. 7-ல் குரு. 8-ல் சுக். 9-ல் செவ். 10-ல் சூரி, புத. 12-ல் சனி. 17.11.1991, பகல் 1.55, பழனி)

சுபக்கிரகமான குருபகவான் தன்னுடைய நண்பர் சூரியனின் வீடான அதிநட்பு ஸ்தானத்தில் அமர்வது நல்ல மணவாழ்க்கையைத் தரும். லக்னத்திற்கு குரு பார்வையினால் உங்கள் பெண்ணின் ஜாதகமும் வலுவடைகிறது. எட்டில் சுக்கிரன் நீசம் என்றாலும் நவாம்சத்தில் அவர் ஆட்சி பெறுவதால் சுக்கிரன் வலிமை அடைகிறார். ராசிக்கட்டத்தில் ஒருகிரகம் எந்தவலுவில் இருந்தாலும் நவாம்சத்தில் அது இருக்கும் நிலைதான் இறுதியானது.

ராசிக்கு எட்டில் செவ்வாய் இருப்பதும், செவ்வாயும் சனியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்வதும், லக்னத்திற்கு இரண்டாம் வீட்டை சனி பார்த்து, ராசிக்கு இரண்டாம் வீட்டை செவ்வாய் பார்ப்பதாலும்தான் உங்கள் மகளுக்கு திருமணம் தாமதமாகிறது. லக்னாதிபதி சனியை சூட்சும வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை செய்யுங்கள். வரும் ஆகஸ்டுக்குள் திருமணம் ஆகி விடும்.

மீனராசி இளைஞர்கள் யாருமே கடந்த நான்கு வருடங்களாக நிலையான வேலை அமைப்பில் இல்லை. அல்லது வேலையே இல்லை என்பதை அடிக்கடி எழுதி வருகிறேன். மகளுக்கு பத்தாமிடத்தில் சூரியன் இருப்பதாலும், சிம்மம் வலுவாக இருப்பதாலும் அரசுவேலை அல்லது அரசுசார்ந்த வேலை அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதத்திற்கு மேல் சூரியபுக்தியில் கிடைக்கும். முயற்சிக்கவும். ஜாதகம் வலுவாக இருப்பதால் எதிர்காலத்தில் எந்தக்குறையும் இன்றி சிறப்பாக இருப்பாள்.

வி. ஆல்வின் பொறையார்.

கேள்வி :

நான் பலமுறை கடிதம் எழுதியும் நீங்கள் பதில் தரவில்லை. தயவுசெய்து பதில் கொடுங்கள். எனது நிலைமை பிச்சை எடுக்கும் நிலையில் இருக்கிறது. இதிலிருந்து மீள்வேனா? பிளஸ்டூ முடித்து விட்டேன். கால்நடை மருத்துவம் சேர முடியாமல் பல பிரச்னைகள் இருக்கிறது. இந்த ஆண்டு கல்லூரியில் சேருவேனா? எனக்கு டென்னிஸ் விளையாட்டில் அதிக ஆர்வம் இருக்கிறது. முறையாகப் பயிற்சி எடுத்தால் அதில் சாதிப்பேனா?

பதில் :

ஒவ்வொரு முறையும் கேள்வியோடு பிறந்தநாள், நேரம், இடம் எதுவும் இல்லாமல். ராசிக்கட்டத்தின் முதல்பக்க ஜெராக்சை மட்டும் வைத்து அனுப்புகிறாய். “மொட்டைத்தாதன் குட்டையில் விழுந்தான்” கதையாக கடிதத்தில் உன் பெயரில்லை ஊரில்லை. வாழ்க்கையில் சாதிக்க வேண்டிய இளைஞனாகிய உனக்கு ஒரு கடிதத்தை எப்படி முறையாக எழுதுவது என்று தெரிய வேண்டாமா? உன் பெயரையும் ஊரையும் தபால்கவரில்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. நல்லவேளை அதிலாவது எழுதியிருக்கிறாய்.

“ஒன்றை நன்றாக ஆரம்பித்தாலே பாதி முடித்து விட்டதாக அர்த்தம்” என்பதை இளைஞர்கள் எப்போது கற்றுக் கொள்ளப் போகிறீர்களோ தெரியவில்லை. உன் பெயர் முகவரியோடு உன் பிறந்தநாள், நேரம், இடம், மற்றும் ஜாதகநகலை வைத்து, ஒரு பிளஸ்டூ படித்தவன் எப்படி அழகாக கடிதம் எழுத வேண்டுமோ அப்படி எழுதி அனுப்பு. உடனடியாகப் பதில் தருகிறேன்.

என்னுடைய பழைய தம்பி கிடைப்பானா?

ஆர் . சகிலா , திருச்சி .

கேள்வி :

குடி குடியைக் கெடுக்கும் என்பதற்கேற்ப என் தம்பியின் குடிப்பழக்கம் குடும்பத்தையே சீரழித்துக் கொண்டிருக்கிறது. தகாத வர்த்தைகளால் பெற்றோரை அசிங்கப்படுத்துகிறான். திருமணத்திற்கு பிறகுதான் மிகவும் மோசமாக இருக்கிறான். அம்மாவைக் கண்டாலே அவனுக்குப் பிடிக்கவில்லை. எல்லாத் தெய்வத்திடமும் முறையிட்டும் பலனில்லை. இவனால் எல்லோரிடமும் பகை. இவன் மாறுவானா? குடியில் இருந்து மீள்வானா? என்னுடைய பழைய தம்பி கிடைப்பானா? இவனால் என் தாயார் சாகப்போனார். இவனுக்கு ஆண்குழந்தை பிறந்து இறந்து விட்டது .மீண்டும் புத்திரபாக்கியம் கிடைக்குமா? இவன் மாறுவதற்கும், குழந்தைக்கும் ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமாஇவன் வெளிநாடு செல்வானா ?

ராசி
சந்
ல,குரு

சுக், 
செவ்
சனி
பு,கே
சூ

பதில் :

(மகர லக்னம், கடக ராசி. 1-ல் குரு. 8-ல் சுக், செவ். 9-ல் சூரி. 10-ல் புத, கேது. 11-ல் சனி. 9.10.1985, பகல் 2.45, காரைக்கால்)

குடிக்கு அடிமையானவருக்கு எந்தப் பரிகாரமும் பலன் தராது. போதைப் பழக்கங்கள் ஒரு மனிதனின் மகாபெரிய கர்மவினை. எவ்வித துன்பங்கள் ஒருவருக்கு வந்தாலும் அந்த வலியை அவர் மட்டுமே அனுபவிப்பார். ஆனால் குடிக்கு அடிமையானால் மட்டுமே அவர் குடும்பமே வேதனையை அனுபவிக்கும். எனவே குடிகாரனின் தாய்க்கும் அது ஒரு சோகத்தை தரும் கர்மவினை அமைப்புத்தான்.

தம்பியின் ஜாதகப்படி மதுவுக்கு காரண கிரகமான சனிபகவான் லக்னாதிபதியாகி லக்னத்தைப் பார்த்து, லக்னத்தில் ஒரு நீசக்கிரகம் அமர்ந்து, நடைபெறும் தசாநாதன் சுக்கிரனையும் சனி தனது பத்தாம் பார்வையால் பார்க்கிறார். லக்னமும் தசாநாதனும் ஒருசேர சனியில் பார்வையில் உள்ளதாலும், சுக்கிரன் எட்டுக்குடைய சூரியனின் நட்சத்திரத்தில் இருப்பதாலும் உன் தம்பி சமீப காலங்களில் குடியை விடுவதற்கு வாய்ப்பு இல்லை.

லக்னத்திற்கு ஐந்தாமிடத்தை சனி பார்த்து, ராசிக்கு ஐந்தாமிடத்தில் சனி இருப்பதும், புத்திரஸ்தானாதிபதியான சுக்கிரன் எட்டில் மறைந்து செவ்வாயுடன் இணைந்து சனியில் பார்வையில் இருப்பது புத்திரதோஷம். குரு நீசமாகி இருப்பது அதை உறுதி செய்கிறது. மீண்டும் புத்திர பாக்கியம் தாமதமாகவே கிடைக்கும். எட்டில் சுக்கிரன் இருப்பதால் அவரை வெளிநாட்டு வேலைக்கு அனுப்புங்கள். அங்கே திருந்தி நன்றாக இருப்பார்.

No comments :

Post a Comment