Wednesday, March 15, 2017

2017 பங்குனி மாத பலன்கள்

மேஷம்:

மாத ஆரம்பத்தில் ஆறு, பனிரெண்டுக்குடையவர்கள் பரிவர்த்தனை பெற்றாலும், ராசிநாதன் செவ்வாய் ஆட்சியாக இருப்பதால் பங்குனி மாதம் மேஷத்திற்கு நல்ல விஷயங்களைச் செய்யும் மாதமாக இருக்கும். தொழில் விஷயங்களில் நல்ல பலன்கள் நடக்கும். பூர்வீக சொத்து விஷயமாக சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை இருப்பவர்களுக்கு எல்லோரும் ஏற்று கொள்ளக்கூடிய தீர்வு கிடைக்கும். வீட்டில் சுபகாரியங்கள் உண்டு. திருமண ஏற்பாடுகள் தள்ளிப் போயிருந்தவர்களுக்கு திருமணம் உறுதியாகும்.


பனிரெண்டாம் இடத்தில் குரு பரிவர்த்தனை வலுப்பெறுவதால் சிலர் ஆன்மிகம் சம்பந்தமான பிரயாணங்கள் செய்வீர்கள். புனிதத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு ஞானிகள் தரிசனம் கிடைக்கலாம். இதுவரை குலதெய்வ வழிபாடு செய்யாதவர்கள் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தாதவர்கள் அவற்றை முடிப்பீர்கள். புத்திரபாக்கியம் இல்லாதவருக்கு கருவுறுதல் இருக்கும். தொழில், வேலை, வியாபாரம் போன்ற அமைப்புகளில் நல்லவைகள் நடக்கும்.

அலுவலகத்தில் உங்களுக்கு சாதகமான மாற்றங்கள் இருக்கும். வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு பிடித்தமான வேலை கிடைக்கும். மாணவர்கள் நன்கு பரீட்சை எழுதுவீர்கள். கலைஞர்களுக்கு இது சிறந்த மாதம் என்பதில் சந்தேகம் இல்லை. அரசு, தனியார்துறை ஊழியர்கள் வளம் பெறுவார்கள். கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். பெண்கள் உதவுவார்கள். அவர்களால் நன்மைகள் உண்டு. தந்தைவழி உறவினர்களிடமிருந்து உதவிகள் இருக்கும்.

ரிஷபம்:

ரிஷபத்தினருக்கு பங்குனி மாதம் யோக மாதமாக இருக்கும். ராசிநாதன் சுக்கிரன் உச்சமாக இருப்பதால் தொல்லைகள் எதுவும் உங்களை அண்டாது. எந்த ஒரு சிக்கலையும் உங்கள் அறிவாற்றலால் சுலபமாக சமாளிப்பீர்கள். வேலையிலும் குடும்பத்திலும் இருந்துவந்த பிரச்சனைகள் தீரும். வியாபாரம் செழிப்பாக நடக்கும். சொந்தத்தொழில் செய்பவர்களுக்கு வருமானம் கூடும். அதிர்ஷ்டம் கொஞ்சம் அருகில் இருக்கும்.

இரண்டுக்குடைய புதன் நீசமாக இருந்தாலும் நீசபங்கமாகி குருவுடன் பரிவர்த்தனை யோகத்தில் இருப்பதால் நல்ல பலன்கள்தான் நடக்கும். சிலருக்கு இதுவரை தாமதித்து வந்த வேலை வாய்ப்புக்கள் நல்லபடியாக கிடைக்கும். பணியில் இருப்போருக்கு இருந்து வரும் சிக்கல்கள் தீரத் தொடங்கும். வியாபாரிகளுக்கு கொடுத்த கடன் சிக்கல் இல்லாமல் திரும்பி வரும். எட்டில் சனி இருப்பதால் சிலர் மட்டும் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். கவலை வேண்டாம். இந்த நிலை சிறிது நாட்கள்தான்.

அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை பெறுவார்கள். குறிப்பாக வரிவசூல் துறையினருக்கு நிலுவையில் நிற்கும் பாக்கித் தொகை கைக்கு கிடைத்தல் போன்றவைகள் நடக்கும். விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள், மாணவர்கள் போன்றவருக்கு மாதம் முற்பகுதியில் சுமாரான பலன்களும் பிற்பகுதியில் நல்ல பலன்களும் நடக்கும். வியாபாரம் தொழில் போன்ற ஜீவன அமைப்புக்கள் லாபத்துடன் இயங்கும். பணவரவு இருக்கும். கலைத்துறையினருக்கு இந்த மாதம் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்:

பங்குனி மாதத்தின் பலன்களை மிதுனராசிக்காரகளுக்கு இரண்டு பிரிவாக பிரித்துச் சொல்லலாம். மாதத்தின் முற்பகுதி முழுவதும் ராசிநாதன் புதன் நீசநிலையில் இருப்பதால் சாதகமில்லாத நிலைகளும் பிற்பகுதியில் அனைத்துப் பிரச்னைகளும் நல்லபடியாக தீர்ந்து சந்தோஷப்படுதலும் இருக்கும். ஆறுக்குடையவன் ஆட்சி பெறுவதால் இதுவரை அடங்கி இருந்த எதிர்ப்புகள் மற்றும் கடன் பிரச்னைகள் லேசாக தலைதூக்கும். மிதுனராசிக்காரர்கள் கோபத்தை மறந்து நிதானமாக இருக்க வேண்டிய மாதம் இது.

ராசிநாதனின் நண்பரான சூரியன் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் இருப்பது நன்மைகளைத் தரும் அமைப்பு என்பதால் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் முன்னேற்றங்களும், பணவரவுகளும், லாபங்களும், இருக்கும். மாதத்தின் பெரும்பாலான நாட்கள் புதன் நீசநிலையில் இருந்தாலும் அவருக்கு வீடு கொடுத்த குருபகவானுடன் பரிவர்த்தனை நிலையில் இருப்பதால் நீசபங்க ராஜயோகம் உண்டாகி சில நன்மைகளும் நடக்கும்.

செவ்வாய் வலுப்பெறுவதால் தேவையற்ற விஷயங்களில் மூக்கை நீட்ட வேண்டாம். ரியல் எஸ்டேட்காரர்கள், பில்டர்ஸ் போன்ற துறையினருக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கி, தொழில் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை அடைவார்கள். மூத்த சகோதரர்களால் நன்மை உண்டு. தந்தைவழி உறவினர்கள் உதவுவார்கள். யூனிபார்ம் அணிந்து வேலை செய்யும் துறையினருக்கு நல்ல செய்திகள் உண்டு.

கடகம்:

மாதம் முழுவதும் பத்துக்குடைய செவ்வாய் ஆட்சி வலுவுடன் இருப்பதாலும், புதனும், குருவும் பரிவர்த்தனை யோகத்தில் இருப்பதாலும் பங்குனி மாதம் கடகராசிக்கு மிகுந்த தனலாபத்தையும், மேன்மையான பாக்யங்களையும் அளிக்கும் என்பதைக் காட்டுகிறது. நீண்டகாலமாக முடியாமல் இருக்கும் விஷயங்களை முடித்துக் காட்டுவீர்கள். அதிர்ஷ்டம் கைகொடுக்கும் மாதம் இது. இளைஞர்களுக்கு இதுவரை நடந்து வந்த எதிர்மறையான பலன்கள் நீங்கி, நல்ல பலன்கள் நடக்கும்.

பத்தாமிடத்தில் செவ்வாய் சுபவலுவுடன் இருப்பதால் சீருடை அணியும் துறைகளான ராணுவம், காவல்துறை, பாதுகாப்பு போன்ற பணிகளில் இருப்பவர்களுக்கு பதவிஉயர்வு, வேலையில் இதுவரை இருந்துவந்த சிக்கல்கள் நீங்குதல், வழக்குகள் சாதகமாகுதல் மற்றும் பொருளாதார மேன்மைகளைத் தரும் மாதமாக இருக்கும். சிறிய விஷயங்களால் பிரிந்து இருந்தவர்கள் அதை மறந்து ஒன்று கூடுவீர்கள். கடன் தொல்லைகளைத் தவிர்க்க கடன் கொடுத்தவரை நேரில் சந்தித்து தவணை வாங்கி கொள்வது நல்லது.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுப காரியங்களுக்கு இதுவரை இருந்து வந்த தடை விலகும். ஒரு சிலர் தங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவக்கூடிய அடிப்படை அறிமுகமான நபர்களை சந்திப்பீர்கள். பெண்களுக்கு இது உற்சாகமான மாதம். வேலை செய்யும் இடத்தில் மதிக்கப் பெறுவீர்கள். விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். பேச்சில் கவனமாக இருங்கள். நிதானம் இழந்து எவரையும் பேசிவிட வேண்டாம். குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசி தீர்த்துக் கொள்வது நல்லது.

சிம்மம்:

சிம்மநாதன் சூரியன் மாதம் முழுக்க எட்டில் மறைந்து வலிமை இழந்தாலும் அவருக்கு குரு பார்வை இருப்பதால் தோஷம் நிவர்த்தியாகிறது. எனவே இந்த மாதம் சிம்மராசிக்காரர்களுக்கு சுபச்செலவுகளும், நன்மைகளும் உள்ள மாதமாக இருக்கும். ராசிநாதன் எட்டில் மறைந்து வலு இழப்பதால் சுமாரான மாதம்தான். அதேநேரத்தில் கடன் தொல்லைகளோ, மறைமுக எதிர்ப்புகளோ அருகில் வராது. மறைமுகமான எதிரிகள் உங்களை கவிழ்க்கப் பார்த்தாலும் அவர்கள்தான் தோற்றுப் போவார்கள்.

பெண்களுக்கு அலுவலகங்களில் இருக்கும் தொந்தரவுகள் குறைய ஆரம்பிக்கும். வேலை செய்யும் இடத்தில் இதுவரை இருந்துவந்த சிக்கல்கள் தீரத் தொடங்கி அனைத்தும் நடக்கும். உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் கிடைக்கப் பெறுவார்கள். அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். அரசு ஊழியர்களுக்கு இதர வருமானங்கள் சிறப்பாக இருக்கும். தனியார் துறையினருக்கு கூடுதல் வருமானம் உண்டு. கலைஞர்கள் சிறப்பு பெறுவார்கள். 

வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளின் அதிபதியான சுக்கிரன் உச்ச வலுவுடன் இருப்பதால் பண விவகாரங்கள் நல்ல விதமாக செயல்பட்டு நன்மைகளை தரும். வியாபாரிகளுக்கு இந்தமாதம் மேன்மைகளை தரும். கொடுத்த கடன் திரும்பி வரும். நீண்ட நாள் பாக்கி வசூல் ஆகும். இளைஞர்களுக்கு வேலை உறுதியாகும். சிலருக்கு எதிர்கால நல்வாழ்விற்கான அறிமுகங்கள் அடிப்படையான சில நிகழ்ச்சிகள் நடக்கும். வேலைமாற்றம், தொழில் மாற்றம், வீடு மாற்றம் உண்டு.

கன்னி:

கன்னிநாதன் புதன் நீசமாக இருந்தாலும் அவருக்கு வீடு கொடுத்த குருவுடன் பரிவர்த்தனையில் இருப்பதால் நீசபங்கமாகி வலுவான நிலையில் இருக்கிறார். சுக்கிரன் உச்சமாகி ராசியைப் பார்ப்பதும் யோக அமைப்பு என்பதால் பங்குனி மாதம் உங்களுக்கு நற்பலன்களை மட்டுமே தரும். பொருளாதார சிக்கல்கள் இருக்காது. ராசிக்கு பத்தில் சனி இருந்து ராசியைப் பார்ப்பதால் மனம் ஒரு நிலையில் இல்லாமல் பரப்பரப்பாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அது ஒன்றுதான் இப்போது குறை என்று சொல்லலாம்.

சாதாரண சிறு விஷயத்திற்காக சண்டை போடுவீர்கள். சிறிய விஷயத்தைப் பெரிதாக்குவீர்கள் என்பதால் யாரிடமும் சண்டை போட வேண்டாம். நிதானம் தேவை. கடன் தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும். கோர்ட், கேஸ், போலீஸ் விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக அமையாவிட்டாலும் பாதகம் தராது. இதுவரை உங்களை எதிர்த்து வந்தவர்கள் மனம் மாறி உங்கள் கருத்துகளை ஆதரிக்கும் மாதமாக இது இருக்கும். சிலருக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் விலகும்.

எட்டில் இருக்கும் செவ்வாய் உங்களுக்கு பெண்களால் எரிச்சலையும், அவர்கள் மூலமான எதிர்மறை பலன்களையும், செலவுகளையும் தருவார் என்பதால் இந்த மாதம் எதையும் ஒரு முறைக்கு இரண்டு முறையாக யோசித்து செய்யுங்கள். குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. நீண்ட நாட்களாக அம்மாவை விட்டுப் பிரிந்து இருப்பவர்கள் இந்த மாதம் அவரை நேரில் சென்று பார்த்து, ஆசிர்வாதங்களைப் பெற்று வருவது இன்னும் சிறப்புகளைச் சேர்க்கும்.

துலாம்:

பங்குனி மாதத்தில் பெரும்பாலான நாட்கள் ராசிநாதன் சுக்கிரன் உச்சநிலையில் இருப்பதால் இந்த மாதம் உங்களுக்கு மனம் சந்தோஷப்படும்படியான நிகழ்ச்சிகளும், பணவரவும், வீட்டிற்கு புதிதாக ஏதேனும் பொருள் சேர்க்கையும் இருக்கும். ஏழரைச்சனியின் பெரும்பகுதியை கடந்துவிட்ட உங்களுக்கு இனிமேல் கெடுபலன்களை தருகின்ற வலிமையை சனி இழக்கிறார். எனவே இனிமேல் துலாம் ராசிக்கு துயரங்கள் எதுவும் இல்லை.

இதுவரை நடந்து வந்த எதிர்மறை பலன்கள் இனிமேல் இருக்காது. அக்டோபர் மாதம் முதல் சனி முடியப் போவதால் நாளை நீங்கள் நன்றாக இருக்க போவதற்கான வழிமுறைகள் இப்போதே ஆரம்பிக்கத் துவங்கும். அரசு ஊழியர் தனியார் துறையினருக்கு கூடுதல் வருமானம் உண்டு. கலைஞர்கள் சிறப்பு பெறுவார்கள். பெண்களுக்கு அலுவலகத்திலும் வீட்டிலும் மதிப்பு கூடும்படியான சம்பவங்கள் இருக்கும்.

ஆறாமிடம் பரிவர்த்தனை யோகத்தால் வலுப்பெறுவதால் சிறு சிறு உடல்நலப் பிரச்னைகள் வரலாம். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டி இருக்கும். கடன் வாங்க வேண்டிய சூழல்கள் உருவாகலாம். தந்தைவழி தொழில் செய்பவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டு. சுயதொழில் செய்வோருக்கு தொழில் முன்னேற்றத்திற்கான அடிப்படை ஆரம்பங்கள் இப்போது நடக்கும். வியாபாரிகளுக்கு வருமானக் குறைவு இருக்காது.

விருச்சிகம்:

விருச்சிக நாதன் செவ்வாய் ஆறில் மறைந்த நிலையில் இருந்தாலும் அவர் ஆட்சி பெற்ற நிலையில் இருப்பதால் ராசிநாதன் வலுப்பெற்றால் தீமைகள் நடக்காது எனும் விதிப்படி பங்குனி மாதம் கெடுதல்கள் இல்லாத மாதமாக இருக்கும். செவ்வாய் ஆட்சி வலுப்பெற்று இருப்பது சனியின் கெடுபலன்களைக் கட்டுப்படுத்தும் அமைப்பு என்பதோடு ஐந்தில் புதனும் குருவும் பரிவர்த்தனை யோகத்தில் இருப்பதும் சனியின் கெட்ட பலன்களில் இருந்து பாதுகாக்கும் ஒரு அமைப்பு. எனவே பங்குனி மாதம் உங்களுக்கு நல்லவைகளை மட்டுமே தரும் மாதமாக இருக்கும்.

தொழில், வியாபாரம் மற்றும் அலுவலகங்களில் மன மகிழ்ச்சி இருக்கும். சிறிது நல்லவை நடப்பது போல தோன்றியவுடன் அகலக்கால் வைக்க வேண்டாம். எங்கும், எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். அவசரப்பட்டு தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம். சில நேரங்களில் சற்றுக் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். எதிலும் ஒரு மந்தநிலை இருக்கும். செயல்திறன் குறைவுபடும். இனம் தெரியாத மனக்கலக்கங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

செவ்வாய் வலுப்பெறுவதால் இதுவரை உங்களை சிக்கலுக்கு உள்ளாக்கி இருந்த அனைத்து விஷயங்களும் முடிவுக்கு வந்து கொஞ்சம் நிம்மதிக்கு வழிவகுக்கும். ராசிநாதனின் வலிமையால் எதையும் சமாளிப்பீர்கள். மனதில் தைரியம் வரும். விருச்சிகராசிக்காரர்கள் பட வேண்டிய கஷ்டங்கள் அனைத்தையும் பட்டு விட்டீர்கள். இனிமேல் உங்களுக்கு சோதனைகள் உறுதியாக இருக்காது. இந்த வருடத்தோடு எல்லாம் போய்விட்டது. இனி நீங்கள் யாருக்காகவும் எந்த விஷயத்திற்காகவும் கலங்கத் தேவையே இல்லை.

தனுசு:

பங்குனிமாதம் ராசியின் கேந்திராதிபதிகள் புதனும் குருவும் பரிவர்த்தனை யோகத்தில் இருப்பதும் இதில் நாலாமிடத்திற்குரியவரான குருபகவானே ராசிநாதன் என்பதாலும் தனுசுராசிக்கு யோக அமைப்புகள் உண்டாகிறது. இந்த மாதம் உங்களுக்கு பணவரவும் தொழில் வேலை மேன்மைகளும் உள்ள மாதமாக இருக்கும். அதேநேரம் ஆறாமிட அதிபதி சுக்கிரன் உச்ச வலுப்பெறுவதால் மறைமுக எதிர்ப்புகளும் இருக்கும். நண்பனைப் போல சிரித்துப் பழகிய ஒருவர் துரோகியாக மாறலாம்.

தாயார் வழியில் நன்மைகள் நடக்கும் மாதம் இது. வீடு வாங்குவதற்கோ, வீடு கட்டுவதற்கோ ஆரம்பங்கள் இருக்கும். ஒருசிலர் வீடு கட்ட ஆரம்பிப்பீர்கள். அருமையான நீங்கள் நினைத்த வாகனம் அமையும். தாயாரிடம் ஏதேனும் ஒரு விஷயத்திற்கு சம்மதம் கேட்க இப்பொழுது சரியானநேரம் என்பதால் இந்தநேரத்தை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். பயணங்களும், அது சம்மந்தமான நன்மைகளும் இருக்கும்.

ராசியின் எதிரியான சுக்கிரன் வலுப்பெறுவதால் இந்த மாதம் தேவையற்ற விஷயத்திற்கு கடன் வாங்கக் கூடிய சூழல்கள் உருவாகலாம். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் உடல் நலத்தில் கவனம் வைக்க வேண்டும். செவ்வாய் வலுவுடன் இருப்பதால் கோபத்தைக் குறைத்து கொள்வது நல்லது. செலவுகள் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கும். செலவு செய்ய வேண்டும் என்றால் பணம் வேண்டுமே எனவே வருமானமும் இந்தமாதம் தாராளமாகவே இருக்கும்.

மகரம்:

மகர ராசி பரிவர்த்தனை பெற்ற குருபகவானின் பார்வையில் இருப்பது உங்களின் பணவரவுகளையும், தனலாபம் மற்றும் பொருளாதார மேன்மையை அதிகப்படுத்தும் என்பதால் பங்குனி மாதம் முழுவதும் எந்த விதமான பணச்சிக்கல்களோ, எதிர்ப்புகளோ உங்களுக்கு இருக்காது. ஒருசிலர் ஆன்மீக விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். சிலருக்கு திருத்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும். குடும்பப் பிரச்னைகளை சற்று நிதானத்துடன் கையாள்வது நல்லது. எங்கும், எதிலும் கோபப்பட்டு பேச வேண்டாம்.

பெண்கள் விஷயத்தில் மனக்கசப்புக்கள் வரும் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள். சகோதரிகளால் செலவு உண்டு. கணவன், மனைவி உறவு சுமாராகத்தான் இருக்கும். நீண்ட நாட்களாக உடல்நலம் சரி இல்லாதவர்கள் ஆரோக்கியம் மேம்படுவார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். விரும்பிய இடங்களுக்கு குடும்பத்துடன் போய் வருவீர்கள். கலைத்துறையினருக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். பாக்கித் தொகைகள் வசூலாகும். மாணவர்கள் நன்கு பரீட்சை எழுதுவீர்கள்.

தந்தைவழி உறவினர்களிடம் கருத்து வேறுபாடு இருக்கும். சிலருக்கு தேவையற்ற விரோதங்கள் வரலாம். எவரையும் நம்பி வெளிப்படையாக பேச வேண்டாம். வியாபாரிகளுக்கு சில விரயங்கள் ஏற்படும். ஆனாலும் வருமானம் குறைவதற்கு வாய்ப்பு இல்லை. அரசுத் துறையினருக்கு வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும். கோர்ட், போலீஸ் என்று அலைபவர்களுக்கு சாதகமாக முடிவுகள் வரும். சிலர் சமரசம் ஆவீர்கள். பழைய கடன்களை அடைப்பீர்கள். பொருளாதாரம் மேன்மை பெறும்.

கும்பம்:

ராசிநாதன் சனி லாபஸ்தானத்தில் அமர்ந்து மாதம் முழுவதும் ராசியைப் பார்ப்பதோடு புதனும் குருவும் பரிவர்த்தனை அடைவதால் பங்குனிமாதம் முழுவதும் உங்கள் ஆற்றலும் திறமையும் தைரியமும் வெளிப்பட்டு நீங்கள் நல்ல பெயர் எடுக்கும் மாதமாக இருக்கும். ஏழுக்குடைய சூரியன் இரண்டில் அமர்ந்து குரு எட்டில் மறைந்திருப்பது சாதகமற்ற நிலைதான் என்றாலும் ராசியின் யோகக்கிரகங்களான சுக்கிரனும் புதனும், ராசிநாதன் சனியும் வலுவாக இருப்பதால் கும்பத்திற்கு நன்மைகளே மேலோங்கும்.

ராஜயோகாதிபதி சுக்கிரன் இரண்டாமிடத்தில் உச்சவலு அடைவதால் தனம் வாக்கு குடும்ப ஸ்தானம் வலுப்பெற்று கும்பராசிக்காரர்களுக்கு அனைத்து நன்மைகளும் மேன்மைகளும் கிடைக்கும். பங்குனி மாதத்தில் கும்பத்தினர் கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ரொம்ப நாட்களாக இருந்து வரும் பிரச்னைகளை தற்போது வெற்றி கொள்வீர்கள். எதிர்ப்புகள் விலகும். உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் குணம் அடைவீர்கள்.

செவ்வாய் வலுப்பெறுவதால் இதுவரை வேலை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை அமையும். சிலருக்கு எதிர்பாராத வகையில் வருமானங்கள் இருக்கும். தந்தைவழி உறவில் நன்மைகள் உண்டு. கடன் தொல்லைகள் இருந்தவருக்கு கடனை அடைக்க வழி பிறக்கும். வாழ்க்கைத்துணையிடம் சச்சரவுகள் இருந்தவருக்கு வழி பிறக்கும். தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் நன்றாக இருக்கும். நீண்ட நாட்களாக நினைத்திருந்த ஒரு காரியம் இந்த மாதம் உங்கள் மனம் போல் நடக்கும்.

மீனம்:

மாத ஆரம்பமே ராசிநாதன் குரு மற்றும் ஏழுக்குடைய புதன் பரிவர்த்தனை என ஆரம்பிக்கிறது. ஆறுக்குடையவன் ராசியில் இருப்பதால் பங்குனி மாதம் மீனராசிக்கு லேசாக எதிர்ப்புகள் தலைதூக்கும் மாதமாகவும் அடங்கிக் கிடந்த சில பிரச்னைகள் உள்ளேன் அய்யா என்று எட்டிப் பார்க்கும் மாதமாகவும் இருக்கும். ராசிநாதன் குரு ராசியைப் பார்க்கும் நிலையில் இருந்தாலும் அவர் வக்கிரமாக இருப்பது பலவீனம் என்பதால் இப்போது நல்லதும், கெட்டதும் கலந்த கலப்பு பலன்கள் இருக்கும்.

சூரியனும் குருவும் நேருக்கு நேராக சமசப்தமமாக அமர்ந்து சிவராஜயோகம் உண்டாவதால் பொது வாழ்க்கையில் இருக்கும் சிலருக்கு இப்போது பதவிகள் உண்டு. தன பாக்கியாதிபதியான செவ்வாய் தனஸ்தானத்தில் அமர்ந்து வலுப்பெறுவது யோகம் என்பதால் பணவரவில் குறை இருக்காது. தொழில் விஷயங்களில் கவலைகள் எதுவும் இல்லாமல் நன்மைகள் மட்டுமே இருக்கும். அதேநேரம் சூரியன் வலுப்பெறுவதால் தந்தைவழி உறவினர்கள் வகையில் விரயங்கள் இருக்கும். தந்தை வழியில் சங்கடமான சம்பவங்கள் இருக்கலாம்.

ராசியின் எதிர்த்தன்மை உடையவரான சுக்கிரன் வலு அடைவதால் பெண்கள் விஷயத்தில் கருத்து வேறுபாடுகளும், சச்சரவுகளும் வீண் விரயங்களும் இருக்கும். அவரவரின் ஜாதகப்படி மனைவி, தாய், சகோதரி, மகள், காதலி, தோழி போன்ற பெண் உறவுகளில் சில மனக்கஷ்டங்கள் உண்டு. என்னதான் பிரச்னை என்றாலும் ராசிநாதன் குரு பரிவர்த்தனை யோகத்தில் இருப்பதால் வரும் அனைத்து கஷ்டங்களும் சூரியனைக் கண்ட பனிபோல விலகி ஓடி விடும் என்பது உறுதி. கௌரவக் குறைச்சல் ஒரு போதும் ஏற்படாது.

No comments :

Post a Comment