Tuesday, October 18, 2016

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள் - 108 (18.10.2016)

ரா. வாசுகி, கொன்றைக்காடு.

சந்
ல கேது
சு
ராசி
சூ
பு
செவ்
குரு
ராகு
சனி

கேள்வி :

அக்காவிற்கு திருமணம் முடிந்து சிலமாதங்களிலேயே புகுந்த வீட்டில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிறந்த வீட்டிற்கு திரும்பி வந்துவிட்டாள். ஒரு பெண்குழந்தை பிறந்து இறந்தும் விட்டது. அவளது இந்த நிலைமைக்கு என்ன காரணம்? மறுமணம் செய்யலாமா? இரண்டாவது திருமணமாவது நல்லபடியாக அமையுமா? அவளது வாழ்வில் வசந்தம் வீசுமா? நல்ல பரிகாரம் கூறி வழிகாட்ட வேண்டுகிறேன்.

பதில்:

கும்பலக்னம். ரிஷபராசி. 1-ல் சுக், கேது. 7-ல் செவ், குரு, ராகு. 8-ல் சனி. 12-ல் சூரி, புத. 26.1.1980, 8.45 காலை)

காலத்திற்கேற்ப பலன் சொல்ல வேண்டும் என்பதும் ஜோதிடத்தில் ஒரு முக்கிய விதி. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து என்றாலோ, 2-வது திருமணம் என்றாலோ காதை பொத்திக் கொள்வார்கள். பெண்களின் கல்விஅறிவும், சொந்தக் காலில் நிற்கும் தகுதியும் கூடி வந்துவிட்ட இந்த நாட்களில் 2-வது திருமணம் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு சகஜமாகிவிட்டது.

உண்மையைச் சொல்லப் போனால் என்னிடம் பொருத்தம் பார்க்க வரும்போதே வருகின்ற ஜாதகங்களில் 2-வது திருமண அமைப்பு யாருக்காவது இருக்கிறதா என்பதைத்தான் முதலில் பார்க்கிறேன். அப்படி இருந்தால் அவரது பெற்றோரை கவனமாக வரனை தேர்ந்தெடுக்கும்படி ஆலோசனை சொல்கிறேன்.

வேத ஜோதிடவிதிப்படி முதல் திருமணத்தை ஒரு ஜாதகத்தின் ஏழாம் வீடும், அந்தவீட்டின் அதிபதியும், இளையதாரம் எனப்படும் 2-வது திருமணத்தை, பதினொன்றாம் வீடும் அந்த வீட்டோனும் சுட்டிக்காட்டுகின்றன. ஜாதகத்தில் ஏழாம்வீட்டை விட பதினொன்றாம் வீடு வலுப்பெற்று லக்னாதிபதியும் வலுவிழந்திருந்தால் முதல் வாழ்க்கையில் சிக்கல்கள் தோன்றி 2-வது திருமணமே நிலைக்கும்.

உன் அக்காவிற்கு ஏழில் செவ்வாய், எட்டில் சனி என்ற அமைப்பாகி, ஏழுக்குடைய சூரியன் அஷ்டமாதிபதி புதனுடன் இணைந்து பனிரெண்டில் மறைந்து, ஏழாம் வீட்டில் செவ்வாயும், ராகுவும் அமர்ந்து, வீடும் வீட்டோனும் வலுவிழந்தார்கள். ராசிக்கு ஏழாம் வீட்டிற்கும் செவ்வாய் சனி பார்வை இருக்கிறது. ஆனால் பதினொன்றாம் வீடு வலிமையாகி, குருவும் அந்த வீட்டைப் பார்த்து வலுப்படுத்துகிறார். எனவே திருமணத்திற்கு முன்பே இந்த அமைப்பை சரியாகக் கணித்து முறையாக பொருத்தம் பார்த்திருக்க வேண்டும். ராகுதசை நடப்பதாலும், குழந்தைக்குரிய குருபகவானை ராகு பத்துக் டிகிரிக்குள் நெருங்கி இருப்பதாலும் ஶ்ரீகாளகஸ்தியில் முறையான பரிகாரங்களைச் செய்யவும். 2-வது வாழ்க்கை நல்லபடியாக இருக்கும்.

ஜி. அமுதவள்ளி, கோவை.

கேள்வி :

உங்கள் வாக்கை தெய்வவாக்காக எண்ணி எழுதுகிறேன். மகளுக்கு திருமணமாகி இரண்டு வருடங்களாக சண்டை சச்சரவுகளுடன் பிரச்சினையில் இருக்கிறார்கள். அடிக்கடி எங்களிடம் வந்து விடுகிறாள். ஆறுமாதமாக என்னிடம்தான் இருக்கிறாள். மருமகன் எங்கள் குடும்பத்தை மிகவும் கேவலமாகப் பேசி அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்தப் பிரச்னையால் என் கணவர் குடிக்கு அடிமையாகி எங்கள் நிம்மதி போய் விட்டது. என் மகள் கணவருடன் வாழ்வாளா? அல்லது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

பதில்:

இருவரின் ஜாதகத்தையும் அனுப்பி விட்டு பிறந்த நாள், நேரம், இடம் குறித்த தகவல்கள் இருக்கும் முதல்பக்கத்தை அனுப்பாமல் விட்டால் எப்படி பதில் சொல்ல முடியும்? அனுப்புகின்ற ஜாதகத்தை சரி பார்த்த பிறகே பதில் சொல்பவன் நான். வீட்டில் யாருக்காவது ஏழரைச்சனி நடந்து கொண்டிருக்கும். எனவேதான் கிடைக்கும் வாய்ப்புகள் கூட தவறிப் போகின்றன.

எம். சின்னச்சாமி, கூத்தாண்டவர் நகர்.

கேள்வி :

செவ்
சூ
சு
பு
ராசி
ராகு
சந்
கேது
வி
சனி


வாழ்க்கையில் துன்பங்கள்தான் அதிகம். தற்போது தற்கொலை எண்ணம் தோன்றுகிறது. மூன்றுமுறை கேள்வி அனுப்பியும் பதில் தரவில்லை. இப்போது பதில் சொல்லாவிட்டாலும் திருப்பியும் எழுதுவேன். திருமணம் நடைபெறுமா? எப்போது? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்.

பதில்:

(மீனலக்னம், மகரராசி. 2-ல் செவ். 3-ல் சூரி, சுக். 4-ல் புத. 5-ல் ராகு. 7-ல் குரு. சனி. 25.5.1981, அதிகாலை 2.30, திருவண்ணாமலை)

லக்னத்திற்கு இரண்டில் செவ்வாய், ஏழில் சனி என்ற அமைப்புடன் ராசிக்கு ஏழிலும் ராகு இருப்பதால் கடுமையான களத்திரதோஷம் உள்ளது. ஐந்தாமிடத்தில் ராகு அமர்ந்து, புத்திரகாரகன் குரு, சனியுடன் இணைந்திருப்பதும் புத்திரதோஷம்.

சென்ற மாதம்தான் குருதசையில் திருமணத்திற்குரிய புதன்புக்தி ஆரம்பித்துள்ளது. அடுத்த வருடத்திற்குள் நிச்சயம் திருமணம் நடக்கும். ஜென்மநட்சத்திரத்திற்கு முதல்நாள் மாலையே ஶ்ரீகாளகஸ்தியில் தங்கி மறுநாள் சர்ப்பசாந்தி பூஜைகளை செய்யவும். ஒருமுறை ஆலங்குடிக்குச் சென்று வழிபடவும். ஒரு வியாழக்கிழமை மதியம் ஒரு மணியில் இருந்து இரண்டு மணிக்குள் ஒரு யானைக்கு விருப்பமான உணவை தரவும்.

பேத்தியின் பிறந்த நேரம் தவறா?

பி. ஆர். தங்கவேலு, பரமக்குடி .


கேள்வி :

எனது பேத்தியின் பிறந்த நேரம் மாலை 4,46. ஜோதிடரிடம் பார்க்கும்போது இந்த நேரத்தின்படி ஆண்குழந்தைதான் பிறந்திருக்க வேண்டும். இந்த நேரத்திற்கு முன்தான் பெண்குழந்தை பிறந்திருக்க வேண்டும் என்று சொல்கிறார். ஆனால் மருத்துவமனை ரிகார்டுகளின்படியும், நேரில் இருந்தவர்களின்படியும் பிறந்த நேரம் உறுதியானது. இந்தக் குழப்பத்தினால் ஒரு வருடமாகியும் இன்னும் பேத்திக்கு ஜாதகம் எழுதாமல் இருக்கிறேன். அவளது ராசி, லக்னப்படி எந்த எண்ணில் பெயர் வைத்தால் நல்லது என்பதையும் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

பதில்:

ஜோதிடத்தில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட சில விஷயங்களில் நீங்கள் கேட்கும் இந்த ஆண், பெண்கால அமைப்பும் ஒன்று. ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில் உள்ள ஆண்காலம், பெண்காலம் என்ற அமைப்பு பிறக்கும் குழந்தை எந்தத் தன்மையுடன் இருக்கும் என்பதற்காக நமக்குச் சொல்லப்பட்டதேயன்றி என்ன குழந்தை பிறக்கும் என்பதற்காக அல்ல.

உதாரணமாக ஆண்காலத்தில் ஒரு பெண்குழந்தை பிறந்தால் அந்தக்குழந்தை பெண்ணாக இருந்தாலும் ஆணுக்குடைய தைரியத்துடனும், பயமில்லாத குண அமைப்புகளுடனும் இருக்கும். பெண்காலத்தில் ஆண் குழந்தை பிறந்தால், பெண்ணுக்குரிய குணங்கள் அந்தக் குழந்தையிடம் மேலோங்கி இருக்கும் என்பதை நமக்கு அறிவுறுத்தவே இது ஞானிகளால் சுட்டிக் காட்டப்பட்டது.

காலப்போக்கில் இந்த விதி ஆண்காலத்தில் ஆண்குழந்தைதான் பிறக்கும். பெண் காலத்தில் பெண்தான் பிறக்கும் என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு சொல்லவும் படுகிறது. சில ஜோதிடர்கள் இன்னும் ஒருபடி மேலே போய் பெற்றோருக்குச் சொல்லாமலேயே தங்கள் இஷ்டம் போல இந்த ஆண்பெண் காலவிதிப்படி பிறந்தநேரத்தை முன்பின் சிலநிமிடங்கள் மாற்றி எழுதித் தருகிறார்கள். இப்படிச் செய்வது சாஸ்திர விரோதம்.

உங்கள் பேத்தியின் ஜாதகப்படி மீனலக்னம், சிம்மராசி, பூரம் நட்சத்திரம் என்றாகி தர்மகர்மாதிபதிகள் செவ்வாயும், குருவும் இணைந்துள்ள யோகத்தில் அதிர்ஷ்டமான நேரத்தில் குழந்தை பிறந்திருக்கிறாள். குழந்தையின் எட்டு வயதில் ஆரம்பிக்கும் சந்திரதசை முதல் யோகங்கள் செயல்பட ஆரம்பிக்கும். ஜோதிடப்படி பூரம் நட்சத்திரத்திற்குரிய மோ ட டி டு ஆகிய எழுத்துக்களில் பெயர் வைக்கலாம். மேலைநாட்டு முறையான எண்கணிதம் எனப்படும் நியூமலாரஜியில் எனக்கு மாற்றுக்கருத்து உள்ளதால் அதனை நான் வலியுறுத்துவது இல்லை.

வயதில் மூத்தபெண்ணை திருமணம் செய்துகொள்ள முடியுமா?

மா. லெட்சுமணராஜா, முத்துக்கிருஷ்ணப்பேரி.

கேள்வி:

குருஜி அவர்களின் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். அரசுப்பணியில் இருக்கும் நான் என்னைவிட இரண்டுவயது அதிகமான பெண்ணைக் காதலித்து வருகிறேன். அவளும் அரசுத்துறையில் இருக்கிறாள். இரண்டு டிகிரி முடித்து நன்றாகப் படித்த பெண்ணாகவும், பண்புள்ளவளாகவும், தெய்வபக்தி மிகுந்தவளாகவும், புத்திசாலியாகவும் இருக்கிறாள். எனது ஜாதகப்படி அவளைத் திருமணம் செய்ய வாய்ப்பு உள்ளதா? எனது வீட்டில் ஜாதகப் பொருத்தங்களை கவனமாகப் பார்ப்பார்கள் என்பதால் பயமாக உள்ளது. என்னைப்போல் எனது தந்தையும் தங்களது ரசிகராக உங்களின் ஒவ்வொரு மாலைமலர் பதிவினையும் தவறாமல் படித்து வருபவர் என்பதால் என் வீட்டில் காதலைத் தெரிவிக்கும் விதமாக எனக்கு குருஜி அவர்கள் நல்லதொரு பதிலை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பதில்:

உங்களுடைய ஜாதகம் தவறாகக் கணிக்கப்பட்டிருக்கிறது. ஜாதகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிறந்த நேரம் அதிகாலை 4.45 என்பது தவறாக இருக்கலாம். வாக்கியப் பஞ்சாங்கப்படியே பார்த்தாலும் உங்களுடைய லக்னம் தவறானது. உங்கள் ஜாதகத்தைக் கணித்ததில் பிழை இருக்கிறது. இந்த ஜாதகப்படி நீங்கள் கூறும் காதல் அமைப்புகள் பொருந்தி வரவில்லை.

முதலில் உங்கள் பெற்றோரிடம் கேட்டு உங்கள் பிறந்த நேரத்தை உறுதி செய்யுங்கள். பின்பு திருக்கணிதப்படி அனுபவமுள்ள ஒரு ஜோதிடரிடம் சென்று சரியாக ஜாதகத்தைக் கணித்துக் கொள்ளுங்கள். அல்லது ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் ஜாதகத்தை பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். கம்ப்யூட்டருக்கு ஜாதகத்தின்படி பலனைக் கணிக்கத் தெரியாதே தவிர மனிதனைவிட தவறில்லாமல் ஜாதகத்தை எழுத முடியும்.

இதுபோன்ற தவறான ஜாதகப்படி பொருத்தம் பார்த்துத்தான் மணவாழ்வில் பிரச்னைகள் வருகின்றன. எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் திருமணத்திற்கு பொருத்தம் பார்க்குமுன் அந்த ஜாதகம் சரியாகக் கணிக்கப் பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வது நல்லது.

லக்னம் வேறாக இருந்தாலும் உங்களின் ராசி நட்சத்திரம் மாறப்போவது இல்லை. உங்களுக்கு சிம்மராசி மகம் நட்சத்திரம் என்பதாலும், ராசியில் செவ்வாய் அமர்ந்து திருக்கணிதப்படி ராசிக்கு ஏழில் சனி அமர்ந்து, காதல்காரகன் சுக்கிரன் எனது கணிப்புப்படி உங்களின் மேஷ லக்னத்திலேயே அமர்ந்துள்ளதால் காதல் திருமணம் நடைபெறும்.

லக்னம் அல்லது ராசிக்கு ஏழில் சனி வலுவாக இருந்தால் தன்னை விட வயது அதிகமான பெண்ணின் மேல் ஈர்ப்பு வரும். தன்னைவிட வயது அதிகமான பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள நேரும். இதுபற்றி ஏற்கனவே கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். பதில்களில் சொல்லியுமிருக்கிறேன். உங்கள் ஜாதகத்திலும் ராசிக்கு ஏழில் சனி இருக்கிறார், உங்களின் பிறந்தநேரத்தை உறுதி செய்து கொண்டு அந்தப் பெண்ணின் ஜாதகத்தையும் இணைத்து அனுப்புங்கள். தெளிவாகப் பதில் தருகிறேன்.

No comments :

Post a Comment