Thursday, December 22, 2016

சிம்மம்: 2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

சிம்மம்:

பிறக்க இருக்கும் புத்தாண்டான 2017-ம் ஆண்டு ஆரம்பத்தில் சிம்மராசிக்கு மந்தமான பலன்களை கொடுத்தாலும், ஆண்டின் பிற்பகுதியில் நல்ல நன்மைகள் நடக்கும் என்பது உறுதி.

பெரும்பாலான சிம்மராசிக்காரர்கள் சென்ற வருடம் பிற்பகுதியில் இருந்து சோதனைகளை அனுபவித்து விட்டீர்கள். உங்கள் ராசிக்கு ஆகாத பகைக்கிரகமான சனிபகவான் கடந்த இரண்டு வருடங்களாக அர்த்தாஷ்டமச் சனியாக நான்காமிடத்தில் அமர்ந்து தனது கொடிய பார்வையால் உங்களின் ராசியைப் பார்த்து உங்களுடைய உடல், மனம், பொருளாதாரம் மூன்றையும் பாதித்து விட்டார்.

தவிர குதிரை கீழே தள்ளி குழியையும் பறித்த கதையாக சென்ற வருடம் ராகுவும் வந்து ராசியில் அமர்ந்தது உங்களை இன்னும் உடல், மற்றும் மனப் பிரச்சினைகளுக்கு உள்ளாக்கி விட்டது.

இரண்டு பெரும் பாவக்கிரகங்கள் ராசியோடு சம்பந்தப்பட்டதால் பெரும்பாலானான சிம்ம ராசிக்காரர்களுக்கு சென்ற வருடம் சோதனையாகவே இருந்து வந்தது. இந்த அமைப்பில் தப்பிப் பிழைத்தது பிறந்த ஜாதக வலுவுள்ள மிகச் சிலர் மட்டும்தான்.

ராசிக்கு சனிபார்வை, ராசியோடு ராகு-கேதுக்கள் சம்பந்தம் என்பதால் இதுவரை வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் சிம்மத்தினர் சிக்கல்களை எதிர் கொண்டீர்கள். பிறக்க இருக்கின்ற புது வருடம் ஆரம்பம் முதல் பிரச்னைகள் படிப்படியாக தீர துவங்கி வருடத்தின் பிற்பகுதியில் இருந்து அனைத்தும் மாறி மிகவும் நல்ல பலன்களை சந்திப்பீர்கள் என்பது உறுதி.

வருடத்தின் நடுப்பகுதியான ஆகஸ்டு மாதம் 18 ம் நாள் உங்கள் ராசியில் இருக்கும் ராகு விலகப் போவது உங்களுக்கு மிகப்பெரிய திருப்பங்களையும் மாற்றங்களையும் தரும். அதுமுதல் உங்கள் உடல், மனம் இரண்டும் சீரடைவதையும், உங்களைப் பாதித்த பிரச்னைகள் விலகுவதையும் நீங்கள் உணர முடியும். ஒரு மிகப்பெரிய இருட்டு உங்களிடமிருந்து விலகுவதால் உங்கள் உடலும் மனமும் தேஜஸ் எனப்படும் ஒளியை மீண்டும் பெறும்.

வருட மத்தியில் நடக்க இருக்கும் ராகு,கேது பெயர்ச்சியினால் மிகுந்த உற்சாகமும் புத்துணர்ச்சியும் அடையப் பெறுவீர்கள். இதுவரை இருட்டுக்குள் நிற்பதைப் போல உணர்ந்தவர்களுக்கு ஒளியெனும் பாதை கண் முன்னே தெரியும்.

புது வருடத்தின் இன்னொரு முக்கிய நிகழ்வான சனிப்பெயர்ச்சி அக்டோபர் மாதம் 26 ம் நாள் நடைபெற இருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாக சனியினால் அதிக பாதிப்பை அடைந்த ராசிகளில் சிம்மமும் ஒன்று.

சனியினால் வேலை, தொழில், வியாபாரம் போன்றவைகளில் சிக்கல்களைச் சந்தித்தவர்கள் வருடக் கடைசியில் சிக்கல்கள் மெதுமெதுவாகத் தீருவதையும் தொழில் பிரச்னைகள், வருமானக்குறைவு, கடன்தொல்லைகள், போன்றவற்றால் வேதனைகளை அனுபவித்தவர்கள் அவை விலகுவதற்கான வழிமுறைகள் கண்ணுக்கு தெரிவதையும் காண்பீர்கள்.

சுருக்கமாகச் சொல்லப்போனால் கடந்த ஆண்டு இருந்ததைப் போன்ற வேலை விஷய துயரங்கள், பின்னடைவுகள், பொருளாதாரச் சிக்கல்கள், கடன் தொல்லைகள், ஆரோக்கியக் குறைவு போன்றவை எதுவும் இந்த வருடம் சிம்மத்திற்கு இருக்காது என்பது உறுதி.

இதுவரை திருமணமாகாத இளையவர்களுக்கு இந்த வருடம் திருமணம் நல்லபடியாக முடியும். ஒரு சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பித்து தங்களுடைய வாழ்க்கைத்துணையை அடையாளம் காண்பீர்கள். கூட்டு வியாபாரத்தில் குறைகளை கண்டவர்கள் இனிமேல் அவை நீங்கி மன ஒற்றுமை ஏற்பட்டு தொழில் முன்னேற்றம் காண்பார்கள்.

தந்தை மூலம் லாபமும், தந்தை வழி சொத்துக் கிடைத்தலும், பூர்வீக சொத்துக்களில் இதுவரை இருந்து வந்த வில்லங்கங்கள் விலகுவதும் பூர்வீக சொத்தை அனுபவிக்க முடியாத நிலையில் இருந்து வந்த தடைகள் நீங்குவதுமான நல்ல பலன்கள் நடைபெறும்.

தகப்பனாரின் ஆரோக்கியம் மேம்படும். தந்தை மகனுக்கு இடையே இருந்து வந்த சண்டை, சச்சரவுகள், பிணக்குகள் நீங்கி தந்தையுடன் இணைவீர்கள். நீண்ட நாட்களாக நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் கோரிக்கைகளை அப்பா நிறைவேற்றித் தருவார். நீங்களே ஒரு நல்ல தகப்பனாக உங்கள் குழந்தைகளுக்கு கேட்பதை செய்து தர முடியும்.

தள்ளிப் போயிருந்த தீர்த்த யாத்திரை இப்போது போக முடியும். காசி கயா பத்ரிநாத் கேதார்நாத் போற வடமாநில புண்ணியத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு இப்போது கிடைக்கும். ஞானிகளின் தரிசனம் கிடைக்கும். மகாபெரியவரின் அதிஷ்டானம் போன்ற மிகப்பெரும் புனித இடங்களை வழிபடும் பாக்கியம் உண்டாகும். நேர்த்திக்கடன்களை இப்போது நிறைவேற்ற முடியும். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்வீர்கள்.

சமூகத்தில் உயர்நிலையில் உள்ள பெரியவர்கள், மதிப்புமிக்கவர்கள், அந்தஸ்தும், அதிகாரமும் கொண்டவர்களின் அறிமுகமும் ஆதரவும் கிடைக்கும். குறிப்பிட்ட சிலருக்கு அந்தஸ்து உயரும். அதிகாரமிக்க பதவிகள் கிடைக்கும். அரசியலில் ஏற்றங்கள் உண்டு. வரும் தேர்தலில் ஜெயிக்க முடியும்.

செய்யும் தொழிலில் இனிமேல் ஏற்றமும், லாபமும் திருப்திகரமாக இருக்கும். இதுநாள்வரை இருந்து வந்த பொருளாதார நெருக்கடிகள் இருக்காது. குறைந்த வியாபாரம் நிறைந்த லாபம் என்ற முறையில் கடையை மூடி வீட்டுக்கு திரும்பும் பொழுது மனநிறைவுடன் வீட்டிற்கு செல்ல முடியும்.

சகோதர சகோதரிகளுக்கு சுபகாரியங்கள் நடக்கும். நீண்ட நாட்களாக திருமணமாகாமல் தடங்கலாகி இருக்கும் அக்காவின் திருமணத்தை நல்லபடியாக நடத்துவீர்கள். அண்ணன், அக்கா மூலம் சந்தோஷமும் ஆதரவும் உண்டு.

பெண்களுக்கு இந்த வருடம் நல்ல பலன்களைத்தான் அதிகம் தரும். இதுவரை உங்களை புரிந்துக் கொள்ளாத கணவர் இனிமேல் உங்களை புரிந்து கொண்டு, உங்கள் மனம் போல் நடந்து கொள்ள ஆரம்பிப்பார். பிள்ளைகள் உங்களின் கஷ்டங்களைப் புரிந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடங்களில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். உங்களின் அந்தஸ்து உயரும். கூட்டுக் குடும்பத்தில் மருமகளின் பேச்சு மாமியாரால் ஏற்கப்படும்.

யூகவணிகம் பங்குச்சந்தை ரேஸ் லாட்டரி போன்றவைகளில் அதிகமாக ஈடுபாடு காட்டாமல் இருப்பது நல்லது. இந்த வருடம் மேற்படி இனங்களில் வருமானம் வராமல் விரயங்களும் நஷ்டங்களும்தான் இருக்கும். ஒரு சிலர் தொழில் சம்பந்தமாக கடல் தாண்டி வெளிநாடு செல்வீர்கள்.

குறிப்பாக ஆன்மிகம் சம்பந்தப்பட்டவர்களுக்கு வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் ஏற்படும். வெளிநாடு சம்பந்தமான முயற்சிகள் வெற்றியாகும். பாகப்பிரிவினை சம்பந்தமான முக்கியமான முடிவுகள் எடுப்பதை தற்போது தள்ளிப் போடுவது நல்லது.

அரசு தனியார்துறை பணியாளர்கள் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். அவர்கள் சொல்வதை கேட்டு நடந்து கொள்வது நல்லது. அலுவலகங்களில் உங்களைப் பிடிக்காதவர்கள் கை ஓங்கும் சூழ்நிலை வரலாம். சில நேரங்களில் சுவர்களுக்கு கூட கண்களும் காதுகளும் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். உடன் வேலை செய்பவர்களிடம் வீண் அரட்டை, மேல் அதிகாரியின் செயல் பற்றிய விமரிசனங்கள் போன்ற விஷயங்களை தவிருங்கள்.

கூடுமானவரை நேர்வழியிலேயே செல்ல முயற்சி செய்யுங்கள். குறுக்குவழி வேண்டாம். அரசுத்துறை, தனியார்துறை ஊழியர்கள் மேல்வருமானத்திற்கு ஆசைப்பட்டு விதிகளை மீறி யாருக்கும் சலுகை காட்ட வேண்டாம். மேலதிகாரிகளுக்கு தெரியாமல், அவர்களின் எழுத்துப்பூர்வமான அனுமதி இல்லாமல் எதுவும் செய்யாதீர்கள். பின்னால் தொந்தரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

வீட்டில் குழந்தைகளில் உடல் நலத்தில் அக்கறையும், கவனமும் தேவைப்படும். சிறு குழந்தைகளுக்கு சாதாரண உடல்நலக் குறைவு என்றால் கூட அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்வது நல்லது.

ஏற்கனவே கடன் வாங்கி சிக்கலில் இருப்பவர்களுக்கு புதிய கடன்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எக்காரணத்தைக் கொண்டும் அதிக வட்டிக்கு வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அவசரம் என்று கிடைக்கும் இடத்தில் கிடைக்கும் வட்டியில் பணம் வாங்கினால் அடுத்த வருட ஆரம்பத்தில் கடன் பிரச்னைகளால் மனக் கலக்கம் வரலாம்.

பேச்சின் மூலம் வாழ்க்கை நடத்துபவர்களுக்கு நன்மைகள் இருக்கும். ஆசிரியர் பணி, பேச்சாளர்கள், மார்க்கெட்டிங் துறையினர், கவுன்சிலிங் செய்பவர்கள் போன்றவர்களுக்கு நல்ல வருடம் இது. யாருக்காவது பரிதாபப்பட்டு உதவி செய்து அதனால் நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் அமைப்பு இருப்பதால் யாருக்கும் எதற்காகவும் ஜாமீன் போட வேண்டாம்.

பத்திரிகை துறையில் இருப்போர், பெட்ரோல்பங்க், அநாதை விடுதிகளை நடத்துவோர், மதுபானத் தொழில் சம்பந்தப்பட்டோர், விவசாயிகள், நிலத்தரகர்கள், காலிமனை விற்கும் ரியல் எஸ்டேட்காரர்கள், மருத்துவமனையினர், கடைநிலை ஊழியர்கள், காவல்பணி செய்வோர், துப்புரவு தொழிலாளர்கள், ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சித் தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்டவர்கள் மிகவும் வளம் பெறுவார்கள். வருமானமும் சிறப்பாக இருக்கும்.

பொதுவாக சிம்ம ராசிக்கு இது எதிர்கால முன்னேற்றத்திற்கு அடித்தளம் போடும் காலகட்டமாக அமையும். இப்போது ஏற்படும் அனுபவங்களால் உங்கள் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்வீர்கள் என்பதால் புது வருடத்தில் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

No comments :

Post a Comment